01 October, 2011

புகைக்கும்' சென்னை பெண்கள் எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி!




நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது' என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.

ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, "குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே' என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் கிராமப்புறங்களில், 20 சதவீதம், நகர்ப்புறங்களில், 12.8 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சர்வே தெரிவிக்கிறது. இதே வேகம் நீடித்தால், "இனிவரும் காலங்களில், புகையிலை தொடர்பான நோய்களால், 2020ல், இந்தியாவில், 20 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும்' என்ற, அதிர்ச்சித் தகவல் ஆய்வு ஒன்றில் வெளியாகி உள்ளது. இது குறித்து, புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாநில ஆலோசகர் பிரசன்னா கண்ணன் கூறும்போது, ""புகையிலை பொருட்களான சிகரெட், பான்பராக், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2008ல், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தது. ஆனால், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, இன்று வரை குறையவில்லை. இதற்கு மக்களிடையே புகையிலை குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம். தற்போது, புகையிலை நோய்களால், இந்தியாவில், 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என்றார்.


புகை பிடிக்கும் பெண்கள்:
சென்னை நகரில், "கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது' என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,


கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடித விவகாரம் நழுவிய சிதம்பரம்!





கேள்வி: நிதி அமைச்சகத்தின் குறிப்பு தொடர்பாக, நேற்று(நேற்று முன்தினம்) நடந்த பேச்சுவார்த்தையில், உங்களுக்கு வெற்றி கிடைத்ததா, நிதி அமைச்சர் பிரணாபுக்கு வெற்றி கிடைத்ததா?


பதில்: இதை என்னால், சரியாக நினைவுகூர முடியவில்லை.


கே: இந்த சர்ச்சை காரணமாக, உங்கள் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தீர்களா?
ப: எனக்கு சற்று ஞாபக மறதி உள்ளது.



கே: பதவியை ராஜினாமா செய்ய, எத்தனை முறை விருப்பம் தெரிவித்தீர்கள்?
ப: ஞாபக மறதியுடன், கணக்கிடுவதிலும், எனக்கு பிரச்னை உள்ளது.நிதி அமைச்சக குறிப்பு குறித்து, இதுபோல் பல வடிவங்களில் கேள்விகள் கேட்டபோதும், அதுபற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை, அமைச்சர் சிதம்பரம் தவிர்த்தார்.



உள்துறை அமைச்சரின் பேட்டியின் சுருக்கம்:
* பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக, அமெரிக்கா மிகவும் தாமதமாகக் கண்டுபிடித்துள்ளது. இது, எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.,க்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என, எங்களுக்கு எப்போதும் தெரியும்.



* மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணமான, தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளது குறித்து, அந்த நாட்டு அரசிடம் பல முறை கேள்வி எழுப்பியுள்ளோம். ஆனால், அவர்கள் அதை மறுத்து விட்டனர்.



* அத்வானி மேற்கொள்ளும் ரத யாத்திரைக்கு, பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.



*மும்பை, டில்லியில், சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில், முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், குற்றவாளிகள் யார் என்பது, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.



* தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக, "பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு முறையை, யார் மேற்கொள்வது என்பது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும்.


*தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, அப்சல் குருவின் கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி பிரதிபா, இன்னும் முடிவு எடுக்கவில்லை.இவ்வாறு, அமைச்சர் சிதம்பரம் பேட்டியில் கூறினார்.