லோக்பால் அமைப்பிற்குள் சி.பி.ஐ., வரும் பட்சத்தில் சிதம்பரம் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும் அன்னா ஹசாரே!

வலுவான லோக்பால் மசோதா கொண்டு வருவதில் ஆளும் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது என்றும், பலமில்லாத லோக்பாலை கொண்டு வரவும், இதன் மூலம் ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகளை காப்பாற்ற வழிசெய்கிறது என்றும், லோக்பால் அமைப்பிற்குள் சி.பி.ஐ., வரும் பட்சத்தில் சிதம்பரம் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும் என காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சர‌வை ஒப்புதல் வழங்கி விட்டது. இந்த மசோதா நிறைவேற்றுதவற்காக பார்லி., கூட்டத்தொடர் 3 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இதன் மீதான விவாதம் வரும் 27, 28 தேதிகளில் பார்லி.,யில் இருக்கும். இதனால் காரசார விவாதம் ‌எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்..பி.,க்கள் கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் சோனியா : லோக்பால் மசோதா கொண்டுவருவதில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. அரசு கொண்டு வரும் சட்டம் வலுவானதுதான். இதனை ஹசாரே குழுவினர் ஏற்றுகொள்ள வேண்டும். தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி உணவு பாதுகாப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். கடந்த லோக்சபா தேர்தல்களில் பா.ஜ., தொடர்ந்து தோல்வியை தழுவியதால் தற்போது வரவிருக்கும் முக்கிய சட்டங்களை இயற்ற விடாமல் இடையூறு செய்கிறது. லோக்பால், மகளிர் ‌மசோதா நிறைவேற்ற காங்கிரஸ்‌ கட்சி ‌போராட தயாராக இருக்கிறது என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஹசாரே இன்று நிருபர்களிடம் பேசுகையில்: ஆளும் மத்திய அரசு வலுவான

லோக்பால் அமைப்பினை உருவாக்குவதில் தயக்கம் காட்டுகிறது,. பலமான லோக்பால் என்று மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது. சி.பி.ஐ,. கொண்டு வராதபட்சத்தில் இது பலமான விசாரணையை மேற்கொள்ளும் என்பதை நம்ப முடியாது. சி.பி.ஐ.,யை லோக்பாலுக்கு வெளியே வைத்து விட்டு இது பலமான அமைப்பு என்கிறது. அது எப்படி இருக்கமுடியும். இது ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்றும் திட்டம். லோக்பால் அமைப்பிற்குள் சி.பி.ஐ.,வரும் பட்சத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சிறைக்குள் இருக்க வேண்டியது வரும். இதுபோன்ற அரசியல்வாதிகளை காப்பாற்றுவதில் ஏன் அரசு அக்ககறை செலுத்துகிறது. அரசியல் சாசனத்திற்குள் வரும் அனைவரும் இந்த லோக்பாலுக்குள் வரவேண்டும் இல்லாதபட்சத்தி்ல் எந்த அளவிற்கு பலமானதாக இருக்க முடியும் ? இவ்வாறு ஹசாரே கூறினார்.