17 March, 2012

அமெரிக்கா தீர்மானம் தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு!


இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப்போரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கையைக் கடுமையாகத் தண்டிக்க வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானம் மீது விரைவில் விவாதம் நடந்து, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் இத்தீர்மானத்தை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது 

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசு அமைத்த ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் எனவும், இலங்கையில் தனிநாடு கோரி இன்னொரு யுத்தம் ஏற்படாத வண்ணம் ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது. 

கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படை தளம்!


தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்துள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ம் ஆண்டு முதலே கச்சத்தீவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் மேட்டு நிலப்பரப்பில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளதாக வீரகேசரி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.இத்தளமானது சீன அரசால் வழங்கப்பட்ட டெண்ட் கொட்டகைகளால் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கச்சத்தீவு கடற்பரப்பில் நிரந்தரமாக 2 கடற்படைக் கப்பல்களை நிறுத்தியும் வைத்துள்ளது இலங்கை அரசு.தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டே தீரவேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் எழும்பி வரும் நிலையில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளது மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் : நாளை பலப்பரீட்சை

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடை பெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.  நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக வங்காளதேசத்திடம் தோற்றது. இந்திய அணி 289 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றமே.
வங்காள தேசத்திடம் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. ஆசிய கோப்பை போட்டியின் 5-வது லீக் ஆட்டம் டாக்காவில் நாளை  நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிராக போனஸ் புள்ளியுடன் அந்த அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.இந்திய அணி நாளைய ஆட்டத்தில் 2-வதாக பேட்டிங் செய்து குறிப்பிட்ட ஓவரில் இலக்கை எடுத்தால் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற முடியும். பாகிஸ்தான் அணி தற்போது நல்ல நிலையில் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் இந்திய அணி சிறப்பாக ஆட வேண்டும். உலக கோப்பை அரை இறுதியில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், நியோ கிரிக்கெட் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.