09 February, 2013

கச்சத்தீவு திருவிழாவில் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்!


 கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ஆண்டுதோறும் ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேசுவரத்தில் இருந்து வருகிற 23​ந்தேதி பக்தர்கள் செல்ல உள்ளனர். 150​க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் செல்ல திட்டமிட்டுள்ளனர். விழாவில் பங்கேற்க விரும்பும் பிற மாவட்டத்தினருக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையில்லாச்சான்றிதழ் தற்போது தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, பக்தர்கள் என்ற போர்வையில், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் கச்சத்தீவில் நுழைந்து விடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தமிழக அகதிகள் முகாமில் இருப்பவர்களில் யாராவது, இலங்கை சென்று வர முயற்சிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதனை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதன் அடிப்படையில், இந்திய கடற்படை, தமிழக கடலோர காவல்படை, கியூ பிராஞ்ச் போலீசார், மத்திய உளவுப்பிரிவினர் என அனைத்து தரப்பினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஏர்வாடி, கீழக்கரை, மண்டபம், மண்டபம் கேம்ப், பாம்பன், தனுஷ்கோடி, ராமேசுவரம் என அனைத்து பகுதிகளிலும் சாதாரண உடைகளில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஹோவர்கிராப்ட்' கப்பலும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கடற்படை விமானமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ராமசுப்பரமணியன், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், துணை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

FINAL CUT : LADIES AND GENTLEMEN

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்‌ஷன். ..என்று ஸ்டார்ட், கட் சொல்லி ஒரு ஷாட் கூட எடுக்காமல் ஒரு சினிமா எடுத்து வெளியிட முடியுமா?  முடிந்திருக்கிறது. ஆம்..  படப்பிடிப்பே நடத்தாமல் ஒரு முழுநீள சினிமாவே வந்திருக்கிறது. அந்த சினிமா..  FINAL CUT : LADIES AND GENTLEMEN 'சில நேரம் எடிட்டிங் டேபிளில் என் திரைக்கதை திருத்தி எழுதப்படும்' என்று ஒருமுறை ஆல்ஃபிரட் ஹிட்ச்ஹாக் சொன்னார்.   முழுக்க முழுக்க நூறு சதவிகிதம் எடிட்டிங் டேபிளிலேயே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று முழுமை அடைந்திருக்கிறது இந்த சினிமா.500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து ஷாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெகு நுட்பமாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இதை கதம்பம், அவியல், குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப் போட்ட சட்டை.. இப்படி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.. காக்டெய்ல் ( Cocktail ) என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். மது, உலக சினிமா இரண்டுமே ஒருவனை ஜென் நிலையையும் தாண்டி உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல வல்லவை. அதனால்  இப்படத்தை ஒரு கொலாஜ் ஓவியத்தோடு  ஒப்பிடுவதுதான் நியாயமானதாக இருக்கும்.  ஒழுங்கற்ற பல ஓவியத் துண்டுகளை ஒன்றாக்கி ஒரு முழுமையான ஓவியமாக்குவது போல்.. ஒரு ஒழுங்கு செய்நேர்த்தியுடன் ஒரு கலை வடிவமாக முழுமை அடைந்திருக்கிறது இந்தத் திரைப்படம். இந்தப் படத்தின் இயக்குனர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த Gyorgy Palfi.

Gyorgy Palfi  இதற்கு முன் Hukkle (2002) Taxidema (2006) I am not your friend (2009) என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.  தன்னுடைய நான்காவது படத்திற்கு கதை சொல்ல பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கியும் பலன் கிடைக்காமல் போக கடைசியில் சொந்தக் கதையைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு இந்த கலைடாஸ்கோப் சித்திரத்தைச் செதுக்கும் வேலையில் வந்து உட்கார்ந்தார்.  ஒரு நேர்காணலில் Gyorgy Palfi  இப்படிச் சொல்கிறார்: " இந்தப் படம் உலகம் என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றோ, இல்லை யாரும் சாதிக்காத சாதனையை நான் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் எடுக்கப்பட்டதோ அல்ல. கடந்த பத்து ஆண்டுகளாகவே ஹங்கேரியில் படம் எடுப்பதற்கான பொருளாதார வளமும் வாய்ப்பும் இல்லாத சூழலில் நான் வேறென்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள். எல்லோரும் படம் எடுத்த பின்பு பாராட்டத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் படம் எடுக்கப் பணம்  போடச் சொன்னால் அடுத்த நிமிடம் காணாமல் போய்விடுகிறார்கள். எனக்கு பெரிதாக இலட்சியங்கள் எதுவும் கிடையாது. என் வாழ்க்கை முடியும் வரை நான் படம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இது ஒன்றுதான் என்னுடைய எளிமையான ஆசை. இந்நிலையில் எனக்கு வாய்த்த மோசமான பொருளாதாரச் சூழலில் நான் வேறென்னதான் செய்ய முடியும்? என் கையிலிருந்த பணம் ஒரு படத்தின் Post Production-க்கு செலவுகளுக்கு மட்டுமே  போதுமானதாக இருந்தது. அதனால்தான் இதுவரை எடுத்த அனைத்து மொழி படக்காட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு புதுப் படத்தைஉருவாக்கினேன்." Palfi இதை பலத்த சிரிப்புடன் கூறினாலும் இப்படம் அவ்வளவு சுலபமாக ஒன்றும் உருவாகிவிடவில்லை. இப்படத்திற்காக படத்தொகுப்புக் கணினியே கதியென அதன் முன்  மூன்றாண்டுகள் அமர்ந்து அயராது வேலை செய்த அவரின் கடும் உழைப்பு இருக்கிறது.
500 படங்களின் விதவித காட்சிகளைக் கோர்த்து என்ன கதை சொல்ல முடியும்? அதை எப்படி சொல்வது ? யோசிக்கும்போதே தலையைச் சுற்றுகிறது அல்லவா.. Palfi இதை எப்படி அணுகினார்..? "இரண்டே இரண்டு விதமான கதைகள்தான் சாத்தியம்;  ஒன்று கதாநாயகனுக்கும் வில்லனுக்கும்  / தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்.  இரண்டாவது ஒரு இனிய காதல் கதை.  காதல் காலத்தை வென்று நிற்பது.. அது எவர்கிரீன் சப்ஜெக்ட்.. அதனால் உலகம் என்றைக்கும் கொண்டாடும் காதலை.. இரண்டாவது கதையைத் தேர்ந்தெடுத்தேன் " என்கிறார் Palfi. 
கதை நமக்கு மிகவும் பழக்கமானதுதான். ஒரு நாயகன் தன் வீட்டிலிருந்து அந்த நாளின் பயணத்தைத் துவங்குகிறான். மற்ற நாட்களைப் போலில்லாமல் அந்த நாள் அவனுக்கு மிக விசேஷமாக அமைகிறது. அன்றைய பயணத்தில் அவன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான்.  அவளும்  அவன் மீது தன் கடைக்கண் பார்வையை வீசுகிறாள். பார்த்த கணமே இருவருக்குள்ளும் காதல் நெருப்பு பற்றிக் கொள்கிறது.


மாநகரின் பொறுக்க முடியா இரைச்சலும் சத்தமும் அவர்களுக்கு இனிய இசையாகக் கேட்கிறது. அவர்கள் காதல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர, பிறகு இருவரும் கல்யாணம் செய்துகொண்டு கணவன் மனைவி ஆகின்றனர்.  இப்படியே இருந்தால் கதை நகருமா?  காலப்போக்கில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு.. ஊடல் ஏற்பட்டு இருவரும் பிரிகின்றனர்.  இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசினால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும். ஆனால் ஒன்று சேர அவர்களின் ஈகோ பெரும் தடையாக இருக்கிறது.  பிரிவுத் துயரில் இருவரும் வாட.. மனக்கசப்பில் நாட்கள் நகர.. இங்கே ஒரு திருப்பம். நாடுகளுக்கு இடையே போர் வெடிக்கிறது.  நாயகன் நாட்டிற்காக போரிட போர்முனைக்குச் செல்கிறான்.  வீரத்துடன் சாகசப் போர் புரிகிறான். ஆனாலும் துரதிருஷ்டம்.. போரில் நாட்டிற்காக உயிர் துறக்கிறான் நாயகன். அவன் மரணச் செய்தி அவன் மனைவியாகிய நாயகிக்குப் போய்ச் சேர்கிறது. அவள் கதறி அழுகிறாள். நாயகனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷ நாட்கள்.. இனி அது என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்கிற உண்மை உறைக்க அவள் துக்கம் பன்மடங்காய்ப் பெருகுகிறது.  இந்த இடத்தில் மீண்டும் ஓர் அழகான ட்விஸ்ட். காலம் இப்போது பின்நோக்கி நகர்ந்து நாயகனும் நாயகியும் ஊடல் கொண்டு பிரிந்திருக்கும் கட்டத்தில் வந்து நிற்க.. நாயகன் நாயகி இருவரும் சந்தித்து மனம்விட்டுப் பேசுகின்றனர். அவர்கள் மனக்கசப்பு நீங்குகிறது. மீண்டும் இருவருக்கிடையே அன்பு பெருகி காதல் என்னும் புதிர்வெளியினுள் வீழ்கின்றனர். இருவரும் முத்தமிட்டுக் கொள்ள படம் இனிதே நிறைவு பெறுகிறது.  இப்படி ஒரு பாராவினுள் அடங்கிவிடும் அரதப்பழசான சாதாரணக் கதையை 500 படங்களின் காட்சிக் கலவையினால் அசாதாரணப் படமாய் உருவாக்கியிருக்கிறார் Palfi.

ஆபாச காட்சிகள் 51 தமிழ் படங்களுக்கு சென்சார் போர்டு தடை!

சென்சார் போர்டு தணிக்கை செய்து தடை செய்யப்பட்ட படங்களின் எண்ணிக்கை தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த அமிதாப் மற்றும் நூதன் தாக்குர் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பெற்றுள்ளனர். அதில், 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 256 திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது தெரியவந்துள்ளது.  அதிகபட்சமாக 2006-ம் ஆண்டு 59 படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது. 2002-ல் 33 படங்களுக்கும், 2004-ல் 31 படங்களுக்கும், 2010-ல் 9 படங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. 2001-ம் ஆண்டு தணிக்கைக்குச் சென்ற 19 படங்களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.  இந்த காலகட்டத்தில் 78 இந்திப் படங்களும், 52 ஆங்கிலப் படங்களும் தடை பெற்றிருக்கின்றன. தென்னிந்திய சினிமாக்களில் தமிழ்ப் படங்கள்தான் அதிகம் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தால் 51 தமிழ் படங்களுக்கு சென்சார் போர்டு சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது.   இதையடுத்து 33 கன்னட படங்களுக்கும், 15 தெலுங்கு படங்களுக்கும், 14 மலையாளப் படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது. 

2013 பாம்பு ஆண்டு பலன் தெரியுமா?

 பாரம்பரிய கலைகள் தமிழத்திலிருந்து சீனாவிற்கு இடம் பெயர்ந்தது, என வரலாற்று  ஆய்வாளர்கள், பல விதங்களில் நிரூபிக்க  முயற்சிக்கின்றனர். கலைகள் மட்டுமல்ல, காலண்டரும்  இங்கிருந்து தான் சென்றது,  சீன ஜோதிடமும் 12 ராசிச் சக்கரங்களை கொண்டுள்ளது. நமது முறையில் மாடு, ஆடு, மீன் போன்ற உயிரினங்களோடு, தராசு, குடம் போன்ற அம்சங்கள் ராசிச் சக்கரத்தில் உள்ளன. சீன ஜோதிடத்தில் 12 மிருகங்களை கொண்டே, ஒரு ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் குறிப்பிடப்படுகிறது. சீனாவில் 2012ம் ஆண்டு டிராகன் ஆண்டு. 2013ம் ஆண்டு பாம்பு ஆண்டு (பிப்., 10) பிறக்கிறது. நம்மூரைப் போல், புத்தாண்டு எப்படி அமைய போகிறதோ என பல தரப்பினர் எதிர்பார்ப்புகளில் உள்ளனர். அதே போன்று இங்கும் சீன ஜோதிடப்படி, 12 ராசிகளுக்கான பலன்கள் எப்படி அமையப் போகின்றன,  என்பதை பெங்சூயி (சீன வாஸ்து) முறைப்படி சில உதாரணங்கள் மட்டும்.

எலி ஆண்டு: 1900 -1912 - 1924 - 1936 - 1948 - 1960 - 1972 - 1984 - 1996 - 2008. பணவரவு சீராக இருக்கும். ஜூன் மாதத்திற்கு  மேல் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கணவன், மனைவி கருத்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்  வீண் விவாதங்களை தவிர்க்கலாம்.  

எருது ஆண்டு: 1901, 1913 - 1925, 1937 - 1949 - 1961 - 1973 - 1985 - 1997 - 2009. எருது ஆண்டில் பிறந்தவர்களுக்கு 2013 அதிர்ஷ்ட ஆண்டு. பணியில் இருப்போருக்கு மேலதிகாரிகளின் பாராட்டு, வெளிநாட்டு வேலை, வேலையில் பதவி உயர்வு அனைத்தும் கிடைக்கும்.  இப்படி அனைத்து  ஆண்டுகளிலும் பிறந்தவர் களுக்கான ராசி பலன்கள் கணிக்க பட்டு உள்ளன.  

முயல் ஆண்டு: 1903 -1915 - 1927 - 1939 - 1951 - 1963 - 1975 - 1987 - 1999. 
புலி: 1902 - 1914 - 1929 - 1938 - 1950 - 1962 - 1974 - 1986 - 1988. 
டிராகன்: 1904 - 1916 - 1924 - 1940 - 1952 - 1964 - 1976 - 1988 - 2000 - 2012. 
பாம்பு: 1905 - 1917 -1929 - 1941 - 1953 - 1965 - 1977 - 1989 - 2001-2013 
குதிரை: 1906 - 1918 - 1930 - 1942 - 1954 - 1966 - 1978 - 1990 - 2002. 
ஆடு: 1097 - 1919 - 1931 - 1943 - 1955 - 1967 - 1979 - 1991 - 2003. 
பன்றி: 1947 - 1959 - 1971 - 1983 - 1995 - 2007. 
குரங்கு: 1908 - 1920 - 1932 - 1944 - 1956 - 1968 - 1980 - 1992 - 2004. 
சேவல் : 1909 - 1921 - 1933 - 1745 - 1907 - 1969 - 1981 - 1993 - 2005.
 நாய் : 1910 - 1922 - 1934 - 1946 - 1958 - 1970 - 1982 - 1994 - 2006.
இந்த ஜோதிட முறை இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த நாடுக ளுக்கு இடையே உள்ள கேந்திர நிலையின் ஒற்றுமைகள் தான் 

காற்றில் பறக்கும் மீன்கள்!


ஜப்பானில் உள்ள கடலில் இஸ்குயிட் வகை மீன்கள் ஆபத்து காலங்களில் கடல் நீரில் இருந்து சுமார் 100 அடி வரை காற்றில் பறந்து தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொள்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாகவே மீன்கள் நீரில் வாழ்பவை. அனால் அரிதாக சில மீன்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக சில மீட்டர் தூரம் நீரில் இருந்து துள்ளி தப்பித்து கொள்ளும். ஆனால் இஸ்குயிட் என்ற இந்த மீன் இனங்கள் தண்ணீரில் இருந்து சுமார் 100 அடி வரை காற்றில் பறந்து தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொள்கிறது என்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதுவும் வினாடிக்கு 36 அடி வேகத்தில் பறக்கின்றன. காற்றில் 3 வினாடிகள் வரை மட்டுமே இருக்கும் இந்த மீன்கள் , அந்த 3 வினாடிக்குள் வெகு தூரம் அல்லது வெகு உயரம் மின்னல் வேகத்தில் பறந்து தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி கொள்கிறது. இது விஞ்ஞானிகளுக்கு புதிய தகவலாகவும், இந்த மீன் இனத்தை பற்றி ஆராய மேலும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சும்மா கிடந்த சங்கை ஊதி பவர் ஸ்டார் ஆக்கிய கதை!

ஏதோ ஆசைக்கு ஒரு படம் நடிக்க வந்தார் பைனான்சியல் புரோக்கராக இருந்த சீனிவாசன். வெறும் நடிகர் மட்டும் என்றால் நல்லாருக்காதே என்ற எண்ணத்தில், ஒரு உதவி இயக்குநரைப் பிடித்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் அவர் தலையில் சுமத்தி, தன் பெயரைப் போட்டுக் கொண்டார். இதைக் கேட்ட போது, ஆமா காசு கொடுத்தேன்... அந்தப் பையன் ஓகேன்னான்.. நான் இயக்குநராகிட்டேன். இதிலென்ன தப்பு என்று திருப்பிக்கேட்டார் சீனிவாசன். சீரியஸான காமெடி பீஸாக வலம் சீனிவாசனுக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் காரணமாக, பிரபல இயக்குநர்களின் படங்களில் காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சீனிவாசன். அதில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் குருட்டாம் போக்கில் ஓடிவிட, இப்போது அவருக்கு புதிய மவுசு. ஏகப்பட்ட புதிய படங்களில் ஒரு பாடலுக்கு அல்லது காமெடியனாக அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இந்த ஒரே படத்தில் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார் சீனிவாசன். காரணம் கேட்டால், "ஆமாங்க... இந்த நிலைமைக்கு வர நான் நிறைய இன்வெஸ்ட் பண்ணிட்டேன். அதையெல்லாம் இனிமேதானே திரும்ப எடுக்கணும். அதான் சம்பளத்தை 1 கோடியாக உயர்த்திவிட்டேன். என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரே என் படத்தைப் பார்த்து பவர் பட்டையைக் கிளப்பிட்டீங்க என்றார். இது எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய விருது," என்றார்.



ராஜபக்சேவை எதிர்ப்பது போல நாடகம்.


 ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ, நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார். திமுகா உடன் கூட்டணியா? இலங்கை பிரச்னையில் அனைத்து கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், திமுகவோடு கை கோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார். இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அதை தடுக்காத கருணாநிதி இப்போது ராஜபக்சேவை எதிர்ப்பது போல நாடகம் போடுகிறார் என்று வைகோ குற்றம் சாட்டினார்.


வரும்காலங்களில் இனி திரைப்படத்தை மாநில அரசு தடுக்க முடியாது!


ஒளிப்பதிவு சட்டத்தை மறு ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகும்போது மாநில அரசுகள் திரைப்படத்தை தடை செய்ய முடியாது எனவும் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி தெரிவித்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் மணிஷ் திவாரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 'விஸ்வரூபம்' படத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் துரதிருஷ்டவசமானது. மத்திய தணிக்கை குழு படத்தை பார்த்து திரையிடலாம் என்று ஒப்புதல் கொடுத்த பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது. இதேபோல் ஒவ்வொரு படத்திற்கும் தடை விதித்தால், ஒவ்வொரு பட தயாரிப்பாளர்களும், மத தலைவர்களை அழைத்து படத்தை காட்டிவிட்டுதான் வெளியிடவேண்டிய நிலை வரும். எனவே, 1956ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒளிப்பதிவு சட்டம் மறு ஆய்வு செய்யப்படும். இதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகும்போது திரைப்படங்களை மாநில அரசுகள் தடை செய்ய முடியது. அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு உரிய அனுமதி வழங்காமல் மத்திய அரசு தடை விதித்துவிட்டது என்று தமிழக அரசு கூறுவது தவறானது. அரசின் கேபிள் டிவி கார்ப்பரேஷன் லைசன்சை ரத்து செய்யவும் இல்லை, கைவிடவும் இல்லை. லைசென்ஸ் விவகாரம் நிலைகுழுவின் ஆய்வில் உள்ளது. நிலைக்குழு தான் இது குறித்து முடிவு செய்யும்.