02 May, 2013

பூத்து கோவில் தெரியுமா?


தெலுங்கு தேச மக்களின் தமிழ் அன்பிற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது,புத்து கோவில் என்று எழுதியதாக நினைத்துள்ளார்கள் ஆனால் அது பூத்து கோவிலாகியுள்ளது.

ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள்.

 
பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார். இதில் ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் ஒரிசா பாலு பேசியதாவது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். 
 
பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. 
 
பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.

5 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை அம்பானிக்கு இசட் பிரிவா?

 
ஆரம்பம் முதலே முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் பல சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், தற்போது ‘ 5 வயது சிறுமி பாதுகாப்பு இல்லாமல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். ஆனால், இவருக்கு ஏன் இசட் பிரிவு பாதுகாப்பு' என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சில அச்சுறுத்தலின் எதிரொலியாக, தொழிலதிபர் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மத்திய அரசுக்கு ரூ.16 லட்சம் வரை கட்டணமாக செலுத்துகிறார். இதனை இடதுசாரி கட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ள நிலையில், இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய பாதுகாப்பு படை தவறாக பயன்படுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதி சிங்வி, மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினார்.அதில் ‘பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைவான சூழலில் தனிமனிதருக்கு மத்தியபடை பாதுகாப்பு வழங்குவது ஏன்? பாதுகாப்பு குறைபாடுகளால்தான் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள். அப்படி தனிமனிதருக்கு பாதுகாப்பு வேண்டுமெனில், அவர்கள் தனியாக வாடகை காவலாளிகளை அமைத்து கொள்ளலாம்' என்றும் கூறினார்.