ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
11 May, 2014
குறையும் தனிமனித நேர்மை?
நேர்மை அல்லது தனிமனித ஒழுக்கத் துக்குப் பெயர்போனவர்கள் நம் இந்தியர்கள். அமெரிக்காவில் இருக்கும்போது பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இதைப் பெருமைபொங்க சொல்வதைக்கேட்டு நானே புழங்காகிதம் அடைந்திருக் கிறேன். ஆனால், இன்றைக்கு நம்மிடம் நேர்மையும் தனி மனித ஒழுக்கமும் வேகமாகக் குறைவதைப் பார்த்தால் வேதனையாகவே இருக்கிறது.நம்மவர்களுக்குத் தானதர்மம் என்பது புதிதல்ல. பழங்காலத் தில் சுமைதாங்கிக்கல் அமைப்பது தொடங்கி, அன்ன சத்திரங்கள் அமைப்பது எனப் பல்வேறு வகையில் தாங்கள் சம்பாதித்த செல்வத்தின் ஒருபகுதியை சமூகத்துக்காகத் திருப்பித் தந்தார்கள். மீதி மட்டுமே வாரிசுகளுக்குச் சென்றது. ஆனால் இன்றோ, நாம் இந்தச் சமூகத்திலிருந்துதான் சம்பாதித் தோம், அதில் பெரும்பகுதி இந்தச் சமுதாயத்துக்குத்தான் செல்ல வேண்டும்; அதுவும் தனது வாழ்நாளிலேயே எனப் பலரும் விரும்புகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாக மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ், வாரன் பஃபெட், ஹெச்சிஎல் சிவ்நாடார், விப்ரோ பிரேம்ஜி போன்றோரைக் கூறலாம். இந்தச் செயலை டாடா போன்ற குழுமங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்தன. இப்போதும் செய்துவருகின்றன. டாடா குழுமத்தின் பெரும்பகுதி பங்குகளை டிரஸ்ட்கள்தான் வைத்துள்ளன. டாடா குழுமம் செயல்படுத்தும் டிரஸ்ட்கள் அனைத்தும் உண்மையான, லாப நோக்கமற்ற சமூகத்துக்காகப் பாடுபடும் டிரஸ்ட்கள்.
இன்று நம் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான கல்வி நிறுவனங் கள் லாப நோக்கமற்ற டிரஸ்ட் முறையில்தான் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த டிரஸ்ட் களை நடத்தும் எத்தனைபேர் உண்மையாக, லாபமற்ற நோக்கோடு, சமூகச் சிந்தனையோடு நடத்துகிறார்கள்? இந்த நிறுவனங்களை நிறுவியவர்கள் முழுக்க முழுக்க லாபநோக்கோடு தான் நடத்துகிறார்கள். எத்தனை பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வாங்கும் நன்கொடைக்கு ரசீது தருகின்றன? இந்த நிறுவனங்களின் நிறுவனர்கள் எத்தனையோபேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்டு, அபராதம் கட்டச் சொல்லியிருப்பது எல்லாருக்கும் தெரியும். நாணயமாக நடப்பவர்கள், தனிமனித ஒழுக்கத்தோடு இருப்ப வர்கள் இந்தச் செயல்களைச் செய்யமாட்டார்கள். உண்மைக்குப் புறம்பாக நடக்கமாட்டார்கள். டிரஸ்ட் மூலம் தனது சொந்த வாழ்வுக்குப் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கேவலமான ஒன்று.
தனிமனிதனாகட்டும், நிறுவனங் களாகட்டும் வரி ஏய்ப்பு செய்யும் வரை நாடு முன்னேறுவது கடினம். அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில், வருமான வரித்துறைதான் ஒரு பெரிய சட்ட ஒழுங்கு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. பல பெரிய கிரிமினல்களை இந்தத் துறையின் மூலம்தான் சிறைக்குக் கொண்டுவந்தார்கள். அரசியல்வாதிகள்தான் எடுத்ததற்கெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், அரசு வேலையில் அதிகாரிகள்கூட வாங்கவே செய்கிறார்கள். அரசுப் பணியிடங்களை நிரப்பு வதிலிருந்து, துணைவேந்தரை அமர்த்துவதுவரை எல்லா வற்றுக்கும் பணம்தான் பிரதானமான விஷயமாக இருக் கிறது. இதனால் நேர்மையான பலர் அரசாங்க வேலையே வேண்டாம் என நல்ல தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். அரசு வேலைகளில் கைநிறையச் சம்பளம், பென்ஷன் மற்றும் மருத்துவ வசதி, 100 நாட்களுக்கு மேலாக விடுமுறை என எத்தனையோ வசதிகள் இருந்தும் 'எக்ஸ்ட்ரா’ பணத்தை எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தத் தவறுகளைச் செய்பவர்களிடம் ஏன் செய் கிறீர்கள் என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள். தாங்கள் செய்யும் தவறுகளுக்குப் பொய்யான ஒரு காரணத்தைத் தேடிக்கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவென்று பார்த்தால், அவர்களிடம் தனி மனித ஒழுக்கம் இல்லை.
பிற வளர்ந்த நாடுகளில் இதுபோல் நடக்கிறதா? ஊழல் முழுவதுமாக இல்லாத நாடுகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வளர்ந்த நாடுகளில் இந்தியாவில் நடக்கும் இந்த அளவுக்குத் தவறுகள்/ ஊழல் கள் நடப்பதில்லை என்று உறுதியாக அடித்துக்கூறலாம். அதற்கு முக்கியக் காரணம், சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் எள்ளளவும் பிசகமாட்டார்கள். உதாரணத்துக்கு, ரஜத் குப்தாவை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து ஐ.ஐ.டி டெல்லியில் படிப்பு முடித்து, அமெரிக்கா சென்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பு முடித்து அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிவிட்டார். உலகளவில் பிரசித்தமான மெக்கன்ஸி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக மூன்று முறை பணியாற்றினார். இந்தியாவில் ஐஎஸ்பி (Indian School of Business) என்ற எம்பிஏ படிக்கும் பள்ளியை நிறுவி உலகளவில் முதல் 15 ரேங்குக்குள் அந்தப் பள்ளியை கொண்டுவந்தார். இந்தியாவிலும் இவருக்கு ஏகப்பட்ட மதிப்பு.
இவ்வளவு இருந்தும் சுயஒழுக்கமற்ற ஒரு சிறிய தவறி னால் (இவர் டைரக்டராக இருந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை சார்ந்த செய்தியை பரிமாறிக்கொண்டார் என்பதற்காக) இவரின் தவறு நிரூபணமாகி அமெரிக்காவில் இவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டது. இவர் எந்த அளவுக்குக் கௌரவமாக இருந்தாரோ, அவையெல்லாம் இன்று எங்கோ போய்விட்டது. ஓய்வுக்காலத்தில் இவர் டைரக்டராக இருந்த பல பெரிய நிறுவனங்களும் இவரைப் பதவியைவிட்டு விலகச்சொல்லின. பணத்துக்கு ஆசைப்பட்டு மனிதன் தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.வரி கட்டுவதில், நிறுவனத்தில் வேலை செய்வதில், லஞ்சம் தருவதில், சுயகௌரவத்துடன் இருப்பதில், சட்டத்துக்கு ஒருபடி மேலே சென்று நியாயமாக/ தர்மமாக நடப்பதி லாகட்டும் சுய ஒழுக்கத்துடன் செயல்படுவோம். இனியாவது நாம் திருந்துவோம்!

