02 June, 2011

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவை: பிரமாண்ட கப்பல் வருகை

தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு ஜூன் 2வது வாரம் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் பொருட்டு பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான ஸ்காட்டியா பிரின்ஸ் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது. தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க வேண்டும் என 10 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கான தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.76 கோடி மதிப்பில் பயணிகள் முனைமம் அமைக்கப்பட்டது. இதில் சுங்கசோதனை, குடியுரி்மை சோதனை, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையான வசதிகளுடன், உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவியும் அமைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பலை இயக்குவதற்கான உரிமையை பிளமிங்கோ லைனர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் சொகுசு கப்பலை தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு இயக்க ஓப்பந்தம் செய்துள்ளது. இந்த சொகுசு கப்பல் தற்போது தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது.

பிரமண்டமான இந்த சொகுசு கப்பலில் 1050 பேர் பயணிக்க முடியும். தொழில் நுட்ப பணியாளர்கள் 50 பேரும், உபசரிப்பு பணியாளர்கள் 150 பேரும் இதில் பணியாற்றுகின்றனர். இதில் பயணிகளுக்கு 322 அறைகளும், பணி்யாளர்களுக்கு 98 அறைகளும் உள்ளன. 322 பேர் அமரக்கூடிய ஹோட்டல், 76 பயணிகள் அமரக்கூடிய காப்பி ஷாப், 253 பேர் அமர கூடிய பார்வையாளர் மடம் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் மதுபான அரங்கு, காசினோ எனப்படும் பொழுதுபோக்கு மையம், பரிசுபொருள் அங்காடி, சுங்கவரி விலக்கு அங்காடி, மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஆகியவை உள்ளன. சுமார் 200 கார்கள் கொண்டு செல்வதற்கான இடவசதி கொண்ட இந்த கப்பலில் சுமார் 2 ஆயிரம் டன் சரக்கையும் கொண்டு செல்ல முடியும்.

மணிக்கு சுமார் 13 கடல் மைல் முதல் 18 கடல் மைல் வேகத்தி்ல் இந்த கப்பலில் பயணிக்க முடியும். காற்றின் வேகம் மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு சுமார் 9 மணி முதல் 12 மணி நேரத்தில் செல்ல முடியும். தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment