13 July, 2011

இதயக் குழாய் நோய்களால் உயிரிழப்பு தென் இந்தியாவில் அதிகம்!

உலகில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இதயக் குழாய் நோயால் ஏற்படுகிறது என்று டாக்டர் தல்வார் கூறினார். சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை விழாவில் சண்டிகர் மேல்பட்டப்படிப்பு கழகத்தின் தலைவர் டாக்டர் கே.கே.தல்வார் பேசுகையில், மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை தரவேண்டும். இதயக் குழாய் நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்களுடைய ஆய்வுப்படி ஆயிரத்தில் 65 ஆண்களும் 48 பெண்களும் இந்த நேராயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் இதைத் தடுக்கும் முறை நாட்டில் சீராக இல்லை; இந்த நோய் தடுப்பு விகிதம் கிராமப்புறங்களில் 3 முதல் 4 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 8 முதல் 10 சதவீதமாக உள்ளது. வட இந்தியாவை விட தென்இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாரடைப்பு ஏற்படும் 40 வயதுக்குட்பட்டவர்களை ஆய்வு செய்ததில் உலக அளவில் 3 முதல் 11 சதவீதம் பேரும் இந்தியாவில் 25 சதவீதம் பேரும் இதயக்குழாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். உலக அளவில் 52 நாடுகளில் நடைபெற்ற ஆய்வு மூலம் புகைப் பிடித்தல், மன அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவையே இந்த நோய்க்கான மூல காரணங்களாக உள்ளன என்றார்.

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் பேசுகையில், தற்போது நீரிழிவு நோய் அனைத்து பிரிவினரையும் இளைஞர்களையும் கூட பாதிக்கிறது என்றார். அமெரிக்க எமோரி பல்கலைக்கழக பேராசிரியர் கே.எம். வெங்கட் நராயணனுக்கு டாக்டர் மோகன் நீரிழிவு நோய் நிபுணர்கள் மைய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த மையத்தின் தலைவர் வி.மோகன், துணைத்தலைவர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன், இணை மேலாண்மை இயக்குநர் ஆர்.எம்.அஞ்சனா, இந்திய நீரிழிவு ஆராய்ச்சி மையத் தலைவர் சஷாங்க் ஜோஷி ஆகியோர் பேசினர்.

No comments:

Post a Comment