24 August, 2011

ஜெர்மனி கால்பந்தாப் போட்டி அணிவகுப்பில் தமிழ் ஈழ தேசியக் கொடி!

ஜெர்மனியின் வெஸ்ட்பாலன்ஸ்டேடியான் என்ற நாட்டிலேயே மிகப் பெரிய கால்பந்து ஸ்டேடியத்தில் நடந்த கால்பந்துப் போட்டிக்கு முன்னதான அணிவகுப்பின்போது இலங்கையின் தேசியக் கொடிக்கு இணையாக தமிழ் ஈழத் தேசியக் கொடியும் கொண்டு செல்லப்பட்டு கெளரவம் தரப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமையன்று பொருஸ்ஸியா டர்ட்மண்ட் மற்றும் நூரம்பர்க் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி நடந்தது. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் அணி வெற்றி பெற்றது. இப்போட்டிக்கு முன்னதாக பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள் எடுத்துச் செல்லப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது. பிரேசில், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட 40 நாடுகளின் தேசியக் கொடிகள் இதில் பங்கேற்றன. அதில் தமிழ் ஈழத்தின் தேசியக் கொடியும் ஒன்றாகஇடம் பெற்றது அனைவரையும் கவர்ந்தது.

தமிழ் ஈழத்தின் கொடியை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும், பொருஸ்ஸியா டார்ட்மண்ட் ரசிகர்கள் மூவருமாக இணைந்து பிடித்துச் சென்றனர். இலங்கைக் கொடியுடன், அக்கொடிக்கு இணையாக தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி பட்டொளி வீசும் வகையில் மதிப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment