14 September, 2011

மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர் குற்ற அறிக்கை: பொது செயலாளர் பான்-கி-மூன் அனுப்பினார்


இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே, இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்ததாக கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டது.
 
இதை இலங்கை அரசு மறுத்து வந்தது. போர்க்குற்ற அறிக்கையை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு அந்த அறிக்கை மீது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைக்கான தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு பொது செய லாளர் பான்-கி-மூன் நேற்று அனுப்பி வைத்தார். இந்த கவுன்சில் 3 பேர் உறுப்பினர்களை கொண்டது. நவி பிள்ளை இதன் தலைவராக உள்ளார். இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கை தீர்மானம் மீது இந்தியா, இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. போர்க்குற்ற அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் முடிவை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மீதான போர்க்குற்றம் தீர்மானத்துக்கு மூன்றில் ஒரு பங்கு நாடுகள் ஆதரவு அளித்தால் கவுன்சிலில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படும். ஆனால், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற தீர்மானத்துக்கு நட்பு நாடான சீனா ஆதரிக்காது என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளது.

No comments:

Post a Comment