12 October, 2011

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணை பகத்சிங் கிராந்தி சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் அடித்து உதைத்தனர்!


அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணை பகத்சிங் கிராந்தி சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த இருவர் அடித்து உதைத்தனர்.காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.சில நாட்களுக்கு முன் வாரணாசியில் ஒரு கூட்டத்தில் பேசிய பூஷண், காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் இன்று பிற்கலில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள பூஷணின் சேம்பருக்குள் நுழைந்த இருவர் அவரை முதலில் முகத்தில் அறைந்துவிட்டு, அடித்து உதைத்தனர். அவரை தரையில் இழுத்துப் போட்டு மிதித்தனர். இதில் அவரது உடை கிழிந்தது.இந்தத் தாக்குதல் நடந்தபோது ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பிரஷாந்த் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். இதனால் இந்த சம்பவம் முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்கியவர்களைத் தடுக்க முயன்ற டிவி நிருபரையும் அந்த நபர்கள் தாக்கினர்.

இதையடுத்து அருகாமையில் இருந்த பிற வழக்கறிஞர்களும் பொது மக்களும் ஓடி வந்து பூஷணைக் காப்பாற்றி, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைப் பிடித்தனர். இன்னொருவர் தப்பியோடிவிட்டனர்.பிடிபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாங்கள் இருவரும் பகத்சிங் கிராந்தி சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பிடிபட்ட நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து ஸ்ரீராம் சேனா அமைப்பின் நோட்டீஸ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந் நிலையில் தாக்குதலில் காயமடைந்த பிரஷாந்த் பூஷண், ராம் மனோகர் லோகியா மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

No comments:

Post a Comment