08 October, 2011

இயற்கை பேரழிவுகளுக்கு மனிதர்களே காரணம்!


நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாக உள்ளது,'' என, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் (ஈகோ கிளப்) நாடக இயக்குனர் ராமராஜ் தெரிவித்தார். 

இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் 33 சதவீதம் இருக்க வேண்டும்; மனித குலம் வாழ தகுந்த சுற்றுச்சூழல் அப்போதுதான் சமச்சீராக இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் வெறும் 17 சதவீதம் மட்டுமே அடர் காடுகள் இந்தியாவில் உள்ளதாக சேட்டிலைட் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனால் இயற்கையின் பஞ்ச பூதங்கள் மனிதனுக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளன, என சுற் றுச்சூழல் அமைப்புகள் கூறுகின்றன.
இது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், வன உயிரின வார விழா நடந்தது. இதில் விழிப்புணர்வு நாடகங்கள் கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நடந்தன. நாடகத்தில் மாணவர்கள் பஞ்ச பூதங்கள் வடிவில் வேடமிட்டு நடித்தனர். பஞ்ச பூதங்கள் வடிவில் வந்தவர்கள்,""மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால், மனிதர்களை காக்க வேண்டிய நாங்கள் அவர்களுக்கு எதிரிகளாக மாறி வருகிறோம்; இந்நிலை தொடர்ந்தால் படிப்படியாக நாங்கள் உலகை விட்டு சென்று விடுவோம்; எனவே மரங்களை வளருங்கள்,'' என அவை கூறுவது போல் நடித்தனர்.

இது குறித்து அமைப்பின் நாடக இயக்குனர் ராமராஜ் கூறியதாவது: காடுகள்தான் இயற்கையின் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றிற்கு தாயாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் காடுகளின் பரப்பு வெகுவாக இன்று குறைந்து விட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாகும். வளரும் தலைமுறையான கல்லூரி மாணவர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவே எங்கள் முக்கிய நோக்கம். தற்போது எங்கள் கல்லூரியில் நடத்தப்படும் நாடகங்கள், வரும் காலத்தில் கோவையின் அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்படும். அதன் மூலம் வனங்களை பெருக்க முயற்சி செய்வோம்

No comments:

Post a Comment