11 November, 2011

தொடரும் நிலச்சரிவு காரணம்...?

மலை மாவட்டமான நீலகிரி, ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு இலக்காகி வரும் இடமாக மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பல்வேறு நிலச்சரிவுகள், மண் சரிவுகள், வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 2009ல் இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சமீபத்தில் பெய்த மழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டு கோத்தகிரி அருகே மூவர் உயிரிழந்தனர். 

இதற்கான காரணங்களை ஆராய கொல்கத்தாவை சேர்ந்த பாய் ராப் கல்லூரியை சேர்ந்த புவியியல் துறை மாணவர்கள் 43 பேர் மற்றும் பேராசிரியர்கள் பாஷூ, ராக்கி, சிலி ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  அக்குழுவினர்,    ‘’மலை மாவட்டமான நீலகிரியில் இயற்கைக்கு பெரும் உதவியாக உள்ள வனப்பகுதிகளின் அடர்த்தி வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டது. 

தற்போது 48% காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு, விளை நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாறியுள்ளது. செங்குத்தான மலைப்பகுதிகளில் ஜேசிபி, பொக்ளைன் இயந்திரங்கள் மூலம் நிலச்சீரமைப்பு பணி செய்வதால் நில அமைப்பு மாறுகிறது. இதனால் மண் இளகி மண் சரிவுக்கு வித்திடுகிறது. விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டுதல், சாக் கடை கால்வாய் வசதி, மழை நீர் வடிகால் வசதிகளில் மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது.  இந்நிலை நீடித்தால் இங்கு பேரழிவுகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இயற்கையையும், மனிதர்களையும் பாதுகாக்க கட்டிடங்கள் மற்றும் விளை நிலங்களுக்கு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கவேண்டும். வன பரப்பளவு குறைந்ததால் வன விலங்குகள் குடியி ருப்புகளுக்கு வருகின்றன. முதல்தேவையாக வனத்தின் பரப்பை அதிகரிக்க வேண்டும்’’ என்று  கூறினர்.

No comments:

Post a Comment