08 December, 2011

மஸ்கட்டில் தேவா,எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சாதனையாளர் விருது!







 மஸ்கட் தமிழ்ச் சங்கம், தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்
‘தேனிசைத் தென்றல்’தேவா மற்றும் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி
ஆகியோருக்கு திரைப்படத் துறையில் அவர்கள் செய்த சாதனைகளை
கௌரவிக்கும் வகையில், 6000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் நடை பெற்ற
‘கீதம் சங்கீதம்’ என்ற மாபெரும் இசை நிகழ்ச்சியில் ‘வாழ்நாள் சாதனையாளர்’
விருது வழங்கி கௌரவித்தது. திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக்,
பாடகிகள் சுசித்ரா, சைந்தவி, சென்னை ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினர்
இணைந்து வழங்கிய 4 மணி நேர திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி அனைத்து
பார்வையாளர்களையும் இசைக் கடலில் ஆழ்த்தியது. டி.வி புகழ்
சிவகார்த்திகேயன் வழங்கிய நகைச்சுவையுடன் கூடிய தொகுப்புப் பேச்சும்,
மிமிக்ரியும் பார்வையாளர்கள் அனைவரையும் சிரிப்புப் பிரவாகத்தில்
ஆழ்த்தியது. ‘தேனிசைத் தென்றல்’ தேவா பாடிய ‘கவலைப் படாதே சகோதரா’
என்ற பாடலும் மற்ற பாடல்களும் கைதட்டல்களை அள்ளிச் சென்றன.
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்ற மெல்லிசைப்
பாடல் காதில் ரீங்காரமாய் ஒலித்து, மூத்த ரசிகர்களை இளமைக் காலத்திற்கு
இழுத்துச் சென்றது. ‘ எலந்தப் பழம்...எலந்தப் பழம்..’ பாடல் பார்வையாளர்களை
இருக்கையை விட்டு எழுந்து நடனம் ஆடச் செய்தது. இளம் பார்வையளர்களின்
ரசனைக்கேற்ற பாடல்களைப் பாடி கார்த்திக்கும், சுசித்ராவும் அவர்களைக்
கட்டிப் போட்டனர். முன்னதாக தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய்
வாழ்த்துடன் விழா தொடங்கியது. ரகுமுத்துக் குமார் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment