01 February, 2013

மூளை செயல்பட 1.5 வினாடிகள்?


நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதற்கு காரணம் அதிவேகம். ஏனெனில், நெடுஞ்சாலையில் செல்லும்போது காரின் வேகத்தை சரியாக உணர்ந்து கொள்ள முடியாததே இதற்கு காரணம். நெடுஞ்சாலையில் செல்லும்போது காரின் கதவுகளை முழுவதுமாக அடைத்துவிட்டு, ஏசியை போட்டுக் கொண்டு செல்லும்போது வேகத்தை முழுமையாக உணர முடியாது. 100 கிமீ வேகத்துக்கும் மேல் செல்லும்போது கூட சாதாரணமாகவே தெரியும். இதனைத்தான் Speed blindness என்று கூறுகின்றனர். மேலும், முன் பின் செல்லும் வாகனங்களின் வேகமும் உங்களது வாகனமும் ஒரே வேகத்தில் செல்வதால் உங்கள் வாகனத்தின் வேகத்தை உணர முடியாமல் மெதுவாக செல்வது போன்ற மாயையை மூளைக்கு ஏற்படுத்தி விடும். 
ஒருவேளை, அவசரத்தில் திடீரென பிரேக் பிடித்தால் கூட அது பயனளிக்காது. உதாரணமாக, 80 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் குறைந்தது 28.11 மீட்டர் தூரத்தில்தான் கார் நிற்கும். இதற்கு 2.59 வினாடிகள் ஆகும். இதுவே 100 கிமீ வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தால் 54.33 மீட்டர் தூரத்தில்தான் கார் நிற்கும். இதற்கு 3.73 வினாடிகள் ஆகும். இது சாலைநிலைகளை பொறுத்து. சில வேளை சாலையில் மணல் படர்ந்திருந்தால் இந்த தூரம் மேலும் அதிகரிக்கும். இதுதவிர, காரின் எடையை பொறுத்தும் இந்த தூரம் மாறுபடும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட கார்களில் இந்த தூரம் கணிசமாக குறையும். சாதாரண பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட காராக இருந்தால் ஒருமுறை பம்ப் செய்து பின்னர் பிரேக் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், கார் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமம் என்பதோடு, பல்டி அடிக்கும் வாய்ப்பும் அதிகம். நாம் கால்களால் பம்ப் செய்து பிரேக் பிடிப்பதைதான் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் குறிப்பிட்ட இடைவெளியில் சீராக பிரேக்கிங் பவரை வீல்களுக்கு அனுப்புகிறது. இதனால், கார் ரோல்ஓவர் ஆகாமல் சரியான இடத்தில் நிற்கும். 
அதெல்லாம் சரி, காரை கட்டுக்குள் கொண்டு வர உங்களது மூளை வேளை செய்ய வேண்டுமே. அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசர நிலையை உணர்ந்து மூளை செயல்பட 1.5 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். சமதள பாதையில் செல்லும் வேகத்தை விட சரிவான பாதையில் வேகத்தை பாதியளவு குறைத்துவிடுவது நல்லது. விபரீதத்தை உணர்ந்து மூளை செயல்படுவதற்கு எடுக்கும் கால விரயத்தைத்தான் MOTION INDUCED BLINDNESS என்று கூறுகின்றனர். எனவே, நம் நாட்டில் நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் செல்வது கூடுதல் பாதுகாப்பு. அதுவும், சாலையில் போக்குவரத்து நிலையை பொறுத்தும் நம் வேகம் இருக்க வேண்டும். மேலும், இந்த ஸ்பீடு பிளைன்ட்னஸ் வராமல் இருக்க அடிக்கடி ஸ்பீடோமீட்டரிலும் ஒரு கண் வைக்க வேண்டும். குவான்ட்டோ உள்ளிட்ட கார்களில் 100 கிமீ வேகத்தை தாண்டும்போது பீப் ஒலி அடித்து எச்சரிக்கும் வசதி இருக்கிறது. எது எப்படியோ, மித வேகம், மிக நன்று அல்லவா?

 

No comments:

Post a Comment