20 February, 2013

புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த பூமி...

 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமது நட்பு நாடு, அதன் நட்பு நமக்குத் தேவை என்றுதான் தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது சின்னஞ்சி சிறுவனான பாலச்சந்திரன் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி அனைவரையும் பதறடிக்க வைத்துள்ளது. 
 
பாவமாக இருக்கிறது அந்த சிறுவனின் முகம். சட்டை கூட போடாமல் உட்கார வைத்து கையில் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். அதன் பிறகு அவனே எதிர்பாராத நேரத்தில் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய அசிங்கம் பிடித்த கோழைகளாக மாறிப் போயுள்ள சிங்கள காடையர்கள், அந்த சிறுவனின் நெஞ்சில் தங்களது புல்லட்களை இறக்கி தங்களது வெறியைக்காட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கும் மத்திய அரசு ஈரமே இல்லாமல் பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷித் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து நாங்கள் தொடர்பில் உள்ளோம். இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள். மக்களின் கவலைகள் குறித்து நாங்கள் இலங்கையிடம் உரிய முறையில் எடுத்துரைத்துள்ளோம். சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது. இதற்கு முன்பும் கூட புகைப்படங்கள் வெளியாகின. எனவே இதுகுறித்தெல்லாம் கருத்துக் கூற முடியாது என்றார் குர்ஷித். எவ்வளவு கேவலமான பதில் பாருங்கள்...? புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த பூமி இது... நம்மால் ஒரு பச்சைக் கொலையைக் கண்டிக்கக் கூட முடியவில்லை!

No comments:

Post a Comment