15 February, 2013

முயற்சி திருவினையாக்கும்!

இந்த காலத்தில் நம் கீழ் வேலை பார்ப்பவர்கள் யாராவது அந்த நிலையை விட்டு உயர்ந்தாலே பொறாமைப்படும் நம்மைப் போன்றவர்களுக்கு மத்தியில் , தன் வீட்டில் வேலை பார்த்த ஒரு செக்யூரிட்டி,  ஹீரோவாக உயர்ந்ததை பாராட்டினார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்.செக்யூரிட்டியாக இருந்து இன்று ஹீரோவாக உயர்ந்து பாலசந்தரால் பாராட்டப்பட்டவர் ‘கல்லாப்பெட்டி’ படத்தின் ஹீரோ அஸ்வின் பாலாஜி.கல்லாப்பெட்டி படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இசையை வெளியிட்டு பாராட்டிப் பேசிய பாலசந்தர் தான் மேற்சொன்ன ஆச்சரியமூட்டும் தகவலை தெரியப்படுத்தினார்.

என் வீட்டில் 6 ஆண்டுகளுக்கு முன் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர்தான் இந்த அஸ்வின் பாலாஜி. நான் வரும் போதெல்லாம் எழுந்து நின்று வணக்கம் வைப்பார், எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பார். அப்படி என்னதான் எழுதுகிறார் என்று வாங்கிப் பார்ப்பேன். கவிதைகள் எழுதியிருப்பார். அப்படி அவருக்குள் ஒரு திறமை இருந்ததை நானும் பார்த்தேன். அதன் பின் அவர் என் வீட்டில் வேலை செய்யவில்லை. என்னை விட  திறமைசாலியான கமல் வீட்டிற்குச் சென்று விட்டார். என் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் இந்த விழாவிற்கு நான் வந்ததற்கே காரணம் அவர்தான். அப்படி ஒரு திறமைசாலியானவர் இன்று  ஹீரோவாக அறிமுகமாவது மகிழ்ச்சியான ஒன்று. இன்று பல புதியவர்கள் வருகிறார்கள். நல்ல படங்களைத் தருகிறார்கள். அவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், நான் வந்த புதிதில் எங்களுகெல்லாம் அப்படியில்லை. பல படங்கள் எடுத்த பிறகே எனக்கு அங்கீகாரம் கிடைத்தது.

இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள், படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள ஆசை, அது வரை நான் இருந்தால் வந்து கலந்து கொள்கிறேன் ” என உணர்வு பூர்வமாக பேசி விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கலங்க வைத்து விட்டார் இயக்குனர் பாலசந்தர். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கு ‘கல்லாப்பெட்டி’ படத்தின் ஹீரோ அஸ்வின் பாலாஜி ஒரு உதாரணம்.

No comments:

Post a Comment