13 February, 2013

பிராடு MP,MLA க்கள்

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்திலும் வருமான வரி பிடித்தம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்க கோரி மத்திய அரசு வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மனு தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளகரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: "எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் 11.40 லட்சம் ரூபாய்; எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும் 5.60 லட்சம் ரூபாய், ஆண்டு தோறும் சம்பளமாக பெறுகின்றனர். இவர்களுக்கான இந்த சம்பளத்திற்குரிய வருமான வரியை மத்திய அரசும் மாநில அரசும் பிடித்தமே செய்வதில்லை. 
 
2006 -11ம் ஆண்டில் பதவி வகித்த எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனுக்களைப் பார்க்கும் போது, கிட்டத் தட்ட எட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு நிரந்தர கணக்கு எண்ணே இல்லை. அதே சமயம் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பான் கார்ட் பெற்றிருந்தும் வருமானம் இல்லை என கூறியுள்ளனர். சில எம்.பி.,க்கள் குறைவான தொகையை வருமான வரியாக செலுத்தியுள்ளனர். இதுகுறித்து 2011ம் ஆண்டு வருமான வரித் துறைக்கு புகார் அனுப்பினேன். எனவே எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்களுக்கான சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்ய பார்லிமென்ட் விவகார அமைச்சக செயலர் மற்றும் சட்டசபை செயலருக்கு, உத்தரவிட வேண்டும். 2006-12ம் ஆண்டில் வருமான வரி செலுத்த தவறிய எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் திருப்பி வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞருக்கும், சட்டசபை செயலருக்கான வழக்கறிஞருக்கும் உரிய நோட்டீஸ் வழங்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர் மணிகண்டன் வரதனுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment