|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 July, 2011

இதே நாள்...

  • செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
  •  நார்வே, வடக்கு கிரீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)
  •  ஒளிப்படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த தினம்(1854)
  •  ரோமானியத் தலைவன் ஜூலியஸ் சீசர் பிறந்த தினம்(கிமு 100)

இந்த வார ராசி பலன் ( 8-7-2011 முதல் 14-7-2011 வரை)

மேஷம்
பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

ரிஷபம்
பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வீண் பேச்சைக் குறைக்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு படிப்படியாகக் குறையும். சக ஊழியர்களைப் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். வருமானம் சீராக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

மிதுனம்
பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்கள் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சுமாராகத் தான் இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். பொருளாதாரம் மேம்படும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

கடகம்
பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் சற்று குறைவாகவே இருக்கும். உடல் நலம் மேம்படும். 

பெண்கள்: கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைக்கவும். இல்லையெனில் உறவுகளுக்குள் பிரச்சனை ஏற்படும். சேமிப்பு தக்க சமயத்தில் கை கொடுக்கும். வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சிறிய தவறும் உயர் அதிகாரிகளுக்கு பெரிதாகத் தெரியலாம். பணி நிமித்தமான பயணங்களால் அனுகூலம் ஏற்படாது.

சிம்மம்

பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் இனிதே முடியும். எண்ணங்கள் நிறைவேறும். உங்கள் ஆற்றல் பளிச்சிடும். பிரச்சனைகள் தீரும். அதே சமயம் பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். கணவரின் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மருத்துவச் செலவுகள் குறையும். வேலை பார்ப்போருக்கு: கடுமையாக உழைத்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் திறமை மேம்படும். சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் நிம்மதி இருக்கும்.

கன்னி
பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். வெற்றி மேல் வெற்றி தேடி வரும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்லவும். யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும்.

துலாம்
பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியஙகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எண்ணங்கள் நிறைவேறும். பண வரவு நன்றாக இருக்கும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். தாய்வழி சொத்துகள் கிடைக்கலாம். குழந்தைகள் மூலம் பெருமை அடைவீர்கள். பண வரவு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.வேலை பார்ப்போருக்கு: சிலர் சொந்தத் தொழில் துவங்க முயற்சி மேற்கொள்ளக்கூடும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்
பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். ஆற்றல் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். மனதில் புது தெம்பு பிறக்கும். பெரியவர்கள் ஆசி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் பல நன்மைகள் பெறக்கூடும். எதிர்பார்த்த கடன் தொகை வந்து சேரும். திறமை மேம்படும். 

தனுசு
பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நீண்ட கால எண்ணம் ஒன்று நிறைவேறும். பண வரவு சீராக இருக்கும். உடல் நலம் மேம்படும். 

பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பாராத நல்ல செய்தி கிடைத்து மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைக்கவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக்க குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்
பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனம் நிம்மதியாக இருக்கும். 

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடும். புதிய ஆடை வாங்கி மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். 

கும்பம்
பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். 

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். மனதில் நிம்மதி பூத்துக் குலுங்கும். உடல் நலம் மேம்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.வேலை பார்ப்போருக்கு: வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். வீண் பேச்சைக் குறைக்கவும்.

மீனம்

பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. 

பெண்களுக்கு: குடுபம் அமைதியாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். மனதில் புது உற்சாகம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தை திருமணம் யுனிசெப்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் நடக்கும் குழந்தை திருமணத்தால், தாய், சேய் மரணம் அதிகளவில் நடப்பதாக, யுனிசெப் ஆய்வில், "திடுக்' தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான், அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட மக்கள் தொகை குறைந்த பகுதியில், பள்ளி சிறுமிகள், கழுத்தில் தாலியுடன், பள்ளிக்கு வரும் அவல நிலை தொடர்கிறது. குழந்தை திருமணத்தை தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியவை இணைந்து, குழந்தை நேய கிராம திட்டத்தை துவக்கியது. இதன் மூலம், கிராமங்களில் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யுனிசெப் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது: இந்திய திருமண சட்டப்படி, 18 வயதுக்கு ஒரு நாள் குறைவாக உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தாலும், அது குழந்தை திருமணமாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் குழந்தை திருமணம் நடப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிராமங்களில், பெண்களை உடனடியாக திருமணம் செய்து அனுப்ப வேண்டும், என்ற மனோரீதியில் பெற்றோர், குழந்தைகளுக்கு திருமணம் செய்கின்றனர். குழந்தை திருமணத்தால், பெண்களுக்கு, 60 சதவீதம் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. மகப்பேறு மரணம், குழந்தை பிறப்பில் சிக்கல், குறைபாடு குழந்தை பிறப்பு, கர்ப்பப்பை வளர்சியின்மை ஆகியவை ஏற்படுகிறது. குழந்தை திருமணம் குறித்து, 89396 - 97884 என்ற மொபைல்போன் எண்ணில், புகார் தெரிவிக்கலாம்; தகவல் அளிப்பவர்கள் விவரம், ரகசியம் காக்கப்படும். குழந்தை திருமணம் செய்பவர்கள், உடந்தையாக இருப்பவர்களுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க, சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கையை கண்டித்த பிரதமர் பேட்டி!

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்பின்னரே, பிரச்னையின் சூடு குறைந்தது. அதேநேரத்தில், அன்றைய பேட்டியில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் கூறியதை, பத்திரிகைகள் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை. அதுபற்றி பெரிய அளவில் செய்தி வெளியிடவும் இல்லை. அத்துடன், பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இலங்கை அரசு தரப்பிலும் பதில் அளிக்கப்படவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போர், 2009ல் முடிவுக்கு வந்தது. அதன்பின் இப்போது தான், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் வெளிப்படையாக அழுத்தமான கருத்தைக் கூறியுள்ளார். இந்திய - இலங்கை உறவு என்பது வெளிப்படையாக குறைகூறி விமர்சிப்பது என்பது கயிறுமீது நடப்பது போல தந்திரம் அதிகம் தேவைப்படும் விஷயம்.

பிரதமர் அளித்த பேட்டி விவரம்: இலங்கையைப் பொறுத்தவரை, சிங்களர்களின் இனவெறி ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அங்கு, தமிழர்கள் சமமான மதிப்பு, மரியாதையுடன் வாழ முடியவில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். இலங்கை தமிழர் பிரச்னையில், தமிழகத்தை இந்திய அரசின் பக்கம் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.
இந்தியாவின் இலங்கை கொள்கை, இரு நாடுகளும் இணைந்து செயல்படும் விதமாக அமையவில்லை. தமிழர்கள் விஷயத்தில் இலங்கை ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்பது உண்மையே. தமிழக சட்டசபையில், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாகவும், ராஜபக்ஷேயை கண்டித்தும் போடப்பட்ட தீர்மானம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய - இலங்கை உறவில் உள்ள நெருடல்களைப் புரிந்து கொண்டு இப்பிரச்னை குறித்து தீர்மானம் இயற்றியுள்ளனர். விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மை தான். ஆனாலும், அதனால் தமிழர்களின் பிரச்னை தீர்ந்து விடாது. இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஏராளமான மனக்குறைகள் உள்ளன. தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேட்டியில் தெரிவித்திருந்தார். இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பல நேரங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள், பிரதமர் தன் பேட்டியின் போது, இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ராஜபக்ஷே அரசை அவர் விமர்சித்தது மட்டும் அல்ல, தமிழக முதல்வர் வைத்த கோரிக்கையையும் ஏற்றதுடன், இந்த விஷயத்தில் அதிபர் ராஜபக்ஷே அத்துமீறலைக் கண்டித்த அமெரிக்க அரசின் தூதரகத் தகவலையும் பிரதமர் ஆதரித்திருப்பது முற்றிலும் வித்தியாசமானது. இந்த விமர்சனத்திற்கு ராஜபக்ஷே அரசும் பதில் அளிக்கவில்லை. இதிலிருந்தே, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையே என்பது தெளிவாகிறது. 

விடியலை நோக்கி காத்திருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்!

நாட்டில் எந்த தொழிலும் ஏக போக ஆதிக்கம் செலுத்த, நம் ஜனநாயகம் அனுமதித்தில்லை. ஆனால், ஒரேயொரு தொழில் மட்டும், நம் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் உடைத்தெறிந்து, ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றால், அது கேபிள் இணைப்பு தொழில் மட்டுமே.தமிழக மக்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டு, குடும்ப ஆதிக்கத்தில் இருந்து அரசியலை விடுவித்தனர். ஆனால், அ.தி.மு.க., அரசு அமைந்த பின்னும் கேபிள், "டிவி' தொழில், ஏகபோக ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறவில்லை. தமிழகத்தில் கேபிள், "டிவி' தொழிலில் பல லட்சம் ஆபரேட்டர்களும், அவர்களைச் சார்ந்துள்ள எண்ணற்ற குடும்பங்களும் ஏராளமான மனக்குமுறல்களுடன் உள்ளனர். அவர்களது குமுறல்கள், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.

அவர்களது மனக்குமுறல்களில் முக்கியமானவை:தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமையும்போதெல்லாம், ஒரு குடும்ப சேனலின் ஆதிக்கம் தலைதூக்கி விடுகிறது. கேபிள் ஆபரேட்டர்களின் இணைப்பு எண்ணிக்கையை, அவர்களாகவே கூடுதலாக நிர்ணயித்து, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பணம் கட்டும்படி, கட்டாய வசூல் செய்கின்றனர்.


* கேபிள் ஆபரேட்டர்கள், "ஐயா... எங்களுக்கு இவ்வளவு இணைப்புகள் இல்லையே...' எனக் கூறி, நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கட்ட மறுத்தால், உடனே அந்த அந்த ஆபரேட்டர் தொழில் செய்யும் பகுதியில், உரிமம் கூட பெறாத ஒரு போட்டியாளரை உருவாக்கி, அவருக்கு இணைப்பு வழங்கி, உரிமம் பெற்ற ஆபரேட்டரை மிரட்டி, பணிய வைத்து விடுகின்றனர். அவர்கள் நிர்ணயித்த தொகையை கட்ட வேண்டிய சிக்கலான நிலைக்கு தள்ளி விடுகின்றனர். மீறி எதிர்ப்பவர்கள், அந்த தொழிலை விட்டே ஓடும்படி செய்து விடுகின்றனர்.


* தமிழ் பேசும் மாநிலத்தில், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற வேற்று மொழிச் சேனல்களை சர்வாதிகார முறையில் திணிப்பதுடன், அவற்றையும், தமிழ்ச் சேனல்களுக்கு இணையாக கணக்கிட்டு, கட்டணத் தொகை கட்ட வேண்டுமென்று கட்டாயமாக வசூலிப்பர்.


* புதிதாக எந்தச் சேனல் வந்தாலும், அவர்களை தங்கள் இணைப்பில் தருவதற்காக, கோடிக்கணக்கில் தொகை பெற்று, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற விஜய், ஜெயா போன்ற தமிழ்ச் சேனல்களை பின்னுக்குத் தள்ளி விடுகின்றனர். தங்கள் குடும்ப சேனல்களுக்கு முக்கியத்துவம் தந்து, அதிக தொகை வசூலிக்கின்றனர். இதன்மூலம், மக்கள் அதிகம் பார்க்கும் சேனல்கள் என தங்கள் சேனல்களை காட்டி, "ரேட்டிங்' மோசடியை செய்கின்றனர்.


* கேபிள் இணைப்புகளை கையில் வைத்திருப்பதால், விளம்பரதாரர்களையும் தங்களை நாடி வரும்படி செய்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். இதிலும் திருப்தி அடையாமல், கேபிள் ஆபரேட்டர்களின் வருவாயில், 80 சதவீதத்தை உறிஞ்சும் வகையில் கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர்.


* கேபிள் ஆபரேட்டர்கள் பணியவில்லை என்றால், போலீஸ் நிலையத்தில் பொய் வழக்கு தொடர்வதும், தி.மு.க.,வினரை தூண்டிவிட்டு, கேபிள் ஒயர்களை துண்டித்து மிரட்டி வருகின்றனர்.


* இவர்களது குடும்ப சண்டை இருந்தபோது, சென்னையில் உருவான, "ஹாத்வே' நிறுவனம் இருந்த காலம், ஆபரேட்டர்களின் வசந்தகாலமாக இருந்தது. அவர்கள், "செட்டாப் பாக்சை' இலவசமாக அளித்து, அனைத்து சேனல்களுக்கும் முன்னுரிமை அளித்து, சிறப்பாக இணைப்பு தந்தனர். ஆனால், குடும்ப சண்டை முடிந்ததும், "ஹாத்வே'யை ஒழித்து விட்டனர். மீண்டும், பழைய அவல நிலை தொடர்கிறது.


* இயற்கை சீற்றங்களால் அதிகமாக பாதிக்கப்படும் இயல்புடையது கேபிள் தொழில். இடி இடிக்கும் போதெல்லாம், மின்சாதனப் பொருட்களான, டிரான்ஸ்மிட்டர், இன்ஜெக்டர், ஆம்ப்ளிபயர், கப்சர், ஒயர்கள் சேதமடைந்து விடும். சில நேரங்களில், இவற்றை முற்றிலும் புதிதாக மாற்ற வேண்டிய கட்டாய நிலை வரும். இதனால், பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.


* கேபிள் சேவையில், 24 மணி நேரமும், பகுதி அடிப்படையில் பணியாட்களை அமர்த்துதல், அவர்களுக்கு உணவு, உடை, ஊர்தி, பெட்ரோல் வழங்க அதிக செலவுகள் ஏற்படுகிறது.


* "டிடிஎச்' சேவை, ஆபரேட்டர்களை இத்தொழிலை விட்டே விரட்டும் வகையில் அச்சுறுத்தி வருகிறது. விழாக்கால சலுகை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி, சுயநலப் போக்கில் கட்டணத்தைக் குறைத்து, பொதுமக்களை வலையில் சிக்க வைக்கிறது. இதை புரிந்து கொண்டு, கொள்ளையடிக்கும் இச்செயலுக்கு, அரசு வரி நிர்ணயிக்க வேண்டும்.


* இந்த கஷ்டங்களை எல்லாம் புரிந்து கொண்டு, அரசு கேபிள், "டிவி'யை துரிதமாக கொண்டு வர வேண்டும். அதை பொதுமக்கள் வரவேற்று, கண்டு களிக்கும் வண்ணம், கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அரசு கேபிளில் அனைத்து சேனல்களையும், "டிஜிட்டல்' முறையில் வழங்கி, சிறு, குறு ஆபரேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், அவர்கள் ஆர்வத்துடன் சேவையாற்றும் வகையிலும் வழங்க வேண்டும்.
இவ்வாறு கேபிள், "டிவி' ஆபரேட்டர்கள், தங்கள் மனக்குமுறல்களை கொட்டி வருகின்றனர். 

டி.டி.எச்., இணைப்பு, சன் குழுமத்தின் கேபிள் அடாவடி வசூல் குறித்து உளவு பிரிவு விசாரணை : கண்ணீர் வடிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் : தமிழகத்தில், கேபிள், "டிவி' ஆபரேட்டர்களிடம், சன் குழுமம் அடாவடி வசூல் செய்வது, டி.டி.எச்., இணைப்பு போன்றவைகள் குறித்து, உளவுப் பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, அறிக்கை அனுப்பியுள்ளனர்.


தமிழகத்தில், கேபிள் கட்டணத்தை குறைப்பதற்காக, அரசு கேபிள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கேபிள், "டிவி' இணைப்பு பெற்றுள்ளோர் எத்தனை பேர், மாதந்தோறும் எவ்வளவு கட்டணம் செலுத்துகின்றனர், எத்தனை கேபிள் ஆபரேட்டர்கள், கன்ட்ரோல் அறைகள் உள்ளன, கேபிள் ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகையில், சன் குழுமத்திற்கு எவ்வளவு செலுத்துகின்றனர். மற்ற டி.டி.எச்., இணைப்பும் மக்கள் பெற்றுள்ளனரா, இதில் எந்த டி.டி.எச்., இணைப்பை மக்கள் அதிகம் பெற்றுள்ளனர் போன்ற தகவல்கள் குறித்து விசாரித்துள்ளனர்.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில், சன் டி.டி.எச்., 65 ஆயிரம் இணைப்பும், மற்றவைகள் ஐந்தாயிரத்திற்குள்ளும் இருப்பது தெரிய வந்துள்ளது. 2.5 லட்சம் கேபிள் இணைப்பு உள்ளதாகவும், மக்களிடம் அதிகபட்சமாக, 180 ரூபாய் வரை கட்டணம் வசூலித்து, அதில் பெரும்பாலான தொகையை சன் குழுமத்திற்கு, அச்சத்துடன் கேபிள், "டிவி' ஆபரேட்டர்கள் வழங்குவதும் தெரிந்தது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

கன்ட்ரோல் அறை பறிப்பு : கேபிள், "டிவி' ஆபரேட்டர்களிடம், கட்டண சேனல்களுக்காக, ஒரு இணைப்பிற்கு, 105 ரூபாய் வரை வசூல் செய்தனர். ஒரு கட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்கள், இணைப்பு எண்ணிக்கையை குறைவாக கூறுகின்றனர் எனக் கூறி, ஆகாஷ் நிறுவனத்தினர், குறிப்பிட்ட பகுதிகளில், மின் இணைப்பு எத்தனை உள்ளது என கணக்கெடுத்தனர். மின் இணைப்பு பெற்றவர்களில், 75 சதவீதம் கேபிள் இணைப்பு இருக்கும் எனக் கூறி, கேபிள் ஆபரேட்டர்களிடம், "நீங்கள் சன் சேனல்கள் இணைப்பு பெற்றதில், பாக்கி 15 முதல், 20 லட்ச ரூபாய் வரை தர வேண்டும்' என மிரட்டி, பணத்திற்காக கேபிள், "டிவி' கன்ட்ரோல் அறையை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்தும் உளவுப் பிரிவு, அறிக்கை தயாரித்துள்ளது.

"பவர்பத்திர' கட்டணம் 200 மடங்கு உயர்வு!

 பவர் பத்திரம் மூலம் மோசடி நடப்பதை தடுக்க, பதிவுக்கட்டணம் ரூ.50 என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், நிலமோசடி குறித்து அதிக புகார்கள் வந்தன. நேற்று வரை தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் பெறப்பட்டன. பெரும்பாலான புகார்களில், பவர் ஏஜன்ட்கள், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பவர் பத்திரப்பதிவுக்கட்டணம் ரூ.50 என்பதால், அதிகளவில் பதிவு நடந்தன. இதனால் மோசடிகள் தான் அதிகம் நடந்தன. இனியும் நடக்காமல் இருக்க, பவர் பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ.50 என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால், ரூ.1,000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது. இதேபோல், உரிமை ஒப்படைப்பு கட்டணம், குத்தகை ஆவணம் பதிவுக்கட்டணம் உட்பட சில கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. 

ஹார்மோன்களின் வேகம்..நடுத்தர வயதில் அதிகரிக்கும் ஆர்வம்!

முப்பது வயதானால் அழகும் மெருகும் கூடுவது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான். முப்பதை கடந்த பெண்கள் பணியிலும், அனுபவத்திலும், முதிர்ச்சியடைகின்றனர். பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான் என்கின்றனர் உளவியலாளர்கள். இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை. 

ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பே தங்களின் மீதே அக்கறை ஏற்படுகிறது. உடுத்தவும், அழகுபடுத்திக் கொள்ளவும் ஆயத்தமாவது பெண்கள் முப்பது வயதிற்கு மேல்தான். தாம்பத்திய வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு ஏற்படுவது நடுத்தர வயதில்தான் என்று சர்வே முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. 

நடுத்தர வயதில் ஆர்வம்: நாற்பது வயதில்தான் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் ஏற்படுவதாக 81 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்பட்ட கேள்விகளில் 63 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் இளவயதில் காட்டும் வேகமும், நடுத்தர வயதில் ஏற்படும் விவேகமும்தான் என்கிறது அந்த ஆய்வு.

சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.

வேகமும், விவேகமும்: இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.

மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான். கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.

ஹார்மோன்களின் வேகம்: இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்நிற்கின்றான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள்தான். வயது கூடும்போது அவை மாற்றமடைகின்றன.

ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.

தமிழ் ஈழ சுதந்திரத்தின் நுழைவாயிலாகட்டும் தெற்கு சூடான்! - வைகோ!!

தெற்கு சூடான் நாட்டின் உதயம் சர்வதேச அரங்கில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான நுழைவாயில் ஆகட்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை: இனப் படுகொலைக்கு ஆளாகி தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமைத்தனத்தை முறித்து தங்கள் மண்ணை சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக்கொண்டதை கோலாகலமாக கொண்டாடி மகிழும் கருப்பர் இன மக்களை காணும்போது ஈழத் தமிழர்களும் அவர்தம் பிள்ளைகளும் இப்படி சுதந்திர நாள் விரைவில் மலராதா என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது. சூடான் அதிபர் அல் பசீர் நடத்திய இனப் படுகொலை குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றம் அவரை இன கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்தது. 

இதேபோன்று லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அவரது கூட்டாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், அதற்குரிய நடவடிக்கையை ஐநா மன்றமும் உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.

சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்குப்பதிவு சர்வதேச பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும். இதனை தெற்கு சூடான் உதயமான ஜூலை 9ம் நாளன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம். தெற்கு சூடானின் உதயம் சர்வதேச அரங்கில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான நுழைவாயில் ஆகட்டும். 

இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுவரை அசைந்து கொடுக்காத மத்திய அரசு!

இதுவரை உலக அளவில் பல்வேறு பகுதிகளில் ஒளிபரப்பாகி வந்த இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரிலான லண்டன் சானல் 4 நிறுவனத்தின் டாக்குமென்டரி படம் இந்தியாவில் ஒளிபரப்பாகிய நிலையில் இதுகுறித்து மத்திய அரசிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளியாகவில்லை. கிணற்றில் போட்ட கல் போல மத்திய அரசு பெருத்த அமைதி காத்து வருகிறது.

உலகில் எங்கு மனித உரிமைகள் மீறப்பட்டாலும், அப்பாவி மக்களுக்குத் துன்பம் விளைவிக்கப்பட்டாலும், உடனடியாக குரல் கொடுப்பது இந்திய அரசின் வழக்கம். ஏன், வடக்கு சூடானுடன் நடந்த 56 ஆண்டு கால கடும் ரத்தப் போராட்டத்தின் விளைவாக சுதந்திரம் பெற்றுள்ள தெற்கு சூடானுக்கு இந்திய அரசு வாழ்த்து தெரிவித்தது, அங்கு நடந்த முதல் சுதந்திர விழாவில் கலந்து கொண்டது, தூதரகத்தையும் திறக்கவுள்ளது.

ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கையில், ஈழத்தில் நடந்த இன வெறிக் கொலையாட்டம் குறித்து இந்திய அரசு ஏனோ பெருத்த அமைதி காக்கிறது. அங்கு நடந்த ரத்த வெறியாட்டம் குறித்து அது கவலைப்படவே இல்லை. அது குறித்துப் பேசவே அது மறுக்கிறது.

இந்த நிலையில் ஈழப் போரின்போது நடந்த இனவெறி கொலை தாக்குதல் குறித்த காட்சிகளை, காண்போர் நெஞ்சைக் கதறடிக்கும் வகையிலான கொடூரக் காட்சிகள் அடங்கிய டாக்குமென்டரியை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தயாரித்து வெளியிட்டு உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்திய அரசுக்கு மட்டும் இதுவரை அதுகுறித்து கிஞ்சித்தும் உணர்வு வரவில்லை.

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இந்த படு பாதக கொலை வெறிக் காட்சிகள், மூன்று நாட்களாக ஒளிபரப்பாகின. ஆனால் இதுவரை இந்தக் காட்சிகள் குறித்தோ, இந்த கொலை வெறித் தாக்குதல் குறித்தோ மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை.

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவி கடுமையாக விமர்சித்தும் செய்தி வெளியிட்டு விட்டது. அப்படியும் எந்த ஒரு அசைவையும் மத்திய அரசிடமிருந்து பெற முடியவில்லை. ஒருவேளை செத்தவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தானே என்று நினைத்து விட்டார்களோ என்னவோ...!

சன் டிவியும், கலைஞர் டிவியும் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள்?

 ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விடலாம் என்று இன்று வருத்தப்படுகிறார் கருணாநிதி. அன்று இவரது டிவியும், இவரது பேரன் டிவியும் என்னை எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பதை இவரது வாயாலேயே சொல்கிறார். இப்படித்தானே எல்லோருக்கும் வருத்தம் இருக்கும். இந்த வருத்தத்தை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் தனது கேப்டன் டிவியில், வாசகர்கள் இமெயில் மூலம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு விஜயகாந்த் அளித்த பதில்களும்:

கேள்வி: ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே?

பதில்: அப்படியானால் இவருடைய பேரன் டி.வி.யும், அவரது டி.வி.யும் எந்த அளவு என்னை இழிவு படுத்தினார்கள் என்பதை அவர் வாயாலே சொல்லுகிறார். அன்று ஆட்சியில் இருந்ததால் வருத்தம் தெரியவில்லை. இன்று வருத்தம் தெரிகிறது. இப்படித்தானே ஒவ்வொருத்தருக்கும் வருத்தம் இருக்கும். இந்த வருத்தத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

அதிமுக பெரும்பான்மை பெற்றதால் உங்களுக்கு வேதனையா?

கேள்வி: அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்துள்ளதால், உங்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நீங்கள் வேதனையோடு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்: எங்கள் கட்சியின் அவைத்தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் முதல் முறையாக அ.தி.மு.க. அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கும் போதே எங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம்; கூட்டணி அமைச்சரவையிலும் இடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச போனார்கள்.

எங்களின் ஒரே எண்ணம் கருணாநிதி ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான். இதற்காகத்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சென்றோம். மு.க.ஸ்டாலின் திடீர் என்று இப்படி ஒரு கருத்தை சொல்லுவார் என்று நான் நினைக்கவில்லை. பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வர வேண்டும்

கேள்வி: லோக்பால் மசோதா குறித்து உள்கள் கருத்து என்ன?

பதில்: லோக்பால் மசோதாவை நான் வரவேற்கிறேன். மக்களால் தேர்ந்தெடுப்பவர்களை மக்கள் கேள்வி கேட்பதில் தவறு இல்லை. பிரதமரை லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவருவது தப்பு இல்லை.

கேள்வி: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தினமும் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். இதற்கு ஒரு விடிவு கிடையாதா?

பதில்: இலங்கை அரசும், இந்திய அரசும் தேவை இல்லாமல் கவுரவம் பார்த்துக் கொண்டு செயல்படுகின்றன. மீனை யார் எங்குவேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்று இரண்டு அரசும் பேசி முடிவு செய்தால் இந்த பிரச்சினையே ஏற்படாது. சமச்சீரான கல்வி தேவை

கேள்வி: சமச்சீர் கல்வி பற்றி உங்கள் கருத்து?
பதில்:பணக்கார மாணவர் நகரத்தில் ஏதாவது ஒரு பள்ளியில் படிக்கிறார் என்றால் அந்த படிப்பை குடிசையில் வாழும் ஏழை மாணவர்களும் படிக்கவேண்டும். இவ்வாறு சமவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் சமச்சீர் கல்வி. நகரத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள வசதிகளைப்போல கிராமத்தில் உள்ள பள்ளிகளிலும் வசதி வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் சமவாய்ப்பை முதலில் உருவாக்கினால்தான் அது சமச்சீர் கல்வியாகும்.

கிராமப்பகுதியில் 7 வகுப்புகள் உள்ளது என்றால் 7 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர்தான். 7 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் என்றால் எப்படி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்? பாடத்திட்டத்தை மட்டும் கொடுத்துவிட்டு சமச்சீர் கல்வியை கொடுத்துவிட்டேன் என்றால் எப்படி? கிராமங்களில் இன்றைக்கும் மரத்தடி பள்ளிகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் எப்படி சமச்சீர் கல்வியை கொண்டு வர முடியும்? என்பது எனது கருத்தாகும். கல்வி வியாபாரமாகி விட்டது

கேள்வி: பள்ளி கல்வி கட்டணத்தில் தொடர்ந்து குளறுபடி உள்ளதே? இதற்கு என்ன தீர்வு?
பதில்: வியாபார அடிப்படையில் காசு மட்டுமே குறிக்கோள் என்ற எண்ணத்தில் செயல்படும் பள்ளிகளால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் தரமான நல்ல ஆசிரியர்களை வைத்து நல்ல கல்வியை கொடுத்தால் தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பு இருக்காது. இவைகளை எல்லாம் இப்போது வந்துள்ள ஆட்சியாளர்கள் சீர்திருத்தம் செய்யவேண்டும்.

அதிகமாக கல்வி கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் பற்றி பெற்றோர்கள் புகார் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. பொதுமக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்குத்தான் அரசு. அதிக கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகளை அரசாங்கமே கண்டறிந்து இப்படிப்பட்ட குறைகளை நீக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...