|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 December, 2014

நமது பாரதம்! சத்தீஸ்கர் தாக்குதலில் வீரர்களை காப்பாற்ற தவறிய விமான படை!

சத்தீஸ்கரில், துணை ராணுவ படையினர் மீதான தாக்குதலின் போது, ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி காப்பாற்ற, இந்திய விமானப் படை தவறி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள, சிந்தாகுபா வனப் பகுதியில், கடந்த, 1ம் தேதி, மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், துணை ராணுவ படையினர், 14 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமடைந்தனர்.இதுபற்றிய தகவல் கிடைத்தும், சத்தீஸ்கரில் உள்ள, நான்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்றை கூட, சம்பவ இடத்திற்கு அனுப்ப விமான படை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவில்லை என, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: சுக்மாவின் அண்டை மாவட்டமான பாஸ்தரின் ஜக்தல்பூரில், இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றையாவது, மீட்பு பணிக்கு உடனே அனுப்பி இருக்கலாம். ஆனால், மாலை வரை, ஹெலிகாப்டர்கள் புறப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பகுதியில், சில மாதங்களுக்கு முன் மாவோயிஸ்டுகளால், துணை ராணுவத்தினர் தாக்கப்பட்டனர். அப்போதும், இந்திய விமான படை, ஹெலிகாப்டர்களை அனுப்பவில்லை; மாநில அரசு தான், சேதக் ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. சத்தீஸ்கர் விமான படை பிரிவின் பொறுப்பற்ற செயல், அங்குள்ள துணை ராணுவ படையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

02 December, 2014

யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடுதான் அணுக வேண்டும்!’’

மாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு... பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள்.இதைப்பற்றி பேசும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வசந்தி, ‘`நூதன முறையில் திருட்டு, டெக்னாலஜிக்கலாக கொள்ளை என்றெல்லாம் செய்திகள் பார்க்கும்போது, எங்கோ நடந்தது என்று அதை ஒரு சுவாரஸ்ய தகவலாகப் படிக்காதீர்கள். நமக்கும் நிகழலாம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்று அறிவுறுத்துகிறார். தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அதிகாரி  வசந்தி, தன் பணிக்காலத்தில் சந்தித்த விஷயங்களில் இருந்தே உங்களுக்கு உஷார் பாடமெடுக்கிறார் !

ஸ்டவ், எலெக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் பார்க்க வருகிறார்களா?!
கேஸ் ஸ்டவ் பழுது பார்க்க, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ரிப்பேர் பார்க்க என்று சொல்லிக்கொண்டு வருகிற முன்பின் அறியாத நபர்களை, வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். ஒன்று, சில நூறு ரூபாய் செலவுள்ள வேலைக்கு, ‘ரெண்டாயிரம் ரூபாய் செலவாகும். புது பார்ட்ஸ் வாங்கணும்’ என்று கறந்துவிடுவார்கள். அல்லது, வீட்டில் யாரும் இல்லாததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை, கொலை, பலாத்காரம் என்று எதுவும் செய்துவிடலாம். எனவே, உங்கள் ஏரியாவில் உள்ள, உங்களின் நம்பிக்கைக்குரிய நபர்களிடமே இதுபோன்ற வேலைகளைக் கொடுத்து வாங்குங்கள்.
கையில் பணமா?
வங்கி, பேருந்து, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நம் கையில் பணம் இருப்பதை அறிந்துவிட்டால், கொள்ளையர்கள் அதை அபகரிக்க வழிப்பறி முதல் கழுத்தறுப்பு வரை எதையும் செய்யத் துணிவார்கள். அதேபோல பயணங்களில் நகைகளும் அணியாதீர்கள். ஏமாற்றுவதில், ஆசை காட்டி ஏமாற்றுவது என்று ஒரு வகை இருக்கிறது. அப்படித்தான் ஒரு பெண், கழுத்தில் நகை, கையில் குழந்தையோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு பரிதாப ஆசாமி அவரிடம், ‘ஆந்திராவுல இருந்து வர்றேன். கையில இருந்த காசை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போக வழி தெரியல. இந்த அரை பவுன் தங்க மோதிரத்தை வேணும்னாலும் வெச்சுக்கிட்டு, 500 ரூபாய் கொடுங்கம்மா போதும்’ என்று நம்பும்படி ஆசைகாட்ட, அவரும் கொடுத்துவிட்டார். அது அக்மார்க் கவரிங் மோதிரம் என்று பின்புதான் புரிந்தது அந்த அம்மாவுக்கு!

போனில் சத்தம்போட்டு பேசாதீர்கள்!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்தான், ஏமாற்றுக்காரர்களுக்கு எளிய இலக்கு. மளிகைக் கடைக்கு சென்றுவரும் வழியில், தன் வீட்டில் உள்ள மோட்டார் பழுதடைந்துவிட்டதையும், சரிசெய்ய ஆள் அனுப்பச் சொல்லியும் அந்தப் பெண் தன் கணவரிடம் போனில் பேசிக்கொண்டே வந்ததை நோட்டம் விட்டுவிட்டார்கள் அந்தக் கயவர்கள். சில நிமிடங்களில், ‘சார், மோட்டார் ரிப்பேருக்கு அனுப்பினாரு’ என்று அந்த இருவரும் அவர் வீட்டில் நிற்க, அந்தப் பெண்ணும் தன் கணவரிடம் உறுதிசெய்துகொள்ளாமல் உள்ளே விட்டுவிட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, நகை, பணம், வெள்ளி சாமான்கள் என்று சில நிமிடங்களில் எடுத்துக்கொண்டு, நிதானமாக வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர் இருவரும்.

இது புதுசு!
சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை வளாகம். அங்கு வந்த ஓர் இளம்பெண்ணிடம் சென்ற வயதான பெண்மணி, ‘ஏழைக் குடும்பங்கிறதால, என் பையனுக்கு சலுகைக் கட்டணத்துல இங்க ஆபரேஷன் செஞ்சிருக்காங்கம்மா. இந்த செயினை போட்டுட்டுப் போனா, என்னை சந்தேகப்படுவாங்க. நான் போய் என் பையனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்துடறேன். அதுவரைக்கும் இதை வெச்சிரும்மா!’ என்று அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் திணித்துள்ளார். சிறிது நேரத்தில், அந்தச் செயினையும், இளம்பெண் தன் கணவரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது ஒரு கும்பல். தீவிர விசாரணைக்குப் பின், அந்த வயதான அம்மாவுடன் சேர்ந்து ஒரு கும்பல் இதை அரங்கேற்றியது தெரிந்தது. மயக்கம் ஏற்படுத்தும் மருந்தில் அந்த நகையைத் தோய்த்துக் கொடுத்திருக்கிறார். இதனால், கையில் செயினை வாங்கியதும் இளம்பெண்ணின் கையில் மருந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. எதேச்சையாக கையை மூக்குக்குக் கொண்டு செல்ல, சில நிமிடங்களில் அந்தப் பெண் சுணங்க, காத்திருந்த கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

செல்போன் தொலைந்துபோனால்..?!
அந்தப் பெண்ணையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து நோட்டம்விட்ட அவன், அன்று அவர் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் சென்றபோது அவருடைய செல்போனை திருடிவிட்டான். வீட்டுக்கு வந்த அந்தப் பெண் மொபைல் காணாததைப் பார்த்து தன் நம்பருக்கு டயல் செய்ய, போனை எடுத்த அந்தத் திருடன், ‘மார்க்கெட்ல கீழ கிடந்தது மேடம். போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்கலாம்னு போனேன். நல்லவேளை நீங்களே கூப்பிட்டீங்க’ என்றவன், அவர் எந்த ஏரியா என்று விசாரித்துவிட்டு, ‘அந்தப் பக்கம்தான் இன்னிக்கு எனக்கு ஒரு வேலை இருக்கு. நானே வந்து கொடுத்துடறேன்!’ என்றிருக்கிறான். அந்தப் பெண்ணின் கணவர், பிள்ளைகள், வேலைக்காரப் பெண் என்று அனைவரும் வெளியே கிளம்பி அவர் மட்டும் வீட்டில் தனித்திருக்கும் நேரத்தை முன்கூட்டியே அறிந்தவன், அந்த நேரத்தில் சென்று காலிங் பெல்லை அழுத்தினான். செல்போனை மீட்டுக்கொடுத்ததற்கு நன்றி சொல்லும்விதமாக அவனை வரவேற்று, காபி போட்டுவர அந்தப் பெண் கிச்சனுக்குச் செல்ல, அந்த நொடியில் அவள் பின்னாலேயே சென்று கழுத்தில் கத்தி வைத்து, பணம், நகையை கொள்ளையடித்துவிட்டான் அந்த கில்லாடித் திருடன்.
அதிர்ச்சி தரும் உண்மைச் சம்பவங்களாக அடுக்கிய வசந்தி, ‘‘எங்கு, எப்போது, எப்படி வில்லங்கம் நம்மைத் தேடி வரும் என்று தெரியாது. எனவே, யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கையோடுதான் அணுக வேண்டும்!’’

8 year old Madison Loves Books


டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் படிப்பதன் அவசியம் பற்றி அருமையாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். புத்தக வாசிப்பு பற்றிய அந்த சிறுமியின் வீடியோ உரை இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கிலிவ்லாண்ட் பகுதியை சேர்ந்த மேடிசன் ரீட் எனும் சிறுமிதான் இப்படி வியக்க வைத்திருப்பவர். இலவச நூலகம் ஒன்றின் துவக்க விழாவில்தான், மேடிசன் புத்தக வாசிப்பின் அருமை பற்றி பேசி கைத்தட்டல் வாங்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் சிறுவர்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லிட்டில் பிரி லைப்ரரி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் கிலிவ்லண்டின் பேர்பாக்ஸ் பகுதியில் நடைபெற்ற புதிய நூலக துவக்க விழாவிற்கு சிறுமி மேடிசன் தனது அம்மாவுடன் சென்றிருந்தார். அவரது அம்மா டிரேசி ரீட் திட்டத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர்.

அப்போது, WKYC 3 தொலைக்காட்சி சேனல் சார்பில் சிறுமி மேடிசன் ரீடிடம் புத்தகங்கள் பற்றி கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சிறுமி, உலகிற்கு புத்தகங்கள் ஏன் தேவை என்று உற்சாகமாக பேசத் துவங்கினார். ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிறுமி எந்த தயக்கமும் இல்லாமல் பேசத்துவங்கி, மெல்ல புத்தகங்களின் அருமை பற்றியும் புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியம் பற்றியும் விவரிக்க துவங்கியதும் கூடியிருந்தவர்கள் வியந்து போய் தங்களை அறியாமல் கைத்தட்ட துவங்கினர். சிறுமி பேசி முடித்த போது கரவொலி இன்னும் பலமாக எழுந்தன.

பார்வையாளர்கள் அனைவரும் சிறுமியை பாராட்டிய நிலையில், அங்கிருந்த வீடியோகிராபர் ஜெப் ரெய்டல் மேடிசன் பேச்சை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ, லிட்டில்லைப்ரரி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. வீடியோவை பார்த்த பலரும் சிறுமியின் கருத்தால் கவரப்பட்டு அதை பகிர்ந்து கொள்ள, வீடியோ பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

இந்த பேட்டியின் போது மேடிசன் அப்படி என்னதான் சொல்லியிருந்தார் என்று பார்க்கலாமா? உலகிற்கு புத்தகம் தேவை, புத்தகங்கள் இல்லாமல் உலகம் எப்படி இருக்கும். கார்களுக்கு பெட்ரோல் போல் அவை தான் நமது மூளையை இயக்கும் எரிபொருளாக இருக்கின்றன. கார்கள் பெட்ரோல் இல்லாமல் இயங்க முடியாது என்பது போல நமது மூளையும் புத்தகங்கள் இல்லாமல் இயங்க முடியாது. எனவே உலகிற்கு புத்தகங்கள் தேவை” என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஒரு புத்தகம் தொலைந்தால் கூட எனது இதயம் நொறுங்கிப்போகும் என்றும் கூறியுள்ள மேடிசன், புத்தகங்கள் இல்லாமல் உலகம் வெறுமையாக இருக்கும். தண்ணீர் இல்லாத பக்கெட் போல, ஞானம் இல்லாத மூளை போல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் புத்தக கடை இருந்தால் உலகில் உள்ள எல்லோருக்கும் 2 புத்தகங்களை கொடுப்பேன் என்றும் உற்சாகமாக கூறியுள்ளார். 

புத்தகங்கள்தான் எல்லாவற்றையும் திறந்துவிட்டன, வண்ணங்கள் உண்டாயின, கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனால்தான் இந்த பேட்டி, வீடியோ பார்ப்பவர்களை கவர்ந்து புத்தகங்களின் அவசியத்தை இதைவிட அருமையாக எடுத்துரைக்க முடியாது என பாராட்ட வைத்துள்ளது.

இந்த வீடியோ, புத்தக வாசிப்பு பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையில் இருப்பதை அடுத்து லிட்டில் பிரி லைப்ரரி திட்டத்தின் தூதர்களில் ஒருவராக சிறுமி மேடிசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் செயல் இயக்குனர் டாட் போல், தன்னைவிட சிறுமி மேடிசன் புத்தக வாசிப்பு திட்டத்துக்கான அருமையான செய்தி தொடர்பாளராக இருப்பதாக பாராட்டியுள்ளார்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...