|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 July, 2011

உறவை பலப்படுத்தும் முத்தம்!

அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல்வேறு பலன்களை கொண்டிருக்கிறது. முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது வியக்கத்தக்க ஆச்சரியத்தக்க பலன்களை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுப்பவரை விட பெறுகின்றவருக்குத்தான் முத்தத்தின் பலன்கள் அதிக அளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் ஏற்படும் பலன்கள் உங்களுக்காக

உறவின் தொடக்கம் : முத்தம் என்பது தாம்பத்யத்தின் ஆரம்பம். உறவை தொடங்குவதற்கான சாவியாக முத்தம் செயல்படுகிறது.

உறவு பலப்படும்: முத்தம் என்பது தம்பதியர்க்கிடையேயான உறவை பலப்படுத்தும். காதலர்கள் ஒருவருக்கொருவர் பிணைப்பை உறுதிப்படுத்தவும் முத்தம் உதவுகிறது.

மன அழுத்தத்தை போக்கும்: மன அழுத்தத்தைப் போக்குவதில் முத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் முத்தமிட்டுக்கொள்வதின் மூலம் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: முத்தத்தின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். 30 நிமிடங்கள் தொடர்ந்து முத்தமிட்டுக்கொள்வதன் மூலம் அலர்ஜி நோய் சரியாகிவிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உடலை இளைக்கச் செய்யும் முத்தம்: தினமும் 20 நிமிடங்கள் முத்தமிட்டுக்கொள்வது உடற்பயிற்சி செய்வதற்கு சமமாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 நிமிட முத்தம் 22 கலோரிகளை எரிக்கிறதாம். உடல் இளைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அடிக்கடி முத்தமிட்டுக்கொள்ளலாம்

சுறுசுறுப்பாக்கும் முத்தம்: உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக்குவதில் முத்தம் முக்கிய பங்காற்றுகிறது. முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கச் செய்வதில் முத்தத்தின் பங்கு அதிகம்

வறட்சியைப் போக்கும்: முத்தமிடுவதன் மூலம் வாயில் சலைவா எனப்படும் உமிழ்நீர் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் உதடு வறட்சி நீங்குவதோடு ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது. வாய்துற்நாற்றத்தை அகற்றி கெட்ட பாக்டீரியாவை அடியோடு அகற்றுகிறது.

அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களை அழைக்காதீர்கள்!

அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களிருந்து வரும் "மிஸ்டு கால்களை' திரும்ப தொடர்பு கொள்ள வேண்டாமென வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டுள்ளது.


அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். செல்போனுக்கு +2392879106, +2392 879062, +2392879051, +2392879106 உள்ளிட்ட எண்களிலிருந்து மிஸ்டு கால் வருகிறது. இது சாவ் டோம் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடுகளிலிருந்து வரும் அழைப்பாகும். இந்த எண்களை திரும்ப அழைத்தால் வெளிநாட்டு எண்களை (ஐ.எஸ்.டி.) அழைப்பதற்கான பணம் எடுக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. எனவே அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களில் இருந்து "மிஸ்டு கால்' வந்தால் அதனை திரும்பத் தொடர்பு கொள்ள வேண்டாம்.

பூமாலை முதல் ஸ்பெக்ட்ரம் வரை!

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்"
இந்தத் திருக்குறளுக்கு முற்றிலும் நேர் மாறாகப் போய் விட்டது தயாநிதி மாறன் வாழ்க்கை. முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே தகுதியை மட்டுமே கொண்டு அரசியலில் நுழைக்கப்பட்டவர் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் தனக்கு ஊன்றுகோல் தேவை என்று கருதிய திமுக தலைவர் கருணாநிதி, மாறனின் மகன், புத்திசாலி மகன், பல மொழிகள் அறிந்த திறமைசாலி என்று நினைத்துத்தான் தயாநிதியை அரசியலுக்குக் கூட்டி வந்தார்.

அப்போதே கட்சிக்குள் பெரும் அதிர்ச்சி, முனுமுனுப்புகள். மத்திய சென்னை தொகுதியின் எம்.பியாக மாறன் அறிவிக்கப்பட்டபோது புழுங்காத மனங்கள் இல்லை. இருந்தாலும் தலைவர் சொல்லி விட்டாரே என்பதற்காக தயாநிதி மாறனை வெற்றி பெறச் செய்தனர். ஆனால் அடுத்த அதிர்ச்சி தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்க கருணாநிதி முடிவு செய்தது. இதையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போக வேண்டிய கட்டாயம் திமுகவினருக்கு.

அன்று முரசொலி மாறனால் திமுக என்ற இயக்கம் சிறப்பாக வளர்ந்தது. கட்சியை வளர்க்க தன்னை உரம் போல பயன்படுத்தினார் மாறன். கட்சிக்காக தீவிரமாக தொண்டாற்றினார். கட்சியைக் கட்டுக் கோப்பாக மாற்றினார். அண்ணாவால் பாராட்டப்பட்டார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதியின் நிழலாக, அவருடைய மனசாட்சியாக செயல்பட்டு திமுகவை மிகப் பெரிய இயக்கமாக வளர்க்க உதவியவர் மாறன். அதாவது திமுகவின் வளர்ச்சிக்கு மாபெரும் உதவியாக இருந்தவர் மாறன் என்பது எதிரிகளும் கூட ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம்.

ஆனால் தயாநிதி மாறன் என்ன செய்தார்?. இத்தனை காலமாக கட்டி வைத்திருந்த கோட்டையை தம்மாத்தூண்டு ஊசி வெடியால் வெடித்து உடைத்து சிதறடிப்பது போல ஸ்பெக்ட்ரம் என்ற விவகாரத்தால் கட்சி சீர்குலைய காரணமாகி விட்டார். முதலில் கைதானது என்னமோ ராசா, கனிமொழி என்றாலும் கூட இந்த மிகப் பெரிய ஊழலின் முன்னோடி தயாநிதி மாறன் என்பது அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

தயாநிதி மாறன் அரசியலில் வளர்ந்த வேகம், டெல்லியில் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு, திமுகவுக்கும், கருணாநிதிக்குமே சவால் விடும் வகையில் விஸ்வரூபம் எடுத்த அவரது வளர்ச்சி ஆகியவற்றைப் பார்த்து திமுகவினர் தொடர்ந்து புழுக்கத்தில் இருந்து வந்தனர். இன்று அத்தனை பேருக்குமே ஒரு விதமான நிம்மதி கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.

44 வயதான தயாநிதி மாறன், ஆரம்பத்தில் அரசியல் நிழல் கூட படியாமல் கடுமையான ஊழைப்பாளியாக மட்டுமே வளர்ந்து வந்தவர். அவரும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் சேர்ந்து உழைத்த உழைப்பு நிச்சயம் பாராட்டக் கூடியது. அதில் அரசியல் கலந்தபோதுதான் களங்கங்கள் கூடவே வளர ஆரம்பித்தன.

1990ம் ஆண்டு கலாநிதி மாறன் பூமாலை என்ற வீடியோ பத்திரிக்கையை ஆரம்பித்தபோது அவருக்கு உதவியாக இருந்தார் தயாநிதி மாறன். பின்னர் சன் டிவியை கலாநிதி மாறன் தொடங்கியபோதும் உதவியாக இருந்தார். கலாநிதியின் வளர்ச்சியை தயாநிதியை பிரித்து விட்டுப் பார்க்க முடியாது என்ற அளவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தனது அண்ணனுக்கு உதவியாக இருந்தவர், இருந்து வருபவர் தயாநிதி மாறன்.

முதன் முதலில் இவர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டபோது அனைவரும் இவர் என்ன செய்து விடுவார் என்றுதான் பார்த்தனர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு வட்டத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆச்சரியமாக வளர்ந்தார் தயாநிதி. பெரும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த பி.எஸ்.என்.எல்லின் சரிவைத் தடுத்து நிறுத்தியவரும் இவரே. கிராமங்களிலும் தொலைபேசியை சகஜமாக்கியதும் இவரது நடவடிக்கைகள்தான். அதை மறுப்பதற்கில்லை.

ஆனால் யாருக்கும் தெரியாமல் நடந்து போன பல மறைமுகமான விஷயங்கள் தயாநிதியின் சுயரூபத்தை கிழித்தெறிவது போல இன்று அம்பலமாகி அனைவரையும் அவர் மீது வெறுப்பலைகளை வீச வைத்து விட்டது.

எந்த வேகத்தில் வளர்ந்தாரோ அதே வேகத்தில் சரிந்து நிற்கிறார் தயாநிதி மாறன். ஆனால் தயாநிதி மாறன் மற்றும் மாறன் சகோதரர்களின் சரிவு, திமுகவையும், இந்தியத் தொலைக்காட்சி உலகையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

சக்சேனா மீண்டும் சிறையில் அடைப்பு !

இதே நாள்...


  • வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)

  •  ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன(2006)

  •  ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பிறந்த தினம்(1949)

  •  இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பிறந்த தினம்(1972)

  •  இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)
  • இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம்!

    இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஈழத்தில் நடந்த உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய, கொடூரமான இனவெறிப் படுகொலை கோர வெறியாட்டத்தின் காட்சிகளை லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி டாக்குமென்டரிப் படமாக தயாரித்து வெளியிட்டு உலகையே அதிரச் செய்தது.

    இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள், டிவி நிலையங்கள், நாளிதழ்கள் செய்திவெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதைப் பற்றி செய்தியை வெளியிட்டன. ஆனால் டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில டிவி நிறுவனங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை.

    இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் டுடே இந்த பதை பதைக்க வைக்கும் டாக்குமென்டரிப் படத்தை ஒளிபரப்பவுள்ளது. மூன்று நாட்கள் இதை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே டிவி.

    இன்று இரவு 10 மணிக்கு முதல் பகுதி ஒளிபரப்பாகிறது. நாளை இரவு 11 மணிக்கும், சனிக்கிழமை 10 மணிக்கும் மற்ற பகுதிகள் ஒளிபரப்பாகவுள்ளன.இன்று காலை முதலே இலங்கையின் கொலைக்களம் குறித்த துணுக்குச் செய்திகளை ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பி வருகிறது.

    ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மரணம்!

    புகழ் பெற்ற ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்பில் உள்ள தனது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக அவரது வீட்டினர் தெரிவித்துள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிகிறது.

    1932ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தவர் சிவத்தம்பி. கரவெட்டி மற்றும் கொழும்பில் படித்த அவர் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கண்டி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்திலும் இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. 17 ஆண்டு காலம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிவத்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறையில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவத்தம்பி. அக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் சிவத்தம்பி நடித்துள்ளார்.

    ஈழத் தமிழ் தொடர்பாக 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார். இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் கடந்த திமுக ஆட்சியின்போது நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார். 84 வயதான சிவத்தம்பியின் மறைவு ஈழத் தமிழுக்கு மட்டுமல்லால், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

    மிளகு தக்காளி மற்றும் மணல் தக்காளி என்ற பெயர்களால் அழைக்கப்படும் மணத்தக்காளி !

    விலை குறைந்ததும், அதிக சத்து கொண்டதுமான கீரைகள் தங்கத்திற்கு ஒப்பானவை. கீரை வகையைச் சேர்ந்த மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.

    மிளகு தக்காளி மற்றும் மணல் தக்காளி என்ற பெயர்களால் அழைக்கப்படும் மணத்தக்காளி கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் காணப்படுகின்றன. இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மணத்தக்காளி இதயத்துக்கு பலம் ஊட்டும் டானிக்காக பயன்படுகின்றன.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. கரோட்டின்கள், வைட்டமின், குளுக்கோஸ், டோமட்டினால்,டைகோஜெனின், சோலமார்ஜைன், பால்மிடிக், சிட்ரிக் அமிலங்கள், சோலனோகேல்ஸைன் போன்ற வேதிப்பொருட்கள் மணத்தக்காளியில் காணப்படுகின்றன.

    இதயநோய்க்கு மருந்து: கத்தரி இனத்தைச் சேர்ந்த மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். இத்தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும்.

    மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.

    சுக்குட்டிக் கீரை: கசப்பு சுவையை உடைய இக்கீரை சமைத்த பின்பு கசப்பு தன்மை மாறிவிடும். சுக்குட்டிக் கீரையை உணவாகச் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

    மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

    வீக்கங்கள் போக்கும்: உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.

    நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம். இக்கீரையில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

    வயிற்று வலி குணமாகும்!

    செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம்.

    மஞ்சள் காமலையை குணமாக்கும்: மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

    இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

    குழந்தை வரம் தரும் மணத்தக்காளி பழம்: மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

    இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

    மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

    இலங்கை தமிழர்களுக்கான இயகத்தில் சேர நெடுமாறன் அழைப்பு!

    இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை (8-ம் தேதி) நடைபெறவுள்ள இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் சேர வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யுள்ளதாவது,

    ஈழத்தில் தமிழர்களை கொத்து கொத்தாக படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அறிவித்துள்ளது.இந்த பரிந்துரையை ஏற்று அவர் மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனை ஆதரித்தும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய அளவில் இயக்கம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

    இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்திலும், பிற மாநிலங்களின் தலைநகரங்களிலும் நாளை (8-ம் தேதி) நடைபெறவிருக்கும் இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ஜூலை 8 இயக்கத்தில் சேர சீமான் கோரிக்கை: ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு அவர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் நாளை (8-ம் தேதி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுக்கும் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு இன்று வரை மதிக்கவில்லை.

    டெல்லியில் நேற்று இலங்கை, மாலைத் தீவு நாடுகளின் பத்திரிக்கையாளர்கள் சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், “இந்தியாவின் நட்பு நாடான இலங்கை, ஒற்றையாட்சியின் கீழ் வலிமையாக இருப்பதையே இந்தியா விரும்புகிறது” என்றும், “இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அந்நாட்டு அரசு உருவாக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம், ஆனால் அதற்காக எந்த விதத்திலும் இலங்கை அரசை நிர்பந்திக்க மாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

    இது இந்திய அரசின் இலங்கைக்கு ஆதரவான நட்புப் போக்கு மாறவில்லை என்பதை காட்டுவது மட்டுமின்றி, அது தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை இரண்டாம் பட்சமாகவே கருதுகிறது என்பதற்கும் அத்தாட்சியாகும். அது மட்டுமல்ல, இன்று வரை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டைக் கூறவில்லை.

    இது இலங்கை அரசின் தமிழினப் படுகொலையில் தன் பங்கை மறைக்க முயற்சிக்கிறது என்பதற்கும், அதற்காக அது இலங்கை அரசைக் காப்பாற்ற முற்படுகிறது என்பதற்கும் சான்றாகும். ஆகவே, ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு அப்பாலும் வாழும் மக்களின் ஆதரவு அவசியமாகிறது.

    இந்த நோக்கில் நாடு தழுவிய அளவில் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் வெள்ளியன்று நடத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பேரணி, பொதுக் கூட்டம், உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளை அக்கட்சி நடத்தவுள்ளது.

    சென்னை தங்கசாலையில் அக்கட்சியின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதேபோல் திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் நடக்கும் இயக்கங்களில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த இயக்கங்கள் அனைத்திலும் நாம் தமிழர் கட்சியினரும், தமிழின உணர்வாளர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் மத்திய அரசுக்கு வலிமையான ஒரு செய்தியை விடுப்போம்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...