|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 April, 2012

பார்த்ததில் பிடித்தது!



படி பூஜை புக்கிங் 13 ஆண்டுகளுக்கு முடிந்தது!


சபரிமலை: பக்தர்கள் பயபக்தியுடன் சபரிமலையில், பதினெட்டாம் படியில் பூசை செய்துவரும் படி, பூஜைக்கான புக்கிங் வரம், 2025ம் ஆண்டு வரை முடிந்து விட்டது. அதேபோல், உதயாஸ்தன பூஜை, 2018ம் ஆண்டு வரை புக்கிங் முடிந்து விட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், உதயாஸ்தன பூஜை மற்றும் படி பூஜை ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக் கடனாக, மிகவும் பயபக்தியுடன் நடத்துவது வழக்கம். இவ்விரு பூஜைகளும் மண்டல மற்றும் மகரஜோதி உற்சவ காலங்களை தவிர, சபரிமலை நடை திறந்திருக்கும் நாட்களில் நடத்தப்படுகிறது.இதற்காக முன்கூட்டியே புக்கிங் செய்வது வழக்கம். அதேபோல், படி பூஜை செய்ய வரும், 2025ம் ஆண்டு வரை அதாவது, 13 ஆண்டுகளுக்கு புக்கிங் முடிந்து விட்டது. இனிமேல் சபரிமலையில் படி பூஜை செய்ய யாராவது விரும்பினால், 2026ம் ஆண்டில், கோவில் நடை திறந்திருக்கும் ஏதாவது ஒரு தேதியில் தான் நடத்த இயலும்.அதேபோல், உதயாஸ்தமன பூஜை (காலை, மதியம், இரவு பூஜைகள்) க்கான புக்கிங் வரும் 2018ம் ஆண்டு வரை, அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முடிந்து விட்டது

இதே நாள்...


  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபி பிறந்த தினம்(570)
  • திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
  • ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
  • இழ்சாக் கார்ட்டியே, கனடாவை கண்டுபிடித்தார்(1534)

குஜராத்தில் சூரிய ஒளி மெகா மின் உற்பத்தி திட்டம் ஆரம்பம்!


குஜராத் மாநிலத்தில், 600 மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி பூங்காவை முதல்வர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக சூரிய ஒளி மூலம் மிகப்பெரும் அளவு மின்உற்பத்தி செய்யும் திட்டம் இது. 21 நிறுவனங்கள்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து, 250 கி,மீ., தொலைவில் உள்ள சாரங்கா என்ற கிராமத்தில், சூரியசக்தி பூங்காவை, குஜராத் மாநில அரசு உருவாக்கியுள்ளது. இங்கு, 231 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தியை துவக்க, 21 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தியையும் சேர்த்து, மொத்தம், 600 மெகாவாட் மின் உற்பத்தியை, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நேற்று, சாரங்கா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.

விலை குறைவு: அப்போது மோடி பேசியதாவது: வருங்கால சந்ததியினருக்கு. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டம் என்பதால், இந்நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியசக்தி கொள்கையை, 2009ம் ஆண்டு குஜராத் அரசு வெளியிட்ட போது, இதை பெரிய அளவில் செய்ய வேண்டுமென விரும்பினேன். இதற்கு காரணம், பெரிய அளவில் திட்டத்தை செயல்படுத்தும் போது, மாநில அரசின் அதிகபட்ச கவனம் இதில் இருக்கும். அடுத்ததாக, ஒட்டுமொத்தமாக சூரியசக்தி பொருட்களை வாங்கும் போது, அதன் விலை குறையும். திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும்போது, இதன் உற்பத்தி செலவு யூனிட் ஒன்றுக்கு, 15 ரூபாயாக இருந்தது. இன்று, இதன் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு, 8 ரூபாய் 50 காசாக குறைந்துள்ளது. நாளை இன்னும் குறையும். மற்ற எரிசக்தி ஆதாரங்களால் உற்பத்தி செய்யப்படும், மின்சாரத்துக்கு ஆகும் கட்டணம் அளவுக்கு, சூரியசக்தி மின்சாரத்தின் கட்டணமும் இருக்கும். மேலும், இதன்மூலம் இந்தியாவுக்கு மிகப் பெரிய பங்களிப்பை குஜராத் செய்துள்ளது. காரணம், மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும்.

முன்னோடி: இத்திட்டம் சாரங்கா கிராமத்துடனோ, குஜராத் மாநிலத்துடனோ, இந்தியாவுடனோ நின்றுவிடப் போவதில்லை. பூகோள அளவில் சுற்றுச்சூழல் நண்பனாக திகழும். எனவே இந்நிகழ்ச்சி உலகளவிலானது. பருவநிலை மாறுதலால் பாதிக்கப்படப் போகிற எதிர்கால சந்ததியினரின் கவலை கவனிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பருவநிலை மாறுதலுக்காக, தனியாக துறை வைத்துள்ள, நான்கு அரசுகளில் குஜராத்தும் ஒன்று. இதற்காக மிக அதிக அளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. முன்பு, மின் பற்றாக்குறையில் குஜராத்தும் இருந்தது. தற்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்காக ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் என்ற மிகப் பெரிய தொகையை அரசு செலவிடுகிறது, உலகம் வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் இதுவும் ஒன்று. குஜராத் மாநிலம், பூகம்பம், வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாநிலம். இதுபோன்று மற்ற மாநிலங்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தான் இந்த திட்டம்.

தியாகம்: இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதற்கு காரணம், நாளைய தலைமுறையினருக்காக, இன்றைக்கு நாம் செய்யும் தியாகம். குஜராத்தில், 1,600 கி.மீ., நீள கடலோர பகுதி உள்ளது. இங்கு, 2,884 மெகாவாட் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எங்களது எதிர்கால நோக்கம், கூரைகள் மேல் சூரியசக்தி மின்சார உற்பத்தியை அதிகரிப்பது தான். ஆரியபட்டா ராக்கெட், அக்னி -5 ஏவுகணை போன்று, இந்த சூரியசக்தி மின்சாரமும் உலகத்துக்கு இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும். ஐ.டி., (தகவல் தொழில்நுட்பம்), பி.டி., (உயிரி தொழில்நுட்பம்), இ.டி., (சுற்றுசூழல் தொழில்நுட்பம்) ஆகியவற்றில் குஜராத் கவனம் செலுத்தும். சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் தான் இந்த சூரியசக்தி மின்சாரம். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

லாபம்: மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சவுரவ்பாய் பேசும் போது, ""கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், குஜராத் மின்நிலைமை மிகவும்மோசமாக இருந்தது. மின்வாரியம் ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வந்தது. தற்போது ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் லாபத்தை சம்பாதிக்கிறது. 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான். உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதும் குஜராத் தான்,'' என்றார். அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதர் பீட்டர் ஹெயர்ஸ், ஆசிய வளர்ச்சி வங்கி மேலாளர் நாவோகி சகாய் உட்பட பலர் பேசினர்.

ஓராண்டில் 600 மெகாவாட் முடித்து காட்டி சாதனை: சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு அடிக்கல் நாட்டி ஓராண்டில், 600 மெகாவாட் மின்சார உற்பத்தியை துவக்கி காட்டியுள்ளது, குஜராத்தின் நரேந்திர மோடி அரசு. குஜராத் மாநில அரசு, 2009ம் ஆண்டு ஜனவரியில் சூரியசக்தி கொள்கையை வெளியிட்டது. 500 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பது என்று கொள்கை வெளியிட்ட போதிலும், சூரியசக்தி மின்சாரத்தை வாங்கிக் கொள்வதற்காக, 85 தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன், 968.5 மெகாவாட் மின்சாரத்துக்கு, 2010ம் ஆண்டு ஒப்பந்ததம் செய்தது. இதற்காக, சூரிய பூங்காவை உருவாக்கி, அதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த, 2010 டிசம்பர் 30ம் தேதி அடிக்கல் நாட்டினார். அனைத்து நிறுவனங்களும், 2012 ஜனவரிக்குள் திட்டத்தை முடிக்க வேண்டுமென, கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரியில், 605 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் நிறுவப்பட்டது. இந்தியா முழுவதுமே, சூரியசக்தி மின்சார நிறுவு திறன், 200 மெகாவாட்டுக்கும் குறைவாக உள்ள நிலையில், குஜராத் மாநிலம் மட்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை, ஓராண்டில் பெற்றது. இதற்காக, குஜராத் அரசுக்கு, 9,000 கோடி ரூபாய் முதலீடும் கிடைத்துள்ளது. 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சூரியசக்தி மின்சாரம், நாள் ஒன்றுக்கு, 30 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, 10 லட்சம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும். இதன்மூலம், ஆண்டுக்கு, 10 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவது தடுக்கப்படும். 

100 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தாலும், 3.6 கோடி பேர் தான், வருமான வரி செலுத்துகின்றனர்.

இந்தியாவின் மக்கள் தொகைக்கேற்ப, வருமான வரி செலுத்துவோர் மிகவும் குறைவு,'' என நேரடி வரிவிதிப்புக்கான மத்திய வாரிய உறுப்பினர் சுதா ஷர்மா தெரிவித்தார். மதுரை வருமான வரி அலுவலகத்தில், "ஆன்லைன்' மூலம் சேவை மையத்தை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: இந்தியாவில் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தாலும், 3.6 கோடி பேர் தான், வருமான வரி செலுத்துகின்றனர். அதிலும் நிறைய பேர் வரி செலுத்துவதில்லை. நேர்மையாகவும் செலுத்துவதில்லை. தற்போது வருமான வரி செலுத்துவதற்கு நிறைய நடைமுறைகள் இருப்பதால், தொல்லையாக இருப்பது போல தோன்றும். எனவே வரி செலுத்துவோர்களை அதிகம் கஷ்டப்படுத்தாமல், மரியாதை செய்யும் வகையில்,"ஆன் லைன்' மூலம் சேவை மையத்தை துவக்கியுள்ளோம். இத்தகைய வசதிகளின் மூலம் வரிசெலுத்துவோரை தக்க வைக்க முடியும், என்றார். வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் தாஸ் ஷர்மா பேசுகையில்,""ஒன்பது மாவட்டங்கள் அடங்கிய மதுரை மண்டலத்தில் ரூ.1580 கோடி வரி வசூலாகியுள்ளது. ஐந்து லட்சம் பேர் வரிசெலுத்துகின்றனர். தேசியளவில் நிகர வளர்ச்சி 10 சதவீதம், ஆனால் 13.5 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளோம். கடுமையான மின்வெட்டு பிரச்னையால் ஜவுளித்துறை உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. துறைக்கு செலுத்தும் வரியும் குறைந்துவிட்டது,'' என்றார். 

நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்!



மனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் மெடிடேசன் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். நன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்கு காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒருசிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவது போல இருக்கும். உலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்த சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிறுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

உடல் ரீதியான பிரச்சினை, பொருளாதார சிக்கல், கிசு கிசு, செக்ஸ் சிக்கல், குடும்ப பிரச்சினை, சமூக ரீதியான பிரச்சினை, கடந்த கால பிரச்சினை, எதிர்காலம் குறித்த பயம் போன்றவையே மனரீதியான சிக்கல் எழ காரணமாகிறது.மன அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற மனதிற்குள் மணியடிக்கும் சத்தமும், பேச்சுச் சத்தமும் கேட்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சிலருக்கு நேர்மறையானதாகவும், சிலருக்கு எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனதில் கேட்கும் பேச்சு அதிகாலை நேரத்திலோ, அல்லது இரவிலோ தொந்தரவை தரும். இதனால் பாதிப்பிற்குள்ளாகும் சரியாக உறங்க முடியாது. சராசரி மனிதர்களைப் போல நடமாட முடியாது. இதை ஒரு சில பழக்கத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளை கூறியுள்ளனர். பணிச் சூழலில் உயர் அதிகரிகளுடன் கலந்துரையாடலில் இருக்கும் போது நம்மை திசை திருப்பும் வகையில் மனதிற்குள் பேச்சுச்சத்தம் கேட்டால் அது நம் வேலைக்கே உலை வைத்து விடும். எனவே மன சத்தம் குறித்து போகஸ் செய்யவேண்டும். பின்னர் மெடிடேசன் செய்வதன் மூலம் இந்த அழுத்தத்தை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவைகளும் மனதில் எழும் இந்த பேச்சுக்களை குறைக்க வழி செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மனதை கட்டுப்படுத்த உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிக்கலில் இருந்து முழுவதுமாக நமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்ம வேண்டும். எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம்பிக்கையின் மூலம் இதை குணப்படுத்த முடியும்.உள்ளத்தில் அமைதி ஏற்பட மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்ப வேண்டும். எதிர்மறை சாத்தானை விரட்டினால்தான் நேர்மறை தேவதை மனதில் குடிபுகும். கவலைகளை புறந்தள்ள வேண்டும். நம்மால் எதுவும் முடியும், இதெல்லாம் சாதாரணம் என்று மனதில் நினைத்தாலே போதும். தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது. மனதில் பேச்சு சத்தமும் கேட்காது என்கின்றனர் நிபுணர்கள்.

தனித் தமிழ் ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், கருணாநிதி!


இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய ரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. தனித் தமிழ் ஈழம் நிச்சயம் ஒருநாள் மலர்ந்தே தீரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.“இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது” என்று 1983ம் ஆண்டில் தான் பேசியதையும் கருணாநிதி நினைவுகூர்ந்துள்ளார்.

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைப் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து வினாக்கள் தொடுத்தபோது; “இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு “தனி ஈழம்” என்று பதிலளித்திருந்தீர்கள்; அந்தத் “தனி ஈழம்” தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே?” என்ற கேள்வி ஒன்றுக்கு “தனி ஈழம்” வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கதே;

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன; அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் “தனி ஈழம்” கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு நமது இந்திய அரசு தேவையான அழுத்தம் தர வேண்டும்” என்று நான் பதிலளித்து, அனைத்து ஏடுகளிலும் அது வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல தொலைபேசிகள் - வைரமுத்து போன்றோர்- அதைப்பற்றி என்னிடம் பேசியதைத் தொடர்ந்து சற்று விரிவாக இதுபற்றி இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கேள்விக்கும் பதிலுக்கும் அடிப்படையாக அமைந்தது கடந்த 12-4-2012 தேதிய “விடுதலை” நாளிதழில் முதல் பக்கத்தில் வந்த ஒரு செய்திதான்! அந்தச் செய்திக்கு தலைப்பே “தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு”.

அதில், “தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐ.நாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத் துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.” இந்தச் செய்தியினைத் தொடர்ந்துதான் நான் என்னுடைய பதிலை எழுதியிருந்தேன்.

கிழக்கு தைமூர் 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகல் நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1975ம் ஆண்டு கிழக்கு தைமூர் தனிச் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து கொண்டது. ஆனால் அதே ஆண்டு இந்தோனேசியாவால் படையெடுக்கப்பட்டு, அந்த நாட்டின் 27வது மாகாணமாக இணைத்துக் கொள்ளப்பட்டது. 1999ம் ஆண்டிலேதான் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் கிழக்கு தைமூருக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மே 20ம் நாளன்று 21ம் நூற்றாண்டின் சுய நிர்ணய உரிமை பெற்ற முதல் நாடாக சரித்திரத்திலே இது இடம் பெற்றது. கிழக்கு தைமூர் நாட்டைப் போலவேதான், யூகோஸ்லோவியா நாட்டிலிருந்து மாண்டி நீக்ரோ எனும் தனி நாடு, 3-6-2006 அன்றும்; செர்பியாவிலிருந்து கொசோவோ எனும் தனி நாடு 17-2-2008 அன்றும்; எகிப்து நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் தனி நாடு 2011ம் ஆண்டிலும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் பொது வாக்கெடுப்பு நடைபெற்று உருவாக்கப்பட்டன.அதேபோன்ற ஒரு நடைமுறையைத்தான் தனித் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை பின்பற்ற வேண்டுமென்று நாம் கோருகிறோம். அதற்குத் தான் இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம்.

இந்த வாக்கெடுப்பு பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987 அன்று சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே, “ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான ஷரத்து- வட கிழக்கு பகுதிகள் இரண்டு மாகாணங்கள்- அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஈழத் தமிழ் மாநிலமாக தமிழர் தாயகமாக ஒரு மாநில அரசு அங்கே உருவாகக்கூடிய அளவிற்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி உரிமையோடுகூடிய ஒரு மாநில அரசு உருவாகக்கூடிய அளவிற்காவது இடைக் காலத்தில்-- குறிக்கோள் தமிழ் ஈழம் என்றிருந்தாலும்கூட, ஒரு ஏற்பாடு ஒப்பந்தத்தில் வேண்டும் என்று போராளிகள் கேட்டார்கள்.நாமும் அதைத்தான் வலியுறுத்தினோம். ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்கள் இப்பொழுது ஒன்றாக ஒரு நிர்வாகத்திலே வரும் என்றாலுங்கூட, சில மாதங்களுக்குப் பிறகு “ரெபரெண்டம் (வாக்கெடுப்பு)” வைக்கப்படும். பொதுமக்களுடைய வாக்கெடுப்பு நடைபெறும்.அதிலே கிழக்கு மாகாண மக்கள் வடக்கு மாகாணத் தோடு இணைந்திருக்க சம்மதித்தால் இரண்டும் ஒன்றாக தொடர்ந்திருக்கும்.இல்லையேல் வடக்கு மாகாணம் தனி, தமிழர்களை அதிகமாகக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணம் தனி. இரண்டும் ஒரு மாகாணமாக இருக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்து காணப்பட்டது.

கேட்டபோது சொன்னார்கள். பொது வாக்கெடுப்பு நடைபெற்றால் கூட, அது நியாயமாக நடைபெறும்; இந்திய அரசு, இலங்கை அரசு என்ற இரண்டு அரசுகளும் தலையிடாமலேயே அந்தப் பொது வாக்கெடுப்பு நடைபெறும் என்றெல்லாம் சொன்னார்கள்” என்று விளக்கிப் பேசினேன்.ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த வாரமே, இலங்கையிலே, கொழும்பிலே ஜெயவர்த்தனா, ராஜீவ் காந்திக்கு பக்கத்திலே அமர்ந்து ஒப்பந்தத்திலே கையெழுத்து போட்ட ஜெயவர்த்தனா- கிழக்கு மாகாண மக்கள் விரும்பினால் இணைந்திருக்கலாம்; இல்லாவிட்டால் தனித்திருக்கலாம் என்ற கருத்தமைந்த ஷரத்தை எழுதிக் கையெழுத்துப் போட்ட அதே ஜெயவர்த்தனா- “அப்படி ஒரு பொதுத் தேர்தல் வரும்போது, வாக்கெடுப்பு நடத்தும் போது, நான் கிழக்கு மாகாணத்திற்குச் செல்வேன், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணத்தோடு இணைகின்ற அந்தக் கருத்திற்கு எதிராகப் பேசுவேன்” என்று சொன்னார்.எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அப்போதே அதற்கு மாறாக இலங்கை அதிபர் பேசினார். 27-8-1983 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு. கழகப் பொதுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே,

This Council does not think that it would be possible for the Tamils in Sri Lanka to live in peace with the Sinhalese under the same flag and preserve their culture, individuality, language and way of life in the wake of the recent perpetration of genocide. Therefore, this Council feels that a separate Tamil Eelam, shall be the only remedy and permanent solution to the problem and extends its whole-hearted support for all such efforts that shall be aimed at creating a new Tamil Eelam”

நடைபெற்ற இனநாசக் கோரக் கொலைகளுக்கும் சொத்து சேதத்திற்கும் பிறகு இனியும் தமிழர்களும், சிங்களவர்களும் ஒரே அரசமைப்பின் கீழ் தங்கள் உயிரையும் உடைமையையும் தனிக் கலாச்சாரத்தையும், மொழியையும் வாழ்க்கை முறையையும் காப்பாற்றிக்கொண்டு வாழ முடியும் என்று இந்தப் பொதுக் குழுவால் கருத முடியவில்லை. எனவே விடுதலை பெற்ற தனித் தமிழ் ஈழம் தான் இதற்கு நிரந்தரப் பரிகாரம் என்று இந்தப் பொதுக்குழு கருதுகிறது. அதற்கான முயற்சிக்கு தி.மு.கழகம் ஈழத் தமிழர்களுக்கு தன் மனப்பூர்வமான ஆதரவை நல்கும் என்றும் இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது) இந்தத் தீர்மானத்தை விளக்கி 28-8-1983 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, “இலங்கையில் இந்தியப் படை நுழைந்து ஈழத் தமிழகத்தை உருவாக்கித் தருமானால், இங்கே காங்கிரஸ் கட்சியே ஆளட்டும், பத்தாண்டு காலத்திற்கு ஆட்சிக்கு வர திமுக முயற்சி எடுக்காது” என்று நான் பேசினேன்.1976ம் ஆண்டு ஈழத்தில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில்- ஈழத் தந்தை செல்வா “தமிழர் ஐக்கிய முன்னணி” என்பதை “தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி” எனத் திருத்தி அறிவித்ததோடு- ஈழத் தமிழகம் - சுதந்திரம் பெற வேண்டுமென்ற பிரகடனத்தை வெளியிட்டார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே அந்தப் பெருமகன் மறைந்து விட்டார்.தனித் தமிழ் ஈழம் என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமையாகும். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையும், தமிழ் நாடும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்ற உண்மையினை பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இலங்கை, கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்களே ஈழத் தமிழர்கள் ஆவர்.

ஆதி இரும்புக் காலம் என்று கூறப்படுகின்ற; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் தமிழ் மக்கள் சிற்றரசு அமைத்து வாழ்ந்ததற்கான ஆதாரம் புதைபொருள் அகழ்வாராய்வின்போது கிடைத்துள்ளது. இக்கால கட்டத்தில் கந்தரோடை, தமிழ்ச் சிற்றரசின் தலைநகராக இருந்துள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இந்தப் பின்னணியிலேதான் இலங்கை வரலாற்றில் கண்டியை 1815 வரை ஆண்ட தமிழ் மன்னர் கண்ணுச்சாமி என்கிற விக்ரமராஜ சிங்கன் வெள்ளையருடன் நடந்த போரில் தோல்வியுற்று கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் வேலூரில் சிறைவைக்கப்பட்டிருந்தார். 16 ஆண்டுகள் சிறையில் இருந்த அந்த மன்னர் வேலூரில் சிறையிலேயே மாண்டு போனார். அந்த மன்னரின் பெயரையும் இலங்கைத் தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றையும் மறந்துவிடாமல் நினைவூட்ட கழக அரசு காலத்தில் 1.7.1990 அன்று வேலூரில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் “முத்து மண்டபம்” அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

“தென்றிசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்”


என்ற பாவேந்தர் பாரதிதாசனின் எழுச்சிக் கவிதை வரிகளை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம்; சரித்திரத்தின் தொடர்ச்சியாக, தனித் தமிழ் ஈழம் மலர்ந்திட வேண்டும் என்ற தாகம் என்னுள் ஏற்படுவதை நான் ஏக்கத்தோடு உணருகிறேன்.“தனித் தமிழ் ஈழம்” எனும் விடுதலை கீதம் தரணியெங்கும் வாழும் தமிழர்களின் செவிகளிலே இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் சிந்திய இரத்தமும், கொடுத்த உயிர்ப் பலிகளும், நிச்சயம் வீண் போகாது. இன்றில்லாவிட்டால் நாளை - நாளை இல்லா விட்டால் நாளை மறுநாள் - தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும்! ஈழத் தமிழினத்தின் இணையற்ற அடையாளம் குன்றின் மேலிட்ட விளக்காக குவலயத்திலே ஒளி வீசும்! இவ்வாறு கருணாநிதி தனது கடிதத்தில். 

ராஜபட்ச விரித்த வலை...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் தேதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் இந்தப் பயணத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபட்சவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மாற்றி அமைத்திருப்பார்களோ என்னவோ! இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவித்ததன் காரணமே, இந்த நிகழ்ச்சி நிரல் குறை கேட்கச் செல்வதாக இல்லை, விருந்து உண்ணச் செல்வதாக இருக்கிறது என்பதால்தான். ""போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாகக் கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறலைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாமல் பயணத் திட்டம் அமைந்துள்ளது. விருந்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்குச் சாதகமான கருத்து இந்தியாவில் ஏற்படத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போன்று உள்ளது'' என்று இடம் பெறாததற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா கூறி இருந்தார்.


அதிமுக இத்தகைய கருத்து மாறுபாடு தெரிவித்தவுடனேயே இந்தப் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கும், அதிபர் ராஜபட்சவை நேருக்கு நேராக, பத்திரிகையாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் கேள்வி கேட்பதற்கும் இந்திய அரசு வகை செய்திருக்க வேண்டும். அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகூடக் கோரவில்லை. அதிமுக வராவிட்டால் நல்லது என்கின்ற ரீதியில்தான் மத்திய அரசு செயல்பட்டது.
திடீரென்று இக்குழுவில் திமுக சார்பில் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று ஏப்.15-ஆம் தேதி அறிவிக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. "எந்தப் பயனும் இல்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன' என்பதுதான் அவர் தரும் விளக்கம். இது உண்மையென்றால், அவர் இந்தக் குழு அமைக்கப்பட்டபோதே இதைத் தெரிவித்திருக்கலாம். ஜெயலலிதா தனது முடிவை அறிவித்த பிறகு இதை அறிவித்திருக்க வேண்டியதில்லை.


மேலும், 2010-இல் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குழு இலங்கை சென்று முள்வேலிக்குள் இருக்கும் மக்களின் துயரங்களைப் பார்த்து வந்தது. இந்தக் குழுவில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். நியாயமாகப் பார்த்தால், 2010-க்கும் 2012-க்கும் இடையிலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிய, முன்பு சென்ற இருவரில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைத்து, நிலைமையை ஒப்பிட்டு பார்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பையும் தவற விட்டது திமுக தலைமை.திமுகவும், அதிமுகவும்தான் தமிழகத்தைக் கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்துவரும் கட்சிகள். இந்த இரு கட்சிகள்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். இவர்கள்தான் உண்மை நிலையை நேரில் கண்டுவந்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள். மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால், இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை அவர்களும் செய்யவில்லை.


பாஜக சார்பில் சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பிரச்னை இருமுனை கத்தி என்பதை உணர்ந்தவர். நாளைக்கு மத்தியில் பாஜக அரசு அமையுமானால், அப்போது இலங்கையுடனான ராஜ்ஜீய உறவுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் பேசுவார், கருத்து சொல்வார்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேசப்போவதில்லை. கேள்வி கேட்கப் போவதும் இல்லை.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை.


திமுகவும், அதிமுகவும் இல்லாத குழு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பற்றிக் கேட்கப் போவதில்லை. அதிகபட்சம் போனால், இந்தியாவின் நிதியுதவி பயன்படுத்தப்படுகிறதா என்கிற புள்ளிவிவரங்களைக் கேட்டுப் பெறுவார்கள், அவ்வளவே! இலங்கையிலிருந்து திரும்பி வரும் இந்தக் குழுவின் கைகளில் விருந்தின் மணம் இருக்குமே தவிர, ஆற்றொணாது அழுத ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைத்த ஈரம் இருக்கப் போவதில்லை.அப்படியானால் அவர்தம் துயரங்களை எப்படித்தான் அறிந்துகொள்வது? பாரதி காட்டிய வழிதான்..."அவர் விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே. துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரைப்பாயோ.

பண வெறியும், அதிகார போதையும்மாணவர்களுக்கு ‘பிட்’ தரும் முயற்சி!


திருவண்ணாமலையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியான செயின்ட் மவுன்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது கணக்கு தேர்வன்று திடீரென அப்பள்ளிக்கு வருவாய்துறை மற்றும் காவல்துறையினரோடு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவரான அன்சூல்மிஸ்ரா.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ‘பிட்’ தரும் முயற்சியில் இருந்த ஏழு ஆசிரியர்களை பிடித்தார். அதோடு அப்பள்ளியின் அலுவலக அறையில் அன்றைய கணக்கு பாடத்தேர்வு கேள்வி தாள் ஒன்றும், அதற்கான விடை எழுதப்பட்ட பேப்பர் ஒன்று ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பிடித்தார் கலெக்டர்.அதன்பின் நடந்த விசாரணையில், நிர்வாகம் சொல்லியே இதனை செய்ததாக ஆசிரியர்கள் வாக்குமூலம் தர தேர்வு பணியில் இருந்த 7 ஆசிரியர்கள் பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப் பட்டுள்ளனர். 

அதோடு மோசடியில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகி சௌமியா மீது காவல்துறையில் சி.இ.ஓ நூர்ஜகான் புகார் தர அதன்படி நிர்வாகம் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ குணசேகரன் இதுப்பற்றி கேள்வி எழுப்ப, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என அரசின் சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு பிட் கொடுக்க காரணமென்ன என விசாரித்தபோது, நிர்வாகத்தின் பண வெறியும், அதிகார போதையும் தான் என தெரியவருகிறது.மவுன்ட் செயின்ட் ஜோசப்பள்ளி கன்னியாஸ்திரிகள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.இப்பள்ளி நகரத்தின் மிகவும் பிரபலமான பள்ளி. இங்கு படித்தவர்கள் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் தரத்தை கண்டு நகரத்தில் உள்ள பலர் இங்கு தங்களது பிள்ளைகளை சேர்க்க ஆசைப்படுகின்றனர்.இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இப்பள்ளி சேர்க்கையில் பல கட்டுப்பாடுகளை விதித்தது. பள்ளி திறப்பதற்க்கு முன்பே எல்.கே.ஜீ, ஆறாம் வகுப்பு, பதினோறாம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க ஒரு தேர்வு நடத்தும் இதற்கான விண்ணப்ப கட்டணம் தனி, தேர்வு பெற்றபின் நன்கொடை, கல்வி கட்டணம், காலண்டு கட்டணம் என தனித்தனியாக பெறுவார்கள். பணம் போனாலும் பரவாயில்லை சீட் கிடைத்தால் போதும்மென அவர்கள் கேட்கும் தொகையை கொட்டி தந்தனர் பலப்பெற்றோர்கள். 

புணம் வாங்குகிறோமே அவர்கள் தேர்ச்சி பெற்றால் தான் தங்களுக்கு மரியாதை என்பதை உணர்ந்தே தேர்வு காலங்களில் பிட் அடிக்க வைப்பது, புத்தகம் பார்த்து எழுத வைப்பது, தேர்வு மையத்தில் சொல்லி தருவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு மாணவர்களை அதிகளவு வெற்றி பெற வைத்து 100 சதவிதம் தேர்ச்சி, மாவட்டத்தில் முதலிடம், இரண்டாமிடம்  என விளம்பரம் செய்து அந்த ஆண்டு கல்வி கட்டணத்தை கணிசமாக உயர்த்தி வந்தன இப்பள்ளி நிர்வாகம்.
பிட் அடிக்க வைக்க தங்களுக்கு தோதான ஆசிரியர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளராக இருக்க வேண்டும், தேர்வு நடைபெறும் அறையின் பொறுப்பு ஆசிரியராக தமக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு வர செய்ய என்ன செய்யலாம் என யோசித்தே அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியை பெற முயன்றது.அதன்படி அனைத்து கட்சியிலும் உள்ள பிரபலமான அரசியல்வாதிகளின் பிள்ளைகள், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலகர்களின் பிள்ளைகளுக்கு நுழைவு தேர்வு இல்லாமல் சீட் தந்து தனது பலத்தை பெறுக்கிக்கொள்ள தொடங்கியது இப்பள்ளி நிர்வாகம். சமீப ஆண்டுகளாக இப்பள்ளியில் பயிலும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தவறான திசையில் நோக்கி செல்ல அதை கண்டிக்க முடியாமல் தடுமாற தொடங்கியது நிர்வாகம். அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் தோல்வியுற்றால் தங்களுக்கு அவமானம். 100 சதவித தேர்ச்சியில்லையென்றால் வேறு பள்ளிகளுக்கு வசதியானவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் போய்விடுவார்கள் என்பதால் அப்பிள் ளைகளை தேர்ச்சி பெற வைக்க பிட் தந்து தேர்வு எழுத வைக்க தொடங்கியது இப்பள்ளி. கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் தேர்வு நேரத்தின் போது பிட் தருகிறார்கள் என்ற குற்றாச்சாட்டு எழுந்து பறக்கும்படையினர் ஒரு சிலமுறை செக் செய்ய சென்றனர்.

ஆனால் அப்போது சிக்கவில்லை. அதற்கு காரணம், திருவண்ணாமலை சி.இ.ஓ அலுவலகத்தில் சி.இ.ஓவின் பி.ஏவாக உள்ள ஒருவரின் மகன் இப்பள்ளியில் படிப்பதால் ரெய்டு தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தந்துவந்துள்ளார். இதனால் நிர்வாகம் அப்போதுயெல்லாம் உஷாராக இருந்தன. இந்தமுறை அந்த அலுவலர், பல அரசியல், சில தலைமையாசிரியர்களின் பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். ஆங்கில தேர்வின் போது அதிகமாக பிட் தந்துள்ளனர். இதனை உள்வாங்கிய நன்றாக படிக்கும் ஒரு மாணவி தனது பெற்றோர் இதுப்பற்றி கூற அவர்கள் கலெக்டருக்கு இமெயிலில் புகார் அனுப்பினர். அதன்படியே கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக இந்த ரெய்டை நடத்தி மோசடி செய்தவர்களை பிடித்துள்ளார்.


தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் எது? ஜெயலலிதா விளக்கம்!!

13.4.2012 அன்று நடைபெற்ற சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான காரணங்கள் எவை என நான் எடுத்துக் கூறியது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதைக் கண்டு, பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, வீண் விதண்டா வாதங்களை தனது கட்டுரையில் எடுத்து வைத்துள்ளார். சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளதை நான் சுட்டிக்காட்டியதற்கு, இது என்ன ஆதாரமா? என்று வினவியிருக்கிறார் கருணாநிதி. நான் மதுரை ஆதினம் என்பவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னது ஆதாரம் இல்லையென்றால், பெயர் குறிப்பிடப்படாமல், ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும், ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்று கூறி, ஒரு சட்டத்தை கருணாநிதி இயற்றியது ஆதாரத்தின் அடிப்படையிலா?

தி.மு.க. ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத்தமிழ் மாநாடு, தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கருணாநிதி. 1968 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இது தமிழ்மொழியை பரப்புவதற்கு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், 2010 ஆம் ஆண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழ் மாநாடுகளின் வரிசையில் இடம் பெறாத, மாநாடு. கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் முன்வரிசையில் அமர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். உண்மையான தமிழ் அறிஞர்கள் பின் வரிசைக்கு தள்ளப்பட்டனர். கருணாநிதி தன்னுடைய கட்டுரையிலே, சித்திரையில் தொடங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பௌர்ணமி அன்று வரும், நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும் என்று நான் கூறியதை சுட்டிக்காட்டி, சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே என்று கேட்டிருக்கிறார். 

சித்திரை மாதம் பௌர்ண மியன்று சித்திரை நட்சத்திரம் வருகிறது என்றும்; கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வருகிறது என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டுவிட்டதால், பிற மாதங்களை இங்கே விளக்கிக் கூற விரும்புகிறேன். வைகாசி மாதம் பௌர்ணமியன்று விசாகம் நட்சத்திரம் வருகிறது. அதாவது, வைசாகம் நட்சத்திரம் திரிந்து, விசாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனி மாதம் பௌர்ணமியன்று, அனுஷம் நட்சத்திரம் வருகிறது. அதாவது, அனுஷம் நட்சத்திரம் மருவி, ஆனி என்றழைக்கப்படுகிறது. ஆடி மாதம் பௌர்ணமியன்று பூராடம் நட்சத்திரம் வருகிறது. பூராடம் - பூராடி என திரிந்து, ஆடி மாதம் என்றழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமியன்று திருவோணம் நட்சத்திரம் வருகிறது. அதாவது திருவோணம் அல்லது சிரவணம் நட்சத்திரம், சிராவணியாக திரிந்து, ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று பூரட்டாதி நட்சத்திரம் வருகிறது. பூரட்டாதி நட்சத்திரம் திரிந்து, புரட்டாசி என்றழைக் கப்படுகிறது. ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரம் வருகிறது. அஸ்வினி நட்சத்திரம், ஆஸ்விஜம் என்ற ழைக்கப்படுகிறது. அது திரிந்து ஐப்பசி என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில், மிருக சீர்ஷம் நட்சத்திரம் வருகிறது. மிருகசீர்ஷம் நட்சத்திரம், மார்க சீர்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இது திரிந்து மார்கழி என்றழைக்கப்படுகிறது. தை மாதம் பௌர்ணமி அன்று, பூசம் நட்சத்திரம் வருகிறது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இது வேதை ஆனது. மாசி மாதம் பௌர்ணமியன்று மகம் நட்சத்திரம் வருகிறது. மகம் நட்சத்திரத்தை மாக, அதாவது மாசி , என்றும் அழைப்பார்கள். இதுவே மாசி என்றழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் பௌர்ணமியன்று உத்திரம் நட்சத்திரம் வருகிறது. இதை உத்திரப் பல்குனி என்றும் அழைப்பார்கள். இதுவே பங்குனி மாதம் என்று அழைக்கப்படுகிறது. எப்படி சென்னப்பட்டினம் என்பது காலப்போக்கில் சென்னை என்று மருவியதோ, சைலம் என்பது சேலம் என்று எவ்வாறு மருவியதோ; அது போல் தான் இவையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று மறைமலை அடிகள் கூறவில்லை என் பதை எடுத்துக்காட்ட கருணாநிதியின் கருத்தை ஒட்டிய, சிறுவை நச்சினார்க்கினியன் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்ட மலரில், திருவள்ளுவனார் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும் என்று 1935 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தில் மறைமலையடிகளார் பேசியதாக கூறியிருப்பதை மேற்கோள் காட்டினேனே தவிர, அந்தப் பக்கத்திற்கு முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன் தெரிவித்துள்ள கருத்தைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்று மறைமலை அடிகளார் சொல்லவில்லை என்பதற்காகத்தான் மேற்படி கட்டுரையை நான் மேற்கோள் காட்டினேன். தவிர, அந்தப்பக்கத்திற்கு முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன் தெரிவித்துள்ள கருத்தைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. தை முதல் நாள் தான் தமிழ்ப்புத் தாண்டு என்று மறைமலை அடிகளார் சொல்லவில்லை என்பதற்காகத்தான் மேற்படி கட்டுரையை நான் மேற்கோள்காட்டினேன். வாழ்வியற் களஞ்சியம், என்ற நூலைக் குறிப்பிட்டு, ஆகம விதியின்படி தை முதல் நாள் தான் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார் கருணாநிதி. தை பிறந்தால் வழி பிறக்கும், என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி என்ற நூலினை மேற்கோள் காட்டி, அந்த நூலில் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்பதாக கூறியிருக்கிறார் கருணாநிதி. 

அந்த நூலில் 113-வது பக்கத்தில் இச்செய்தி, தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்று இருப்பதை தனக்கு வசதியாக கருணாநிதி மறைத்துவிட்டார்.அந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் தை மாதம் தான் தமிழ் ஆண்டின் தொடக்க மாதம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் இதனை அடுத்து, தை - ஒரு திங்கள்; தமிழ் மாதம் ,ஜனவரி-பிப்ரவரி என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?  தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23.1.2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதாக கருணாநிதி கூறியிருக்கிறார். ஆளுநர் உரையில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, கருணாநிதியின் மகள் கனி மொழியால் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் விழாவில் கருணாநிதி, சங்கமம் போற்றுதும் என்று போற்றிப்பாடி, இது ஆண்டு தோறும் நடக்க வேண்டும்; பொங்கல் திருநாளை நினைவூட்டும் வகையில் தொடர்ந்து நடக்க வேண்டும். தமிழரின் புத்தாண்டு தை முதல் நாள் என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்து இருக்கிறார்கள். 

அதை அதிகாரப் பூர்வமாக அறி விக்கும் நாள் விரைவில் வரும் என்று கூறியுள்ளார். எனவே, சென்னை சங்கமம் விழாவில் தான், இது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. ஒரு வேளை, தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் தான் ஆண்டுதோறும் சென்னை சங்க மம் விழா நடத்தப்பட்டு, அதற்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்று கருணாநிதி எண்ணினார் போலும்! தமிழர் திருநாள் என்னும் தலைப்பில் மு.வ. அவர்களால் 1960 ஆம் ஆண்டு கலைமகள் பொங்கல் மலரில் எழுதப்பட்ட கட்டுரையில், தைத் திருநாளை இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருவிழா என்று தான் குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, அதை தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2008 ஆம் ஆண்டு, ஆளுநர் உரையில், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கருணாநிதி, திருவள்ளுவர் நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று 1963-ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் கொண்டு வரப்பட்ட தனி நபர் தீர்மானத்தின் மீது இந்த சட்டப் பேரவையில் உரையாற்றிய போது, மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக விட்டு வருகிறோம். ஒரு திங்களில் ஒரு இரண்டாம் சனிக்கிழமையைக் கூட, திருவள்ளுவருடைய நினைவு நாளாகக் கொண்டாட,

விடுமுறை தினம் என்று அறிவிக்கலாம். இரண்டாம் சனிக்கிழமையன்று என அமையாது திங்கள் கிழமை அல்லது செவ்வாய்கிழமை என்று வருமானால், அந்த திங்களில் இரண்டாம் சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டுவிட்டு, திருவள்ளுவருடைய நினைவு நாள் என்று குறிக்கப்பட்ட தினம் என்று வருகிறதோ அன்றைக்கு விடுமுறை அளிக்க அரசாங்கம் முன் வரலாம். திருவள்ளுவருடைய தினத்தை நவம்பர் மாதம் கொண்டாடுவது என்றால் நவம்பர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடுவதற்கு பதிலாக, அந்தத் திங்களில் திருவள்ளுவருடைய நினைவு நாளாகக் குறித்த தினத்திற்கு விடுமுறை அளிக்கும்படியாக இந்தத் தீர்மானத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம் என்று பேசியிருக்கிறார். ஏன் அப்போது இப்படி பேசினார் கருணாநிதி? அப்பொழுதே திருவள்ளுவர் தை மாதத்தில் தான் பிறந்தார் என்று கூறி, அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கலாமே! இவ்வாறான கடிதம், இது ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டிய பொருள் என்று அமைந்துவிடும் என்பதால், அரசின் அறிவுரை காரண மாகவோ என்னவோ இந்த வாசகங்கள் அடிக்கப்பட்டு, திருத்திய கடிதம் தான் அரசுக்கு அனுப்பப்பட்டது. முறையாக ஆய்வு எதையும் செய்யாமல் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, அந்தச் சட்டத்தை இயற்றினார் கருணாநிதி. ஆனால், அந்தச் சட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது தான் உண்மை. தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி அறிவித்து சட்டம் இயற்றியது முறையற்ற, மரபு மீறிய, மக்கள் மனதை புண்படுத்துகின்ற செயல் என்பதையும் கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நான் ரத்து செய்தேனே தவிர எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ 2008 ஆம் ஆண்டு, சென்னை சங்கமம் விழாவில் உரையாற்றும் போது, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என விரைவில் அறிவிக்கப்படும் என கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, 17.1.2008 அன்று, அன்றைய தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கருத்துருவில், 2004 ஆம் ஆண்டு அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், சித்திரை முதல் நாளுக்குப் பதிலாக, தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவிக்கக் கருதினால், இப் பொருண்மையைத் தமிழ் வளர்ச்சி மன்றத்தில் வைத்து, ஆய்வு செய்து முடிவு செய்வது ஏற்புடையதாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தார். 

இவ்வாறான கடிதம், இது ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டிய பொருள் என்று அமைந்துவிடும் என்பதால், அரசின் அறிவுரை காரண மாகவோ என்னவோ இந்த வாசகங்கள் அடிக்கப்பட்டு, திருத்திய கடிதம் தான் அரசுக்கு அனுப்பப்பட்டது. முறையாக ஆய்வு எதையும் செய்யாமல் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, அந்தச் சட்டத்தை இயற்றினார் கருணாநிதி. ஆனால், அந்தச் சட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது தான் உண்மை. தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி அறிவித்து சட்டம் இயற்றியது முறையற்ற, மரபு மீறிய, மக்கள் மனதை புண்படுத்துகின்ற செயல் என்பதையும் கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நான் ரத்து செய்தேனே தவிர எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’

கொலையும் செய்வாள்...?

நெல்லை ஜங்ஷன் ரயில்வே காலனியை சேர்ந்த ரயில்வே ஊழியர் பரமசிவன் மகன் சரவணக்குமார் (23). கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 9ம் தேதி நெல்லையில் இவர் மாயமானதாக கூறி இவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காணாமல் போன சரவணக்குமாரின் மனைவி சத்தியாவும், கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த டாக்சி டிரைவர் கனகராஜ் என்பவரும் நண்பர்களுடன் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. 

நெல்லை சந்திப்பு போலீசார் உடனடியாக கொடைக்கானல் சென்று கனகராஜ், அவரது நண்பர்கள் கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த மதன்(33), அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஸ்(23), ரஞ்சித்குமார்(19) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் சரவணக்குமாரின் மனைவி சத்தியாவையும் கைது செய்தனர். சரவணக்குமாரின் மனைவி சத்தியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘’எனது திருமணத் திற்கு முன்பே நானும், கனகராஜூம் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம்.எனக்கும், சரவணக்குமாருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் அதற்கு பின்பும் எனக்கும், கனகராஜூக்கும் உள்ள பழக்கம் நீடித்து வந்தது. என்னால் என் காதலரை மறக்க முடியவில்லை. என் கணவருடன் வாழ முடியவில்லை.

கடந்த ஏப்.2ம் தேதி நான் கனகராஜை அழைத்து கொண்டு வீட்டை வீட்டு வெளியே சென்றுவிட்ட நிலையில், எனது தந்தை தங்கவேல் நான் மாயமா னதாகவும், கனகராஜ் என்னை கடத்தி சென்றுவிட்டார் என்றும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பின்னர் நானே காவல் நிலையம் சென்று, யாரும் என்னை கடத்தி செல்லவில்லை என்றும், பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறினேன் என்றும் தெரிவித்தேன்.இதனால் போலீசார் மேல்நடவடிக்கையை கைவிட்டனர். இந்நிலையில் எனது தந்தையார், என்னையும், எனது கணவர் சரவணக்குமாரையும் கடந்த 4ம் தேதியன்று நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள எனது மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். நான் இங்கிருந்து கொண்டே கனகராஜூடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தேன்.‘எனது கணவரை தீர்த்து கட்டிவிடு. அப்போதுதான் நாம் இருவரும் சேர்ந்து ஜாலியாக வாழ முடியும்‘ என நான் கனகராஜூடம் தெரிவித்தேன். இதை கேட்ட கனகராஜ் தன் நண்பர்களோடு சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி கடந்த 9ம் தேதி நெல்லை வந்த கனகராஜ், என்னிடம் தொடர்பு கொண்டு, சரவணக்குமாரை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு கொண்டார். நானும் எனது கணவரிடம் நமது திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சில நண்பர்கள் இப்போது தங்களை காண வந்திருப்பதாக கூறி, ஜவுளி கடைக்கு அனுப்பி வைத்தேன்.அங்கு நின்றிருந்த கனகராஜூம், அவரது நண்பர்களும் எனது கணவரை ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை காரிலேயே மது அருந்த செய்து, கயிற்றால் கழுத்தை நெரித்து, கொடைக் கானலுக்கு கொண்டு மயிலாடும் பாறை என்ற இடத்தில் இருந்து உடலை பள்ளத்தில் தூக்கி எறிந்துள்ளனர்’’என்று கூறினார். கைது செய்யப்பட்ட 5 பேரும் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...