|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜை!


ஏற்காட்டில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை கரிநாளுக்கு அடுத்து வரும் நாளில், பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஏற்காடு மலையில் அமைந்துள்ள வெள்ளக் கடை கிராமத்தில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை, கரிநாளுக்கு அடுத்த நாள், பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜையாக நடக்கும். இந்த பூஜையில், பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை மட்டுமே பங்கேற்க முடியும். ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை பூஜையின் போது, தாயுடன் வைத்து கொள்ளலாம். விசேஷ அம்மன் பூஜை நடக்கும் போது, வெள்ளக்கடையில் உள்ள ஆண்கள் அனைவரும், ஊரை விட்டு வெளியேறி விடுவர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அம்மன் பூஜையில், அம்மனுக்கு பிடித்த கேழ்வரகு, பழம், பூ, தேங்காய் வைத்து படையல் செய்யப்படும். ஊர் எல்லையில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று, பெண்கள் எல்லை தெய்வத்தை வழிபடுவர். அதன் பின், ஊர்வலமாக சென்று, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுவர். இந்த விசேஷ பூஜை நடக்கும் நாளில், வெளியூரில் இருந்து உள்ளூருக்குள் எந்த நபரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக, வெள்ளக்கடையை சேர்ந்த ஆண்கள் ஊர் எல்லையில் கம்பு நட்டு, காவலுக்கு இருப்பர்.  புத்தாடை அணிந்து பூஜையில் ஈடுபடும் பெண்கள், கும்மி பாட்டு பாடியும், நடனமாடியும், அம்மனை வழிபடுவர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் வழிபாடு முடிந்ததும், பெண்கள் படையல் செய்த பதார்த்தங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். இந்த விசேஷ பூஜை முடிந்ததும், சிறுமி மூலம் ஊர் எல்லையில் காவலுக்கு இருக்கும் ஆண்களுக்கு, "சமிக்ஞை கொடுக்கப்படும். அதன் பின், ஊர் எல்லையில் இருக்கும் ஆண்கள் ஊருக்குள் வந்து, அம்மனை வழிபடுவர். வரும் பெங்கல் பண்டிகையையொட்டி பெண்களால் கொண்டாடப்படும் விசேஷ அம்மன் வழிபாடுக்கு தேவையான முன் ஏற்பாடுகளை, வெள்ளக்கடையை சேர்ந்த மக்கள் செய்து வருகின்றனர்.  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பெண்கள் பங்கேற்கும் அம்மன் பூஜை சம்பந்தமாக, பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையில் வெள்ளக்கடை பெண்களால் நடத்தும் பூஜை, அரசு மற்றும் உளவுத்துறை கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால், அந்த ஊரை சேர்ந்த மக்கள் மனம் வருத்தம் அடைந்து, உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். 2005ம் ஆண்டு, ஆர்.டி.ஓ.,வாக சேலத்தில் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி தலைமையிலான பெண் வருவாய் அலுவலர்கள், வெள்ளக்கடையில் பெண்கள் நடத்தும் பூஜையை நேரடியாக கண்காணித்து, வீடியோ மூலம் பதிவு செய்து வெளிகாட்டினர். அதன்பின்னரே, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத பூஜை மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சென்னையில் 2012 - 9 நாளில் 9 கொலைகள்

 சென்னையில் புத்தாண்டு தொடங்கி முதல் 9 நாட்களில் 9 கொலைகள் நடைபெற்றுள்ளது போலீசாருக்கு சவாலை அதிகரித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் திருவான்மியூரில் ஆட்டோ டிரைவர் கொலை, மடிப்பாக்கத்தில் ஒருவர் கொலை மற்றும் அம்பத்தூரில் பகுதிநேர அழகுக்கலை நிபுணர் என 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த கொலைச் சம்பவங்களில் 5 சம்பவங்களில் மட்டும் தீர்வுகாணப்பட்டுள்ளது. மேற்குசென்னையில் நடந்த 3 கொலையில் 2 கொலையில் நாங்கள் தீர்வுகண்டுள்ளோம். மற்றொரு கொலைச்சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளோம் என மேற்குபகுதி இணை கமிஷனர் கே.சங்கர் தெரிவித்தார்.


கொள்ளையடிக்கும் நோக்கம் மற்றும் முறைகேடான உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த கொலைகள் நிகழ்கின்றன. ஜனவரி 2-ம் தேதி வங்கி ஊழியர் அருணா சீதாலட்சுமி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது படுக்கை அறையில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜனவரி 5-ம் தேதி அம்பத்தூரில் ஒருவர் தனது மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றார். அதற்கு அடுத்தநாள் கொருக்குப்பேட்டையில் மற்றொருவர் தனது மனைவியைக் கொன்றார் மற்றும் ஒரு கும்பல் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றது.சனிக்கிழமையன்று சமையல்கலைஞர் மணி பாரதி என்பவரை கீழ்ப்பாக்கத்தில் பாட்டிலால் ஒருவர் குத்திக் கொன்றார்.


இதுபோன்ற கொலைவழக்குகளை கையாள தனிப்பிரிவை உருவாக்க போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். 2011-ல் சென்னை நகரத்தில்தான் அதிக கொலைச்சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை யில் மட்டும் 139 கொலைகளும், அடுத்தபடியாக விழுப்புரத்தில் 74 கொலைகளும், திருநெல்வேலியில் 72 கொலைகளும் நடைபெற்றுள்ளதாக மாநில குற்றப்பிரிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2011 அக்டோர் வரை மொத்தம் 1506 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2010-ம் ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும். இந்த 1506 வழக்குகளில் 1408 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.

மிஸ் இந்தியா 2011 அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோகிணி தேர்வு


 மிஸ் இந்தியா 2011 அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோகிணி சுப்பையா தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்றார் கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அஸ்வினி சந்திரசேகர். விவெல் மிஸ் இந்தியா சவுத் 2011 போட்டிகள் சென்னை நந்தம்பாக்கம் உள்விளையாட்டரங்கில் நடந்தன. விவெல் நிறுவனத்துடன், மாயா ஈவன்ட்ஸ் மற்றும் இ3 இன்னொவேஷன்ஸ் நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் மட்டும் 18 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் சிறந்த தென்னிந்திய அழகியாக சென்னையைச் சேர்ந்த ரோகிணி சுப்பையா தேர்வு செய்யப்பட்டார் (21). இவர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேஷன் டிசைனிங் படிக்கும் மாணவி. சென்னைதான் இவரது சொந்த ஊர். 

ஷிமோகா அழகி இரண்டாவது சிறந்த அழகியாக கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அஸ்வினி தேர்வு செய்யப்பட்டார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றுகிறார். நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இப்போது நடிகர் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 
நடிகர் பிராஷாந்த் முதலிடம் பெற்ற ரோகிணிக்கு, நடிகர் பிராந்த் கிரீடம் சூட்டி வாழ்த்தினார். போட்டி நடுவராக இருந்தார் கடந்த ஆண்டு தென்னிந்திய அழகிப் பட்டம் சூடிய சாவ்யா. இந்த விழாவி்ல டிசைனர் பிரியங்கா பங்கேற்றார்.சிறந்த தென்னிந்திய அழகிப் பட்டம் வென்ற ரோகிணி, இதுகுறித்து கூறுகையில், "எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய அளவில் போட்டி இருந்தது. இறுதிப் போட்டிக்கு மட்டுமே 18 பேர் நான்கு மாநிலங்களிலிருந்து வந்திருந்தனர். தமிழகத்திலிருந்து நான் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வானேன்.

இந்தப் போட்டியில் உடல் அழகு மட்டுமல்ல, மன அழகு, அறிவு எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கிறதா என்றுதான் பார்த்தார்கள். இறுதிச் சுற்றில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: 'உங்களுக்கு ஒரு காதலர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பட்டத்தை வென்றால் அதை முதலில் யாரிடம் சொல்வீர்கள்... பெற்றோரிடமா அல்லது காதலரிடமா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'நிச்சயம் பெற்றோரிடம்தான் சொல்வேன். அவர்கள் அனுமதியோடு காதலர் அல்லது ஆண் நண்பரிடம் சொல்வேன்' என்றேன். 

இப்போதே நிறைய சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. நல்ல படமாக தேர்வு செய்து நடிப்பேன்," என்றார். 'ஏற்கெனவே நடிக்க ஆரம்பித்துவிட்டேன்' இரண்டாம் இடத்தைப் பிடித்த அழகியான அஸ்வினி சந்திரசேகர் கூறுகையில், "கர்நாடக மாநிலம் என்றாலும் எனக்கு தமிழ் ரொம்பப் பிடிக்கும். ஏதோ வழக்கமாக சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை அதுதான். ஷிமோகாவில்தான் பிறந்து வளர்ந்தேன். இப்போது பெங்களூரில் இருக்கிறேன். ஏற்கெனவே கர்நாடகத்தின் சிறந்த அழகியாக தேர்வாகியுள்ளேன். இது எனக்கு கிடைத்த இரண்டாவது பெரிய டைட்டில். நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. பேசிக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டுள்ளேன். விரைவில் தமிழ் சினிமாவிலும் என்னைப் பார்க்கலாம்," என்றார்.

எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் மோசடி!


எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் அதிநவீன முறையில் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத முதுநிலைப்படிப்பு இடங்களை நிரப்புவதற்கான எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் 156 மையங்களில் நடந்தது. இந்து நுழைவுத் தேர்வில் மோசடி நடப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிலும் குறிப்பாக நொய்டா செக்டார் 28க்கு சென்றால் தெரியும் என்று தகவல் கொடுத்தவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த மையத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் கபில், கிருஷன் மற்றும் டாக்டர் பூனியா ஆகிய 3 பேர் சிக்கினர். விசாரணையில் கபில் குமார் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும், கிருஷன் பிரதாப் ஐஐஎம்டி- மீருட்டிலும் எம்.பி.ஏ. படித்தவர்கள் என்பதும், பூனியா ரோதக்கில் உள்ள பிஜிஐல் எம்பிபிஎஸ் படித்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் போலிச் சான்றிதழ் மூலம் முதுநிலை மருத்துவப்படிப்பு நுழைவத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். கபில், கிஷன் மற்றும் பூனியா நொய்டாவில் உள்ள மையத்தில் தேர்வு எழுத வந்தனர். அதில் கபிலும், கிஷனும் முழுக்கை சட்டை அணிந்திருந்தனர். கைப் பகுதியில் செல்போன்களும், காலரில் புளூடூத் கருவிகளும் வைத்திருந்தனர். கேள்வித் தாள் கொடுக்கப்பட்டவுடன் அவர்கள் தங்கள் செல்போன் கேமரா மூலம் அந்த தாளை படமெடுத்து தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் புரோகிராமர் பீஷ்மா சிங்கிற்கு அனுப்பினர்.

அதை பீஷ்மா பிரிண்ட் அவுட் எடுத்து மோஹித் சவுத்ரி என்னும் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவரிடம் கொடுத்தார். அவர் உஜ்ஜைனில் படித்து வந்தார். கேள்வித் தாளை பெற்றுக் கொண்ட மோஹித் புத்தகங்களை வைத்து அந்த கேள்விகளுக்கான பதில்களை வாசித்தார். அந்த பதில்களை தேர்வு மையத்தில் இருந்த கபிலும், கிருஷனும் தங்கள் காதில் பொருத்தியிருந்த இயர் பீஸ் மூலம் கேட்டு விடைகளை எழுதியுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பீஷ்மா சிங், மோஹித் சவுத்ரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதே மையத்தில் தேர்வு எழுதிய 6 மருத்துவர்கள் விடைகளைப் பெற இந்த கும்பலுக்கு ரூ. 30 முதல் 40 லட்சம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது குறி்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மணிநேரத்தில் கதற, கதற 61 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்!


பீகார் மாநிலத்தில் வெறும் இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் மிகக்கொடூரமாக குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டதில் உள்ளது கபார்போரா கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத ஏழை மக்கள் ஆவர். கடந்த சனிக்கிழமை அந்த கிராமத்திற்கு 3 இளைஞர்கள் வந்தனர். தாங்கள் ஒரு என்ஜிஓவைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடத்த வந்துள்ளதாகவும் தெரிவி்ததனர். மேலும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொள்பவர்களுக்கு மருந்து மாத்திரைகளும், ரூ.600 ரொக்கமும் கொடுக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.

இதை கேட்ட அந்த படிப்பறிவில்லாத பெண்கள் ஆபரேஷனுக்கு சம்மதித்தனர். அவர்களுக்கு மயக்க மருந்து கூட கொடுக்காமல் கதற, கதற ஆபரேஷன் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுகோஸ் கூட ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மீதமானது என்று கிராமத்தினர் தெரிவித்தனர். இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷன் செய்து கொண்ட பெண்களில் பலரது நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அராரியா மாவட்ட எஸ்பி ஷிவ்தீப் லாண்டே கூறியதாவது, ஆபரேஷன் செய்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளோம். அந்த கிராம மக்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அந்த பெண்களுக்கு ரூ.600க்கும் குறைவான பணமும், காலாவதியான மருந்துகளும் கொடுத்துள்ளனர் என்றார்.

இதையடுத்து புருனியா முகவரியில் பதிவு செய்யப்பட்ட ஜெய் அம்பே நலச் சங்கம் என்னும் என்ஜிஓ அலுவலகத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி தபால் தலைகள் மற்றும் போலி மருத்துவ சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த என்ஜிஓ அமைப்பின் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பாட்னாவில் பதுங்கியிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ராஜபக்சேவை கலங்க வைத்த விஜய் டிவி.


விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோதிட நிகழ்ச்சி இலங்கை அதிபர் ராஜபக்சேவை கலங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  தமிழகத்தில் பிரபலமான டிவி சேனல்களில் விஜய் டிவியும் அதாவது ஸ்டார் விஜயும் ஒன்று. அந்த சேனலில் கடந்த 31ம் தேதி 6 பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் 2012ல் இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துக் கூறினர். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு 2012ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு ஜோதிடக் குழு தலைவர் ராஜபக்சேவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவர் 2012 முடிவதற்குள் பதவி விலகுவார் என்றார். இதை மற்ற ஜோதிடர்களும் ஆமோதித்தனர். 

இலங்கையில் டயலாக் கேபிள் டிவி, விஜய் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த கேபிள் டிவி இந்த ஜோதிட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்தி ராஜபக்சேவின் காதுகளுக்கு எட்டியது. அதை கேட்டதும் அவர் கடுப்பாகி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநரை அழைத்து கண்டித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வலிமையான இயக்கங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது எல்டிடிஇ!


உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக திகழ்ந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரன் சொன்னதை வேதமாக தமிழ் மக்கள் ஏற்றுச் செயல்பட்டனர். கட்டுக்கோப்பான இயக்கமாகவும் அது செயல்பட்டது. அவர்கள் செய்த ஒரே தவறு, மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் அதே ரீதியில் சண்டையிட்டதே என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரியும், ராஜீவ் காந்தியின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஜி.பார்த்தசாரதி. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மிகச் சிறந்த யோசனைகளைத் தந்த ஒரே வெளியுறவுத்துறை அதிகாரி என்ற பெயர் பெற்றவர் பார்த்தசாரதி. இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து ஐஎப்எஸ் தேர்ச்சி பெற்று, வெளியுறவுத்துறைக்கு வந்தவர் இவர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் ஜி.பார்த்தசாரதி. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் கடுமையான இயக்கமாக இருந்தாலும உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக செயல்பட்டது என்பதில் சந்தேகமில்லை. தனது குறிக்கோளுக்காக அது தீவிரமாக செயல்பட்டது. உத்வேகம் கொண்ட கள வீரர்களைக் கொண்டிருந்த அமைப்பாக விளங்கியது. அந்த அமைப்பின் தலைவர் சொன்னதை சட்டமாக, வேதமாக ஏற்றுச் செயல்பட்ட கள வீரர்கள் நிறைந்திருந்தனர். தங்களது உயிரைக் கூட இரண்டாம்பட்சமாக நினைத்த அவர்கள் பிரபாகரன் சொன்னதற்கே முதல் முக்கியத்துவம் கொடுத்தனர். 

கொரில்லா இயக்கமாக செயல்பட்ட விடுதலைப் புலிகள், மரபு ரீதியான போருக்கும் மாற முடிந்தது. இரு வகையான போர் முறைகளிலும் விடுதலைப் புலிகள் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால் மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் மரபு ரீதியாகவே மோதியதுதான் (அதாவது, கொரில்லா போர் முறையை தவிர்த்து). அதுதான் அவர்களது வீழ்ச்சிக்குக் காரணம். இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது நடந்த விதிமீறல்களை இந்தியா கண்டிப்பதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. அப்படி ஒரு நிலை வந்தால், ஐரோப்பிய நாடுகள் நமக்கு ஆதரவு தரலாம், அமெரிக்கா ஸ்திரமான முடிவெடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இஸ்லாமிய நாடுகளும், சீனாவும் நமக்கு எதிராக திரும்பும்.

நான் ராஜீவ் காந்தியிடம், அவரது ஆலோசகராக இருந்தபோது அப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு பேசினேன். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நான் பேசியபோது, எம்.ஜி.ஆர். அந்த உடல் நலிவிலும் கூட தமிழகத்தில் நடந்து வந்த அத்தனை நிகழ்வுகளையும் தனது விரல் நுனியில் வைத்திருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டேன். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

இலங்கையில் தற்போது தமிழர்களின் பொருளாதார நிலை நிச்சயம் சரியாக இல்லை. அவர்களுக்கு இந்தியா பெருமளவில் உதவ வேண்டும். இதற்காக தனது கொள்கைகளை அது பெரிய அளவில் மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியாவின் உதவி அவசியம்.

தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து இந்தியா நெருக்குதல் அளிக்க வேண்டும். அதேசமயம், பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் மீண்டெழ வேண்டியதும் அவசியமாகும்.வட கிழக்கு மாகாணங்களில் பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும். நீர்ப்பாசனத்தை மேம்படுத்த உதவ வேண்டும். இதை முதலில் செய்ய இந்தியா முயல வேண்டும். இந்திய பொருளாதார சந்தையின் விரிவாக்கமாக நாம் இலங்கையின் முன்னேற்றத்தைப் பார்க்க வேண்டும் என்றார் பார்த்தசாரதி.

கல்தாவுக்கு ரெடியாகும் 15 அமைச்சர்கள்...?


அமைச்சரவை மாற்றப் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா தயாரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் திறமையற்றவர்கள் எனக் கருதப்படும் 15 அமைச்சர்கள் விரைவில் மாற்றப்படுவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நீக்கம் இப்போதைக்கு இருக்காது என்றும் அதேசமயம், நீண்ட தாமதமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கூண்டோடு நீக்கி விட்டார் ஜெயலலலிதா. அவரது ஆதரவு அதிகாரிகளும் கூட இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இது போக சசிகலா ஆதரவு கட்சிக்காரர்களும் கூட கட்சிப் பொறுப்புகளிலிருந்து தூக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் மட்டும் இதுவரை தீண்டப்படாமல் இருக்கின்றனர். இது பலரையும் குழப்பி வருகிறது.

ஆனால் இதற்குப் பின்னணியாக ஒன்றைச் சொல்கிறார்கள். ஆளுநரிடமிருந்து ஜெயலலிதாவுக்குப் போன ஒரு அறிவுறுத்தல்தான் இந்தத் தாமதத்திற்குக் காரணமாம். அதாவது அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவதைத் தவிருங்கள். அது ஆட்சிக்கும், உங்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். மேலும் ஆட்சி ஸ்திரமில்லாமல் இருக்கிறது என்ற பெரும் அவப் பெயரை ஏற்படுத்தி விடும் என்று ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார் என்கிறார்கள். இதனால்தான் சசிகலாவை நீக்கிய கையோடு அமைச்சர்களையும் தூக்குவதாக இருந்த முடிவை ஜெயலலிதா தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

இருப்பினும் நீக்கப்படப் போகும் அமைச்சர்களின் பட்டியல் தயாராக இருப்பதாக தெரிகிறது. அதில் 11 பேர் சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரால் பதவிக்கு வந்தவர்களாம். இவர்களில் பலரும் பெரும் பணம் கொடுத்து அமைச்சர் பதவியைப் பிடித்தவர்கள் என்கிறார்கள். மேலும் 4 அமைச்சர்களும் இப்பட்டியலில் உள்ளனர். இவர்கள் சசிகலா தரப்பைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களின் பணித்திறமை குறித்து திருப்தி இல்லாததால் இவர்களையும் மாற்றி விட முதல்வர் தீர்மானித்துள்ளாராம். 15 பேரையும் நீக்கி விட்டு முற்றிலும் திறமையான, யாருடைய கோஷ்டியையும் சேராத அமைச்சர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள். பொறுமையாக செயல்படுங்கள் என்று ஆளுநர் அறிவுரை கூறியுள்ள போதிலும் கூட, பொங்கலுக்குப் பிறகு மீண்டும் ஒரு தீபாவளியை தமிழகம் காணும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்.

வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை சேர்த்தது மலையாள அதிகாரிகளின் சதி!


 1960ம் ஆண்டு வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சேர்த்துள்ளதன் பின்னணியில் மலையாள அதிகாரிகளின் சதி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக நடந்து வருவது ஜல்லிக்கட்டு. அக்காலத்தில் தென் தமிழகத்தின் வீரக் கதைகளை விளைவிக்கும் வித்தைக் களமாக விளங்கியது ஜல்லிக்கட்டு. பெண் எடுக்க விரும்பும் ஆண் மகன் தங்களது வீட்டுக் காளைகளை அடக்கி வென்றால்தான் அக்காலத்து தமிழர்கள் பெண் கொடுப்பார்களாம். அந்த அளவுக்கு தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. அப்படிப்பட் ஜல்லிக்கட்டை முழுமையாக அழித்தொழிக்க டெல்லி வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் ஒரு பெரிய குரூப்பே தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள். அதன் ஒரு அங்கம்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது என்கிறார்கள். மேலும் இப்படி காளைகளை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை முடக்க முயல்வது மலையாள அதிகாரிகள் சிலர் செய்த சதி வேலை என்றும் பேச்சு அடிபடுகிறது.


இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் குழுவின் தலைவரான பேராசிரியர் அம்பலத்தரசு என்பவர் கூறுகையில், சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் போய் தற்போது காளைகளை சேர்த்துள்ளனர். அதேசமயம், கேரளாவில் ஆண்டுதோறும் யானைகளை வைத்து பல விளையாட்டுகளை நடத்துகின்றனர். யானைகளை பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்துகின்றனர், சித்திரவதை செய்கின்றனர். யானை ஓட்டம் என்ற பெயரில் ரேஸே நடத்துகின்றனர்.



இதுபோன்ற ரேஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது யானைகள் தாக்கி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மக்களைத் தாக்குவதும், கடைகளை தாக்கி சூறையாடுவதும் என யானைகளால் கேரளாவில் ஏகப்பட்ட பாதிப்புகள் இன்று வரை தொடர் கதையாக உள்ளது. ஆனால் இதுவரை கேரளாவில் நடந்து வரும் யானை ஓட்டம் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, தடுக்க முயலவில்லை, தடை செய்ய விரும்பவில்லை. காரணம் டெல்லியில் வலுவான பதவிகளில் உட்கார்ந்திருக்கும் மலையாள அதிகாரிகள்தான் என்றார்.



கேரள மக்களுக்கு யானை பாரம்பரியச் சின்னம் என்றால் தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டுதான் பாரம்பரிய அடையாளம். கேரளாவுக்கு ஒரு நியாயம், தமிழகத்திற்கு ஒரு நியாயம் என மத்திய அரசு நடந்து வருவதாகவும் அம்பலத்தரசு போன்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்திலும் கூட தமிழர்களை அவமதிக்கும் வகையில்தான் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் போன்றவர்கள் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.



காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் படு வேகமாக கொண்டு வந்த ஜெய்ராம் ரமேஷ், யானைகளை மட்டும் அதில் சேர்க்காமல் இருப்பதற்கு மலையாள லாபிதான் காரணம் என்கிறார்கள். உண்மையில் யானைதான் இந்தியாவின் பாரம்பரிய விலங்கு, அதைத்தான் நாம் உண்மையில் பாதுகாக்க வேண்டும். யானைகள் இந்தியா முழுவதும் பல்வேறு வகைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றன. பிச்சை எடுக்க வைக்கிறார்கள், போட்டி என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். பலரது உயிரிழப்புகளுக்கும் யானை காரணமாக அமைகிறது. எனவே யானையைத்தான் பாதுகாக்க வேண்டும் என்பது அம்பலத்தரசுவின் வாதமாகும்.



ஜல்லிக்கட்டைக் காக்கவும், காளைகளை வன விலங்குகள் சட்டத்திலிருந்து மீட்டு கொண்டு வரவும் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் அவசியம், தமிழர்கள் தங்களது கலாச்சார, பாரம்பரிய விளையாட்டை அழிக்கும் சதியைப் புரிந்து கொண்டு ஒன்றுபட்டு குரல் கொடுத்து போராட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.தற்போது மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருக்கிறார். எனவே நல்லது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில் துவங்கிய முதல் சுதந்திர போர்!

 புத்தக கண்காட்சி உள் அரங்கில், அகநி பதிப்பகத்தின், எட்டு பாகங்கள் கொண்ட இந்திய சரித்திரக் களஞ்சியம் நூல் நேற்று வெளியிடப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் ப.சிவனடி எழுதிய இந்நூலில், கி.பி. 1700 முதல் 1840 ஆண்டு வரையிலான தமிழக, இந்திய, உலக வரலாறு இடம் பெற்றுள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா, அகநி பதிப்பக அரங்கில் நடந்தது. வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட, ஓவியர் டிராட்ஸ்கி மருது பெற்றுக் கொண்டார்.  வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்களின் வரலாற்றை, ஆய்வு செய்து உண்மையான வரலாறு இதில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு வரலாறு மிக முக்கியம். ஏனெனில் வரலாறு தெரியாத எவராலும், வரலாறு படைக்க முடியாது. உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் பண்பாடு, கலாசாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் நாம் என்பதை, இந்நூல் வாசித்தால் உணர முடியும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.  தொகுப்பாசிரியர் வெண்ணிலா கூறியதாவது:இன்றைய இளைய தலைமுறைக்கு வலைதளங்கள் தெரிந்த அளவிற்கு, நம் வரலாறு தெரிவதில்லை. அவர்கள் அதை புரிந்து கொள்வதற்கே நாங்கள் கடுமையாக உழைத்து, இந்நூலை உருவாக்கி இருக்கிறோம். வரலாற்றின் பல்வேறு நிகழ்வுகளை நாம் படித்தால் தான், தற்போது அனுபவிக்கும் சுதந்திரம் எவ்வளவு ரணங்களுக்கும், ரத்தத்திற்கும் மத்தியில் பெற்றிருக்கிறோம் என்பது புரியும். குறிப்பாக, 1801ல் நடந்த மறவர் போர். இந்தியாவின் வமுதல் சுதந்திர போராட்டம் என, 1857ல் நடந்த மீரட் கிளர்ச்சியை இன்றைய வரலாறு சொல்கிறது. ஆனால், இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நாங்குநேரியில் நடந்த மறவர் போர். மீரட் போர் 60 கிலோ மீட்டருக்குள் நடந்தது. ஆனால், மறவர் போர் 200 கி.மீ., தொலைவு வரை நடந்தது. மருது சகோதரர்கள், ஊமைத்துரை, செவத்தையா, கோபால் நாயக்கர் உள்ளிட்ட தலைமையின் கீழ் இப்போர் நடந்தது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் திருக்கோவிலில் அதற்கான கூட்டம் நடந்தது. நம்மை ஜெயிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் திண்டாடினர். சரணடையவில்லை என்றால் காளையர்கோவிலை தகர்த்து விடுவோம் என ஆங்கிலேயர் எச்சரித்த போது தான், கோவிலுக்காக நம் மன்னர்களும், வீரர்களும் சரணடைந்தனர். பின் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திர போர் இப்படி முடிந்தது. இந்த நூலை சாட்சியாக வைத்தே ஐகோர்ட்டில் இந்தியாவின் முதல் சுதந்திர போர், மறவர் போர் என்று அறிவிக்க கோரி வழக்கு நடந்து வருகிறது. இதுபோன்ற வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு பதிப்பித்திருக்கிறோம். இவ்வாறு வெண்ணிலா கூறினார்.

ராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் விரட்டியடிப்பு!


ராஜபக்சேவின் தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது குழந்தைகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அங்கு மதிமுகவினரும், நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடேசன் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபக்சேவின் தங்கை நிரூபமா. இவரது கணவர் நடேசன். இவர் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போவது வழக்கம். பெரும்பாலும் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு அடிக்கடி வருவார்.


இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் நடேசன் சாமி கும்பிட ராமேஸ்வரம் வந்தார். அவரது வருகை குறித்த தகவல் பரவியதும் மதிமுகவினரும், நாம் தமிழர் அமைப்பினரும் அங்கு திரண்டனர். நடேசனை முற்றுகையிட்டு் போராட்டம் நடத்தினர்.கோவிலுக்கு வரக் கூடாது, தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர். அப்போது திடீரென சிலர் நடேசனை தாக்கி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் குறுக்கிட்டு நடேசனையும், அவரது குழந்தைகளையும் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் செனறனர்.

இதே நாள்...


  • உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில்பாதை லண்டனில் திறக்கப்பட்டது(1863)
  •  விக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது(2001)
  •  தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்தம் ரங்கம்பிள்ளை இறந்த தினம்(1761)
  •  முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது(1920)

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 30 மணி நேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி, உலக கின்னஸ் சாதனை நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாடசாமி.

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 30 மணி நேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாடசாமி, 38. தொடக்கப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை, கேரளாவிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கம்பம், ராயப்பட்டியில் உள்ள அரசு பள்ளியிலும், திருவனந்தபுரம் பல்கலையில், பி.எஸ்.சி., பட்டமும் பெற்றுள்ளார். தற்போது, கேரளா மாநிலம், இடுக்கிமாவட்டம், பீர்மேடு பகுதியில், கடந்த 1997ம் ஆண்டு முதல், போஸ்டல் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர், சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும், உலக சமாதான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு, போர், யுத்தம் இல்லாத உலகம் உருவாக்குவதை நோக்கமாகவும், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை முக்கியமாக கொண்டும், செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள மாடசாமி, யுத்தமில்லாத உலகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்,தொடர்ந்து 30 மணிநேரம் 6 நிமிடம் பேசி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், கடந்த 2009ல், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், மைக்பேசியா என்பவர், 28 மணிநேரம் தொடர்ந்து பேசியதே, கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் முறியடித்துள்ளார். இடுக்கி அருகே, பீர்மேடு பகுதியில், ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இச்சாதனையை மாடசாமி நிகழ்த்தியுள்ளார். கோவையில் மாடசாமி கூறியது: ஒவ்வொரு மணி நேரத்துக்கு, ஒரு தலைப்பு வீதம், கூடங்குளம் அணுமின்நிலையம், உலக மகாயுத்தம், அசாம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் லைசென்ஸ் இல்லாமல் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோமாலியா நாட்டில் நிலவும் உணவுபஞ்சம், உலகவெப்பமயமாதல் உள்ளிட்ட 30 தலைப்புகளில் பேசினேன். ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடம் இடைவேளை தரப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உலகவெப்பமயமாதல் குறித்து, பள்ளி குழந்தைகளிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், என்றார்.

நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன? சுப்ரீம் கோர்ட்!

நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன? இது தொடர்பான சுருக்கமான குறிப்பை கோர்ட்டால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டும் என, பரவலாக கோரிக்கை எழுந்ததை அடுத்து, கடந்த 2002ம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், விசேஷ குழு ஒன்றை நியமித்தார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், நதிகள் இணைப்பை இரண்டு பிரிவாக மேற்கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. மேலும், நாட்டில் உள்ள நதிகளை இணைத்தால், 2050ம் ஆண்டிற்குள், 16 கோடி ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பெரிய நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், நதிகள் இணைப்பு தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாட்டில் உள்ள நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ளது என்ன? இது தொடர்பான, சுருக்கமான குறிப்பை, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவி வரும் வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார், ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு முன், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பெரும் பொருட் செலவாகும். மத்திய அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படும். எனவே, செலவுகள் குறித்த அறிக்கை விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பெரிய அளவில் செலவாகும் என, தெரிந்தால், கோர்ட் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, தெரிவித்தது

ஒரு போதும் நிதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியதில்லை நரேந்திர மோடி!


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. நான் ஒரு போதும் நிதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியதில்லை' என, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசிய மோடி கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை. தங்களுக்கு மத்திய அரசு மற்றும் பிரதமரின் ஆசி உள்ளதாக, ராஜஸ்தான் முதல்வர் கூறினார். ஆனால், அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எதையும் பெறவில்லை. எங்களின் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே, நாங்கள் எங்கள் மாநிலமான குஜராத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளோம்.


பிரதமருக்கு ஒரு முதல்வர் கடிதம் எழுதினால், வழக்கமாக நிதி வேண்டும் என, கேட்டுத்தான் கடிதம் எழுதுவார். நானும் கடந்தாண்டு ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், அந்தக் கடிதத்தில் நிதி கேட்கவில்லை. அதற்கு மாறாக குஜராத் மாநிலத்திற்கு ஒரு செயற்கைக் கோளை ஒதுக்க வேண்டும் என, கோரியிருந்தேன். அந்தக் கோரிக்கையால், மத்திய அரசு குழப்பம் அடைந்துள்ளது. நான் ஒரு போதும் நிதி கேட்டு பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியதில்லை. கடந்த 2008ம் ஆண்டில், உலகளவில் பொருளாதார மந்த நிலை நிலவிய போது, வட்டமேஜை மாநாடு ஒன்றைக் கூட்டும்படி, பிரதமர் மன்மோகன்சிங்கை நான் கேட்டுக் கொண்டேன். பிரதமரும் அதை ஆமோதித்தார். ஆனாலும், எந்தக் கூட்டமும் கூட்டப்படவில்லை. அதனால், நாங்களே உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டினோம். அதில், 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 450 மில்லியன் டாலர் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டோம். இவ்வாறு நரேந்திர மோடி

ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம்...


நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உலகில் 3 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தை யாக உள்ளது என்றும், இது இந்திய தேசத்திற்கு அவமானமாக இருக்கிறது என்றும் பிரதமர்

 பிரதமர் கவலையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து குறைபாடு நீக்கிட அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. பல்முக விழிப்புணர்வு திட்டங்கள் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறது. இந்த நிலை முற்றிலும் சீர்செய்யப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது என்பது நமக்கு ஏற்பட்டுள்ள தேசிய அவமானமாக இருக்கிறது. மாநில அரசுகளும் இது தொடர்பான திட்டத்திற்கு துணையாக நின்று செயலாற்ற வேண்டும்.

ஊட்டச்சத்து குறைவு நாட்டில் படு வேகமாக வளர்ந்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். நாட்டின் உற்பத்தி அளவு அதிகரித்து வந்தபோதிலும் இந்த நிலையை இன்னும் குறைக்க முடியாத நிலையில் இருக்கிறோம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் எடை குறைவாக இருக்கின்றன. குடிநீர் மற்றும் சுகாதாரம் பேணிக்காத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் சுகாதாரம் வளர்க்கும் இன்னும் செயலாற்ற வேண்டும். குழந்தைகள் ஒருங்கிணப்பு திட்டத்தை மட்டுமே நம்பி அரசு சமாளிக்க முடியாது. இவ்வாறு அவர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...