|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 May, 2012

இதே நாள்...


  • உலக தீயணைப்பு படையினர் தினம்
  • சீனா இளைஞர் தினம்
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)
  • கனடா கடற்படை உருவாக்கப்பட்டது(1910)
  • அமெரிக்காவில் பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது(1904)

புராணம் கூறும் அக்னி நட்சத்திரம்!



இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சூரியன் மேஷராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் உச்சபலத்தைப் பெறுகிறார். அதனால், சூரியனின் கிரணங்கள் மிகுந்த ஆற்றலோடு பூமியை வந்தடைகின்றன. இதை அக்னி நட்சத்திர காலம் என்று பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. கிராமப்புறங்களில் "முன்னேழு பின்னேழு நாட்களான சித்திரையின் கடைசி ஏழு நாட்களும், வைகாசியின் முதல் ஏழுநாட்களுமாக, 14 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்று சொல்வர். மே 4 காலை 6.59 மணிக்கு துவங்கும் அக்னி நட்சத்திரம், 28 இரவு1.50க்கு முடிகிறது. இக்காலகட்டத்தில் அம்மை, வேனல்கட்டி போன்ற உஷ்ண வியாதிகள், தோல்நோய்கள் தலைகாட்டும் அபாயம் உண்டு. நீர்மோர், இளநீர், பானகம், நுங்கு, வெள்ளரி ஆகிய குளிர்ச்சி தரும் உணவு வகைகளையும், பழங்களையும் சாப்பிடுவது நன்மை தரும்.  புராணக்கதை: முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய்தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம் அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந்தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது. 

நதிநீர் இணைப்பு திட்டம் மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை


நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில், மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தை நிறைவேற்ற, எந்த மாநில அரசுகளுக்கும் அக்கறையோ, ஆர்வமோ இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நேற்று லோக்சபாவில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் கூறியதாவது:இந்தியா முழுவதும் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த திட்டத்திற்கு, மாநில அரசுகளிடம் போதிய ஆதரவு இல்லை. நதிநீர் இணைப்பில் போதிய ஆதரவோ, அக்கறையோ மாநில அரசுகளிடம் இல்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற பெரும்பாலான அரசுகள் தயாராக இல்லை.நதிநீர் சிக்கல்களுக்கு மத்திய அரசால் முடிந்தது எல்லாம், நடுவர் மன்றம் அமைப்பை ஏற்படுத்துவது மட்டுமே. நடுவர் மன்றத்தின் மூலம் சிக்கல்களை பேசி தீர்த்து வைக்க மட்டுமே முடியும். நதிநீர் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், இப்போதைக்கு, 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவற்றில், ஐந்து நதிநீர் இணைப்புத் திட்டங்கள், வடமாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், 111 லட்சம் நீர்நிலைகள் இருக்கின்றன. இவற்றைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு பன்சால் கூறினார்.நெல்லை லோக்சபா எம்.பி.,யான ராமசுப்பு, "கூடுதல் தண்ணீர் உள்ள இடங்களில் இருந்து, தண்ணீர் தேவையுள்ள பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கு, தனியாக நதி ஒன்றை ஏற்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?' என்று எழுப்பியிருந்த கேள்விக்கு, இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

சி.பி.ஐ., துறையிலும் 2 டஜன் கறுப்பு ஆடுகள் !


 நாட்டில் ஊழல் மற்றும் முறைகேடு என சிக்குபவர்களை குறி வைத்து பிடித்து முறையான விசாரணை நடத்தி, சிறைக்குள் தள்ளிவரும் நம்பத்தகுந்த , இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையை மேலோங்க செய்து வரும் சி.பி.ஐ., துறையிலும் 2 டஜன் கறுப்பு ஆடுகள் இருப்பதாக லிஸ்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உள்கட்டமைப்பு விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இது குறித்து சி.பி.ஐ.,உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்; இந்த துறை மிக நேர்மையானது. இங்கு ஒழுக்ககேட்டுக்கு இடமில்லை. இருப்பினும் சில டி.எஸ்.பி., பொறுப்புக்களில் உள்ளவர்கள் நேர்மையின்மை, நம்பிக்கை துரோகம் போன்ற மனப்பாங்கில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்படி சுமார் 25 பேர் முக்கிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு பவர் இல்லாத இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிகக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மீதான இறுதிகட்டத்திற்கு நீண்ட காலம் பிடிக்கும். விரைவில் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோர்ட் மூலம் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் பணியில் இருந்து நீக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார்.

புலிகளின் கொடிகளைக் காட்டி தேச விரோத சக்திகள் என்று காட்டுவதற்காக அரசு?

இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நடந்த மே தினப் பேரணியில் சிலர் விடுதலைப் புலிகளின் கொடிகளைக் காட்டியதாக கூறப்படும் சம்பவம், அரசே நடத்திய நாடகம் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.தங்களை தேச விரோத சக்திகள் என்று காட்டுவதற்காகவே இதுபோன்ற செயல்களை அரசு செய்கிறது என்றும் அந்தக் கட்சி கூறியிருக்கிறது.""அந்தப் பேரணியில் யாரும் விடுதலைப் புலிகளின் கொடியைக் காட்டவில்லை. அப்படியொரு சம்பவத்தை யாரும் பார்க்கவும் இல்லை'' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அட்டநாயக தெரிவித்தார்.இந்தச் சம்பவமே அரசுக்குச் சொந்தமான ஐ.டி.என். தொலைக்காட்சி திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.ஐடிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள்தான் புலிகளின் கொடியைக் காட்டியதாகக் கூறும் ஐக்கிய தேசியக் கட்சி எம்பியான ஹரீண் பெர்னாண்டோ, கொடியைக் காட்டியவர்கள் ஐடிஎன் தொலைக்காட்சிக்குச் சொந்தமான வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்தார்.


இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் ரோஸ்முண்ட் செனரத்னவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கடிதம் எழுதியுள்ளார். அதில், தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் கொடியை தொலைக்காட்சியில் காட்டுவது சட்டத்தை மீறும் செயல் என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பேரணிக்கு ஏற்பாடு செய்த ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் என்றும், தேச விரோத சக்திகள் என்றும் முத்திரை குத்துவதற்காக இந்தச் சதிச் செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்று தமிழர் கட்சியான ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டினார்.
""இந்தப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இலங்கை தேசியக் கொடியைப் பிடித்திருந்ததன் முக்கியத்துவத்தை சிங்களர்கள் உணராதது கவலையளிக்கிறது'' என்று "தினமணி' செய்தியாளரிடம் தெரிவித்தார்.

700 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!


நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் எட்வர்ட் மன்ஞ். இவர் 'தி ஸ்கிரீம்' (பயத்தில் அலறல்) என்ற தலைப்பில் 4 ஓவியங்கள் வரைந்து இருந்தார். அந்த ஓவியங்கள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 'கோத்பி' நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது. அதில், ஒரு ஓவியம் ரூ.700 கோடிக்கு ஏலம் போனது.  இதன் மூலம் ஓவிய உலகில் பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயின் ஓவியர் பேப்லோ பிக்காகோ வரைந்த ஓவியம் ரூ.5.35 கோடிக்கு ஏலம் போனது.அதுவே முந்தைய சாதனையாக கருதப்பட்டது. அதை மன்ஞ் வரைந்த இந்த ஓவியம் முறியடித்துள்ளது. சாதனை ஓவியத்தை வரைந்த ஓவியர் எட்வர்ட் மன்ஞ் தற்போது உயிருடன் இல்லை.கடந்த 1944-ம் ஆண்டு ஜனவரி மாதம் மரணம் அடைந்துவிட்டார். தற்போது, இவர் வரைந்த ஓவியத்தை நார்வே தொழில் அதிபர் பீட்டர் ஆல்சென் என்பவர் ஏலத்துக்கு கொண்டு வந்தார். இவர் ஓவியர் எட்வர்ட் மன்ஞ்சின் நண்பர் தாமசின் மகன் ஆவார்.  
 

இது தான் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பு.307.


ராஜ்யசபா எம்பிக்கள், மாநில சட்டசபைகளின் எம்எல்ஏக்கள் வாக்களித்துத் தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.இதில் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையும் அந்த மாநிலத்தின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வைத்தே ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.உதாரணத்துக்கு 2011 சென்ஸஸ்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.2 கோடி. தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 234. இதனால் முதலில் 7.2 கோடியை 234 ஆல் வகுக்க வேண்டும். அப்படி வகுத்தால் வரும் மதிப்பு 307777. இதை 1000 ஆல் வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் மதிப்பு 307. இது தான் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பு.அதே போல எம்பிக்களின் ஓட்டுக்கும் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் அனைத்து எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பை கூட்டி, அதை மொத்தமுள்ள 767 எம்பிக்களின் (லோக்சபா 534 + ராஜ்யசபா 233= 767) எண்ணிக்கையால் வகுத்தால் வரும் மதிப்பு தான் ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பாகும்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் உள்ள மொத்த ஓட்டுக்களின் மதிப்பு 10,98,882 ஆகும். இதில் ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் குறைந்தபட்சம் அதில் பாதி ஓட்டுக்களை, அதாவது 5,49,442 வாக்குகளைப் பெற வேண்டும்.இதில் காங்கிரஸ் கட்சியிடம் 3,30,945 வாக்குகள் உள்ளன. இது மொத்த வாக்குகளில் 30 சதவீதமாகும்.காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை எல்லாம் ஒன்றாக சேர்த்தால், 4,46,345 வாக்குகள் உள்ளன. இது மொத்த வாக்குகளில் 41 சதவீதமாகும். இதனால் வெற்றிக்குத் தேவையான 50 சதவீத வாக்குகள் காங்கிரஸ் கூட்டணியிடம் இல்லை.இங்கு தான் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற கட்சிகளின் பங்கு முக்கியமாகிறது.இந்தக் கட்சிகளின் ஆதரவும் கிட்டத்தட்ட காங்கிரசுக்கு கிடைத்துவிட்ட நிலையில், அந்தக் கட்சியிடம் இப்போது 5,80,326 வாக்குகள் உள்ளன. அதாவது மொத்த வாக்குகளில் இது 53 சதவீதமாகும்.தனது ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெற வைக்க 50 சதவீத வாக்குகளே தேவை என்ற நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் இன்னும் சிறிய கட்சிகளையும் வளைத்துவிட்டால் எளிதான வெற்றியைப் பெற முடியும்.இவர்களுடன் இடதுசாரிகளின் ஆதரவும் சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் கிடைத்துவிட்டால் காங்கிரசுக்கு பிரச்சனையே இல்லை.

ஆனால், பாஜகவின் நிலையோ படுமோசம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் மட்டுமல்லாமல் முலாயம் சிங், மாயாவதி, இடதுசாரிகள் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் அனைவருமே சேர்ந்து ஆதரவு தந்தால் மட்டுமே 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும்.ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பெரும்பான்மையினர் ஆதரிக்கும் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று கூறி பாஜக கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இவரும் காங்கிரஸ் பக்கம் வர வாய்ப்பு அதிகம்.இப்படிப்பட்ட சூழலில் கூட்டணியில் இருக்கும் அகாலிதளம் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமே நம்பி பாஜக தனது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இதனால் அந்தக் கட்சி 'சாஸ்திரத்துக்காகவே' போட்டியிடதாக இருக்குமே அல்லாமல் வெற்றி சாத்தியமில்லை.

நாம் இந்தியனா? தமிழனா? கூடங்குளத்திற்கு ஜெ. அனுமதி அளித்ததால் இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாம் இந்தியா!


கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்ததால், அதற்கு பிரதியுபகாரமாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்திய அரசு வாக்களிக்க முடிவு செய்ததாக இலங்கையின் திவயின என்ற நாளிதழ் ஒரு செய்தியைப் போட்டுள்ளது.இந்த நிமிடம் வரை தங்களுக்கு எதிரான ஒரு நீர்த்துப் போன தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது குறித்து பொங்கிப் பொறுமிக் கொண்டுள்ளனர் இலங்கையர்கள். இந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்று அவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில், திவயின என்ற நாளிதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், ஜெயலலிதாதான் இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்படக் காரணம் என்பது போல சொல்லியுள்ளனர்.

இதுகுறித்து அந்த செய்தியில் கூறியிருப்பதாவது...கூடங்குளம் அணுமின் நிலையத்தை சமூகமாக முறையில் இயங்கச் செய்ய முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்ததே, இந்தியாவின் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம்.அணு உலை உருவாக்கத்திற்கு ஆதரவளித்தமையினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அரசாங்கம் வாக்களிக்க முடிவுசெய்தது.இதை பிபிசியின் இந்தியப் பிரிவு செய்தியாளர் நரேன் பூஷன் உறுதி செய்துள்ளார்.இலங்கைக்கு எதிராக வாக்களித்தால்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தமிழக அரசு ஆதரவு தரும் என்று மத்திய அரசிடம், முதல்வர் ஜெயலலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்தே மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விளையாட்டில் சொதப்புவது எப்படி?

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்திப்பது குறித்து ஆராய உள்ளதாக, அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு சொந்த மண்ணான சென்னை மைதானத்தில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்தது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று, கோப்பையும் கைப்பற்றியது.ஆனால் ஐபிஎல் 5 தொடரில் சென்னையில் ஆடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துடன் உள்ளனர். சென்னையில் தோல்வி அடைவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பல காரணங்களை கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய உள்ளதாக, அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருவது இதுவே முதல் முறை. இதற்கான காரணங்களை ஆராய உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடர்களில் எங்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சொந்த மண்ணில் தோல்வி பெற்று வருவதால், பல சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறோம்.கடந்த ஐபிஎல் தொடர்களில் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த ஆண்டு தோல்விகளை பெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்களின் ஆட்டத்தில் தான் குறைபாடு உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது.இனி வரும் போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது. அணியின் பேட்டிங்கை இன்னும் பலப்படுத்த முயன்றாலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்றார்.

872 போர் விமானம்,482 விமானங்கள் நொறுங்கிப் போய், 171 விமானிகள் 39 பொதுமக்களும்?

கடந்த 1980ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 872 மிக் போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இதில் விபத்துக்களில் மட்டும் 482 விமானங்கள் நொறுங்கிப் போய் விட்டன. இந்த விபத்துக்களில் 171 விமானிகள் உயிரிழந்துள்ளனர். 39 பொதுமக்களும் இறந்துள்ளனர்.இந்தத் தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.

மிக் போர் விமானங்கள் நொறுங்கியதை விட 171 விமானிகள் உயிரிழந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய இழப்பாகும். காரணம், ஒவ்வொரு விமானியையும் உருவாக்க பல லட்சம் பணத்தை நமது அரசு செலவிடுகிறது. இப்படி பெரும் பொருட் செலவில் மிகத் திறமை வாய்ந்த விமானிகளாக உருவாகும் வீரர்கள், உயிரிழக்கும்போது நாட்டுக்குத்தான் மிகப் பெரிய நஷ்டமாக அது அமைகிறது. இந்திய விமானிகள் மிகத் திறமையானவர்கள் என்பதால் அந்தத் திறமையும் கூட இழக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மிக் போர் விமானங்கள்தான் இந்திய விமானப்படையில் உள்ள மிகப் பழமையான போர் வி்மானங்களாகும். பறக்கும் சவப்பெட்டி என்று கூட இதற்குச் செல்லப் பெயர் உண்டு. அந்த அளவுக்கு அதிக அளவில் விபத்துக்குள்ளாகும் போர் விமானம் இது. மனிதத் தவறுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் என பல காரணங்களால் விபத்துக்களில் சிக்குகின்றன மிக் விமானங்கள்.கடந்த 2003ம் ஆண்டு இந்த போர் விமானத்துக்கு எதிராக, விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒரு விமானியின் மனைவி எதிர்ப்புக் குரல் கொடுத்தார். பலரது உயிர்களைப் பழிவாங்கும் இந்த போர்விமானங்களை நமது விமானப்படையிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று அவர் ஆவேசமாக கூறினார். பின்னர் இந்த எதிர்ப்புக் குரலை வைத்துத்தான் ஆமிர்கான் 2006ம் ஆண்டு ரங் தே பசந்தி படத்தை எடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் மிக் விமானங்கள் நம்மில் 2 தலைமுறைக்கு முன்பிருந்தே இந்தியாவுடன் இணக்கமாக இருந்து வரும் ஒன்றாகும். 1966ம் ஆண்டுதான் முதல் முறையாக மிக் போர் விமானங்களை இந்தியா வாங்கியது. முதலில் வாங்கப்பட்டது மிக் 21 போர்விமானமாகும். அதைத் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் மிக் 25, மிக் 27, மிக் 29 என வரிசையாக இந்திய விமானப்படையை நிரப்ப ஆரம்பித்தன மிக் வரிசை விமானங்கள்.மிக் விமானங்களை கிட்டத்தட்ட 50 நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியாவில்தான் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது என்பது வியப்புக்குரிய ஒன்றாகும். இதுதான் மிக் ரக விமானங்களுக்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்த முக்கியக் காரணமாகியுள்ளது.2014ம் ஆண்டு முதல் மிக் விமானங்களை படிப்படியாக குறைக்கப் போகிறது இந்தியா. இந்த விமானங்களுக்குப் பதில் பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவன தயாரிப்பான ரபேல் போர்விமானம் வரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 123 டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது. இதற்காக வரலாறு காணாத வகையில், 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது.

16 வயதுக்குக் குறைவான பெண்களின் படத்தை இனிமேல் பிரசுரிப்பதில்லை?


16 வயதுக்குட்பட்ட மாடல் அழகிகளை புகைப்படம் எடுக்க மாட்டோம், அந்தப் படங்களை பயன்படுத்த மாட்டோம் என்று வோக் பத்திரிக்கையின் 19 பதிப்பு ஆசிரியர்களும் உறுதியளித்துள்ளனர். மேலும் ஆரோக்கியமான உடல் நிலையுடன் கூடிய மாடல் அழகிகளை மட்டுமே புகைப்படத்திற்குப் பயன்படுத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பெறுவதை பலரும் பெருமையோடு சொல்லிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட வோக் பத்திரிக்கை 2010ம் ஆண்டு பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்த இதழில் 10 வயது சிறுமியின் படத்தை போட்டிருந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பார்க்கவே பரிதாபமான உடலமைப்புடன் கூடிய அந்த சிறுமியின் படம் பெரும் கண்டனங்களையும் வாரிக் கொண்டு வந்தது.இதையடுத்து தற்போது வயது குறைவான, மெலிந்த உடல் அமைப்புடன் கூடிய மாடல்களை புகைப்படத்திற்குப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை வோக் பத்திரிக்கையின் 19 நாடுகளின் ஆசிரியர்களும் ஒரு சேர முடிவு செய்துள்ளனர்.அமெரிக்கா பதிப்பு ஆசிரியர் அன்னா வின்டூர் தலைமையில் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளனர் இவர்கள். இதுகுறித்து வோக் பத்திரிக்கையின் அதிபர்களில் ஒருவரும், கான்டிநாஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவருமான ஜோனதன் நியூஹவுஸ் கூறுகையில்,

நல்ல ஆரோக்கியமே அழகு என்பதை வோக் நம்புகிறது. எனவேதான் 16 வயதுக்குக் குறைவான பெண்களின் படத்தை இனிமேல் பிரசுரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். மேலும் இனிமேல் ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்ட பெண் அழகிகளின் படங்களை மட்டுமே பயன்படுத்துவோம். உலகம் முழுவதும் உள்ள வோக் பதிப்புகளின் ஆசிரியர்கள் இந்த உறுதிமொழியை பின்பற்றுவர் என்றார்.ஆசிரியர்கள் எடுத்துள்ள இந்த உறுதிமொழியானது வரும் ஜூன் மாதப் பதிப்பில் இடம் பெறுமாம். 16 வயதுக்கு குறைவான மாடல்களை பயன்படுத்த மாட்டோம், ஒல்லிக்குச்சி நோஞ்சானாக காட்சியளிக்கும் மாடல் அழகிகளையும் பயன்படுத்த மாட்டோம் என்பது உள்பட 6 உறுதிமொழிகளை ஆசிரியர்கள் எடுத்துள்ளனராம்.

மோசமான சேவை - ஏர் இந்தியாவுக்கு 80 ஆயிரம் டாலர் அபராதம்

வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம் காட்டியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 80 ஆயிரம் டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க போக்குவரத்துத் துறை.வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம் காட்டியது, விருப்பக் கட்டணங்கள் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்காதது, பயணத்தில் ஏற்படும் தாமதம், பயண ரத்து விவரங்களை தங்கள் இணையதளத்தில் வெளியிடாதது போன்ற குற்றங்களுக்காக ஏர் இந்தியாவுக்கு அமெரிக்க போக்குவத்து துறை, ரூ. 42 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை (80 ஆயிரம் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்துள்ளது.நுகர்வோர் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிப்பதற்காகவே அமெரிக்க போகுவரத்துத் துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் கீழ் முதல் தண்டனை பெற்றுள்ள நிறுவனம் ஏர் இந்தியாதான்!அமெரிக்காவில் விமான சேவை செய்யும் நிறுவனங்கள், தங்களது அனைத்து விருப்ப சேவைகள், கட்டணங்கள், பயண விவரங்கள் உள்ளிட்ட நுகர்வோருக்கு தேவையான அத்தனை தகவல்களையும் தங்கள் இணையதளத்தின் முன்பக்கத்தில் வெளியிட வேண்டும்.இந்த விதிமுறைகளை  மீறியதால்தான், அந்நிறுவனத்துக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க போக்குவரத்து துறை கூறியுள்ளது.

நேட்டோ ஏவுகணைகளை தாக்கி தூள் தூளாக்குவோம்-ரஷ்யா !


கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நேட்டோ உடனடியாக நிறுத்தாவிட்டால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.போலந்து, செக், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, பல்கேரியா, சரயேவோ, லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ், துருக்கி, கிரீஸ் உள்ளிட்டவை கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள சில நாடுகளாகும். இதில் லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்டவை முன்னாள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த நாடுகளாகும்.சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் சில சேர்ந்து விட்டன. இதனால் ரஷ்யா ஏற்கனவே 'காண்டாகிக்' கிடக்கிறது. இந்த நிலையில் நேட்டோவில் இணைந்துள்ள முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை தனது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்துள்ள அமெரிக்கா, அந்த நாடுகளில் தனது தாக்குதல் ஏவுகணைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது ரஷ்யாவை மேலும் கடுப்பாக்கியுள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டே ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த ஏவுகணைத்திட்டம் தொடர்பாக அமெரிக்காவும், நேட்டோவும், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வர வேண்டும்.இல்லாவிட்டால் பதிலடி தருவோம் என்று அவர் எச்சரித்திருந்தார்.இந்த நிலையில் ரஷ்ய ராணுவ தலைமைத் தளபதி நிக்கோலாய் மகரோவ் அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிலைமை மோசமானால், நாங்களாகவே நேட்டோ ஏவுகணை தளங்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தும் நிலை உருவாகும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். இதை அமெரிக்காவும், நேட்டோவும், தவிர்க்கும் என்று நம்புகிறோம்.கிழக்கு ஐரோப்பாவில் தனது ஏவுகணைகளை நிறுத்தி வருவதை அமெரிக்கா உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். அதற்கு ரஷ்யா பொறுப்பாக முடியாது என்றார் அவர்.

ஆனால் ஈரானிடமிருந்து வரும் ஏவுகணைத் தாக்குதல் அபாயத்திலிருந்து கிழக்கு ஐரோப்பாவைக் காக்கவே ஏவுகணைகளை நிறுத்துவதாக அமெரிக்கா கூறி வருகிறது. இதே ஒரேயடியாக ரஷ்யா நிராகரித்து விட்டது. அமெரிக்கா தொடர்ந்து பிடிவாதமாக இதை செயல்படுத்தி வருவது ரஷ்யாவின் தாக்குதல் பலத்தை கேலி செய்வது போலாகும் என்று ரஷ்யா கோபத்துடன் கூறியுள்ளது.தனது முதல் கட்ட ஏவுகணைப் பாதுகாப்பு வளையத் திட்டத்தின் கீழ் துருக்கியில் அதி நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர்க் கப்பல்களை அமெரிக்கா கொண்டு வந்து நிறுத்தியது. இதையடுத்து ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளிலும் அது இதை கொண்டு வந்தது. அடுத்து முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்குள்ளும் நுழையவுள்ளது.இதற்குப் பதிலடியாக போலந்து நாட்டுடனான தனது எல்லைப் பகுதியான கலினிகிராட் என்ற இடத்தில் ரஷ்யா தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவுக்கு நேரடியாக அது எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்கம் ஏற்றுமதி செய்வதில் ரூ464 கோடி மோசடி!


இந்தியாவிலிருந்து தங்கம் ஏற்றுமதி செய்வதில் ரூ464 கோடி மோசடி செய்த வழக்கில் அரசுக்கு சொந்தமான எம்.எஸ்.டி.சி எனப்படும் உலோகம் மற்ரும் கழிவு உலோக வர்த்தக நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மலாய் சென்குப்தா உட்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.மோசடி எப்படி?தங்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதற்குரிய பணத்தை நாட்டுக்குப் பெற்றுத் தருவதுதான் எம்.எஸ்.டி.சியின் பணி. கையாடல் செய்தால் கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும் என்பது எல்லாத் துறைகளிலும் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தெரிந்த கலை.இந்த மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள் மூவர். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் எம்எஸ்டிசி முன்னாள் தலைவர் மலாய் சென்குப்தா. கொல்கத்தாவைச் சேர்ந்த தலைமைப் பொது மேலாளர் தபஸ் பாசு மற்றும் தில்லியைச் சேர்ந்த காப்பீட்டு ஆலோசகர் எஸ்.கே.சின்கா ஆகியோரும் சிக்கியுள்ளனர்.தாங்கள் பணம் பார்ப்பதற்காக உஸ்மா ஜூவல்லரி, ஸ்பேஸ் மெர்கன்டைல், மாலி மருந்து தயாரிப்பு நிறுவனம், ஜோஷி தங்கம், வெள்ளி, ஜெம்ஸ் ஜூவல்லரி, பாண்ட் ஜெம்ஸ், இந்தோ போனிட்டோ பன்னாட்டு நிறுவனம் போன்ற நிறுவனங்களை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.இந்த நிறுவனங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்களது பெயரிலான நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று கூறி போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.

அந்த நிறுவனங்களும் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவற்றை ஏற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்களது பெயரிலான நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.பின்னர் அந்த தங்கத்தை அந்த நாட்டின் வெளிச்சந்தையில் விற்று ஹவாலா மூலம் அந்த பணத்தை திரும்பக் கொண்டு வந்துள்ளனர்.ஒரு நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்துக்குரிய பணம் 170 நாட்களில் நாட்டுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் போலி ஆவணங்கள் மூலம் போலி நிறுவனத்தின் பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்துக்கான பணம் வரவே இல்லை.இப்படி போலி ஆவணங்கள் எனத் தெரிந்தும் அதை ஏற்று வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததில் அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி.க்கு ரூ464 கோடி இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் என்பது சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...