|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 August, 2011

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல்!

திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்துபவர்கள் “ஆல் போல் தத்து அருகது போல வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல்” என வாழ்த்துவர். அந்தளவிற்கு தன் இனத்தோடு பலஆண்டுகள் இணைந்து கணுக்கணுவாய் தோன்றி வளரக் கூடியது மூங்கில்

மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி வளர்ந்து வளர்ந்து பல தலைமுறை தாவரங்களும் புதராக ஒன்றாக இருக்கும். இது நூறு அடி உயரம் வளரக்கூடிய பல பருவப் புதர் மரம். இது வெப்பமண்டல ஆசியாவினைச் சார்ந்தது. அதிக பயனுள்ள தாவரமான மூங்கில் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள்,வேர், கன்றுகள் போன்ற பல பகுதிகள் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. துவர்ப்பி, உரமாக்கி, காமம் பெருக்கி. கபம், பித்தம், குட்டம், ரத்த தோஷம், விரணம், வீக்கம், வயிறு குளுமை செய்யும்.

எலும்புகளை வலுவாக்கும்: இலைச்சாறு பால் உணர்வு ஊக்குவியாக கருதப்படுகிறது. இளங்கன்றுகள் மயக்கம், பித்தம் போக்கி ஜீரணத்தினைத் தூண்டும். கிருமிகளினால் தாக்கப்பட்டு சீழ்பிடித்த காயங்களுக்கு பற்றாக பூசப்படுகிறது. இதன் சாறு சிலிக்காவினை அதிக அளவில் கொண்டுள்ளது. குருத்து எலும்புகளுக்கு வலுவு தரும். வலுவு இழந்த எலும்புகளை குணப்படுத்தும்.

வயிற்றுப்புழுக்களை கொல்லும்: வேர் தசையிருக்கி, குளிர்ச்சி தரும். மூட்டு வலி மற்றும் பொதுவான பலவீனத்தைத் தசை சரிவு வலியினை தடுக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலி போக்கும். வயிற்றில் உள்ள புழுக்களைப் போக்கி வயிற்றினை வலுப்படுத்தும்.

மூங்கில் நெல்: மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.

மருத்துவ உதவிப்பொருட்கள்:   மூங்கில்கள் நோய் எதிர்ப்புத் தன்மை கொண் டவை என்பதால், அதன் மூலம் மருத்துவ மற்றும் முதல் உதவிப் பொருட்களை தயாரிக்கலாம் என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூங்கில் நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும், "நாப்கின்'கள், சந்தையில் விற்கப்படும் மற்ற வகை, "நாப்கின்'களை விட மலிவானதாக இருக்கும். மூங்கில் நார்கள், அதன் கூழ்களில் இருந்து பெறப் படுகின்றன. மரத்தாது போன்ற தன்மை கொண்ட இவை, தண்ணீரை உறிஞ் சும் தன்மை கொண்டவை என்பதோடு மென்மையானது, நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது.அதனால், இதன் மூலம் மருத்துவப் பொருட்கள் தயாரிக்கலாம்.

வணிகரீதியாக பயன்படும் மூங்கில்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது. இந்தியக் காடுகளின் பரப்பளவில் மூங்கில் 12.8 சதவீதம் காகித ஆலைகள், ரேயான் தொழிற்சாலைகளிலும் மூலப்பொருளாக, பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. உலகச் சந்தையில் மூங்கில் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலராக உள்ளது. 2015-ம் ஆண்டில் 20 மில்லியன் டாலராக உயரும் என்கிறார்கள். இந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது. எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

தேக பலம் தரும் ஓரிதழ் தாமரை!

மூலிகைகள் நிறைந்த பூமி பாரதம். இங்கு அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகளை கண்டறிந்து மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். மனிதர்களைத் தாக்கும் நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் சித்தர்கள் கூறியுள்ளனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.

இன்றோ பலரும் தம் உடல் நலம் பேணாமல் இரவு பகலாக பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின் பலனை அனுபவிக்க முடியும். ஓரிதழ் தாமரை என்னும் மூலிகை மிகவும் பயனுள்ள மருந்தாகும்.

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது. இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.

உடல் வலுப்பெற: ஓரிதழ் தாமரை செடியை இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரை நல்ல மருந்தாகும். சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரையுடன் கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. ஓரிதழ் தாமரை முழு மூலிகையையும் காய வைத்து பொடி செய்து தொடர்ந்து உண்ண தொப்பை குறையும். உடல் எடை குறையும், விந்தணுக்கள் கூடும், விந்து கட்டும், மேக சூடு குறையும்,தேக பலம் உண்டாக்கும்.

ஆண்களை காக்கும் காயகல்பம்:  இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.

ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் ஓரிதழ் தாமரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

இந்தியாவில் விரைவில் ப்ளாஸ்டிக் நோட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது!

இந்தியாவில் விரைவில் ப்ளாஸ்டிக் நோட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் நமோ நாராயணன் மீனா தெரிவித்துள்ளார்.தற்போது இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் சிறப்பு காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகின்றன.

ஆனால் இவை அதிக நாள் புழக்கத்தில் இருப்பதில்லை. சீக்கிரம் அழியும் தன்மை கொண்டதாக உள்ளன.இதற்காக தற்போதைய காகிதத்துக்கு பதிலாக பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. இந்த பாலிமர் (ப்ளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகள் முதலில் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து நியூசிலாந்து, நியூசிரியா, ருமேனியா, பர்முடா, புருனே, வியட்நாம் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியாவிலும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகிறது.

முதல் கட்டமாக சோதனை ரீதியில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது. மொத்தம் 100 கோடி மதிப்புக்கு 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படும் என்றும் சோதனை ரீதியாக நாட்டின் 5 நகரங்களில் முதலில் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடுவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இத்தகைய நோட்டுகளை பெருமளவில் அனைத்து மதிப்புகளிலும் அச்சடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மதுரையில் விஜய் மக்கள் இயக்க மாநாடு ரசிகர்கள் மூலம் 'வேலாயுதம்' பாடல் வெளியீடு!

விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

விஜய் பங்கேற்கும் இந்த மாநாட்டிஸ் அவர் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து விஜய் கூறுகையில், "எனக்கு எல்லாமே எனது ரசிகர்கள்தான். எனவே இந்த பிரமாண்டமான படத்தின் பாடல் வெளியீட்டை அவர்கள் மத்தியில் நடத்துவதே சரியானது என்பதால் மதுரையில் ரசிகர்கள் மூலம் பாடலை வெளியிடுகிறேன்.

இதை சாதாரணமாக நடத்தாமல், விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடத்துகிறேன். அதற்காகத்தான் தமிழகத்தின் மத்தியில் உள்ள இந்த மதுரை மாநகரைத் தேர்வு செய்தேன்," என்றார்.

இதுகுறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகையில், "விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.

20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.

ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்," என்றார்.

வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!

வைரத்தால் ஆன ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மாபெரும் நட்சத்திரங்கள் தங்களது எரி சக்தி அனைத்தையும் இழந்து, சுருங்கும்போது பல்ஸார்கள் எனப்படும் ஒலியை வெளிப்படுத்தும் சிறிய நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறும். இந்த பல்ஸார்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும்.

சில நேரங்களில் கிரகங்களுடன் கூடிய சில பல்ஸார்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள பார்க்ஸ் ரேடியோ டெலஸ்கோப் விண்வெளி ஆய்வு மையத்தை் சேர்ந்த விஞ்ஞானிகள், புதிய பல்ஸார் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கு PSR J1719-1438 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 4,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த பல்ஸார் நட்சத்திரத்தைச் ஒரு கிரகமும் சுற்றி வருகிறது.இது போன்ற கிரகங்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியத்தால் ஆனவையாக வெறும் வாயு கிரகங்களாக இருக்கும்.

ஆனால், இந்த கிரகம் கார்பன், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அழுத்தமும், நிறையும் நினைக்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக உள்ளதால், அங்குள்ள கார்பன் இறுகி வைரம் அல்லது கிரிஸ்டல் போன்ற நிலையில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதனால் அந்த கிரகமே, இதுவரை நாம் கற்பனை செய்து பார்த்திராக வகையில் வைரம் அல்லது கிரிஸ்டல்களாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த கிரகம் அந்த பல்ஸாரை சுற்றி வருவதோடு, ஒரு நிமிடத்துக்கு நூற்றுக்கும் அதிகமான முறை தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் உள்ளது. இது 60,000 கி.மீ. விட்டம் (diameter) கொண்டுள்ளது.

பள்ளித் தேர்வு நடைமுறையில் மாற்றம்!


இதுவரை, முழு ஆண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே, தேர்ச்சிக்குரிய அளவுகோலாக கணக்கிடப்பட்டு வந்த நிலையில், இனி காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வில் பெறக்கூடிய மதிப்பெண்களும் கூட்டப்பட்டு, புதிய முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.
பள்ளித் தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றத்தை செய்து,முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இதில், முழு ஆண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தான், மாணவர்கள் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், காலம் காலமாக ஒரு சடங்காகவே நடந்து வருகின்றன. இதற்கு, பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
ஆனாலும், தேர்வுக்கு படிப்பதற்காக மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், மன அழுத்தமும் ஏற்படுகிறது. இதையெல்லாம் மனதில்கொண்டு, புதிய தேர்வு நடைமுறையை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அவர் கூறும்போது, "மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில், முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும். முழு கல்வி ஆண்டிற்குரிய புத்தகங்கள் மூன்றாக பிரித்து வழங்கப்படும். ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்" என்று அறிவித்தார்.
இதன்படி, இனி மாணவர்களின் தேர்ச்சி அளவுகோலில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளும் இடம்பெறுகின்றன. மூன்று பருவ தேர்வுகளிலும் பெறுகின்ற மதிப்பெண்களை கூட்டி, புதிய முறையில் கணக்கிடப்பட்டு, மதிப்பெண்கள் அறிவிக்கப்பட உள்ளன.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, "மாணவர்களின் மன அழுத்தத்திற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இந்த புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு பருவ தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இனி கணக்கிடப்படும். இது குறித்த விரிவான நடைமுறை விதிகள் விரைவில் வெளியிடப்படும். மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் ஒரு பாடத்திற்கான புத்தகம், மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ் 1 வகுப்பிலும், அதற்குரிய பாடங்களை நடத்துவது கிடையாது. ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்பிற்கான பாடங்களும், பிளஸ் 1ல் பிளஸ் 2 பாடங்களும் நடத்தப்படுகின்றன. புதிய தேர்வு திட்டத்தின்படி, இனி இதுபோன்று செயல்பட முடியாது. அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களை நடத்தியாக வேண்டிய கட்டாயம் அப்பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதே நாள்...


  • உருகுவே தனி நாடாக அறிவிக்கப்பட்டது(1828)
  •  பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது(1859)
  •  உலகின் முதலாவது ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1939)
  •  மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)
  •  நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் இறந்த தினம்(1879)

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்!

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக,'' பெரியார் பல்கலை துணைவேந்தர் முத்துச்செழியன் தெரிவித்தார். 

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக நடந்த "தேசிய ஆற்றல் சேமிப்பு, மரபுசாரா எரிசக்தி தொழில் நுட்பம்' குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலகில் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. எண்ணெய் வளங்கள் மூலம் கிடைக்கும் சக்தி, 125 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின், வரும் தலைமுறைகளுக்கு சக்திகளை உருவாக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவில் புதுப்பிக்க கூடிய ஆற்றல் வளங்கள், 1980 ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய ஆற்றல்கள் அனைத்தும், சூரியனின் வெப்ப சக்தியிலிருந்து தான் பெறப்படுகின்றன. 

இதில் சீனா, உலகில் முதலிடம் வகிக்கிறது. காற்றாலைகளில் இருந்து மின் உற்பத்தி செய்வதில், இந்தியா 5 ம் இடத்தையும், இந்தியாவில் தமிழகம் முதலிடத்தையும் பெற்றுள்ளது. காற்றாலைகள் தென் மாவட்டங்களில் அதிகளவில் செயல்படுகின்றன. ஒரு காற்றாலை அமைக்க ரூ. 4 கோடி முதல் 10 கோடி வரை செலவாகிறது. காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, அரசும் ஊக்கப்படுத்துகின்றன. மனித வாழ்க்கையில் புதுப்பிக்க தக்க ஆற்றல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கை சூழலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆற்றல்களை பெருக்க முன் வர வேண்டும், என்றார். 

உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம்!

உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது,' என மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தான கருத்தரங்கில் சென்னை மருத்துவ கல்லூரி டாக்டர் அமலோற்பவநாதன் தெரிவித்தார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்தியாவில் பீகார், ம.பி., உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களை விட தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெற்றுள்ளது. உடல் உறுப்புதானமும் எளிதாக நடக்கிறது. வளரும் நாடுகளில் தமிழகம் உடல் உறுப்புதானத்தில் முதலிடம் வகிக்கிறது. இரு ஆண்டுகளில் 205 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். நோயாளி மூளைச்சாவு அடைந்ததை உறுதிப்படுத்த 4 டாக்டர்கள் குழு தேவை. இக்குழு சட்டரீதியாக உறுதிப்படுத்திய பின்பே தானம் செய்ய நோயாளியின் உறவினர்கள் முன்வரலாம், என்றார். போக்குவரத்து உதவி கமிஷனர் மகுடபதி பேசுகையில், ""இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது நொடியில் விபத்து நடக்கிறது. பல்வேறு நினைவுகள், மனஉளைச்சலுடன் செல்லும்போதுதான் விபத்து நிகழ்கிறது. உறுப்புதானத்திற்கு போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வருவோம்,'' என்றார். 

: பயனற்றவர்களை எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம் அன்னா ஹசாரே!

பயனற்றவர்களை எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம்என அன்னா ஹசாரே பொது மக்களை கேட்டு கொண்டுள்ளார். வலுவான லோக்பாலை வலியுறுத்தி 12வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் கூடியுள்ள ஆதரவாளர்கள் மத்தியில் 2வது முறையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது எம்.பி.,க்களாக இருப்பவர்களில் 150 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களை போன்ற பயனற்றவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது. எம்.பி.,க்கள் மீது மக்கள் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதில்லை. எனவே நாடு முழுவதும் சென்று அவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டாம் என கேட்டு கொள்ள இருப்பதாக கூறினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...