|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 October, 2011

சஷ்டி விரத நாட்களில் எங்கு வழிபட என்ன கிடைக்கும்?


கந்தசஷ்டி விரதநாட்களில், முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை தரிசித்தால் செல்வவளம் பெருகும். சூரசம்ஹாரத் தலமான திருச்செந்தூரில் கந்தவேலைத் தரிசித்தால் எதையும் சாதிக்கும் தைரியம் கிடைக்கும். ஞானபண்டிதனான தண்டாயுதபாணியை பழநியில் வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த சுவாமிநாதனைச் சுவாமிமலையில் தரிசித்தால் கல்வி அபிவிருத்தி உண்டாகும். வள்ளிநாயகியை மணந்தருளிய திருத்தணியில் தணிகைநாதனை வணங்கிவந்தால் திருமணத்தடைகள் நீங்கும். திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் மனநிறைவுடன்  வாழ்வர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.. ஆறாவது படைவீடாகிய சோலைமலை முருகப்பெருமானைத் துதித்தால் தடைபட்டுவந்த செயல்கள் நிறைவேறும். சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் அறிமுகம்: திருப்பரங்குன்றம், ஆறுபடை வீடுகளில் முதலாவது படைவீடாகும். மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகப்பெருமான், இங்கு மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு நேரடியாக அபிஷேகம் கிடையாது. அவரது திருக்கரத்திலுள்ள வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது. முருகப்பெருமானுக்கு தெய்வானையுடன் இங்கு தான் திருமணம் நடந்தது. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் வரும் படைவீடு இதுவே! காயத்ரி, சாவித்திரி, சித்த வித்தியாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோர் முருகன் சன்னதியில் காட்சி அளிக்கின்றனர். அவரது திருவடியின் கீழ், அண்டராபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். மகாபாரதம் எழுதிய வியாசரும் தனிச் சன்னதியில் காட்சிதருகிறார்.  இந்த தலத்துக்கு திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசர தலம், குமாரபரி விட்டணு துருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம் என்னும் புராணப் பெயர்கள் உள்ளன.

ஆறுபடைவீடுகளில் முருகனின் நிலை: ஆறு படைவீடுகளில் முருகப்பெருமான் ஆறு நிலைகளில் விளங்குகிறார். குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் திருமண நிலை (உல்லாசம்), திருச்செந்தூரில் கவலை தோய்ந்த நிலை (நிராகுலம்), பழநிமலையில் ஞான பண்டிதனாகத் துறவி கோலநிலை (யோகம்), சுவாமிமலையில் தந்தைக்கு இதமாகப் பிரணவப் பொருள் உபதேசித்த குரு நிலை (இதம்), திருத்தணியில் குறிஞ்சி குன்றுகளில் மகிழ்ந்த நிலை (சல்லாபம்), சோலைமலையில் ஞானப்பழம் உதிர்க்கும் ஆனந்தநிலை (விநோதம்) நிலையில் அருள்பாலிக்கிறார்.

முருகனுக்கு ஆறுநாள் திருநாள்: கந்தசஷ்டி விரதம் ஆறுமுகப்பெருமானுக்குரிய ஆறுநாள் விரதமாகும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்னும் பழமொழி இவ்விரதத்தின் மகத்துவத்தைப் போற்றுவதாகும். மேலோட்டமாக சட்டியில் உணவு இருந்தால் தானே கரண்டியில் வரும் என்று பாமரர்கள் இதற்கு பொருள் சொல்வர். தத்துவார்த்தமாக, இப்பழமொழியை சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்று கூறுவர். சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தம்பதியருக்கு அகப்பையான கருப்பையில் நல்ல கரு (குழந்தை) வளரத்தொடங்கும் என்பதே இதன் உண்மைப்பொருள். மழலைச் செல்வம் வாய்க்காத தம்பதியர் யாவரும் முருகப்பெருமானைக் குறித்து இவ்விரதத்தைக் கடை பிடிப்பர். ஐப்பசி அமாவாசையின் மறுநாளான பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு தினங்கள் இவ்விரதம் மேற்கொள்ளப்படும்.
அஞ்சுக்குள்ளே ஆறு: அஞ்சுக்குள்(ஐந்திற்குள்) எப்படி ஆறு அடங்கும்? ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் கருவறையில் ஐந்து சன்னதிகளில் ஆறுமதக்கடவுளர்களும் ஒருசேரக் காட்சியருள்கின்றனர். முற்காலத்தில் இந்து மதம் ஆறுமதங்களாக இருந்தது. விநாயகர், சிவன், பெருமாள், முருகன், சக்தி, சூரியன் ஆகிய ஆறு தெய்வங்களையும் தனித்தனியாக பூஜித்து வந்தனர். அவர்கள் தங்கள் மதங்களுக்கு முறையே காணாபத்யம்(கணபதி), சைவம்(சிவன்), வைஷ்ணவம் (பெருமாள்) கவுமாரம்(முருகன்), சாக்தம்(அம்பாள்), சவுரம்(சூரியன்) என பெயர் சூட்டியிருந்தனர். இந்த ஆறுமதங்களுக்குரிய கடவுள்களும் ஒரு சேர வீற்றிருக்கும் இடம் திருப்பரங்குன்றம். முருகன், சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், விநாயகர், துர்க்கை, சூரியன் ஆகிய ஆறுபேரும் இங்குள்ளனர். இவர்கள் ஐந்து சன்னதிகளுக்குள் அமர்ந்துள்ளது சிறப்பு. முருகன் சன்னதியின் மேற்பகுதியில் சூரியன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திசைக்கு ஒரு காட்சி: திருப்பரங்குன்றம் மலை வடதிசையிலிருந்து தெற்கு நோக்கிப் பார்க்கும்பொழுது கைலாய மலை போலவும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பார்க்கும் பொழுது பெரும் பாறையாகவும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பார்க்கும் பொழுது பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பார்க்கும் பொழுது பெரிய சிவலிங்க வடிவாகவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தர் திருப்பரங்குன்றத்தை சிவலிங்கமாகவே பாவித்து, தன் தேவாரப்பாடலில் போற்றுகிறார்.

ஆறுமுகத்தை வழிபட்டால் ஏறுமுகம்: ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள், ஆறு திருமுகம், ஆறு கார்த்திகை பெண்கள், ஆறு சமயங்களுக்கும் தனிப்பெருங்கடவுள், ஆறு மந்திரங்கள், ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம், ஆறுமுகனுக்கு உகந்த ஆறு நூல்கள், தோன்றிய இடமும் ஆறு (கங்கை ஆறு) இவ்வாறு ஆறு என்பதுடன் முருகப்பெருமானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. ஆறுமுகத்தை மனமுருகி வழிபட்டால் நம் வாழ்க்கையில் ஏறுமுகத்தை காணமுடியும்.

முருகனின் பூலோக அம்மா: முருகனின் அம்மா யார் என்றால் பார்வதி என சொல்லி விடுவீர்கள். அவருக்கு பூலோகத்தில் ஒரு அம்மா இருந்தார் தெரியுமா? திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகில் உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் ( 12 கி.மீ.,) விசாக நட்சத்திரத்திற்குப் பரிகாரத் தலமாகும். வி என்றால் மேலான, சாகம் என்றால் ஜோதி, இந்நட்சத்திரம் விமல சாகம், விபவ சாகம், விபுல சாகம் என்று மூன்று வகையான ஒளிக்கிரணங்களை உடையது. இந்த கிரணங்கள் இம்மலையில் விழுவதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு முறையாவது இக்கோயிலைத் தரிசிப்பது நல்லது. 500 அடி உயரத்தில் உள்ள இக்கோயிலை 544 படிகள் ஏறினால் அடையலாம். அக்காலத்தில் முருகப்பெருமானுக்குரிய விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நாட்களில் செல்வ விருத்திக்காக இங்கு வளர்ந்த திருமலைச்செடியின் வேரையும், தன கர்ஷண யந்திரத்தையும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். திருமலைக் குமாரசுவாமியை தன் மகனாக ஏற்றுக் கொண்ட சிவகாமி பரதேசி அம்மையார் என்பவர், மலையடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் கற்களை வைத்து இழுத்துச் சென்று மலையுச்சியில் மண்டபம் ஒன்றைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்களின் செல்லப்பிள்ளை பழனியாண்டவன்: போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான் பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சித்தர்களுக்கு எல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு அருள்பாலிப்பதால் இத்தலத்திற்கு சித்தன் வாழ்வுஎன்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் பழநியாண்டி என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாகவே தலவரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால், அவரை ராஜாங்க அடையாளத்துடன் பட்டுபீதாம்பரம், கிரீடம் அணிந்து ராஜாவாக மாற்றி விடுகின்றனர். பழநி முருகன் பக்தர்களின் செல்லப் பிள்ளையாயிற்றே! மனிதர்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் வாழ்வில் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும் இரவு பகல் போல மாறி மாறி உண்டாகின்றன. ஆனால், மனம் ஒருபோதும் தடுமாறக்கூடாது. மனம்,மொழி, மெய்யால் நல்லதையே சிந்திக்கவேண்டும். அதற்கான நல்லறிவை வழங்கும் ஞானபண்டிதனாக முருகன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் முருகன். சூரனுக்கே அருள் செய்தவர். அவர் அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானாரா என்றால், நிஜத்தில் அப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டார். அதனால் தான் பழநி சென்று திரும்புபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். கந்தசஷ்டி விரத நன்னாட்களில் அந்த ஞானபண்டிதனைச் சரணடைந்து இந்தப் பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்துக்குள் செல்லும் நல்லருளும் பெறுவோம்.

அப்பாவுக்கு ஆலவாய் பிள்ளைக்கு அலைவாய்: முருகனின் தந்தையான சிவனுக்குரிய மதுரை தலத்தை ஆலவாய் என்ற புராணப் பெயரிட்டு அழைப்பர். முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற புராணப்பெயர் உண்டு. இத்தலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் இங்கே தங்கினார். இவரது திருவடிகளை தோணிக்குச் சமமாகக் குறிப்பிடுவர். கடலின் முன்புள்ள முருகப்பெருமானின் திருவடிகளை வணங்கியவர்கள் எளிதாக பிறவிக்கடலைக் கடந்து விடுவர் என்பது  ஐதீகம்.

இந்த கலியுகத்திலும் நல்ல குரு வேண்டுமா?  கந்தபுராணத்தில் திருத்தணி பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், திசைநோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகனே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் விளக்குகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார்களில் முத்துச்சுவாமி தீட்சிதரும் ஒருவர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவர், திருத்தணி முருகன் சன்னதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் சிறுவனாய் முத்துச்சுவாமி தீட்சிதரின் முன்னர் தோன்றி, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை குருகுஹ என்று அவர் போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில் சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்கலாம்
கடலுக்குள் கிடந்த முருகன் சிலை;  திருச்செந்தூர் முருகப்பெருமானை அவனுடைய அடியார்கள் ஆறுமுகநயினார் என்று அழைப்பர். அப்பெருமான் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி திருவிளையாடல் செய்திருக்கிறார். 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டச்சுக்காரர்கள் ஆறுமுகநயினாரின் விக்ரகத்தைக் கடத்திச் சென்றனர். கடலில் செல்லும் போது பெரும்புயல் வரவே, அதை கடலுக்குள் போட்டுவிட்டனர். ஐந்து ஆண்டுகள் வரை சிலையில்லாமல் வழிபாடு செய்யமுடியவில்லை. எனவே, வடமலையப்ப பிள்ளை என்பவர் வேறொரு சிலையை வடிக்க முடிவெடுத்தார். ஆனால், ஆறுமுகநயினார், அவரது கனவில் தோன்றி, கடலில் தான் இருப்பதை உணர்த்தினார். படகில் சென்று சிலையைத் தேடினார் வடமலையப்ப பிள்ளை. அப்போது, நடுக்கடலில் கருடன் வட்டமிட்டபடியே இருந்தது. ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருந்தது. கனவில் வந்த ஆறுமுகநயினார் சொன்ன இடம் இதுவென்று அறிந்தார். அந்த இடத்தில் மூழ்கிப்பார்த்த போது ஆறுமுகநயினார் சிலை கிடைக்கப்பெற்று மகிழ்ந்தனர். இவ்வரலாறு திருச்செந்தூர் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

வீரபாகுவுக்கு என்ன பிடிக்கும்? முருகப்பெருமானின் சேனைத் தலைவராக விளங்கியவர் வீரபாகு.வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டு, முருகனின் படைகளைத் தட்டியெழுப்பியவர். இதைப் பாராட்டி, திருச்செந்தூரிலுள்ள தனது கர்ப்பக்கிரகத்திற்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இவருக்கும், வீர மகேந்திரர் என்ற தளபதியையும் காவல் தெய்வங்களாக இருக்க அருள்புரிந்தார். அத்துடன், திருச்செந்தூருக்கு வீரபாகு பட்டினம் என்ற பெயரையும் சூட்டினார். மேலும், வீரபாகுவுக்குச் சிறப்பு செய்யும் வகையில் முதலில் வீரபாகுவுக்கு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கு பூஜை நடைபெறுவது இன்றும் வழக்கமாக இருக்கிறது. வீரபாகுவுக்கு மிகவும் பிடித்தமான உணவு பிட்டு. இவருக்கு பிட்டை நிவேதனமாகப் படைத்தால் நமது மனவிருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நல்ல குழந்தைகள் தரும் சுப்பையா: சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிமலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது பெற்றவர்களுக்கு பெருமையாக இருக்கும். அந்த வகையில் தன் பிள்ளையிடமே ஓம் என்னும் மந்திரத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்தார் ஈசன். அதுவும் மகன் குருநாதராக வீற்றிருக்க, சிவன் ஒரு சீடனைப் போல் மண்டியிட்டு கேட்டார். அன்று முதல் முருகன் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா என்று போற்றப்பட்டார். சிவகுருநாதனான சுவாமிநாதப்பெருமானை குருவிற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபட்டால், ஞானமுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம். 


சரவணபவ என்றால் கிடைக்கும்  ஆறு பலன்கள்: கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை. இதில் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. சரவணன் என்றால் பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன் என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை சரவணப்பொய்கை என்பர்.

பாரின் லேடி வணங்கிய  தமிழ்க்கடவுள்: முத்தமிழ் மீது கொண்ட அன்பால் முருகனுக்கு தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப் பெயர் உண்டு. இவர் மீது ஆங்கிலேயர்கள் சிலருக்கும் அன்பு உண்டு. ஐரோப்பியப் பெண் ஒருவர், 1936ல், கொடைக்கானலில் கட்டிய கோயிலே குறிஞ்சியாண்டவர் கோயில். மலையும் மலை சார்ந்த இடத்திற்கு குறிஞ்சி நிலம்என பெயர். இது மலையில் அமைந்த கோயில் என்பதால் குறிஞ்சி ஆண்டவர் கோயில் என பெயர் பெற்றது. இந்துமதத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் தன் பெயரை லீலாவதி என்று அப்பெண் மாற்றிக் கொண்டதோடு ராமநாதன் என்னும் இந்தியரையும் மணந்து கொண்டார். முருக பக்தியால் இக்கோயிலை இவர் கட்டியதாகக் கூறுகின்றனர். இந்தக் கோயிலில், அழகு தெய்வம் முருகன் கம்பீரமாக காட்சி தருகிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ இங்கு பூப்பதும் சிறப்பம்சம். 1994, 2006ல் இந்தப்பூக்கள் மலர்ந்தன.

கம்பத்து இளையனார்: அருணகிரிநாதரின் கவிபாடும் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்ற புலவன், அவர் மீது பொறாமை கொண்டான். ஒருமுறை, அருணகிரிநாதருக்கும், சம்பந்தாண்டானுக்கும் யாருடைய பக்தி மேலானது என்ற விவாதம் எழுந்தது. திருவண்ணாமலையை ஆட்சி செய்து மன்னன் பிரபுடதேவன் இப்போட்டிக்கு தலைமை வகித்தான். அருணகிரிநாதர் முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார். ஆனால், சம்பந்தாண் டான் முருகனின் காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்து தடுத்தான். சம்பந்தாண்டானின் சூழ்ச்சி நிறைவேறவில்லை. முருகப்பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தின் இடப்புறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், கம்பத்து இளையனார் என்று பெயர் பெற்றார். இதனை திருப்புகழில் அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

படிக்காதவர்க்கும் அருள் தருபவர்: திருச்செந்தூர் முருகன் கோயில் மடப்பள்ளியில் வென்றிமாலை என்ற அடியவர் பணி செய்தார். இவரை ஒரு சந்தர்ப்பத்தில், கோயில் நிர்வாகத்தினர் அவமானப்படுத்தி விட்டனர். உனக்கு தொண்டு செய்த எனக்கு இப்படியும் ஒரு சோதனையா? என்று மனம் நொந்தவர், கடலில் மூழ்கி உயிர் துறக்க முடிவெடுத்தார். எழுதப்படிக்கத் தெரியாதவரான வென்றிமாலையைக் காப்பாற்ற திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், அவருக்கு தமிழ் அறிவைத் தந்தார். வென்றிமாலை முருகப்பெருமான் மீது கவி பாடி கவிராயர் என்னும் பட்டம் பெற்றார். திருச்செந்தூர் ஸ்தல புராணத்தைப் பாடியவர் இவர் தான். எழுத்துவாசனையே இல்லாத பாமரனையும், பாவலராக மாற்றிய திருச்செந்தூர் கந்தனைச் சேவித்தால் வாழ்வில் நன்மை பெருகும்.

மணவாழ்வு தரும் மகத்தான காட்சி! திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த கையோடு, முருகன் திருப்பரங்குன்றத்துக்கு வந்ததாக ஐதீகம். போரில் வெற்றி பெற்று தேவர்களைக் காத்ததற்காக, இந்திரன் தன்மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்த தலம் இது. இதனால், இத்தலம் கல்யாண ÷க்ஷத்திரம் என்று போற்றப்படுகிறது. முருகனுக்கும், தெய்வானைக்கும் பங்குனி சுவாதியில் திருமணம் நடக்கும். அப்போது அம்மையப்பராய் மதுரை மீனாட்சியும், சொக்கநாதரும் மகன் மற்றும் மருமகளுக்கு ஆசியளிக்க வருவர். அப்போது முருகன் மணமகளான தெய்வானையுடன் பெற்றோரை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியைக் காண்போருக்கு விரைவில் மணவாழ்வு உண்டாகும்.

முதல் பாடல் இவருக்குத்தான்! வயலூர் இருக்க அயலூரைத் தேடி அலைவானேன்? என்பது பழமொழி. வள்ளல் போல் பன்னிரண்டு கைகளால் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகன் வாழும் ஊர் வயலூர். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த அருணகிரிநாதரைத் தன் கைகளில் தாங்கிய முருகன் வயலூருக்கு வா என்று அழைத்தார். இங்கு தான் முத்தைத்தரு பத்தித்திருநகை என்று திருப்புகழுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தார். பதினெட்டுப் பாடல்களை அருணகிரிநாதர் இங்கு பாடினார். பிறதலங்களில் இருக்கும் முருகனுக்கு வேண்டிய நேர்த்திக் கடன்களை வயலூர் முருகனுக்கு நிறைவேற்றலாம். வாரியார் சுவாமிகள் வயலூர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வயலூர் சென்று வள்ளி மணாளனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும்.

பிறந்த நாளுக்கு இரட்டை ஆசி; முருகனின் பிறந்த நாளில் ஆறுபடை வீடுகளில் எதாவது ஒன்றுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இவற்றில் சிறப்பாக சொல்லப்படுவது திருப்பரங்குன்றம். ஏனெனில், இங்கு முருகன் மூலவர் அல்ல. அவரது தந்தையான சத்தியகிரீஸ்வரரே (சிவன்) மூலவர். ஏழாவது படை வீடு என வாரியார் சுவாமியால் வர்ணிக்கப்படும் மற்றொரு தலம் வயலூர். ஆனால் அதுவும் சிவத்தலமே. ஆதிநாதர் என்ற பெயரில் சிவன் இக்கோயிலில் அருள்புரிகிறார். பிறந்த நாள் விழாவில் குழந்தைகள் பெற்றவர்களிடம் ஆசி பெறுவார்கள். ஆனால், திருப்பரங்குன்றம், வயலூர் கோயிலுக்கு நம் பிறந்தநாளில் சென்றால், பெற்றவர்களான சிவபார்வதியிடமும், அவர்களின் குழந்தையான முருகனிடமும் ஆசி பெற்று வரலாம்.

பச்சைசாத்தி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி, மாசித்திருவிழாக் காலங்களில் ஏழு,எட்டாம் திருநாட்கள் சிறப்பு வாய்ந்தது. எட்டாம் திருவிழாவன்று காலையில் முருகப்பெருமான் எழுந்தருளும் கோலம் பக்தர்களைக் கவர்கிறது. பச்சைக் கடைசல் சப்பரத்தில், உற்சவர் சண்முகரை அமர்த்திப் பச்சைப்பட்டாடை அணிவித்து, பச்சை நிற மரிக்கொழுந்து பூ மற்றும் இலைகளால் கட்டப்பட்ட மாலைகள் சூட்டி எழுந்தருளச் செய்கின்றனர். இதனை பச்சை சாத்துதல் என்பர். பச்சை சாத்தி வரும் போது சுவாமிக்கு பக்தர்களால் செய்யப்படும் பன்னீர் அபிஷேகத்தால், தேரோடும் வீதிகள் சேறாகின்றன. பச்சை செழுமையைக் குறிக்கும். தன்னைத் தரிசித்தவர்கள் வீட்டிலும், தரிசிக்க வராவிட்டாலும் வீட்டில் இருந்தே நினைத்தவர்கள் வீட்டிலும் செல்வச்செழிப்பு ஏற்படுவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

அதிசயம் மிக்க பழநி; முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு பழநி. இதற்கு சிவமலை என்ற பெயரும் உண்டு. சித்தர்கள் வாழ்ந்த பூமி. போகர் என்பவர் இத்தலத்தில் இருக்கும் முருகனை வடிவமைத்தார். ஞானம் என்ற தண்டை ஊன்றி பால வடிவத்துடன் காட்சி தருகிறார். திருப்புகழில் இத்தலம், அதிசயம் அநேகமுற்ற பழநி என்று போற்றப்படுகிறது. 


படிக்காத மேதை: வென்றிமலை என்னும் பக்தர், திருச்செந்தூர் கோயில் மடப்பள்ளியில் (சமையலறை) பணி செய்து வந்தார். அவரை, கோயில் நிர்வாகத்தினர் ஒரு சமயத்தில் அவமானப்படுத்தினர். உனக்கு தொண்டு செய்த எனக்கு இப்படியும் ஒரு சோதனையா? என்ற திருச்செந்தூர் முருகனிடம் முறையிட்டார். உயிரை மாய்ப்பதற்காக கடலுக்குள் குதித்தார். ஆனால், முருகன் ஒரு அடியவரைப் போல வந்து,  காப்பாற்றியதோடு கல்வியறிவையும் தந்தருளினார். அதன்பின், வென்றிமாலை என்னும் கவிபாடியதால், கவிராயர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இவரே திருச்செந்தூர் ஸ்தல புராணத்தையும் பாடினார். படிக்காத பாமரனையும், பாவலராக்கிய செந்தூர் கந்தனைச் சேவித்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.



வைரஸ் குறும்படம்!


கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?


கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும். 

அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்)  பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.  வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.


சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் ! சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6  ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.


சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).



ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம:  குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.


சரவணபவ தத்துவம்: 
மு  - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்,
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.
ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?
ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.
நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் 


இவ்வாறு கூறுவார் :
1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.


ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.


ஆறுபடை வீடுகளும் ஆறு  குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
சுவாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்

ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். 

சூரனை வென்ற வீரனை வணங்குவோம்!

சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷமிடும் ஒலி விண்ணைப் பிளக்கும். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறினார் வீரபாகு. சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னிமுகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில், மாயப்போர் முறைகளை செய்யத் துவங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இருகூறாகச் சிதைந்தது. ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டார். முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை உண்டு.

சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில்,சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் வைதாரையும் வாழவைப்பவன் முருகன் என்று போற்றி வழிபடுவர். கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணம் என்னும் மயிலாக மாறி ஆறுமுகப்பெருமானைத் தாங்கி மகிழ்வோம். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது. முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் துவங்கினர். ஆறு நாட்கள் நடந்த அந்த யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொருநாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்பசிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார். 12 நாள் விழா முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறுநாட்களில் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன்- தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும்.


சஷ்டி யாகம் திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக் பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர்,  சண்முகவிலாச மண்டபத்திற்கு  எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி,  தெய்வானை இல்லாமல் தனித்து  கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். சம்ஹாரம் முடிந்த பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாக சாலைக்கு திரும்புகிறார். மும்மூர்த்தி முருகன் முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும்  பிரணவ மந்திரத்தின் பொருளை  தந்தைக்கே குருவாக இருந்து உபதே சித்தவர். அதே மந்திரத்தின் பொருள்  தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், ஆவணி, மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுகிறார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார். வள்ளி குகையில் மும்மூர்த்தி சிலை மூன்று முகங்களுடன் இருக்கிறது. கண்ணாடிக்கு அபிஷேகம் ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதை சாயாபிஷேகம் என்பர்.

சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை, முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது. தெய்வானை திருக்கல்யாணம் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப் பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதியுலா செல்லும்போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிப் படுத்துகின்றனர்.

புதிதாக யாரையும் நம்பவில்லை திமுக!

மத்திய அமைச்சரவையில் இப்போதைக்கு தங்களது கட்சி சார்பில் யாரையும் சேர்க்க வேண்டாம் என்று திமுக முடிவுசெய்துள்ளது. திமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்த ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது. முன்னதாக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பேசிய பிரதமர், திமுகவுக்கான அமைச்சரவை இடங்கள் அப்படியே உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.


இப்போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சட்டரீதியாக போராடுவதற்கும், கட்சியை வலுப்படுத்துவதற்கும்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்று அக்கட்சி தலைமை தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் தற்போதைய பிரதான கவலை எல்லாம் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதுதான். எனவேதான் அமைச்சரவையில் திமுக சார்பில் வேறு யாரையும் சேர்க்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


அதுமட்டுமல்லாமல் இப்போது அமைச்சரவையில் யாரையேனும் சேர்த்தால் அது அரசியல் சந்தர்ப்பவாதம் என்று சித்தரிக்கப்படும் என்றும் திமுக தலைமை கருதுகிறது. மேலும் தற்போதுள்ள நிலையில் அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தக்கூடிய வகையில் ஒருவரைக் கண்டுபிடிப்பதும் சிரமமான ஒன்று என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே திமுக சார்பில் தற்போதைக்கு மத்திய அமைச்சரவையில் யாரும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றே தெரிகிறது.

ஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூ!


மணம் தரும் மலர்கள் மங்கையர் சூடுவதற்கு மல்ல அவை மருத்துவ குணமும் கொண்டுள்ளன. நாம் அன்றாடம் காணும் மலர்கள் தவிர்த்து பல வித மருத்துவ மலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். 

வெட்பாலைப் பூக்கள்: வெட்பாலை என்பது ஒரு குறுமரம் 10 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூ மல்லி போல கொத்து கொத்தாக காய்க்கும். வெட்பாலை பூக்களுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் புண் ஆறும்.

புங்கைப்பூ: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புங்கைப்பூக்கள் நன் மருந்தாகும். ஒரு கைப்பிடியளவு புங்கைப்பூக்களை எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்து பொடி செய்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் பொடியை வாயில் போட்டு பசும்பால் குடிக்கவேண்டும். தண்ணீரோடும் இந்த பொடியை உட்கொள்ளலாம். 48 நாட்கள் தொடர்ந்து அருந்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும். மேக நோய் உள்ளவர்கள் புங்கைப்பூ பொடியை குடித்து வந்தால் 20 வகையான மேகநோய்களும் நீங்கும்.

சிற்றகத்திப்பூக்கள்: சிற்றகத்தி என்பது அகத்தியில் ஒருவகைப்பூ இதனை செம்பை என்றும் அழைப்பார்கள். கறுப்பு நிறத்தில் பூ பூப்பதை கருஞ் செம்பை என்றும், மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் செம்பை என்றும் வழங்குவர். எந்த நிறத்தில் பூப்பதாக இருந்தாலும் அவரவர் ஊர்களில் கிடைக்கின்ற பூக்களைக் கொண்டு மருந்தாக தயாரித்து உண்ணலாம்.சிற்கத்திப்பூக்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலை முழுகி வர தலைப்பாரம், மூக்கில் நீர் பாய்தல் முதலியன குணமாகும். தலைக்கு சாதாரணமாக தேய்த்து வந்தாலும் தலைப்பாரம் நீங்கும்.

பனம்பூ; ஆண் பனை பாளையை உற்பத்தி செய்கிறது. பாளை மீது பூக்கள் ஒட்டியிருக்கும். அதைத்தான் பனம் பூ என்கிறோம். பல்வலி இருக்கும் போது இளம் பாளையில் உள்ள பனம்பூவை எடுத்துப் பிழிந்து 300 மி.லி சாறு எடுத்து அத்துடன் 100 மி.லி எலுமிச்சை சாறும், 2 கிராம் உப்பும் சேர்த்து வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.

மகிழம் பூ: மகிழம் பூவை சுத்தம் செய்து முகர்ந்தால் சுவையின்மை நீங்கும். 50 கிராம் மகிழம்பூ எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் உடலுக்கு வலிமை ஏற்படும். பித்தத்தை தணிக்கும், ஆண்மை கிடைக்கும். மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து முகர்ந்தால் மூக்கில் நீர் பாய்ந்து தலைவலியைப் போக்கும்.கணைச்சூடு இருப்பவர்கள், மகிழம்பூவை ஊற வைத்து அதன் நீரை பருகினால் கணைச்சூடு நீங்கும். இரைப்பு நீங்க மகிழம் பூவின் சாறு பருகவேண்டும். மகிழம்பூவை அரைத்துச் சாறு எடுத்து அரை டம்ளர் அளவு சாப்பிட மலக்கட்டு நீங்கும்.

சம்பங்கிப்பூக்கள்: சம்பங்கிப்பூக்கள் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணிநேரம் ஏறவைத்து அதிலிருந்து பூக்களை எடுத்து விடவேண்டும். அந்த நீரை காலை, பகல், மாலை என மூன்று வேலை சாப்பிட அஜீரணம், செரிமானக் கோளாறு போன்றவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

எலுமிச்சைப் பூக்கள்: எலுமிச்சைப் பூக்களை மைபோல அரைத்து தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பருகிவர பல் ஈறு நோய், பல்வலி குணமடையும். களாப்பூ: களா என்பது காடுகளிலும் வேலி ஓரங்களிலும் காணப்படும் ஒரு முட் செடி. இதனுடைய பூச்சாறு கண் நோய்களுக்குக் கூறப்பட்ட மருந்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கண்களில் பூ விழுந்து அது முற்றுவதற்கு முன்னால் களாப் பூவைக் கசக்கி பிழிந்து சாறு மூன்று துளி கண்களில் பிழிந்து வர குணமாகும்.

உள்ளத்திற்கு புத்துணர்ச்சி தரும் 'ஸ்பா '


ஸ்பா எனப்படும் சொல்லானது தற்பொழுது இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் பிரபலமடைந்து வருகிறது. நீர் சிகிச்சையுடன் தொடர்புடைய ஸ்பா வெப்ப நீரூற்றுகள், ரிசார்ட்கள் உள்ளிட்டவை பொதுவாக குளிப்பதற்கும், குடிப்பதற்கும் வெப்ப அல்லது கனிம நீரை வழங்குகின்றன. அவை நோய் நீக்கும் உடல் நலச் சிகிச்சைகளையும் வழங்குகின்றது. உலக அளவில் பிரபலமடைந்து வரும் இந்த நீர் சிகிச்சை ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டில் பரவலாக பரவியுள்ளன. இது மேல்தர வர்க்கத்தினர் மேற்கொள்ளும் உயர்தரமான கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சையாகும்.

ஸ்பா சிகிச்சை அல்லது நீர் சிகிச்சை என்பது உடல் மற்றும் மன நலத்திற்கு உதவும் மருத்துவமற்ற சிகிச்சை முறையாகும். இது பெரும்பாலும் ரிசார்ட்ஸ், அழகுநிலையங்கள், போன்ற இடங்களில் செயல்படுகின்றன. பெல்ஜியத்தின் ஸ்பா என்ற நகரின் பெயரில் இருந்து இந்த சொல் வந்துள்ளது. “நீர் மூலம் உடல் நலம்” என்னும் பொருள்படும் “சனிடாஸ் பெர் அக்யூயம்” என்ற லத்தின் வாக்கியத்தின் சுருக்கப்பெயர்தான் ஸ்பா ஆகும். 

ஸ்பா வகைகள்: முகத்தை அழகு படுத்துதல், மசாஜ், சூடான மெழுகினைக் கொண்டு உடலில் பூசி பின் அவை குளிர்ந்த பின் அகற்றுதல், சேற்றுக்குளியல், மூலிகைக் குளியல் போன்ற சிறப்பு வாய்ந்தவைகள் ஸ்பா சிகிச்சையில் நடைமுறையின் உள்ளன. இது தவிர வெப்ப நீரூற்று, மித வெப்ப மருந்து நீர்மக்குளியல், வெப்பத்தொட்டி, சோனா, நீராவிக்குளியல் போன்றவையும் ஸ்பா சிகிக்சையின் சிறப்பம்சமாகும். இதனுடன் ஊட்டச்சத்து மற்றும் தியானம் தொடர்பாகவும் ஆலோசனை தரப்படுகிறது.ஸ்பா சிகிச்சையின் நன்மைகள்: இது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிப்பதோடு மன அழுத்தத்தை நீக்குகிறது. பணிச்சுமை, குடும்பசுமையினால் ஏற்படும் அழுத்தங்களை இது போக்குகிறது. ரத்த சுழற்சியை அதிகரிக்கிறது. ரத்தத்திற்கு அதிக அளவு ஆக்ஸிசனை அளிப்பதோடு செல்களை புதுப்பிக்கின்றது. வெது வெதுப்பான நீராவி சிகிச்சையானது ரத்த சுழற்சியை சீராக்குகிறது. நீர் சிகிச்சையானது உடலை மட்டுமில்லாது ஆத்மா வரை சென்று ஊடுருவுகிறது. உடல் இழந்த தண்ணீரை சமப்படுத்துகிறது.இதய சுமை குறையும்: விளையாட்டு வீரர்கள் தங்களின் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைப் பெற ஸ்பா சிகிச்சை உதவுகிறது. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.புத்துணர்ச்சி அதிகரிக்கும்: ஸ்பா மசாஜ் மூலம் தோல் புத்துணர்ச்சி பெறுவதோடு பளபளப்படைகிறது. மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. இதன் மூலம் அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. நோய்களை குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது. மசாஜ் மூலம் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.கழிவுகள் வெளியேறும்:  மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும். கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு 'பப்ளிக் சாய்ஸ்' விருது!


பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு 127 அவர்ஸ் படத்திற்காக ப்பளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது. இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் மறுபடியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

ஆனால் அவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கு பப்ளிக் சாய்ஸ் விருது வழங்கப்பட்டது. 127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஹ்மான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸை முடக்க சிலர் சதி-தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது- அசாஞ்ச் அறிவிப்பு!


விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். 

விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது. இந்தநிலையில் தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து வங்கிகள் நிதி கையாளுதலை தடை செய்துள்ளன. இதனால் எங்களது செயல்பாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக எங்களது செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

எங்களது தளத்தை முடக்க சிலர் முயற்சிக்கின்றனர், சதி செய்கின்றனர். அதை நாங்கள் முறியடிப்போம், அவதூறுப் பிரசாரத்தை தவிடுபொடியாக்குவோம் என்றார் அவர். விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு நன்கொடை உள்ளிட்டவற்றை தங்களது மாஸ்டர் கார்டு, விசா கார்டு, பேபால் உள்ளிட்டவை மூலம் வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பல முன்னணி வங்கிகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நாள்...


  • ஐக்கிய நாடுகள் தினம்(1945)
  •  ஜாம்பியா விடுதலை தினம்(1964)
  •  ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)
  •  ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
  •  பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)
  • கந்தசஷ்டி தோன்றிய கதை!


    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.) அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.   

    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு.அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். 

    திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான். தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. 

    முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். 

    சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

    நாளும் சொல்வோம் திருமுருகா!

    மு...ரு...கா... : முருகா என்றால் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு நிகர் யாருமில்லை. முருகனுக்கென எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது கந்த சஷ்டி. தீபாவளி தினமான வருகிற 26.10.2011ல் ஆரம்பமாகி 31.10.2011 வரை உள்ள இந்த சஷ்டி நாட்களில் முருகனுக்காக விரதமிருந்து மனமுருகி வழிபட்டால் நமக்கு வேண்டியதை கொடுத்து அருள்வான் முருகன்.


    தீபாவளியின் சிறப்பு!

    தன் தாயாலேயே கொல்லப்பட்ட நரகாசுரன் இறந்த நாளான நரக சதுர்த்திதான் தீபாவளி. இவன் இறந்த நாளைத்தான் நாம்  சந்தோஷத்திருநாளான தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். மகன் நரகாசுரன் மறைந்தான் என்பது வருத்தத்தைத் தந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல், மற்றவர்கள் சந்தோஷமாக பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டாள் மண்மாதா. நாம் வருந்தினாலும் பிறரை வருந்தச் செய்யக்கூடாது சந்தோஷமாக சிரித்து மகிழ வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தை உருவாக்கும் பண்டிகை தீபாவளி. பொறுமையின் சிகரமான பூ மாதா நமக்கு உணர்த்திய பாடம்தான் தீபாவளியின் உட்பொருள். ஒரு சமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை சம்ஹரித்து, நீரில் அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் வராஹரான திருமாலுக்கும் பிறந்த வன்தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்பது 



    எல்லாருக்கும் பல தொல்லைகளைக் கொடுத்த நரகாசுரனை வதம் செய்ய எண்ணி திருமால் தேரில் வரும்போது, தன்னுடன் சத்யபாமாவையும் அழைத்து வந்தார். போரின் உச்சகட்டத்தில் திருமால் மயங்கியதுபோல் நடிக்க, சத்யபாமா அம்பெய்தி நரகாசுரனைக் கொன்றாள். அப்போது அவளுக்கு, பூர்வஜென்மத்தில் தான் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்தவனே இந்த நரகாசுரன் என்பதும்; அவன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே இறந்துவிட்டான் என்பதும் நினைவுக்கு வந்தது. அவன் இறந்த நாளை மக்கள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடையுடன் இனிப்பு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் என்றும்; அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் கலந்திருக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்றாள். அதைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், நோய் ஏற்படாது. எனவேதான் அவள் அப்படி வரம் பெற்றாள். தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான்.கண்ணபிரான் தன் சக்ராயுதத்தால் நரகாசுரன் கோட்டை கொத்தளங்களைப் பிளந்தபோது எழுந்த ஓசையை எதிரொலிப்பதற்காகவே வெடிச் சத்தத்துடன் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஐதிகம்.நரகாசுரனை வதம் செய்ய திருமால் புறப்பட்டபோது, அசுரர்கள் லட்சுமியைக் கவர்ந்து செல்ல கங்கணம் கட்டினர். லட்சுமி சூட்சும ரூபம் எடுத்து (மறை உரு) ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபத்தில் இணைந்தாள். அதனால் அன்றைய தினத்தில் தீபத்தையும் தைலத்தையும் லட்சுமி சொரூபமாய் கொண்டாடுகின்றனர். ஆக நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல. நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான். 



    தீப லக்ஷ்மி: நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் திருமகள் மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்த அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள். அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலக்ஷ்மி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவமாக இருந்த ஜோதிலக்ஷ்மியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிப்போனார்கள் அசுரர்கள். திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பர். தீப வடிவில் தீப லக்ஷ்மி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்கச் செய்வாள் என்பது ஐதிகம்.


    காசியில் தீபாவளி: காசியில் உள்ளோர் கங்கையில் நீராடி அன்னபூரணியை வணங்குவர். அன்று அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். தங்கத்தாலான கால பைரவரும் அன்றைய தினத்தில் மட்டுமே வீதியுலா வருவார்.


    காசியில் தீபாவளி- அன்ன லிங்கம்: இது தென்னாட்டவர்களால் நடத்தப்படுகிறது. தீபாவளி யன்று காலை 10.00 மணிக்கு கங்கைக்கரை ஓரத்தில் தரையை சுத்தப்படுத்தி கோல மிட்டு, மிகப் பெரிய வாழை இலைகளைப் பரவலாக வைப்பர். இலையின்மீது மூன்றுக்கு மூன்று சதுர அடிப்பரப்பில் இரண்டு அடி உயரத்தில் சுத்த அன்னத்தால் லிங்கப் பிரதிஷ்டை செய்வர். அதற்கு விபூதி குங்குமம் வைத்து, மலர் மாலையிட்டு ருத்ராட்ச மாலையும் சாற்றுவர். அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடையால் அலங்காரம் செய்வர். நந்தியையும் அன்னத்தால் செய்து எதிரே வைப்பர். பச்சை மிளகாயால் நந்திக்கு காது, வாய் வைத்து, புளியங்கொட்டையால் கண் வைத்து அலங்கரிப்பார்கள். 11.00 மணியளவில் யாத்ரீகர்கள் முன்னிலையில் கணபதி பூஜையுடன் வடை, பாயசத்துடன் பூஜை முடிப்பார்கள். சுமார் 200 பிச்சைக்காரர்களுக்கு அந்த லிங்கத்தின் அன்னத்தாலே அன்னதானம் செய்வர். இலைக்கு 31 ரூபாய் தட்சணையும் தருவார்கள். ஆரம்பத்தில் பிராமணர்களுக்கு செய்தனர்; இப்போது பிச்சைக்காரர்களை அமரவைத்து விருந்து படைக்கிறார்கள். காசியில் மீராகாட் என்ற இடத்தில்தான் இது நடக்கிறது.

    எஸ்.எம்.எஸ்., கட்டுப்பாடு!


    எஸ்.எம்.எஸ்.,' அனுப்புவதற்கு,"டிராய்' விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டால், மொபைல்போன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், பண்டிகைக் காலங்களில், இந்த கட்டுப்பாட்டை தளர்த்துவது, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவும் என பரவலாக புகார் எழுந்துள்ளது.

    நாடு முழுவதும், 87 கோடி பேர், "மொபைல் போன்' பயன்படுத்தி வருவதாக, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) தெரிவித்துள்ளது. இதில், 90 சதவீத இளைஞர்கள், "கால்'களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட, "குறுஞ்செய்தி' அதாவது "மெசேஜ்'க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என, ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மொபைல்போன் சேவை நிறுவனங்களை தேர்வு செய்யும் போதே, குறைந்த செலவில், "பல்க் மெசேஜ்'களை அனுப்பும் வசதியை தரும், சேவை நிறுவனங்களையே தேர்வு செய்கின்றனர். துவக்கத்தில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, ஒவ்வொரு தனியார் மொபைல் போன் நிறுவனங்களும், போட்டி போட்டு இலவச"மெசேஜ்' களை வாரி வழங்கின.  காதலர் தினம், நண்பர்கள் தினம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு, கடிதம் மற்றும் போனில் வாழ்த்துக்களை பரிமாறும் முறை குறைந்து, "மெசேஜ்' மூலம் வாழ்த்துத் தெரிவிக்கும் கலாசாரம் துவங்கியது.

    பண்டிகை நேரத்தில், ஓட்டு மொத்தமாக அனுப்பும், "மெசேஜ்'களால், "நெட்வொர்க் ஜாம்' பிரச்னையை, சேவை நிறுவனங்கள் சந்தித்தன. இதை தவிர்க்க, இலவசமாக வழங்கிய, "மெசேஜ்'க்கு," மதிப்பு கூட்டுச் சேவையாக' மாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளை லாபம் அடித்தன. இருப்பினும், "மெசேஜ்' போதையில் விடுபடாத வாடிக்கையாளர்கள், கூடுதல் பணம் செலுத்தி அதையும் பெற்று வந்தனர்.இதனால் எழுந்த பிரச்னைகளை தொடர்ந்து, "பல்க் மெசேஜ்'களை அனுப்ப, "டிராய்' கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாட்டின் படி, வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்.,க்கு மேல் அனுப்ப முடியாது. இந்த கட்டுப்பாடு, கடந்த செப்., 27 முதல் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பு, மொபைல்போன் வாடிக்கையாளர்களை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது. 

    இதுகுறித்து, மொபைல்போன் சில்லறை வியாபாரி அய்யப்பன் கூறும்போது, "எஸ்.எம்.எஸ்.,க்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டால், வாடிக்கையாளர்கள் எங்களிடம் தகராறு செய்கின்றனர். முதலில், 27 ரூபாய் செலுத்தி, மாதம் ஒன்றுக்கு 6,000 எஸ்.எம்.எஸ்.,களை, பெற்று வந்தோம். தற்போது, அதே ரூபாய் செலுத்தினாலும், 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்ப முடிவதில்லை எனக் கேட்கின்றனர். இதனால்,"மெசேஜ் பூஸ்டர் பேக்'குகளை போடுவதை தவிர்க்கின்றனர்' என்றார்.மாவட்ட நுகர்வோர் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறும்போது, ""டிராய்' அறிவிப்பை தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன. தற்போது, தனியார் மொபைல்போன் நிறுவனங்கள்,"தீபாவளி' நாளன்று மட்டும் அதிக மெசேஜ்களை அனுப்பலாம் என, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பி வருகின்றன. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை சுரண்டும் முயற்சியே. பண்டிகை காலங்களில், இக்கட்டுப்பாட்டை தனியார் மொபைல்போன் நிறுவனங்கள் தளர்த்திக் கொள்ளலாம் என,"டிராய்' அறிவித்ததாக தெரியவில்லை

    விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல நெதர்லாந்து!


    விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நன்கொடை வசூலித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், நெதர்லாந்து நாட்டில் உள்ள 5 இலங்கை தமிழர்கள் மீது, ஹேக் நகரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்படும் என்றும் இலங்கை அரசின் தூண்டுதலால் தமிழர் விரோத சக்திகள் வதந்தியை பரப்பி வந்தனர். ஆனால், அதற்கு நேர் மாறாக, விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச தீவிரவாத இயக்கம் அல்ல என்று, ஹேக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பில் நீதிபதி, 

    ஐரோப்பிய கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டு போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர, சர்வதேச ரீதியான போரில் ஈடுபட்டதில்லை. இதன் மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தலாமே தவிர அவர்களை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது’’என்று தீர்ப்பு கூறினார். 
    இருப்பினும், விடுதலைப்புலிகளுக்கு பணம் திரட்டியதற்காக, குற்றம் சாட்டப்பட்ட 5 தமிழர்களுக்கும் 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 
    ஹேக் நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு குறித்து, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் `வாஷிங்டன் போஸ்ட்' கருத்து தெரிவித்து உள்ளது. அதில், இந்த தீர்ப்பு சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த தீர்ப்பின் அடிப்படையில், தங்கள் மீதான தடைகளை நீக்கிக்கொள்ள விடுதலைப்புலிகள் முயற்சி செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 
    பின்னர் தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த வக்கீல் விக்டர் கோப், ’’விடுதலைப்புலிகள், ஐரோப்பிய நாடுகள் ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெறக்கூடாத இயக்கம் என்பதே தீர்ப்பின் அடிப்படை’’ என்று விளக்கம் அளித்தார். 
    குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் விக்டர் கோப், ’’லிபிய அதிபர் கடாபியை எதிர்த்து போரிட்ட விடுதலை போராளிகளுக்கு ஒப்பானவர்கள், விடுதலைப்புலிகள்’’ என்று வாதிட்டார்.  


    தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்று, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர்ப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த தடையை விரைவில் நீக்குவதற்கு முதல் படியாக, இந்த தீர்ப்பு பார்க்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்



    அது பற்றி குறிப்பிட்ட நீதிபதி, ’’நெதர்லாந்து (டச்சு) சட்டப்படி விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்து முடியாது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை இவர்களுக்கு பொருந்தும் என்பதால், விடுதலைப்புலிகளுக்காக அவர்கள் பணம் சேர்த்தது சட்ட விரோதமாகிறது’’ என்று கூறி இருக்கிறார். 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...