|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 January, 2014

80ஆண்டுக்கு மேலாக கெடாமல் இருக்கும் பாம்பு விஷம்!

நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் ‘பையட்டா’ மற்றும் ரத்த அழுத்தத்துக்கு கொடுக்கப்படும் ‘கேப்டோபிரில்’ ஆகிய மருந்துகளில் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்த குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், 52 விஷ மாதிரிகளை ஆய்வு செய்தனர். அப்போது 80 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள விஷத்திலும், உயிரியியல் ரீதியான செயல்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், உரிய முறையில் பாதுகாத்து வைக்கப்படும் பாம்பு விஷத்தை பல்வேறு ஆண்டுகளை கடந்தும் வின்ஞான ரீதியாக பயன்படுத்த முடியும் என்பதை வின்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

படம் சொல்லும் சேதி

வர்ணம் கொடியில் மட்டுமே
இன்னும் ஏழ்மையீன் வாழ்க்கையில் இல்லை
என்பதை விளக்க இந்த படம் போதும்!

28 January, 2014

இனி, தூக்குத் தண்டனை ஒழியும்!''

கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் போக்கில் அமைக்கப்பட்ட தண்டனை முறைகள் அநாகரிகமான காட்டுமிராண்டித்தனம் என்று உலகம் ஒப்புக்கொண்டாகிவிட்டது. ஆனாலும்கூட நாகரிகம் மிக்க சமுதாயமாக, மேன்மையான நடவடிக்கைகளை உலகுக்கு அறிமுகம் செய்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாடுகள், கொலைக்குத் தண்டனை மற்றொரு கொலை என்ற வகையில் மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றன.

 மகாத்மாவின் தேசத்தில்கூட மரண தண்டனை இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதை ஒழிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நீதியரசர்கள் என்று பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 13 வழக்குகளில் தொடர்புடைய 15 பேரின் மரண தண்டனையை ரத்துசெய்து, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு விரைவில் இந்தியாவில் மரண தண்டனையே ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில், முக்கியத்துவமான தீர்ப்பாக நிலைபெறப்போகும் இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கி உள்ளது. வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லப்படும் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் உள்ளிட்ட 15 பேரின் ரிட் மனு மீதான விசாரணையில்தான் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

தீர்ப்புக்குள் போவதற்கு முன், வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்கின் பின்னணியைப் பார்த்துவிடலாம். தமிழகம், கேரளம், கர்நாடகம் என மூன்று மாநில எல்லைப் பகுதியில், சந்தனக் கடத்தல் வீரப்பன் தனி அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்த 90-களின் காலகட்டம் அது. வீரப்பனின் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழக-கர்நாடக அரசாங்கங்கள், வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அமைத்து இருந்தன. அவர்கள், எப்பாடுபட்டாவது வீரப்பனைப் பிடித்துவிட வேண்டும் என்ற வேட்கையில் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்தனர். அவர்களை, 1993-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி, தமிழக-கர்நாடக எல்லையில், மேட்டூர் அருகே உள்ள பாலாறு என்ற இடத்தில் வீரப்பனின் கூட்டாளிகள் கண்ணி வெடி வைத்து சிதறடித்தனர். அந்தக் கொடூரத் தாக்குதலில், 22 பேர் பலியானார்கள். கர்நாடக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் டி.ஹரிகிருஷ்ணா, சப்-இன்ஸ்பெக்டர் சகீல் அஹமது உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் பலர் மரணமடைந்தனர். தமிழக அதிரடிப்படையின் பக்கம், போலீஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள், தாக்குதலுக்கு உதவியவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு மொத்தம் 123 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் கர்நாடக எல்லைப் பகுதி என்பதால், மைசூர் தடா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில், 12 பெண்கள் உள்பட 109 பேர், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில், ஆறு பேர் தண்டனைக்குரிய காலத்தை வழக்கு நடந்தபோதே சிறையில் கழித்துவிட்டதால், அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்தான் மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகியோர். மைசூர் தடா நீதிமன்றம் வழங்கிய இந்தத் தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இதை எதிர்த்து வீரப்பனின் கூட்டாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், பி.என்.அகர்வால் ஆகியோர் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தனர். அவர்கள் தங்களுடைய தீர்ப்பில், 'மனுதாரர்கள் நால்வரும் சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் காரியத்தை, பயங்கரமான முறையில் செய்துள்ளனர். இது மிகப்பெரிய குற்றம். இவர்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை இவர்கள் செய்த குற்றத்துக்குப் போதாது. இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டனர். இந்தத் தீர்ப்பு குற்றம்​சாட்டப்​பட்ட நான்கு பேருக்கு மட்டுமல்ல; இந்தியாவில் மரண தண்​டனையை எதிர்நோக்கிக் காத்​திருக்கும் 414 பேருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து இவர்கள் நான்கு பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். ஒன்பது ஆண்டுகளாக அந்த மனுக்களின் மீது ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதுவரை இவர்கள் நான்கு பேரும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன், இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். 'ஜனாதிபதி தங்களின் கருணை மனுக்களை காலம் கடந்து தள்ளுபடி செய்தது செல்லாது’ என்று குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவும், தங்கள் வழக்கை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று மறுசீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அந்த ரிட் மனு விசாரணை மீதான தீர்ப்புதான் வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட 414 மரண தண்டனைக் கைதிகளின் கடைசித் துளி நம்பிக்கையாக இருந்தது.

அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. இவர்களைப்போல், மொத்தம் 13 ரிட் மனுக்கள் மீதான விசாரணை கடந்த 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள், 'தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் 72/161 ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வழங்கி உள்ளது. அதைப் பயன்படுத்தி கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டியது ஜனாதிபதி அல்லது ஆளுநரின் கடமை. தவிர, அவர்களுக்கு தனிப்பட்ட உரிமை என்று எதுவும் இல்லை. அதுபோல், மரணதண்டனைக் கைதிகளும் அரசியலமைப்பின் 72/161 சட்டவிதியின்படி சில உரிமைகளைப் பெற்றவராகிறார். அவர்களுக்கு கருணை மனுவை விண்ணப்பிக்க அந்தச் சட்டம் உரிமை அளிக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஜனாதிபதியும் ஆளுநரும் எப்போது வேண்டுமானாலும் கருணை மனுவில் முடிவெடுக்கலாம் என்று கால நிர்ணயம் எதையும் அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் நிர்ணயிக்கவில்லை. இதற்கு அர்த்தம் என்னவென்றால், நியாயமான காலத்துக்குள் அவர்கள் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்பதுதான். இந்தச் சூழலில் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நியாயமில்லாத, விளக்கம் அளிக்க முடியாத அபரிமிதமான கால அவகாசம் உரியவர்களால் எடுத்துக் கொள்ளப்படுமானால், அதில் தலையிட்டு அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமையாகும். தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு அரசியலமைப்பு வழங்கி உள்ள உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ள பல மரண தண்டனைக் கைதிகள் தனிமைச் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டு அடிப்படைச் சிந்தனைகளைக்கூட சிந்திக்க முடியாத வகையில் உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களை தூக்கில் போட சட்டத்தில் இடம் இல்லை. எனவே, அவர்களுக்கும் தண்டனை குறைக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டனர்.உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு, இந்தியச் சிறைகளில் உள்ள 414 மரண தண்டனை கைதிகளின் தலையெழுத்தையும் மாற்றும் என்று நம்பப்படுகிறது.

அவரவர் 'வலி' அவருக்கு...

எல்லோருக்கும் கார் ஒட்ட ஆசை வந்தது தப்பில்லை ஆனால் அதற்கான ரோடு கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறதா என்பதே கேள்வி.யார் மீதாவது மோதாமல் யாருடைய வாகனத்தின் மீதாவது மோதாமல் அல்லது மோதல் வாங்காமல் வீடு திரும்பினால் இப்போதெல்லாம் அது அதிசயத்தில் சேத்திதான்.போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த காவல்துறை போலீஸ்காரரின் கால் மீது டிரைவர் ஒருவர் காரை ஏற்றிவிட்டார்.வலியால் துடித்த போலீஸ்காரர், காலை கார் டயரில் இருந்து விடுவித்துக்கொண்ட அடுத்த நிமிடம் காரைத்திறந்து டிரைவருக்கு கொடுத்தார் பாருங்கள் ஒரு மிதி, இனி ஜென்மத்திற்கும் யார் கால் மீதும் காரை விடமாட்டார்.போலீஸ்காரர் என்பதால் மிதித்துவிட்டார், இதுவே 'பப்ளிக்' என்றால் அவரை கூட்டிப்போய் ஸ்டேஷனில் வைத்து மிதி மிதி என்று மிதிப்பார்கள்.

27 January, 2014

இயற்க்கை இருக்க செயற்கையை நாடும் நமது அரசு

விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு திருட்டு!


கடந்த சனிக்கிழமையன்று ஐதராபாத்தின் மத்திய பகுதியிலுள்ள பஞ்சகுட்டா பகுதியில் உள்ள டனிஷ்க் நகைகடையில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்திருந்தது. அச்சம்பவத்தில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினரோ 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தான் கொள்ளை போனதாக தெரிவித்தனர்.

கொள்ளை நடந்த ஒரு நாளுக்கு பின் திடீர் திருப்பமாக முன்னணி தெலுங்கு செய்தி சேனல் அலுவலகத்துக்கு வந்த கிரண்குமார் என்ற 23 வயது நபர், அக்கொள்ளை சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக கூறினார். தான் சரணடைய விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதுமட்டுமன்றி செய்தி சேனல் குழுவினரை தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்று கொள்ளையடித்த நகைகளை காண்பித்தார்.

பின்னர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் மக்களின் கவனத்தை ஈர்க்கவே தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார். நாட்டை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை பார்த்து தான் வேதனையடைந்ததாக கூறிய அவர் தனக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தெரிவித்தார். ஒரு நாளில் தான் கொள்ளையடித்தாகவும், அரசியல்வாதிகள் வருடக்கணக்கில் கொள்ளையடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

26 January, 2014

ஜெ.. ர்.. ரி..

இங்கிலாந்தின் நடுவில் நியுவார்க் (Newark) என்ற பகுதியில் உணவு பரிமாறிய வெள்ளைக்காரரின் கையில் தமிழில் பச்சை குத்தியிருந்தது. அவரிடம் பேசியதில் "ஏதாவது வித்தியாசமாக பச்சை குத்த நினைத்தேன். இந்த மொழியின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி" என்றார். "இது என்னுடைய பெயர். பாருங்கள்.. ஜெ.. ர்.. ரி.." என்று உச்சரித்துக்காட்டினார். தமிழன் என்று சொல்லி தமிழ் பேச வெட்கப்படும் எம்மவர்கள் இந்த ஜெர்ரியைப் பார்த்தாவது மனம் மாறுகிறார்களா பார்ப்போம்..தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா!

அன்பினால்தான் நீங்கும்...

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சிறு ஒட்டலின் உணவு பண்ட பட்டியலை எழுதும் போர்டில்,எந்த காலத்திலும் பகைமை என்பது பகைமையினால் நீங்குவது இல்லை அன்பினால் மட்டுமே நீங்கும்' என்று அர்த்த செறிவோடு எழுதிவைத்துள்ளனர்.

25 January, 2014

65 வது குடியரசு தின வாழ்த்துக்கள்.


கண்கள் பனிக்குமா? இதயம் இனிக்குமா?


வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம்! ஜனவரி 26!!

இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல்  விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் :
சேர்ந்து உருவான அற்புதம் :
காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை . மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள்,அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள் ;பல்வேறு விவாதங்களுக்கு பிறகு,மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது .
117,369 வார்த்தைகளோடு மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் உருவாகி முடிந்ததும் "அரசியலமைப்பு சட்டம் செயல்படுவதற்கு ஏற்றது என்றே எண்ணுகிறேன். அது நெகிழும் தன்மை கொண்டிருந்தாலும் இந்தியாவை இது பிணைத்திருக்கிற அளவுக்கு வலிமையானது. ஏதேனும் புதிய அரசியலமைப்பின் கீழே தவறாக போகுமென்றால் அதற்கு அரசியலமைப்பு சட்டம் காரணமாக இருக்குமென்று நான் சொல்ல மாட்டேன்.  மனிதர்கள் இழிவான வகையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டி இருக்கும் !"
வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் :
உலகின் எந்த நாட்டிலும் அதற்கு முன் நடந்திருந்த ஒரு செயலை இந்தியர்கள் முன்னெடுத்தார்கள். வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் முதல் தேர்தலிலேயே எந்த அரசும் அதற்கு முன்னர் வாக்குரிமை தந்ததில்லை. அதிலும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்த சூழலில் அது வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் என்றே வர்ணித்தார்கள். மக்களுக்கு அறிமுகமான சின்னங்கள், தனித்தனி வண்ண பெட்டிகள் ஆகியவற்றின் 

மூலம் நடந்த தேர்தலில் 4,500க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள்  முடிவு செய்யப்பட்டார்கள். சூதாட்டம் சூப்பராகவே முடிந்தது !
பொது இந்து சிவில் சட்டம்-அம்பேத்கரின் கனவு நேருவாக்கிய நினைவு :
இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காங்கிரஸும், காந்தி மற்றும் நேருவும் மிகத்தெளிவாக இருந்தார்கள். காந்தியின் மறைவு அந்த எண்ணத்தை இன்னமும் வலுப்படுத்தவே செய்தது.   குடியரசான ஒரு வருடத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை,பல தார திருமணத்துக்கு தடை,ஜீவனாம்சம்,விவாகரத்து ஆகியவற்றுக்கு உரிமை ஆகியவற்றை சாதிக்க முனைந்தார்கள். வலதுசாரிகளின் எதிர்ப்பு தடுக்கவே நான்கு வருடங்கள் கழித்து தனித்தனி சட்டங்களாக பிரித்து அவற்றை நிறைவேற்றினார் நேரு. அம்பேத்கர்  நேரு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி  பிரிந்து சென்று எதிர்க்கட்சி பக்கமிருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தார். !
மொழிவாரி மாநிலங்கள்-எஸ் ! தேசிய மொழி-நோ நோ  :
மொழிவாரியாகவே காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிராந்திய அமைப்புகளை நடத்தியது. மொழிவாரியான மாநிலங்கள் கட்டாயம் தருவோம் என்று வாக்குறுதி தந்திருந்தார்கள். மதரீதியாக நாடு பிளவுபட்டதால் அந்த யோசனையை கிடப்பில்
போட்டார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் மீண்டும் மொழிவாரி மாநில கோரிக்கையை எரிய விட்டது. அவரின் மரணம் அதை பெருந்தீயாக ஆக்கியது. முதலில் நேரு முரண்பட்டாலும் பின்னர் பெருவாரி மக்களின் கோரிக்கையை ஏற்று மொழிவாரி மாநிலங்களுக்கு ஒத்துக்கொண்டார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என்பதை மொழி அடிப்படையில் மாற்றந்தாய் மனோபாவம் காட்டப்பட்டு தனி நாடாக பிரிந்த வங்கதேசம் நிரூபித்தது. இந்தியா அப்படியே உயிர்த்து நிற்கிறது.

அதே போல தேசிய மொழியாக இந்தி என்று எழுந்த கோரிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் ஏற்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் மட்டுமே இன்னமும் இந்தியாவில் உண்டு. தேசிய மொழி இந்தி என்று யாராவது சொன்னால் "சட்டமும்,வரலாறும் தெரியுமா உனக்கு ?" என்று கேட்டு பின்னுங்கள்
இந்திராவின் எமெர்ஜென்சி, கோமாவுக்கு போன ஜனநாயகம் :
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள் ; பிரதமர் நாற்காலியை காலி செய்யுங்கள் என்கிற ரீதியாக ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கோர்ட் சொல்லியிருந்தது. கேசவாநந்தா பாரதி வாழ்க்கை அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் சொல்லவே தலை கிறுகிறுத்தது இந்திராவுக்கு ! மன்னர் மானியம் நீக்கியதும் தவறு என்று கோர்ட் சொல்லியது ஒரு பக்கமென்றால் ஜெபி மற்றும் மாணவர்கள் நாடுமுழுக்க போராட்டங்களை முன்னெடுக்க உள்நாட்டு கலகம் இருந்தால் எமெர்ஜென்சி அறிவிக்கலாம் என்பதை பயன்படுத்தி எல்லா உரிமைகளையும்  பறித்தார். அமைச்சரவையை கூட கலந்து ஆலோசிக்காமல் நடந்த அநியாயம் அது.
பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாமும் போனது. கோர்ட்கள்,அதிகாரிகள்  மவுனம் சாதித்தனர் ; எதிர்த்த நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை போனார்கள்.  இந்தியாவின் இருண்ட பக்கங்கள் அவை. பிரதமர் முதலிய முக்கிய பதவிகளில்  கோர்ட் விசாரிக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் திருத்தப்பட்டன. பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது
மீட்கப்பட்ட மாட்சிமை :
தேர்தல்கள் வந்ததும் மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். முப்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை காலி செய்திருந்தார்கள். இந்திராவே தோற்றுப்போனார். இந்திரா செய்த திருத்தங்கள் திரும்பபெறப்பட்டன. உள்நாட்டு கலகம்,ஆயுத புரட்சி ஏற்பட்டால் மட்டுமே எமெர்ஜென்சி என்று ஆனது. கேபினட் அனுமதி வேண்டும்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இரண்டும் அவசியம் என்றும் மாற்றினார்கள். ஒரு வருட எமெர்ஜென்சி நீட்டிப்பு ஆறு மாத கால நீட்டிப்பு என்று குறைக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் காப்பற்றப்பட்டது. பிரதமர் முதலிய பதவிகளை எந்த வகையான விசாரணையில் இருந்தும்  காத்த சட்டங்கள் கழித்துக்கட்டப்பட்டன
நியாயம் காக்கும் நீதிமன்றம் :
எண்பதுகளுக்கு முன்னர்வரை பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தனக்கு நீதிவேண்டி கோர்ட் வாசலை தொட முடியும். பீகாரில் கைதிகள் சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்களின் சார்பாக கோர்ட் வாசல் ஏறினார் ஹூஸ்னாரா எனும் வழக்கறிஞர். பொது நலன் மனு என்கிற கருத்தாக்கம் எழுந்தது அப்பொழுது தான்.  பொது மக்களின் நலன் பாதிக்கப்படுகிற பொழுதோ,அல்லது நியாயம் கேட்டு கோர்ட் படியேற பாதிக்கப்பட்ட எளியவர்களால் முடியாத பொழுதெல்லாம் பொது நல வழக்குகள் தான் ஒரே ஆறுதல்
உள்ளாட்சியின் மூலம் சுயாட்சி :
காந்தியின் கிராம சுய ராஜ்யத்தை அது சாதியத்தை வளர்க்க கூடும் என்று அப்பொழுது அமல்படுத்தாமல் நேரு நகர்ந்தார். மேற்கு வங்கமும், கேரளாவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி அதிகார பரவலாக்கலை சாதித்தன. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை மாற்றி கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மாற்றியது இன்னுமொரு முக்கிய தருணம்.
எளியவர்கள் அதிகாரத்தின் கரங்களை கொடுப்பதை சாதித்தது.

சமூக நீதி காத்த வி.பி.சிங் :
முந்தைய ஜனதா அரசு கொண்டு வந்திருந்த மண்டல் கமிசனின் இருபத்தி ஏழு சதவிகித இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார் வி.பி.சிங். பல்வேறு உயர்சாதியினர் போராட்டத்தில் குதித்தார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. ஆனாலும்,சமூக நீதிக்கான முன்னெடுப்பு சட்டமாகி சாதித்தது. அரசுகள் பல மாறினாலும் அச்சட்டத்தை மாற்ற யோசிக்கவே செய்கின்றன. க்ரீமி லேயர் என்று கோர்ட் மட்டும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை தள்ளியே வைத்திருக்கிறது.
இரும்புத்திரைகளை கிழித்திடும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் :
"ஏண்டா கொண்டு வந்தோம் !" என்று காங்கிரசே கதிகலங்கி இருக்கும். நிர்வாகத்தில் ஒழுங்கை கொண்டு வர அது மக்களுக்காக இயங்க ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம். அதை சாதிக்க வெகுகாலம் கழித்து நிறைவேற்றப்பட்டது இந்த அற்புதம். எளியவர்களின் ஆயுதமானது இது. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்,கால தாமதங்கள்,ஊழல்கள் எல்லாமும் வெளியே வந்து தலைக்கு மேலே இருக்கும் சட்டத்தின் கத்தியானது இச்சட்டம்

''எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல!'' - விழிப்புணர்வு பிரச்சார ஆல்பம்



எந்த நாட்டு மீனவனுக்கும் இத்தனை இன்னல்கள் நேர்வது இல்லை?

யுத்தக் கைதிகளை விடுவிப்பதைப் போல, தமிழக மீனவர்களைப் படிப்படியாக விடுவிக்கிறது இலங்கை அரசு. அவர்கள் கரை சேரும் முன்பே நாகப்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். உலகத்தின் எந்த நாட்டு மீனவனுக்கும் தினம்தோறும் இத்தனை இன்னல்கள் நேர்வது இல்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அவனது சொந்த நாடு அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இல்லை. அலைகடலில் பாடு பார்க்கச் செல்பவர்கள் வாழ்வே பெரும் துயரம். அவர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தும் வன்முறை... கொடும் துயரம்!
டெல்லியில் அரசு மற்றும் மீனவர் தரப்புப் பேச்சுவார்த்தைகளின் நல்லிணக்க அடையாளமாக, இரு தரப்பில் இருந்தும் தலா 52 மீனவர்களை இந்திய - இலங்கை அரசாங்கங்கள் விடுவித்திருக்கின்றன. இன்னும் 223 தமிழ் மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலை ஒரு பக்கம் என்றால், வருடம் முழுக்க நடக்கும் கொத்துக் கொத்தான வன்முறைகளும் கைதுப் படலமும் தென் தமிழகக் கடற்பரப்பை அறிவிக்கப்படாத யுத்தப் பகுதியாக மாற்றியிருக்கிறது.''போன மாசம் எங்க ஊரைச் சேர்ந்த 18 பேரை இலங்கை அரசு பிடிச்சுட்டுப் போச்சு. அதுல என் மகன், மருமகன், அக்கா பிள்ளைனு எங்கக் குடும்பத்தைச் சேர்ந்தவங்களே எட்டு பேர். அன்னாடம் கடல்ல மீன் பிடிச்சுக் காசு கொண்டுவந்தாத்தான் அடுப்புல உலை கொதிக்கும். இப்போ சாப்பாட்டுக்கும் வழி இல்லாம, எப்போ அவங்க வருவாங்கன்னும் தெரியாம தவிச்சிட்டு இருக்கோம்!'' - கண்ணீரோடு புலம்புகிறார் பாம்பனைச் சேர்ந்த 55 வயதுப் பெண் சகாயம்.
எனக்கும் என் மூணு குழந்தைகளுக்கும் அவர் ஒருத்தர் சம்பாத்தியத்துலதான் சாப்பாடு. ரெண்டு மாசம் முன்னாடி அவரை அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிட்டாங்க. தினம் தினம் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கோம். எங்களுக்காகப் பரிந்து பேசவோ, உதவவோ யாரும் இல்லை. நாதியத்துப் போயிட்டோம். இந்தக் குழந்தைங்களோட நான் எப்படி வாழப்போறேன்?''- விசும்புகிறார் தங்கச்சிமடம் அலோன்ஷியா.என்ன நடக்கிறது தென் கடலில்?
பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்டத்தின் நீரோடி வரை 1,078 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில், சுமார் 8 லட்சம் மீனவ மக்கள் கடலை நம்பி வாழ்கிறார்கள். இவர்களில் மீன் பிடிக்கச் செல்பவர்களை, 'தமிழக மீனவர்கள், எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்’ எனச் சொல்லி, கைதுசெய்கிறது இலங்கை ராணுவம்.
1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீதான தனது முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. 2012-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 500 மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர். அரசியல் அழுத்தம் காரணமாக இப்போது சுட்டுக்கொள்வது இல்லையே தவிர, தமிழக மீனவர்களை அடித்து உதைக்கிறார்கள்; படகை உடைக்கிறார்கள்; வலையை அறுக்கிறார்கள்; மீனவர்களை உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நசுக்குகிறார்கள். ஜாமீனில் வெளிவர முடியாத ஊடுருவல் வழக்குகளில் கைதுசெய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை, நாட்டுடைமையாக்குவதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது இந்த யுத்தத்தின் புது வடிவம்.
''கடலில் மீன் பிடிக்கும்போது கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் என்று வகுத்துக் கொண்டு மீன் பிடிப்பார்கள். பெரும்பாலும் நாட்டுப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிப்பது இல்லை. விசைப்படகுகளால் மட்டுமே ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 18 நாட்டிக்கல் மைல் கடல் தொலைவு உள்ளது. 12 மைல் தூரம் வரை உள்ளூர் எல்லையாகவும், அதன் பிறகு சர்வதேச எல்லையாகவும் கணக்கிடப்படுகிறது.
சராசரியாக ஒரு விசைப்படகு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வலை விரித்தால் 20 நாட்டிக்கல் மைல் வரை அந்தப் படகு மிகச் சாதாரணமாகப் பயணப்படும். இந்தப் பயணம் மீனவர் விரும்பியோ, திட்டமிட்டோ நடப்பது இல்லை. கடல் நீரோட்டம் படகை இழுத்து வந்துவிடும். இந்த நீரோட்டம்தான் எங்களின் தொழிலைத் தீர்மானிக்கும். உண்மையில் இலங்கை கைதுசெய்வது என்றால், கடல்நீரைத்தான் கைதுசெய்ய வேண்டும்!'' என்கிறார் நாகையைச் சேர்ந்த சுந்தர். இலங்கை அரசு, இதுவரை விசைப்படகு மீனவர்களை மட்டுமே கைதுசெய்து வந்தது. இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் கைதுசெய்கிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் நாட்டுப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ரூபன், ''இலங்கை மீனவர்களோடு சகோதரர் களாகப் பழகி வருகிறோம். அவர்களின் கோபம் எல்லாம் விசைப்படகுகள் மீதுதான். அவர்கள், தங்களின் மீன் வளத்தைச் சூறையாடுவதாக நினைக்கிறார்கள். இலங்கையில் விசைப்படகுகள் பயன்பாட்டில் இல்லை. நமது விசைப்படகுகள் சில இழுவை மடிகளைப் பயன்படுத்துகின்றன. இதன் கண்ணிகள் நெருக்கமானவை. இதில் மீன் குஞ்சுகள்கூட தப்பாது. அதோடு கூட்டமாக வாழும் கணவாய் பார்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்துவிடுகிறார்கள். இதனால் மீன் வளம் அழிந்துவிடும் என்று இலங்கை மீனவர்கள் பயப்படுகிறார்கள். சில விசைப்படகு மீனவர்களின் பேராசையால் பல லட்சம் மீனவர்களுக்கு பாதிப்பு. இப்போது நாட்டுப்படகு மீனவர்களையும் இலங்கை அரசு குறிவைக்கத் தொடங்கியுள்ளது!'' என்கிறார்.
விசைப்படகுகள்தான் வில்லனா?
சுதந்திர இந்தியாவில் 1950-களில் நார்வே நாட்டின் உதவியுடன் அறிமுகமானது 'டிராலர்’ எனும் விசைப்படகு. உடல் உழைப்பைக் குறைத்து இயந்திர மீன்பிடியை அறிமுகம் செய்தது, இந்தோ நார்வீஜியன் திட்டம் (Indo Norwegian Project). இரண்டாம் உலகப் போரில் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அப்புறப்படுத்த இழுவை மடிகள் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்த பின் அவை இந்தியாவில் மீன் பிடித் தொழிலில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் இழுவை மடிகளுக்குப் பெரிய வரவேற்பு  இல்லை. 80-களுக்குப் பிறகு பரவலாக விசைப்படகையும் இழுவை மடிகளையும் தமிழக மீனவர்களில் வசதியானவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். 'இழுவை மடிகள் மீன்களை, குஞ்சுகளை, முட்டைகளை அழிக்கின்றன’ என்று குற்றச்சாட்டு எழுந்து, தமிழகக் கட்டுமர மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் அரசு தலையிட்டு விசைப்படகுகளுக்கு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து, இரட்டை மடி, சுருக்கு மடி எனப்படும் மிகக் சின்னக் கண்ணிகொண்ட வலைகள் தடை செய்யப்பட்டன.
விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கைத் தரப்பு மீனவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு குறித்து பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் சேசுராஜா என்ன சொல்கிறார்?
''தமிழக மீனவர்கள், இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்துவது இல்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக மூன்று முறை இலங்கைத் தரப்பு மீனவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். சில சமயம் அவர்களின் வலைகளை விசைப்படகுகள் அறுத்து விடுகின்றன என்பது உண்மைதான். அதற்காக மொத்தத் தொழிலையும் நிறுத்தச் சொன்னால் எப்படி? இந்தப் பிரச்னை வராமல் இருக்க, வாரத்தின் ஏழு நாட்களில் மூன்று நாட்கள் விசைப்படகுகளும், நான்கு நாட்கள் நாட்டுப்படகுகளும் கடலில் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று உடன்பாடு செய்து கொண்டோம். ஆனால், அதற்கு இலங்கை மீனவர்கள் சம்மதிக்கவில்லை. காரணம், அங்குள்ள மீனவர் சங்கங்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, அரசியல் நோக்கங்களோடு செயல்படுவதுதான்'' என்கிறார்.
இது அறிவிக்கப்படாத போர்!
ஈழப் போராட்டம் வேர்விட்ட 1980-களில் அதன் முதுகெலும்பாக இருந்தது, பாக். நீரிணைக் கடல் பகுதியும், அதில் வலம் வந்த தமிழக மீனவர்களும். அப்போது தமிழகம் வந்து செல்லவும், ஆயுதங்களைத் தடையின்றி எடுத் துச்செல்லவும் புலிகளுக்குத் தமிழக மீனவர்கள் தேவைப்பட்டார்கள். கடற்புலிகள், இலங்கை ராணுவத்துக்கு சவாலாக வளர, இந்தக் கடலும் மீனவர்களும் முக்கியக் காரணம் என்பது நிதர்சனம். எனவே, மீண்டும் வலுவான ஓர் ஈழப் போராட்டம் உருவாகாமல் தடுக்க நினைக்கிறது இலங்கை அரசு. எனவே, தங்களின் ஒடுக்குமுறையைத் தமிழகத்து மீனவர்களிடமும் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ராமேஸ்வரம் கடல் பகுதியைத் தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதையே தடுக்க நினைக்கிறது இலங்கை அரசு. விசைப்படகு, இழுவை மடிகள், எல்லை தாண்டுதல் என்ற பிரச்னைகளுக்கு அப்பால், இதுதான் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு முதல் காரணம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தன் கடற்பரப்பை தமிழக மீனவர்கள் கபளீகரம் செய்வதாகக் கூறும் இலங்கை அரசு, முல்லைத் தீவுக் கடற்பகுதியைத் தென் இலங்கை சிங்கள மீனவர்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட இழுவை மடிகள், விசைப்படகுகளை அவர்கள் பயன்படுத்துவதோடு வடபகுதி ஈழத் தமிழ் மீனவர்களைத் தாக்கவும் செய்கிறார்கள். தன் கடலில் சீனப் படகுகளை அனுமதித்துள்ள இலங்கை அரசு, இந்தியாவைச் சார்ந்த வேறு மாநில விசைப்படகுகளை எதுவுமே செய்வது இல்லை.
'30 வருடங்களாகத் தொடரும் இந்தப் பிரச்னையை இரு தரப்பு மீனவர்களும் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறது இந்திய அரசு. ஆனால், ஏற்கெனவே இரு தரப்பு சந்திப்புகளிலும் எட்டப்பட்ட தீர்வுகளை நிராகரித்துவிட்டது இலங்கை அரசு. அதை வற்புறுத்தவோ, அதட்டவோ இந்தியாவுக்கு மனம் இல்லை.
''ராமேஸ்வரம், நாகை, தஞ்சையில் உள்ள படகுகளை கடலில் நீளமாக அடுக்கினாலே அதன் மீதேறி நாம் நடந்தே இலங்கைக்குச் சென்றுவிட முடியும். அவ்வளவு குறுகிய கடல்பரப்புதான் இரு கரைகளுக்கு மத்தியிலும் இருக்கிறது. இலங்கை மீனவர்களுக்குத் தேவையான சூறை, கட்டா போன்ற மீன்கள் நமது கடலிலும், நமக்குத் தேவையான கணவாய், இறால், ஊழி போன்றவை இலங்கைக் கடற்பரப்பிலும் கிடைக்கின்றன. காலங்காலமாக அவர்கள் இங்கும், நாம் அங்கும் மீன் பிடிப்பது வாடிக்கை. ஏனென்றால், மீனவர்களுக்கு எல்லை, கடல் அல்ல... மீன்கள்தான். இலங்கை அரசு நமது மீனவர்களைக் கைதுசெய்வது போல இந்தியாவும் இலங்கை மீனவர்களைக் கைதுசெய்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக இரு அரசுகளும் நடந்துகொள்கின்றன. முதலில் இரு நாடுகளிலும் உள்ள மீனவர்களைப் படகுகளோடு விடுவிக்க வேண்டும். அதற்கு இந்தியா, இலங்கையை வற்புறுத்த வேண்டும்!'' என்கிறார் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் ராயப்பன்.
சுமார் 7,600 கிலோமீட்டர் கடற்கரையோடு மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்தியத் தீபகற்பத்தில், மீன்வளத் துறை அமைச்சகம் இல்லை என்பது வேதனை. குஜராத்தில் தொடங்கி தமிழகம் வரையுள்ள பல்லாயிரம் கடல் மைல் தொலைவைக் கட்டுப்படுத்துவது விவசாயத் துறையும் வனத் துறையும்தான். மாநில அரசுக்கு மீன்வளத் துறை அமைச்சகம் இருந்தாலும்கூட அதற்குக் கடல் மீது எந்த அதிகாரமும் இல்லை. தமிழகக் கடல் மீது தமிழக அரசு கொண்டிருக்கும் உரிமையைவிட இலங்கை அரசு கொண்டிருக்கும் உரிமைதான் அதிகம். இந்த நிலை எப்போது மாறும்? தமிழக மீனவனின் துயரம் எப்போது தீரும்? விடை தெரியவில்லை.
மீனவர் சகாயம் எழுதிய கவிதை ஒன்று இந்த நிலையை இப்படி விவரிக்கிறது.  
எங்கள் கலங்கள் போருக்குப்
போகவில்லை
ஆனால் கரையிலும் கடலிலும்
ரத்தக்களறிகள்!


கச்சத்தீவு தீர்வாகுமா?
நினைவு எட்டாக் காலம் தொட்டே கச்சத்தீவு இரு நாட்டு மீனவர்களுக்கும் பயன்பட்டு வந்திருக்கிறது. முன்பு முத்துக்குளித்தலின் தங்கு துறையாகவும், வலைகளைக் காயப்போடவும், மேய்ச்சல் நிலமாகவும் பயன்பட்ட கச்சத்தீவை, போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், சேதுபதி மன்னர்களுமாக ஆட்சி செய்தனர். ஆவணரீதியாக ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானதாக கச்சத்தீவு இருந்து வந்தது. இந்தத் தீவை, 1974-ல் இந்திரா காந்தி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கினார். இந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் அனுபவிக்கும் உரிமைகள் தொடரும் என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மீன்பிடி, வலை உலர்த்தல் போன்ற பிரத்தியேகமான உரிமைகள் தொடர்பாக இந்த ஒப்பந்தம் மௌனம் காக்கிறது. கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் வருடாவருடம் வழிபாடு நடத்துவதைத் தவிர, அதை நெருங்கும் உரிமைகூட தமிழக மீனவர்களுக்கு இல்லாதபடி ஒப்பந்தத்தின் ஷரத்துகள் பலவீனமாக உள்ளன. மீனவர்மீதான தாக்குதல் உச்சம் அடைந்த பின்னர் இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு!
இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன?
''30 ஆண்டுகாலப் போருக்குப் பின் எங்கள் நிலங்களை ராணுவம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யவிடாமல் செய்துவிட்ட பிறகு, கடலை மட்டுமே நம்பியுள்ளோம். நாங்கள் சிங்கள மீனவர்களாலும் தமிழக மீனவர்களாலும் ஒடுக்கப்படுகிறோம். தடை செய்யப்பட்ட வலைகள், விசைப்படகுகளை இரு தரப்பினரும் பயன்படுத்துகிறார்கள். தமிழக மீனவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. இரு தரப்பினரும் ஆத்மசுத்தியோடு இதைப் பேசித் தீர்க்க முடியும்'' என்கிறார் இலங்கையைச் சேர்ந்த மீனவர் சந்திரநேசன்.
என்ன செய்யலாம்?
விசைப்படகு மீன்பிடிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

சிறிய கண்ணி வலைகள் தடை செய்யப்பட்டு சதுரக் கண்ணி வலைகளை ஊக்குவிக்க வேண்டும்.

 கச்சத்தீவு ஒப்பந்தம் மீனவர் நலன் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும்.

 இலங்கை ராணுவத்தின் சுதந்திரமான நடமாட்டத்தை நமது கடல் எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

 நவீன மீன்பிடிக் கருவிகளை அறிமுகம் செய்யும் அதே நேரம், பாரம்பரிய மீன்பிடியை ஊக்குவிக்க வேண்டும்.

 ஒரு கடலின் இரு கரை மீனவர்களும் கடல் வளத்தைப் பங்கிடுவதை எந்த அரசுகளும் தடுக்கக் கூடாது; கைதுசெய்யக் கூடாது.

 ராமேஸ்வரம்-இலங்கை இடையே குறைவான எல்லையைக்கொண்ட கடலைக் கருத்தில்கொண்டு, புதிய கடல் கொள்கைகள் வகுக்க வேண்டும்.

இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை.


புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4- வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. 

விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர். பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச் சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை. ‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள். நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய எந்த வாரஇதழும் இச்செய்தியை வெளியிடவில்லை .. ஒருவேளை தொப்புளைவிட விவசாயம் தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம். இதுவே ஒரு சினிமா நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்றால் எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர கட்டவுட்டுகள் , வெடி என ஊரையே அமர்க்களப் படுத்தி இருப்பார்கள் ..

நடிகன்(ரஜனி)  சொந்தமா சாமிகும்பிட போனாலும்(திருப்பதி) நாட்டுமக்கள் நல்லா இருக்க  சாமி கும்பிட்டார். என விளம்பரபடுத்தும் மிடியாக்கள் (தினமலர்) இருக்க இதெல்லாம் ஒரு பொருட்டா? போங்க போங்க வேலை நிரையா இருக்கும்.  

இயற்கை அன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டாள்!

ஒரு நாள் என் வீட்டிற்குள் திடீரென சிலர் அத்துமீறி நுழைந்தனர், என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அவர்களை விட்டு விலகி வெகு தூரம் வேறு இடம் நோக்கி நகர்ந்தேன், அங்கும் மனிதர்கள் நுழைந்தார்கள், என்ன செய்வதென்று தெரியவில்லை, இங்கும் அங்கும் ஓடினேன், ஓடிய இடமெங்கும் மனிதத் தலைகளாகவே இருந்தது முடிந்தவரை போராடி இனிமுடியாது என்பதால், அவர்களில் சிலரை கொன்றேன், கொல்லும் போது நேருக்கு நேர் நின்று தான் கொன்றேன், ஆனால் எதிரிகள் கோழைகள் போலும், நான் ஏமார்ந்த நேரம் பார்த்து மறைந்து நின்று எதைக்கொண்டோ அடித்து காயப்படுத்தி என்னை கொன்றுவிட்டார்கள். எனக்கு இந்த பூமி மிகவும் பிடிக்கும். இனி மீண்டும் இறைவன் படைத்த இந்த அழகிய இடத்திற்கு திரும்புவேனா தெரியாது. மனிதன் துணை இல்லாமல் எங்களால் வாழ முடியும், ஆனால் எங்கள் துணை இல்லாமல் அவனால் வாழமுடியாது என்பதை அவன் எப்போது உணரப்போகிறான் என்பது தெரியவில்லை. ஆனல் காலம் வெகுவிரைவில் அவனுக்கு அதை உணர்த்தும், அவன் அழிவு நெருங்கிக்கொண்டிகின்றது. அத்துமீறி எங்கள் வீட்டிற்குள் குடியேறி வாழும் அவனை இயற்கை அன்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டாள் ,இவர்களின் அழிவு இயற்கையின் கையில் தான் என்பது உறுதி, வருகிறேன், இல்லை மன்னிக்கவும். செல்கிறேன்!.

24 January, 2014

21-ல இருந்து திண்டாட்டம்!

ம்ம பயலுக மாசக் கடைசியில பண்ற அட்ராசிட்டிஸ் இருக்கே..! ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பப்ப்ப்பா..! (நான் என்னையும் சேர்த்துச் சொன்னேன்) வாங்க ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
ஆபீஸ்ல எல்லோரும் ஒண்ணா டீ குடிக்கப் போனா பெரும்பாலான பக்கிகள் ஸ்லீப்பர் செல்லா மாறிடுவாய்ங்க. 'ரொம்ப சூடா இருக்குல்ல கோவிந்தா?’ எனச் சொல்லாத குறைதான். ஆறின டீயை நல்லா ஆத்தி ஆத்தி ஊதி ஊதிக் குடிப்பார்கள். சும்மா பர்ஸ் எடுக்கிற மாதிரி சீன் போட்டுட்டு, 'அட என்னங்க நீங்க... எப்போன் னாலும் நீங்களே பே பண்றீங்க’ என அலுத்துக்கொள்வது மாசக் கடைசி ஸ்டைல்.
'பர்ஸை வெச்சிட்டு வந்துட் டேன்’, 'பேன்ட்டை மாத்திப் போட்டு வந்துட்டேன்’, 'ஏ.டி.எம் ஒர்க் ஆகலை,’ 'நாளைக்குப் பணம் ஊர்ல இருந்து போட்டு விட்ருவாங்க’ எனக் கலவையாகப் பொய் சொல்வது மாசக் கடைசிக்காரர்களின் அடையாளம். அடுத்த தபா நண்பர்களோடு வெளியே கிளம்பும்போதே,  'எல்லோரும் பர்ஸ் எடுத்துட்டு வந்தீங்களா?’ எனக் கேட்டு வெளியே கிளம்புவது உங்கள் பர்ஸுக்குப் பாதுகாப்பு.
நடமாடும் ஏ.டி.எம்-மாய் இருக்கும் ஆபீஸ் ஆபத்பாந்தவனை இனம் கண்டு வைத்திருப்பார்கள். 'ஒரு 100 ரூபா கொடுங்க, 200 ரூபாவாக் கொடுத்தாக் கூட பரவால்ல. சம்பளம் வந்ததும் தந்திடுறேன்’ என அட்டாக் கொடுப்பார்கள். 1-ம் தேதி அந்த ஆளா வெட்கத்தை விட்டுக் கேட்டாலும்கூட, 'ஓ... 200 ரூபாயா வாங்கினேன். இருக்காதே... 100-னு நினைக்கிறேன். ஸாரி மறந்துட்டேன்’ என டயலாக்கையும் ஃபேஸ் எக்ஸ்பிரஷனையும் மாற்றிப்போட்டு டரியலாக்குவார்கள்.
பெரும்பாலும் 100 ரூபாய் மட்டுமே அக்கவுன்டில் பேலன்ஸ் இருக்கும். நொந்து நூடுல்ஸா இருக்கும்போது பைக் பஞ்சராகும். பெட்ரோல் ரிசர்வில் இருக்கும். சோப் தீரும். டூத் பேஸ்ட்டை ரோடு ரோலரில் வைத்துத் தேய்த்ததைப்போல பிதுக்குவார்கள்.
'சாமியே சப்பரத்துல போச்சாம். பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்’னு சொல்ற மாதிரி நாமளே கடன் வாங்க ஆள் தேடிட்டு இருக்கிறப்போ அசால்ட்டா, '500 ரூபா கிடைக்குமா பாஸ். 200 ரூபாயா இருந்தாக்கூட ஓகே. ஐ வில் மேனேஜ்’ என்று பீட்டர் விட்டுக் கடன் கேட்பார்கள் சிலர். நம்மளை நம்பிவந்து கடன் கேட்கும் அந்த ஆட்டை நினைத்து சிரிப்பதா அழுவதா எனக் குழம்பித் தவிப்பீர்கள்.
எஸ்.எம்.எஸ்-ல 'கிரெடிட்டட்’னு எப்போ மெசேஜ் வரும்னு அடிக்கடி ஓப்பன் பண்ணிப் பார்ப்போம். சில பக்கி சும்மானாச்சுக்கும் 'சேலரி கிரெடிட்டட்’னு அனுப்பிவெச்சு விளையாட்டுக் காட்டுவாய்ங்க.
ஒவ்வொரு மாசம் ஆரம்பிச்சதும் பொறுப்பு பொன்னம்பலமாய் 500 ரூபாய் நோட்டை எடுத்து 'மாசக் கடைசியில யூஸ் பண்ணுவோமுடா’னு பர்ஸுக்குள்ள ஒதுக்குப்புறமான ஏரியாவில் பதுக்கிவைப்பாய்ங்க. ஆனா அதை பானிபூரி கடையில் முதல் வாரத்திலே மாற்றிச் செலவு பண்ணுகிற அளவுக்கு பிஞ்சு நெஞ்சுக்காரய்ங்களா இருப்பாய்ங்க. செலவு பண்ணினதை மறந்துட்டு பர்ஸைக் கவிழ்த்துப்போட்டுக் கிணத்தைக் காணோம்கிற மாதிரி இல்லாத 500 ரூபாயைத் தேடோ, தேடுனு தேடுவாய்ங்க.  
தாடியை ஷேவ் பண்ண மாட்டாய்ங்க. செல்ஃப் ஷேவிங்கிற பேர்ல குதறிவெச்சிருவாய்ங்க. மாசத்தோட துவக்கத்துல க்ளீன் ஷேவ் பண்ணி சிம்பு ஃபேனா இருக்கிறவனுங்க மாசக் கடைசியில டி.ஆர் ஃபேனா மாறிடுவானுங்க.
24 மணி நேரமும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களோட, 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ என விடிய விடியக் கடலை வறுத்தவனுங்க மாசக் கடைசியில சிங்கிள் எஸ்.எம்.எஸ்-க்காக தேவுடு காத்துக் கிடப்பானுங்க.
மாச ஆரம்பத்தில் சரக்குல ஆரம்பிச்ச சண்டை, மாசக் கடைசியில் சிகரெட்ல ஒண்ணா சேருவாங்க. நட்பெல்லாம் மாசக் கடைசியில வலுப்படும். டீ கூட 1/2, 1/3, 1/4னு ஏகப்பட்ட தலைகீழ் விகிதங்களில் சாப்பிடுவாய்ங்க.
'நான் சரக்கடிக்கிறதை விட்டுட்டேன் மச்சி’னு சும்மா பீலா விடுவாங்க. அப்படியே அடிச்சாலும் 'கொஞ்சம் கொஞ்ச மாத்தான் குடியை நிறுத்தணுமாம். அதனால கட்டிங்ல பாதி சிட்டிங்’னு டயலாக் பேசி அளவாக் குடிக்கிறவங்க மாதிரி சீன் போடுவானுங்க.
சும்மாவே இந்த பேச்சிலர்ஸ் துவைக்க மாட்டாய்ங்க. மாசக் கடைசியில இருக்கிறதுலேயே அழுக்குக் கம்மியா இருக்கிற சட்டை பேன்ட்டைப் போட்டு பெர்ஃபியூம் அடிச்சு மேட்ச் பண்ணிக்குவாய்ங்க.
முக்கியமான மேட்டர் நண்பனே... ஆனாலும் யாரை நம்பியும் மாசக் கடைசியில் பைக்ல லிஃப்ட் கேட்டு பின்னாடி ஏறிப் போக முடியாது. ஒண்ணு பெட்ரோல் போடச் சொல்வாய்ங்க. இல்லைனா தள்ள விட்ருவாய்ங்க. மாச ஆரம்பத்தில் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட ஆளுங்க மாசக் கடைசியில் பாட்டில்ல பெட்ரோல் வாங்கி 50, 30 னு போட ஆரம்பிச்சிடுவானுங்க.
பேச்சுலர்கள் மாசத் துவக்கத்தின் முதல் வார ஞாயிற்றுக் கிழமைகளில் பிரியாணி செய்து ஏரியாவையே மணக்கவிடுவானுங்க. ஆனா மாசக் கடைசி வாரத்தில் சோற்றை மட்டும் பொங்கித் தயிர் பாக்கெட்டும் ஊறுகாயும் என சிம்பிளாய் டின்னரை முடித்துவிடுவார்கள்.
உப்புமா என்ற உலகின் புராதன உணவைக் காலை உணவாகப் பத்து நாட்கள் வைத்து பசியைப் போக்கிக்கொள்வார்கள்.
மொத்தத்தில் மாசக் கடைசியில் பைசா வெச்சிருக்கிறவன்தான் ராஜா பாஸ்!

ஐ சப்போர்ட்அழகிரி‬...!

என்னாச்சு...

கோவம் வந்துச்சு... 
பேட்டி கொடுத்தேன்... 
அப்பா வீட்டுக்கு கூப்பிட்டாரு...
ஓ,,,கட்சியை விட்டு நீக்கிட்டாங்களா... 
தம்பி ஏதாவது சொல்லி இருப்பான்....
அது ஒண்ணும் பிரச்சினை இல்லை...
ஆட்டோமேடிக்கா அதுவே சரியாடும் !!!

இதை யார் கேட்பது.....?

இதை யார் கேட்பது.....? அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர். 

அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து “போ’ என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது. சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து “டீ எவ்வளவு’ என கேட்டேன். “பதினைந்து ருபாய்’ என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். 

அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன். அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்’ என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன். சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். “உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே” என்று நான் துவங்க… 

தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர். சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்.“இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’ என்றார்… 

அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே… உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே.

ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள்.

அப்ப மூணு முதலாளியாகுதே!

ஆரம்பிச்சுட்டாங்கள்ல...: 
போஸ்டரால் ஒரு கட்சி கலகலத்தது என்றால் அது சந்தேகமே இல்லாமல் தி.மு.க.,வாகத்தான் இருக்கும். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டியவர்களை சஸ்பென்ட் செய்து கையெழுத்திட்ட பேனா மையின் ஈரம்கூட காய்ந்து இருக்காது, அடுத்து அதே போல ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இரண்டு வேலை செய்யலாமாம் ஆனால் இரண்டு முதலாளிகள்ட்ட வேலை செய்யமுடியாதாம்.போஸ்டர் படி பார்த்தாலும் அப்ப மூணு முதலாளியாகுதே.

23 January, 2014

ரூபாய் நோட்டுகளை மார்ச் 31க்கு பிறகு பயன்படுத்த வேண்டாம்


ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்.பி.ஐ) 2005க்கு முன் அச்சடிக்கபட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31க்கு பிறகு பொது பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல், ஆண்டு அச்சடிக்கபட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் மட்டுமே  பொது பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 2006க்கு பிறகு அச்சடிக்கபட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். 2005 க்கு முன் அச்சடிக்கபட்ட நோட்டுகளில் இந்த குறிப்பு இருக்காது. அதே நேரத்தில் ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பரிவர்த்தனைக்கு உகந்த ரூபாயாக மாற்றிக்கொள்ளாலாம். 

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!

Posted Date : 10:03 (23/01/2014)Last updated : 10:09 (23/01/2014)
கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார்.மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,"ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !" என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அதில் நான்காம் இடம் பெற்ற போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு கீழே வேலை பார்க்க விருப்பமில்லை என்பது ஒரு புறம் இன்னொரு  புறம் ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்திருந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசபந்து சித்தரஞ்சன் தாஸை சந்தித்தார். அவரின் முதன்மை சீடரானார். கல்கத்தாவின் மேயராக சித்தரஞ்சன் தாஸ் ஆனதும் போஸ் அதன் தலைமை நிர்வாக அலுவலராக கலக்கி எடுத்தார்.
சித்தரஞ்சன் தாஸின் மறைவுக்கு பின்னர் சுயராஜ்ய கட்சி வங்கத்தில் யுகந்தார் மற்றும் அனுஷிலன் என்கிற இரண்டு புரட்சிகர அமைப்புகளாக பிரிந்து கொண்டன. அதில் நேதாஜி யுகந்தார் அமைப்பில் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தார். டே என்கிற ஆங்கிலேய அதிகாரி சார்லஸ் டேகர்ட் எனும் கொடுமைக்கார காவல்துறை கமிஷனருக்கு பதிலாக தவறுதலாக கொல்லப்பட போஸ் முதலிய பலர் கைது செய்யப்பட்டார்கள். அவரை நாடு கடத்தியது ஆங்கிலேய அரசு. உடல்நிலை சரியில்லாமல் போகவே பாதியிலேயே விடுதலை செய்யப்பட்டார் போஸ்.
சைமன் கமிஷனில் இந்தியர் ஒருவரும் இல்லாமல் போனதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட பல்வேறு ஊர்களுக்கு போஸ் மற்றும் ஜவகர்லால் நேரு பயணித்தார்கள். இளைஞர்களின் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.
ஜவகர்லால் நேரு காங்கிரசின் ஆங்கிலேய அரசு டொமினியன் அந்தஸ்து கொடுத்தால் போதும் என்கிற கோரிக்கையை முழு சுதந்திரம் என்று ஆக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதை போஸ் ஆதரித்தார்.   உப்பு சத்தியாகிரகத்தில் பங்குகொண்டார். அப்பொழுது காந்தியடிகள் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்தியதும்,பகத் சிங் தூக்கு தண்டனை விவகாரத்தில் இன்னமும் முனைப்பாக காந்தி செயலாற்றி காப்பற்றியிருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. ஐரோப்பாவில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "காந்தி அரசியல் தலைவராக தோல்வியடைந்து விட்டார் ; தீவிரப்போக்கு கொண்ட புதிய சித்தாந்தம்,வழிமுறைகள் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் புதிய தலைவரோடு எழ வேண்டும் !" என்று குறித்தார்.
1938 ஆம் வருடம் போஸ் காங்கிரசின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். " எல்லாமும் வேண்டும் ; இல்லை எதுவுமே வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை !" என்று பதவியேற்றதும் முழக்கமிட்டார் அவர். அவருக்கு நேதாஜி என்கிற பட்டத்தை சாந்தி நிகேதனில் விழா எடுத்து தாகூர் வழங்கினார். நேதாஜி என்றால் வணங்கத்தகுந்த தலைவர் என்று அர்த்தம். அடுத்த வருடம் சிக்கல்கள் அவருக்கு காத்திருந்தனர். 
4)
கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார்.
மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,"ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !" என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அதில் நான்காம் இடம் பெற்ற போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு கீழே வேலை பார்க்க விருப்பமில்லை என்பது ஒரு புறம் இன்னொரு  புறம் ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்திருந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசபந்து சித்தரஞ்சன் தாஸை சந்தித்தார். அவரின் முதன்மை சீடரானார். கல்கத்தாவின் மேயராக சித்தரஞ்சன் தாஸ் ஆனதும் போஸ் அதன் தலைமை நிர்வாக அலுவலராக கலக்கி எடுத்தார்.
சித்தரஞ்சன் தாஸின் மறைவுக்கு பின்னர் சுயராஜ்ய கட்சி வங்கத்தில் யுகந்தார் மற்றும் அனுஷிலன் என்கிற இரண்டு புரட்சிகர அமைப்புகளாக பிரிந்து கொண்டன. அதில் நேதாஜி யுகந்தார் அமைப்பில் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தார். டே என்கிற ஆங்கிலேய அதிகாரி சார்லஸ் டேகர்ட் எனும் கொடுமைக்கார காவல்துறை கமிஷனருக்கு பதிலாக தவறுதலாக கொல்லப்பட போஸ் முதலிய பலர் கைது செய்யப்பட்டார்கள். அவரை நாடு கடத்தியது ஆங்கிலேய அரசு. உடல்நிலை சரியில்லாமல் போகவே பாதியிலேயே விடுதலை செய்யப்பட்டார் போஸ்.
சைமன் கமிஷனில் இந்தியர் ஒருவரும் இல்லாமல் போனதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட பல்வேறு ஊர்களுக்கு போஸ் மற்றும் ஜவகர்லால் நேரு பயணித்தார்கள். இளைஞர்களின் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.
ஜவகர்லால் நேரு காங்கிரசின் ஆங்கிலேய அரசு டொமினியன் அந்தஸ்து கொடுத்தால் போதும் என்கிற கோரிக்கையை முழு சுதந்திரம் என்று ஆக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதை போஸ் ஆதரித்தார்.   உப்பு சத்தியாகிரகத்தில் பங்குகொண்டார். அப்பொழுது காந்தியடிகள் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்தியதும்,பகத் சிங் தூக்கு தண்டனை விவகாரத்தில் இன்னமும் முனைப்பாக காந்தி செயலாற்றி காப்பற்றியிருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. ஐரோப்பாவில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "காந்தி அரசியல் தலைவராக தோல்வியடைந்து விட்டார் ; தீவிரப்போக்கு கொண்ட புதிய சித்தாந்தம்,வழிமுறைகள் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் புதிய தலைவரோடு எழ வேண்டும் !" என்று குறித்தார்.
1938 ஆம் வருடம் போஸ் காங்கிரசின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். " எல்லாமும் வேண்டும் ; இல்லை எதுவுமே வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை !" என்று பதவியேற்றதும் முழக்கமிட்டார் அவர். அவருக்கு நேதாஜி என்கிற பட்டத்தை சாந்தி நிகேதனில் விழா எடுத்து தாகூர் வழங்கினார். நேதாஜி என்றால் வணங்கத்தகுந்த தலைவர் என்று அர்த்தம். அடுத்த வருடம் சிக்கல்கள் அவருக்கு காத்திருந்தன.
காந்தி நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிறுத்தினார். போஸ் தேர்தலில் தமிழக காங்கிரசாரின் பெருத்த ஆதரவோடு  1,580-1,377 என்கிற விகிதத்தில் வென்றார்  "சீதாராமையாவின் தோல்வி அவருடையது என்பதை விட என்னுடையது என்பதே சரியாக இருக்கும் !" என்று காந்தி குறித்தார். போஸ் பூரண விடுதலையை நோக்கி நாம் நகர் வேண்டும் ,இன்னமும் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது தேர்தலில் நின்று ஆட்சிக்கு வருவதில் பிற தலைவர்கள் முனைப்பாக இருப்பதை பார்த்து அவர்களை எல்லாம் வலதுசாரிகள் என்று போஸ் குறித்தார். "நீங்கள் ஒரு இடதுசாரி தலைமை பொறுப்புக்கு வருவதை விரும்ப மறுக்கிறீர்கள் ! உங்களுக்கும் அரசுக்கும் இடையேயான சமரசத்தில் நான் முள் போல இருப்பேன் என்று கருதுகிறீர்கள் !" என்றார். போஸின் நெருங்கிய நண்பரான நேரு கூட இப்படி பொதுவாக வலதுசாரிகள் என்று குறித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஜி.பி.பந்த் பழைய செயற்குழுவின் மீது முழுநம்பிக்கை இருக்கிறது என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். அது பெருத்த ஆதரவோடு வெற்றி பெற்றது. ஆனால்,காந்தி  போஸ் விரும்புகிற செயற்குழுவை அமைத்துக்கொள்ளட்டும் என்றார். போஸ் ,"காந்தியார் போராட்டத்துக்கு தலைமை தாங்கட்டும் ! ஆனால்,இடதுசாரிகள் மற்றும் நான் வகுத்திருக்கும் சித்தாந்தம் மற்றும் வழிமுறைகளை அவர் கைக்கொள்ளட்டும் !" என கோரினார்.
காந்தி போஸ் தலைமையேற்று அவரின் வழிமுறையில் போராட்டத்தை நடத்தட்டும் என்று அறிவிக்க அதற்கு காங்கிரஸ் கட்சியில் ஆதரவில்லாத சூழல் உண்டானது. போஸ் வெறுத்துப்போய் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பார்வர்ட் ப்ளாக் கட்சியை துவங்கினார். அனைத்திந்திய போராட்டதத்துக்கு அனைவரும் வாருங்கள் என்று அவர் குரல் கொடுக்க கட்சியை விட்டு அவரை நீக்கினார்கள்.
போஸ் மனம் நொந்து போனார். வேறு வழியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரை அரசு வீட்டுக்காவலில் வைத்திருந்தது.  சத்தமேயில்லாமல் தப்பிப்போனார். அவரின் வீட்டை அரசு ஏலம் விட்டதும் அதை யாருமே ஏலம் எடுக்க முன்வராததும் தனி அத்தியாயம். பெஷாவர் நகருக்குள் நுழைந்து அங்கிருந்து ஆப்கானுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் வழியாக இத்தாலி போகலாம் என்று திட்டமிட்டு இருந்த போஸ் ஹிட்லர் அழைக்கிறார் என்பதை அறிந்து அவரை சந்திக்க மாஸ்கோவில் இருந்து ஜெர்மனி போய் சேர்ந்தார். எழுபத்தி ஒரு நாட்களில் அவர் செய்த இந்த சாகசத்தை 'Great Escape '  என்று ஆச்சரியத்தோடு பதிவு செய்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஹிட்லர் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆள தகுதியற்றவர்கள் என்றார். அதற்கு போஸ் ஆட்சேபத்தை பதிவு செய்தார். ஹிட்லர் போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரில் உதவுவதாக உத்தரவாதம் தந்தார், ஆனால்,எந்த உதவியும் கிட்டாமல் போனது. ஜப்பான் போனார் நேதாஜி. ராஷ் பிஹாரி போஸ் உருவாக்கி செயலற்று போயிருந்த இந்திய தேசிய ராணுவத்துக்கு உயிர் தந்தார். போரில் பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை கொண்டு படையை கட்டமைத்தார். பெண்களையும் போர்ப்படையில் இணைத்துக்கொண்டார்.
"ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன் "என்று முழங்கினார். அக்டோபர் இருபத்தி ஒன்றில் சுதந்திர இந்தியாவுக்கான அறிவிப்பை சிங்கப்பூரில் வெளியிட்டார் போஸ். அங்கே இருந்து வானொலியில் ,"தேசப்பிதா காந்தியடிகளிடம் எங்களின் போராட்டத்துக்கு ஆசீர்வாதம் கோருகிறேன் !" என்று பண்போடு சொன்னார். காந்தி போஸ் அவர்களை ,"தேசபக்தர்களுள் இளவரசர் !" என்று பூரித்தார். டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி இந்திய தேசிய அரசின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்தி கொண்டார். தேசியக்கொடியை ஏற்றினார். அவரை ஜெர்மனி, ஜப்பான், சீனா, இத்தாலி நாடுகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. அந்தாமான் மற்றும் நிகோபார் தீவுகள் இவர் பொறுப்பில் விடப்பட்டதும் அவற்றுக்கு 'ஷாஹீத்' (தியாகம்) மற்றும் 'ஸ்வராஜ்' (சுயராஜ்யம்) என்று பெயரிட்டார். பர்மாவில் இருந்து மொய்ராங் என்கிற மணிப்பூரின் பகுதியை இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றியது. நாகலாந்து அடுத்து வீழ்ந்தது. தென்மேற்கு பருவ மழை போரின் போக்கை திருப்பியது. தகவல் துண்டிப்பு,ஒழுங்காக ஆயுதங்கள் வந்து சேராமை எல்லாம் தோல்வியை நோக்கி படையை தள்ளியது. போஸ் ஜப்பானின் உதவியோடு மீண்டு வந்து போராடலாம் என்று முடிவு செய்து கொண்டு சிங்கப்பூர் வரை சென்று அங்கிருந்து சைகோன் போனார். சைகோனில் இருந்து மன்ச்சூரியா நோக்கி இருவர் மட்டும் போகக்கூடிய குண்டு வீச்சு விமானத்தில் தோழர் , தோழர் ஹபீப்புடன்  ஏறினார். தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கமிஷன்கள் வந்தும் அவரின் மரணம் குறித்த மர்மம் அப்படியே இருக்கிறது.
நேதாஜிக்கு சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உண்டு என்பது ஒரு பரவலான வாதம். அவரை ஹிட்லர் இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரி என்று அழைத்த பொழுது அதை கடுமையாக ஆட்சேபித்தார் அவர். ஆங் சானின் விடுதலைக்காக போராடிய புரட்சி படைகளை ஒடுக்க ஜப்பான் உதவி கேட்ட பொழுது கூலிப்படையாக செயல்படாது இந்திய தேசிய ராணுவம் என்று மறுத்த போஸ் ஜப்பானின் பிரதமர் இந்தியாவின் விடுதலைக்கு பின்னர் போஸ் எல்லாமுமாக இருப்பார் என்கிற வாதத்தையும் நிராகரித்தார். "ஒரு தனி மனிதன் ஒரு சிந்தனைக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்யலாம். ஆனால்,அவன் இறப்புக்கு பின்னர் அந்த சிந்தனை பல்லாயிரம் உயிர்களில் மீண்டும் மறுபிறப்பெடுக்கும். இப்படித்தான் பரிணாமத்தின் சக்கரம் நகர்கிறது ; ஒரு தேசத்தின் சிந்தனையும்,கனவுகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன !" என்று முழங்கிய அசல் வீரர் போஸ் இந்தியர்களிடையே வீர எழுச்சியையும்,தன்னம்பிக்கையும் விதைத்து அடிமையின் உடம்பில் வலிமைகள் ஏற்றினார் அவர் என்றால் அது மிகையில்லை.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...