|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

ஏன்னா தமிழன் இளிச்சவாயன்!

ஏழாம் அறிவு - ஸ்கூப் - 3 நேற்று சில பேர் முக நூலில் சட்டையை பிடிக்குற அளவுக்கு சன்டை. நீங்க ஒரு தமிழனா இருந்து பெருமைபட வேண்டிய விஷயம் பழிக்கிறிங்களேன்னு...... மக்களே நானோ இல்லை நீங்க எல்லொரும், இந்த படம் எடுக்கும்வரை தமிழன் இல்லையா, அதை ஒரு சினிமா ஆள் சொன்னாதான் நாம் தமிழன்னு பெருமை படனுமா...... சரி இதுக்கு பதில் சொல்லுங்கள் - தெலுங்கு 7 ஆம் அறிவு படத்துல " மன போதி தர்மா" மன வாடு மன இந்தியன்னு வருது, சோ பிச்சை காசு சம்பதிக்கிறதுக்காக தமிழ் போதி வர்மா, ட்ப்பிங்கல இந்தியன் ஆயிட்டாரா, ஆங்கிலத்தில டப்பிங்க செஞ்சா இந்த உலகின் சிட்டிசனாக போதிவர்மான்னு போட்டா அதுக்கும் நாம தலையாட்டுனுமா, வெறும் 15 கோடி தெலுங்கு ரைட்ஸ்க்காக தமிழன்னு பெருமை ப்டுங்கன்னு சொல்ல தைரியம் இல்லாம தமிழ் போதி வர்மா இந்தியன் போதி வர்மா ஆனது நம்மள என்னனு நினைக்கிறாங்க...ஏன்னா தமிழன் இளிச்சவாயன்!   

நோய்களை நீக்கும் நீல ஆம்பல்!


நீல நிறத்தில் காணப்படும் ஆம்பல் மலர்கள் பண்டைய காலம் தொட்டு நோய் நீக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தியர்கள் ஆம்பல் மலரை உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமின்றி உற்சாகமளிக்கும், சக்தி தரும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆம்பல் மலரின் கிழங்கு கிடைத்தற்கரியது. இது வியக்கத்தக்க மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது.

நீர் நிலைகளில் மலர்ந்திருக்கும் ஆம்பல் மலர்கள் தாமரையைப் போன்று நீர்மட்டத்திற்கேற்றபடி தண்டினைப் பெற்றிருக்கும். இதில் பலவகை உள்ளன. ஒவ்வொன்றும், ஒவ்வொர வகையான நிறங்கள் கொண்ட பூக்களைக் கொண்டிருக்கும். சிவப்பு, நீலம், வெண்மை, மஞ்சள், போன்ற நிறங்களைக் கொண்ட பூக்களாக இருக்கும். இவை அனைத்துமே ஒருவகையான மருத்துவ குணங்களை கொண்டவைதான். இதில் உள்ள கிழங்கு துவர்ப்புச் சுவையுடன், காணப்படும். குளிர்ச்சியை தரவல்லது. சத்துக்கள் நிறைந்ததும் கூட.


ஆண்களுக்கான மூலிகை: ஆம்பல் கிழங்கு இதயம் மற்றும் மூளைக்கு வலுவூட்டும் நரம்புகளுக்கு இது சக்தியை தரவல்லது. சிறுநீரகத்திற்கு இது பலத்தைக் கொடுக்கும். தாதுக்களை உற்பத்தியாக்கி, கெட்டிப்படுத்தும். ஆண்களுக்கு இது சிறந்த மூலிகையாகும். இதனால் ஆண் உறுப்பு பலம் பெறும். இது இரத்தம் தொடர்புடைய நோய்க்களையும் நீக்க வல்லது. பித்தம் தொடர்பான தொல்லைகளையும் போக்கும். உள் ரணங்களை குணமாக்கும் திறம் இதற்கு உண்டு.



கண் எரிச்சல் போக்கும்: ஆம்பல் கிழங்கை நன்றாக காயவைத்து இடித்து சூரணமாக்கி வைத்துக்கொண்டு பசும்பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால் உடல் சூடு தொடர்புடைய நோய்கள் தீரும். கண் எரிச்சல், கண் பொங்குதல், நீர்வடிதல் போன்ற தொல்லைகள் நீங்கும். சிலருக்கு அதிக உஷ்ணத்தினால் உடல் முழுவதும் எரிச்சலாக இருக்கும். இதனால் அதிக தாகமும் இருக்கும். இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்பல் கிழங்கின் சாறு, ஆம்பல் பூவின் சாறுடன் சிறிதளவு தேன் குழைத்துச் சாப்பிட்டு வர பூரண குணமாகும்.

இதே நாள்...


  •  இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)
  •  இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா இறந்த தினம்(1984)
  •  முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)
  •  அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது(1913)

கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப்பூ!


உடலுக்கு சக்தி தரும் எள் போல எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.


மங்கலான பார்வை தெளிவடையும்: எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்கிவிட வேண்டும். ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான பார்வை தெளிவடையும்.



கண்களில் பூ விழுந்தவர்களுக்கு: பேரிச்சம்பழக்கொட்டையும், மான் கொம்பின் ஒரு பகுதியையும், தாய்பாலில் இழைத்து அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள் குணம் பெறுவார்கள்.



கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள்:  கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில் போட்டு பதமாக வதக்கி சூடு ஆறியதும், கண்கள் மீது வைத்துக் கட்டி விட வேண்டும். இதைப் படுக்கப் போகும் போது செய்யவும். காலையில் அவிழ்த்து விட வேண்டும். குணம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யவும். எள்ளுப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட தேன் உடலுக்கு பலத்தை தரும்.

பி.எட்., தில்லுமுல்லு!


பணம் கொடுத்தால் போதும் பட்டம் பெற்று விட முடியும்' என்ற நிலை, பி.எட்., கல்லூரிகளில் நடக்கும் தில்லுமுல்லு காரணமாக உருவாகியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தனியார், பி.எட்., கல்லூரிகளின் பண மழையில் நனைகின்றனர். பணத்தை மட்டும் கொடுத்து பி.எட்., பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்கால ஆசிரியர்களின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

பொதுவாக ஆசிரியர் பணியை, சேவை செய்ய கிடைத்த உன்னதப் பணியாகக் கருதிய காலம் மாறிவிட்டது. இன்று, அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டால், மாதத்துக்கு 20 ஆயிரத்துக்கும் குறையாத சம்பளம், இதர சலுகைகள், அதிக விடுமுறை என, வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணமே அனைவரிடமும் காணப்படுகிறது.இதன் காரணமாக, சில ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு அடிப்படை தேவையான, பி.எட்., பட்டப்படிப்பை படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், புதிதாக 2,000 உயர்நிலைப்பள்ளிகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதனால், பி.எட்., படிக்க விரும்புவோரின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளன. தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. சுயநிதி கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக பூர்த்தி செய்து வருகிறது.ஓராண்டு பி.எட்., படிப்புக்கான கட்டணமாக, 1 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அரசு சார்பில் எவ்வித கட்டணமும் நிர்ணயிக்காததால், ஒவ்வொரு கல்வி நிர்வாகமும், அவரவர் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனர்.அதிக வசூலுக்கு ஆசைப்படும் கல்லூரி நிர்வாகங்களில் ரெகுலர், இர்ரெகுலர் என, இரண்டு முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் ரெகுலர் முறையில், கல்லூரி வேலை நாள் அனைத்திலும் வகுப்புக்கு முழுமையாக வர வேண்டும் எனவும், இர்ரெகுலர் முறையில், வகுப்புக்கு வரத் தேவையில்லை எனவும் கேன்வாஸ் செய்கின்றன.

ஆய்வு மற்றும் தேர்வு நேரங்களில் மட்டும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்ற நிபந்தனையுடன் இச்சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு ரெகுலர் முறை மாணவர்களை விட, 50 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்யப்படுகிறது.வேறு இடங்களில் வேலை செய்து வரும் பலரும், இம்முறையில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், சேர்ந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தெரிந்த அரசு அதிகாரிகள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்க தனி, "ரேட்' நிர்ணயித்துக்கொண்டனர்.பி.எட்., பட்டப்படிப்பில் ஒவ்வொரு மாணவ, மாணவியரும், 40 நாள் அரசுப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பி.எட்., கல்லூரிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இவற்றை பெற வேண்டும் எனில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கல்வி அலுவலர்களுக்கு லஞ்சம் வழங்கினால் மட்டுமே அனுமதி கிடைக்கிறது. பி.எட்., கல்லூரிகள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் கல்வித் துறை அலுவலர்களுக்கு, "பரிசாக' கிடைக்கிறது.

இப்பயிற்சி பெறவில்லை எனில், மாணவ, மாணவியர் பல்கலைத் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால், கல்வி அதிகாரிகளுக்கு வழங்கும் தொகையையும் சேர்த்து மாணவ, மாணவியரிடம் கல்லூரிகள் வசூலித்து விடுகின்றன. பள்ளிகளில் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையெழுத்திடவும், 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை தர வேண்டியுள்ளது. பயிற்சிக்கு வராமலேயே சான்றிதழ் பெற, அதற்கு தனி ரேட் நிர்ணயித்துள்ளனர்.தனியார் கல்லூரியில், பி.எட்., படிப்பின் ஒவ்வொரு அங்கமும், இப்படி பணத்தையே பிரதானமாகக் கொண்டுள்ளதால், இதில் உருவாகும் ஆசிரியர்களின் தரம் எப்படியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. இந்த முறைகேடுகளைத் தடுக்க முன் வருமா அரசு?

புதிய பொறியியல் கல்லூரிகள் வேண்டாம்-மாநில அரசுகள்!


இருக்கும் பொறியியல் கல்லூரிகளே போதும், புதிய கல்லூரிகளை அனுமதிக்க வேண்டாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்களுக்கு மாநில அரசுகள் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவில் அடுத்தடுத்து ஏராளமான சுயநிதி பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகின்றன. புற்றீசல்களைப் போல எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் ஆங்காங்கே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டில் கல்லுரிகள் அளிக்கும் இடங்களை விட மிகக் குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது பொறியியல் கல்வியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எல்.கே.ஜியில் சேர்வது கடினமாகிவிட்ட நிலையில், பொறியியல் படிப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள் கூட துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் சேர்ந்து விடலாம் என்ற நிலை ஏற்படக் காரணம் என்ன. ஏராளமான பொறியியல் கல்லூரிகள்தான். இந்த கல்வியாண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 60 ஆயிரம் மாணவ சேர்க்கை இடங்கள் காலியாகவே உள்ளன. இந்திய அளவில் என்று எடுத்துக் கொண்டால் இது சில லட்சங்களை எட்டுகிறது.இந்த நிலையில், அங்கீகாரம் பெற விண்ணப்பித்திருக்கும் புதிய சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தரும் பணியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மாணவ சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமேத் தவிர, கல்வித்தரம் அதிகரிக்காது. மேலும், பொறியியல் படிப்பின் தரமும், மதிப்பும் குறையும். எனவே, புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தர வேண்டாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.


தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, ஹரியானா, சட்டிஸ்கர் மாநில அரசுகள் இது குறித்து கடிதம் எழுதியிருப்பதாக கவுன்சிலின் தலைவர் மந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது 3,393 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 15 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் தமிழகம், ஆந்தரி, கர்நாடகம், உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 70 சதவீத பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் இந்த கல்வியாண்டில் சுமார் 2 லட்சம் பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாகவே உள்ளன. இன்னும் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால் அவை சாதிக்கப்போவது என்ன?

குண்டர்கள் யார்?


உலகில் குண்டர்கள் என்போர் யார் என்பதை அருணகிரி நாதர் தமது தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள் என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் கூறியிருக்கிறார். அவருடைய வாக்கின்படி இடம் பெற்றிருக்கும் குண்டர்கள்.
1. நண்பனாக இருந்து கொண்டு துன்பம் செய்கிறவர்கள்.
2. செய் நன்றியை மறந்தவர்கள்
3. விரதங்களை விலக்கியவர்கள்
4. தானம் செய்வதை தடுப்பவர்கள்
5. சொன்ன வாக்கை காப்பாற்றாதவர்கள்
6. சோம் பேறிகளாக இருந்து கொண்டு சொல்லை வீசுகிறவர்கள்.
7. இறைவனுக்கு உரிமையான சொத்துக்களை சூறையாடுபவர்கள்.
இன்று அரசியலில் நுழைந்தவனும் அவனுக்கு துதி பாடும் அடிபொடிகளும், கடன் என்ற பெயரில் நமக்கு தொல்லை தரும் சில தன்னார்வ பாங்க்குகளும்,அடியாள்களுடன் வலம் வருகின்றனர் இதைதான் கலிகாலம் என்பதோ?  

பிலிப்பைன்ஸ் நாட்டில் உலகின் 700வது கோடி குழந்தை!


உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது. முன்னதாக உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும், அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.

மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர். இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.

குழந்தையின் தாயாரான கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார் பூரிப்புடன்.

2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினராம்.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச் சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித் தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.

இதுகுறித்து குவரா கூறுகையில், இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும் நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி. உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது! இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

இதயத்திற்கு வலிமை தரும் மாதுளம் பூ!


மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பல வித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம் பூ.


இருமல் போக்கும்: மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.



தொண்டை ரணம்: மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.



தாதுபலம்: தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும். மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும்.



ரத்த மூலம் குணமாக: மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.


ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

சிப்பந்திகள் நலனுக்காக ரூ.400 கோடியில் திட்டம்!


கப்பல் சிப்பந்திகளுக்கு வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் திட்டம் ஒன்றை, கப்பல் துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது'' என, மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னைத் துறைமுகம் அருகேயுள்ள கடல் சிப்பந்திகள் கிளப்பில், கடல் சிப்பந்திகள், மாலுமிகளின் பணியைப் போற்றும் வகையில், மாலுமி மற்றும் சிப்பந்திகள் குடும்ப சிலைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பங்கேற்று, சிலைகளைத் திறந்து வைத்துப் பேசினார். துறைமுக தலைவர்கள் அதுல்யமிஸ்ரா (சென்னை), வேலுமணி (எண்ணூர்), கப்பல் மாலுமிகள் சங்க பொதுச்செயலர் அப்துல்கனி, உட்பட பலரும் பங்கேற்றனர். விழாவுக்குப் பின், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:கடல் சிப்பந்திகள், மாலுமிகள் பணி போற்றுதற்குரியது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயன்பெறும் வகையில், பங்கீட்டு உதவித்தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 2011 முதல் 2020 வரை, வாழ்நாள் உதவி வழங்க, 400 கோடி ரூபாய் செலவில் கருத்துரு ஒன்றை கப்பல் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. விரைவில் இது செயல்படுத்தப்படும்.

நான்கு ஆண்டுகளில் நாட்டில் உள்ள பெரும் துறைமுகங்கள் அனைத்திலும், மாலுமிகள், சிப்பந்திகள் விடுதிகள் அமைப்பதோடு, ஏற்கனவே உள்ள விடுதிகள் சீரமைக்கப்படும். அயல்நாடுகளில் பணியாற்றிய, இந்திய கப்பல் சிப்பந்திகளுக்கு வழங்கப்படும், மாதம் 200 ரூபாய் ஓய்வூதியத்தை, 500 ரூபாயாக உயர்த்துவதோடு, சிப்பந்திகள் குடும்பத்தினரும் பயன்பெற வழிவகை செய்யப்படும்.கடற்கொள்ளையர்: சர்வதேச அளவில் நடந்து வரும் கடல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலில், இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தாக்கப்பட்டு, கடல் கொள்ளையர்களிடம் சிக்கிய, இந்திய மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 400 பேர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.இன்னும் 50க்கும் மேற்பட்டவர்களை மீட்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.சர்வதேச அளவில், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்போடு, கடல் கொள்ளை எதிர்ப்புப்படை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது.இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். 

வனங்களை காக்க இரண்டு லட்சம் பசுமை போராளிகள் உருவாக்கிய ஆசிரியர்!

 மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார். இந்திய வரைபடத்தில் பசுமையாக காணப்பட்ட தமிழகம், தற்போது பசுமை இழந்து காணப்படுகிறது. இந்தியா முழுவதும் வனத்தையும், வன விலங்கினத்தையும், மரங்களையும் காக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துரித நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். வனங்களை பாதுகாக்க இளைஞர் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில், கணித பேராசிரியர் ஒருவர் ஈடுபட்டு வருவது, வனத்துறையிருக்கும், மக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த கணித பேராசிரியரும், கவுரவ வன உயிரின காப்பாளருமான கந்தசாமி கூறியதாவது:வனங்களும், மலைகளும், நதிகளும், நம் மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள். ஆனால், தற்போது நதிகள் அனைத்து செத்துவிட்டன. குற்றுயிரும், குலை உயிருமாக உள்ள வனங்களையும், மலைகளையும் பாதுகாக்க நம் மக்கள் அனைவருமே ஒன்றுபட வேண்டும். தற்போதைய சூழலில், இளைஞர் சக்தி ஒன்றிணைந்தால், வனங்களையும், விலங்கினங்களையும் மீட்டெடுக்க முடியும்.கடந்த, 1985ல் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பேராசிரியர்களுக்கு வனங்களை காக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சார்ந்தவர்கள் கலந்து கொண்ட முகாமில், கணித பேராசிரியரான நான் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சர்யப்பட வைத்தது.

முகாமின் போது, வனம், மலைகளின் பெருமை குறித்து அறிந்ததால், அதனை மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்தது. அன்று முதல் இன்று வரை வனத்தையும், விலங்கினத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.ஈரோடு மாவட்ட வனத்துறையின் துணையோடு, மாணவ, மாணவியருக்கு, காடுகள், விலங்குகள், மலைகள் குறித்து கற்பித்து வருகிறேன். கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், முதுமலை, ஊட்டி நேஷனல் பார்க், முக்கூர்த்தி, ஆனைமலை காடுகள், கொடைக்கானல் உள்ளிட்ட காடுகளுக்கு, மாணவர்களை அழைத்து சென்று, வனக்கல்வியை அளித்துள்ளேன்.இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு, வனக்கல்வியை கற்று கொடுத்தேன். இவர்களை வனங்களை காக்கும் பசுமை போராளிகளாக மாற்றியுள்ளேன். வனங்கள், விலங்குகளை காப்பது குறித்த விழிப்புணர்வை இவர்கள் மாநிலம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.வனங்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற, இன்னும் பல லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக மாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 5ம்தேதி வைகோ உண்ணாவிரதம்!

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் வரும் 5ம்தேதி நடைபெறும் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பேரழிவை ஏற்படுத்தக் கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற தொலை நோக்கத்தோடு நடத்தப்பட்டு வருகிற அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம் மிகவும் நியாயமான தேவையான போராட்டம். வரும் 5ம்தேதி இடிந்தகரையில், அணுமின்நிலைய எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து, எனது தலைமையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

உறவுகளை அதிகரிக்கும் உன்னத சிரிப்பு!


சிரிப்பு நல்ல மருந்து என்று கூறுவார்கள். அதேபோல உடல் மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றமைக்கு யோகாசனம் உதவுகின்றது. சிரிப்பு, யோகாசனம் இரண்டையும் கலந்து ஆக்கப்பட்டு இருக்கின்ற பயிற்சி நெறிதான் சிரிப்பு யோகா.1995 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. உலகின் 60 நாடுகளில் நிலைபெற்று உள்ளது.


வியட்நாம் சிரிப்பு யோகா: குறிப்பாக வியட்னாம் நாட்டில் இது மிகவும் பிரசித்தி வாய்ந்ததாக இருக்கிறது. மகிழ்ச்சி, நோயெதிர்ப்பு சக்தி, அமைதி ஆகியவற்றை நாளாந்த வாழ்வில் பெற்றுத் தரும் என்று வியட்னாம் மக்கள் நம்புகின்றனர். மாஸ்டர் லீ ஆன் சென் இன் வழிகாட்டலில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் உள்ள பூங்கா ஒன்றில் ஒவ்வொரு நாள் காலையும் 45 நிமிடங்கள் வரை பயிற்சி பெறுகின்றனர். சிரிப்பு யோகாவானது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நட்பின் ஆழத்தை அதிகரிக்கச்செய்கிறது. ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ளுங்கள் என்று வியட்நாம் நாட்டில் சிரிப்பு யோகாவை அறிமுகம் செய்த லீ ஆன் சென் குறிப்பிட்டுள்ளார்.



ஒரு நோயின் கதை: நாம் சிரிக்கும் போது மூளையில் வெளிப்படும் வேதி பொருட்களுக்கு என்டார்பின்கள் என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாகவும் பயன்படுகின்றன. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீனமாக்கும் “ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்” என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் உட்காருவதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.


அதைப்பற்றி கவலைப்படாத கசின்ஸ் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, நகைச்சுவை படங்களாக பார்த்தார். மீண்டும் மீண்டும் அந்த படங்களைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. இந்த அற்புதமான அனுபவத்தை அவர் ஒரு நோயின் கதை என்ற நூலில் எழுதினார். இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன.

எண்டார்பின்களானது மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்டவை. இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால் புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் பலரும் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும் என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது.இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.


நோய் எதிர்ப்பு சக்தி: ஆண்களைவிட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும் அமைதியும் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். புன்னகையும், சிரிப்பும் நோய், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நபர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றது. எனவே சுயமாக சிரிக்க முடியாவிட்டால் மருந்தாக நினைத்து கஷ்டப்பட்டாவது சிரியுங்கள். அது உங்கள் உடலுக்கு நல்லது.

நியூ ஜெர்சி தமிழ் சங்கத்தின் தீபாவளி திருநாள்!






நியூ ஜெர்சி தமிழ் சங்கத்தின் தீபாவளி திருநாள் நிகழ்ச்சி ராரிடன் மிடில் ஸ்கூலில் இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி யின் நீயா நானா புகழ் கோபிநாத் கலந்துகொண்டார் அமெரிக்கா வாழ்கையில் தமிழர் நிம்மதியுடன் உள்ளார்களா இல்லையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது.    

ஷார்ஜாவில் நடந்த த‌மிழ்த்துளி அமைப்பின் தீபாவ‌ளி கொண்டாட்ட‌ம்!


ஷார்ஜாவில் த‌மிழ்த்துளி அமைப்பின் தீபாவ‌ளி கொண்டாட்ட‌ம் கடந்த 28ம் தேதி மாலை ர‌யான் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. த‌மிழ்த்தாய் வாழ்த்துட‌ன் துவ‌ங்கிய‌ த‌மிழ்த்துளி அமைப்பின் தீபாவ‌ளி கொண்டாட்ட‌த்திற்கு நிறுவ‌ன‌ த‌லைவ‌ர் பிரியா விஜ‌ய் த‌லைமை தாங்கினார். ம‌ஹேஸ்வ‌ரி த‌மிழ்ச்செல்வ‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். குட்டீஸ்க‌ளின் க‌லை நிக‌ழ்ச்சிக‌ள் நடைபெற்ற‌ன‌. அத‌னைத் தொட‌ர்ந்து ஆங்கில‌ச் சொற்க‌ளுக்கான‌ த‌மிழாக்க‌ச் சொற்க‌ள், வார‌ நாட்க‌ளின் பெய‌ர்க‌ள், த‌மிழ் மாத‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை மாண‌வ‌, மாண‌விய‌ர் கூறின‌ர்.

இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் டாக்ட‌ர் சாந்தி சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டார். குட்டீஸ்க‌ளின் த‌மிழார்வ‌ம் த‌ன்னை விய‌க்க‌ வைப்ப‌தாக‌ தெரிவித்தார். அமீர‌க‌த்தில் த‌மிழ்வ‌ழிக் க‌ல்வியினை க‌ற்க‌ இய‌லாத‌ சூழ‌லிலும் த‌மிழ் மொழியில் சிற‌ப்பாக‌ த‌ங்க‌ள‌து திற‌னை வெளிப்ப‌டுத்திட‌ த‌ள‌ம் அமைத்துத் த‌ரும் த‌மிழ்த்துளி அமைப்பிற்கு த‌ன‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்தார்.ந‌ட‌ன‌ ஆசிரியை க‌விதா பிர‌ச‌ன்னா ப‌ட்டிம‌ன்ற‌ப் பேச்சாள‌ர் வ‌ஹிதா ஜெய்தியால் கௌர‌விக்க‌ப்ப‌ட்டார். அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர் சுரேஷ் போட்டிக‌ளை ந‌ட‌த்தினார். ந‌ன்றியுரைக்குப் பின்ன‌ர் இர‌வு உண‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை!




பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் குட்டி, குட்டியாகத் தான் உடை அணிந்து வருகிறார்கள். தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து வந்துவிட்டு பிறகு இப்படி போட்டோ எடுக்காதீர்கள், அப்படி எடுக்காதீர்கள் என்று பத்திரிக்கை புகைப்படக்காரர்களிடம் கோபித்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.

பார்ப்பவர்கள் மனதை கலவரப்படுத்தும் வகையில் உடை அணிவது அப்புறம் நான் எனக்கு பிடித்த மாதிரி தான் டிரெஸ் போடுவேன் ஆனால் என்னை யாரும் குறை சொல்லக் கூடாது என்று குறை கூறுவது அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் யோசித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் நடந்த பட விழாவின்போது படு கவர்ச்சிகரமாக நடிகை ஒருவர் உடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அதிக முத்தம் பெற்ற சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக்!


உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அதிக முத்தம் பெற்ற சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடைய சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது. லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக பிரபலங்களின் மொழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் மக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, கட்டியணைப்பது, முத்தமிடுவது வழக்கமாகிவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதிக முத்தங்கள் பெற்ற சிலைகள் பெயர் வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு அதிக முத்தம் பெற்ற டாப் 10 சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு டாப் 10 முத்தப் பட்டியலில் ஷாருக் கான் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தமிடுவதில் பெண்கள்தான் ஜாஸ்தி! மெழுகுச் சிலைகளுக்கு முத்தம் கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தானாம். அதாவது 80 சதவீதம் பேர். வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே ஆண்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மேடம் டுசாட்ஸில் ஷாருக் கான்( 45), சல்மான் கான் (45) மற்றும் அமிதாப் பச்சன்(69) ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இதில் ரித்திக் ரோஷனுக்கு (37) தான் இளம் வயதிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டிலிருந்து சிலையாகியுள்ள ஒரு பிரபலங்களில் கரீனா கபூரும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.

வைஷ்ணவி தற்கொலை வழக்கு- டிவி நடிகர் தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறை!


டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகரும், காதலருமான தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டிவி நடிகரான தேவானந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி. அப்போது அவரது முகத்தில் காயம் இருந்தது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார். 

பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார் கொடுத்தனர். போலீஸார் தேவானந்த் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தேவானந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மருத்துவமனையில் மனோரமா அனுமதி- கமல்ஹாசன் ஆறுதல்!


பிரபல நடிகை மனோரமா தலையில் அடிபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரி்த்தார். இதேபோல திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்து வருகின்றனர். பழம்பெரும் நடிகையான மனோரமா, சமீபத்தில் தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். இதனால் அவரது தலையில் அடிபட்டு விட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.அப்போது தலையில் ரத்தக் கசிவும், உறைவும் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதை அகற்ற நாளை அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அவர் கோமாவில் இல்லை என்றும் நல்ல நினைவுடன் நலமுடன் உள்ளதாக அவரது மகன் பூபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு நேரில் வந்து மனோரமாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அதேபோல நடிகை அனுஷ்காவும் நேரில் வந்து நலம் விசாரித்தார். திரையுலகைச் சேர்ந்த பலரும் நலம் விசாரித்துள்ளனர். மனோரமாவின் உடல் நலம் குறித்து மகன் பூபதி கூறுகையில், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு நாள்களில் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காகத் தான் தேர்தலில் எங்களை மக்கள் தோற்கடித்தார்கள்- ஸ்டாலின்!

இது ஸ்டாலின் கண்டுபிடிப்பு: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காகத் தான் கடந்த தேர்தலில் எங்களை மக்கள் தோற்கடித்தார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். வேலூரில் நடந்த திமுக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லுபடியாகும் என்று சட்டசபையில் முதல் தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக தலைவர் கருணாநிதி பல நலத் திட்டங்களை கொண்டு வந்தார். அப்படிபட்ட திட்டங்களுக்கு என்ன பரிசு கிடைத்தது? சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தோம். ஆனால், அப்படிபட்ட தோல்வியை கண்டு திமுக துவண்டுவிடவில்லை. ஆட்சி மாற்றத்தால் மக்கள் வேதனை தான் படுகிறார்கள். தோல்விக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். அப்போது ஒன்றை உணர முடிந்தது. கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை உணர முடிந்தது.

ஆனால், இப்போது தலைவர் கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் எங்கே என்று மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். உயர் சிகிச்சை, கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் உள்பட எத்தனையோ திட்டங்கள் இந்த ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்குத் தான் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பொய் வழக்குகளையும் தாண்டி திமுக 30 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது.. வரும் காலம் நம்முடையது என்பது தெரிகிறது. எப்போதுமே வெற்றி தோல்வியை சமமாக கருதி உண்மையாக உழைப்பவன் தான் திமுக தொண்டன் என்றார் ஸ்டாலின். 

ஜாமீன் விஷயத்தில் சிபிஐயின் இரட்டை நிலை ஏன்?- உச்ச நீதிமன்றம்!


2ஜ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக சிபிஐ இரண்டு விதமாகப் பேசுவது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த வாரம் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் சரத்குமார், குசேகான் ப்ரூட்ஸ் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் தலைவர்கள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர்களது மனுக்களுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முன்னதாக 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரின் ஜாமீன் மனுக்களையும் பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தெரிவித்திருந்தது.

இந் நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள யூனிடெக் வயர்லெஸ்ஸின் எம்டி சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயன்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகளான ஹரி நாயர், கௌதம் தோஷி மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, இந்த வழக்கில் 5 பேரின் ஜாமீன் மனுக்களுக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.தத்து ஆகியோர் சிபிஐக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

ஆதாரங்கள் கலைக்கப்படமாட்டது என்பதில் சிபிஐ உறுதியாக இருந்தால் ஏன் குற்றம்சாட்டப்பட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும்?. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மேலும் நீங்கள் விசாரிக்க விரும்பாதபோது அவர்களை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர். விசாரணை நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரத்தை நாளை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஆர்.பி.சிங்கை இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee-PAC) விசாரிக்க இருந்த நிலையில் குழுவின் கூட்டம் ரத்து!


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படவில்லை, ரூ. 2,645 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ள தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங்கை இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee-PAC) விசாரிக்க இருந்த நிலையில் அந்தக் குழுவின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியது. இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.

ஆனால், ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார். ஆனால், நிர்பந்தம் செய்யப்பட்டு நஷ்டத்தின் அளவை ரூ. 1.76 லட்சம் கோடியாக உயர்த்திச் சொல்ல வைக்கப்பட்டார் என்ற புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ. 30,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு வினோத் ராய், ஆர்.பி.சிங் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு பொதுகணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி உத்தரவிட்டிருந்தார். அவர்களும் இன்று ஆஜராக இருந்தனர்.ஆனால் இந்தக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையூறு செய்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வினோத் ராய் சொல்லும் நஷ்டக் கணக்குடன் ஒத்துப் போகாத ஆர்.பி.சிங்கை வினோத் ராயை வைத்துக் கொண்டு விசாரிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர்.

ஆனால், அவரை விசாரிக்க வேண்டும் என பாஜக, அதிமுக உறுப்பினர்கள் கோரினர். வினோத் ராய், சிங் தவிர சிபிஐ இயக்குனரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் தம்பிதுரை கோரினார். பாஜக உறுப்பினர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், 2ஜி விற்பனையால் இழப்பு எதுவும் இல்லை என்று கூறிய மத்திய அமைச்சர் கபில்சிபலையும் விசாரிக்க வேண்டும் என்றார்.ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால், கூட்டத்தில் குழப்பம் ஏற்படவே, கூட்டத்தை ஒத்தி வைப்பதாக முரளி மனோகர் ஜோஷி அறிவித்தார்.

இதற்கிடையே, பொதுக் கணக்கு குழு மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் மீண்டும் ஆஜராகி, நஷ்டம் ரூ. 1.76 லட்சம் என்பது எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது குறித்து விளக்கம் தர வினோத் ராய் அவராகவே நேற்று விருப்பம் தெரிவித்தும் குறிப்பிடத்தக்கது. ராய் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து நாங்கள் நவீன முறையில் கணக்கிட்டு இழப்புத் தொகையை உறுதிப்படுத்தினோம். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பு ஏற்கனவே ஆஜராகி இழப்பீடு எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன் என்றார்.

இதையடுத்து வினோத் ராயையும் மத்திய துணைத் தலைமைத் தணிக்கையாளர் ரேகா குப்தாவையும் இன்று பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், ஆர்.பி.சிங் விவகாரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டு யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை.

கணக்கு தணிக்கை குழுவில் மாற்றம் செய்ய சுங்லு கமிட்டி பரிந்துரை: இந் நிலையில் மத்திய கணக்கு தணிக்கை குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுங்லு கமிட்டி யோசனை தெரிவித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் குறித்து சிபிஐ, அமலாக்கப் பிரிவு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும், இந்த முறைகேடுகளை விசாரிக்க, ஓய்வு பெற்ற மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டியை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். இந்தக் கமிட்டி ஏற்கனவே மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந் நிலையில், பிரதமருக்கு வி.கே.சுங்லு ஒரு ரகசிய கடிதம் எழுதி உள்ளார். அதில், மத்திய கணக்கு தணிக்கை குழு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், மத்திய கணக்கு தணிக்கை குழு, ஒரே நபருடன் இருப்பதால், அது திறமையின்றி செயல்படுகிறது. ஆகவே, 3 பேர் கொண்ட குழுவாக தணிக்கை குழுவை மாற்றி அமைக்க வேண்டும். அந்த 3 பேரில் ஒருவர் ஆடிட்டராக இருக்க வேண்டும். மத்திய கணக்கு தணிக்கை குழுவின் கணக்குகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவால் நியமிக்கப்படும் ஆடிட்டரைக் கொண்டு தணிக்கை செய்ய வேண்டும். அப்படி தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பான விஷயங்களை விரிவாக விவாதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல்!


சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை.

இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 வர்த்தக நிறுவனங்களைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீல் வைக்கும் பணிக்காக பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏன் சீல்? முறையான கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது, தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்தன.

பல்வேறு நோட்டீஸ்களுக்குப் பிறகும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எடுக்கவில்லை என்பதால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே சீல் வைக்கும் நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மக்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக காத்திருந்து இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



சீல் வைக்க மக்கள் அமோக ஆதரவு!!

உயிருக்கு சற்றும் உத்தரவாதமே இல்லாத மகா நெருக்கடியான இடத்தில் கடை போட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகளை மூ்ட மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.நகரில் இன்று எங்கு திரும்பினாலும் ஒரே பரபரப்புதான். காரணம், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பெரும் பெரும் வர்த்தக நிறுவனங்களை இழுத்துப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்ததே. இந்த நடவடிக்கைக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அத்தனை பேரும் இந்த நடவடிக்கையை ஏன் இத்தனை லேட்டாக எடுத்துள்ளனர் என்ற ஒரே கேள்வியைத்தான் வியப்புடன் கேட்கின்றனர். இந்த மூடல் நடவடிக்கைக்கு ஆதரவு ஏன் என்று மக்களிடம் கேட்டால் அவர்கள் குமுறித் தள்ளி விட்டனர்.

ரங்கநாதன் தெருவையே நாறடித்து நடக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளியவை இந்த பெரும் பெரும் கடைகள்தான். இந்த கடைகளால்தான் ரங்கநாதன் தெருவே இன்று பாதுகாப்பாக நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒரு காலத்தில் ரங்கநாதன் தெருவில் மகா நிம்மதியாக மக்கள் நடமாட முடிந்தது. ஆனால் எப்போது இந்தக் கடைகள் எல்லாம் பெருகினவோ அன்றைக்கே இந்த தெரு நாஸ்தியாகி விட்டது.

எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இந்த பல அடுக்கு மாடிக் கட்டடங்களில் இல்லை. உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. கடைக்குள் போய் விட்டால் திரும்ப பத்திரமாக திரும்பி வருவோமா என்ற அச்சத்துடன்தான் மக்கள் போக வேண்டியுள்ளது. உரிய தீயணைப்பு வசதிகள், பாதுகாப்பாக வெளியேற்றக் கூடிய வசதிகள், வாகனங்களை நிறுத்தக் கூடிய வசதிகள் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையில் நடந்த தீவிபத்தில் 2 பேர் கருகி உயிரிழந்தனர். காரணம், பாதுகாப்பாக அவர்களால் வெளியேற முடியாததால்தான். மேலும் தீயணைப்பு வாகனங்களும் கூட கடைக்கு அருகில் வரக் கூட கடுமையாக சிரமப்பட்டன.

இப்படி எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த நிறுவனங்களில் கிடையாது. மேலும் இதுபோன்ற நிறுவனங்களில் ஊழியர்களாலும் மக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். வருகின்ற வாடிக்கையாளர்களிடம் மரியாதைக்குறைவாக பேசுவது, நடப்பது, திட்டுவது, தாக்குவது என பல சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. இதுதொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் பல வழக்குகளும் பதிவாகியுள்ளன. அத்தனை சம்பவத்திலும் பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி விடுவது இத்தகைய நிறுவனங்களின் வாடிக்கையாக உள்ளது. மேலும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையும் படு மோசம். அவர்களை கொத்தடிமைகள் போலத்தான் நடத்துகின்றனர். இதுகுறித்து ஒரு சினிமாப் படமே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிறுவனங்கள், வெறும் பணத்தை மட்டுமே கண்ணாகக் கொண்டு,மக்கள் பாதுகாப்பு, கெளரவான ஷாப்பிங் ஆகியவற்றைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் நடந்து இத்தனை காலமாக பணத்தை வாரியிறைத்து வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படட்டதில்லை.

இன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை போதாது. மாறாக ரங்கநாதன் தெருவிலேயே உள்ள பாதுகாப்பு அம்சங்கள் சிறிதும் இல்லாமல் நடத்தப்படும் பல கடைகளை மூட வேண்டும். குறிப்பாக பெரிய பெரிய கடைகளை மூடுவது மிகவும் அவசியமானது. இரும்புக் கரத்துடன் எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால்தான் இனிமேலாவது வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும், பயமும் இன்றி நிம்மதியாக கடைகளுக்கு வந்து போக முடியும்.மக்களால் புலம்பத்தான் முடிகிறது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு அரசாங்கமே கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற நிறுவனங்களின் கொட்டத்தை அடக்க முடியும் என்று புலம்புகின்றனர் மக்கள்.

மேலும், மக்களும் கூட இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிறுவனங்களுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும், அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அறிவுரை கூறியதையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் இன்றைய அதிரடி நடவடிக்கைக்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்திருப்பதால் அதிகாரிகள் அப்படியே கண் துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல், இறுக்கமாக நடந்து கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நிறுவனங்களை திருத்தும் வகையில் நடவடிக்கையை ஸ்திரமாக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ரங்கநாதன் தெருவில் அனைத்துக் கடைகளும் மூடல்: இதற்கிடையே, சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. 

இன்று காலை சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கடைகளை அதிகாரிகள் அதிரடியாக மூடியதைத் தொடர்ந்து மூடப்படாத பிற கடைகளையும் கடைக்காரர்களே இன்று முற்பகலுக்கு மேல் மூடி விட்டனர். இதனால் ரங்கநாதன் தெருவில் வர்த்தகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.அதேபோல தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலையிலும் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. 

மேலும் 50 கடைகளுக்கு விரைவில் மூடு விழா: இதற்கிடையே, பாதுகாப்பு வசதிகள், விதி மீறல்களில் ஈடுபட்டுள்ள மேலும் 50 கடைகளை மூடி சீல் வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தக் கடைகள் இன்றைக்குள் அல்லது நாளைக்குள் மூடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தி.நகரே பரபரப்பாக காணப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் இழப்பு 1.76 லட்சம் கோடி என்பதை நிரூபிக்கத் தயார் வினோத் ராய்!


 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்பதை நிரூபிக்கத் தயார் என மத்திய தலைமைத் தணிக்கையாளர் வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, கூட்டு நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கவும் தயார் என அவர் தெரிவித்துள்ளார். கூட்டு நாடாளுமன்றக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இம்மாதம் 10-ம் தேதி வினோத் ராய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், எப்பொழுது எனது உதவி தேவைப்பட்டாலும் அதிகாரிகளுடன் ஆஜராகத் தயார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இழப்பை மதிப்பீடு செய்த விதம் குறித்து விளக்கமளிக்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்க நியாயமான அனைத்து முயற்சிகளையும் தனது அதிகாரிகள் மேற்கொண்டதாக கடிதத்தில் ராய் கூறியுள்ளார். கடைசியாக மே 30-ம் தேதி கூட்டு நாடாளுமன்றக் குழு முன்பு வினோத் ராய் ஆஜராகியிருந்தார். அப்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தனது தணிக்கை அறிக்கை பற்றி எடுத்துக் கூறினார். 

இதனிடையே திங்கள்கிழமை (அக்டோபர் 31) வினோத் ராயும் மத்திய துணைத் தலைமைத் தணிக்கையாளர் ரேகா குப்தாவும் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு முன்பு விளக்கமளிக்க உள்ளனர். அப்போது, ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது எவ்வாறு என்பதை அவர்கள் விளக்குவார்கள்.அதேநேரத்தில்,அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு தணிக்கைத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஆர்.பி. சிங், ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். அவர், ரூ. 2,645 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார். அவரும் திங்கள்கிழமை பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்துக்கு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபம் கோரியதன் பேரில், சாட்சியாக ஆர்.பி. சிங் அழைக்கப்பட்டுள்ளார்.தொலைத் தொடர்புத் துறை, அமைச்சரவைச் செயலகம், நிதி அமைச்சர், சட்ட அமைச்சர், தொழில்துறை அமைச்சர், திட்டக் குழு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக உள்ள அனைத்து பொருத்தமான தகவல்களையும் தருமாறு கேட்டு கடிதம் அனுப்ப கூட்டு நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.

காயத்தை தவிர்க்க வேகப்பந்து வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு ஷேவாக்!

வேகப்பந்த வீரர்கள் அடிக்கடி காயம் அடைகிறார்கள். இதை தவிர்க்க சுழற்சி முறையில் வேகப்பந்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். காயத்தை தவிர்க்க ஒரே வழி இதுதான். வேகப்பந்து வீரர்களை அதிகமான போட்டிகளில் விளையாட அனுமதிக்க கூடாது. அதிகமான போட்டிகளில் ஆடுவதால் காயத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு முறை காயம் அடைந்தால் அதில் இருந்து குணமடைந்து மீண்டும் திரும்புவது என்பது கடினம். இங்கிலாந்து பயணத்தில் பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்ததால் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. டெஸ்டுக்கு ஒரு அணி, ஒருநாள் போட்டிக்கு ஒரு அணி என்பது குறித்து முடிவு செய்வது தேர்வு குழுதான். கிரிக்கெட் வீரர் என்ற முறையில் என்னை பொறுத்தவரை நாட்டுக்காக ஆடுவதுதான் முக்கியம். நான் அணி நிர்வாகத்திடம் எதுவும் கேட்க மாட்டேன். டோனி ஓய்வு கேட்டும் அவருக்கு அணி நிர்வாகம் ஓய்வு வழங்கவில்லை.  பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்ததால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. தெண்டுல்கர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. அவருக்கு மாற்று வீரர் இல்லை. தெண்டுல்கர் மாதிரி நீண்ட காலம் யாராலும் சிறப்பாக ஆட முடியாது. இன்னொரு தெண்டுல்கரை காண முடியாது. தற்போதுள்ள இளம் வீரர்களில் வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுகிறார்கள். சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றால் இளம் வீரர்கள் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்துவார்கள். இளம்வீரர்களின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது’’என்றூ கூறியுள்ளார்.

பயங்கரவாதச் செயலுக்கு எதிராக காமன்வெல்த் நாடுகள் கூட்டாக உறுதி!

பயங்கரவாதச் செயலுக்கு தங்கள் நாடுகளைப் பயன்படுத்த விடாமல் தடுப்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி சென்று சேராமல் தடுப்பது ஆகியவற்றின் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதென காமன்வெல்த் நாடுகள் உறுதி எடுத்துக்கொண்டன. கடற்கொள்ளைக்கு எதிரான முயற்சிகளை விரைவுபடுத்தவும் இந்தியக் கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் காமன்வெல்த் நாடுகள் ஒப்புக்கொண்டன.

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் கூறப்பட்டிருப்பது பயங்கரவாதிகளின் செயல்கள் மற்றும் அவர்களுக்கான ஆதரவுக்கு தங்கள் நாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது என உறுதி மேற்கொண்டுள்ளோம்.பயங்கரவாதிகளுக்குக்கிடைத்து வரும் நிதி ஆதாரத்தை ஒடுக்கவும், நிதியுதவியைப் பெறுவது அவற்றைப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடுக்கவும் தேவையான சட்ட அணுகுமுறையை அமல்படுத்த அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.


சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரிவான மாநாடு நடத்துவது பற்றி பேச்சு நடத்த வேண்டும். சர்வதேச பாதுகாப்பு பற்றி விவாதித்தபோது அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கடற்கொள்ளை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. சோமாலியாவில் அரசியல் நிலைத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் கடற்கொள்ளையை முழுமையாகத் தடுக்க முடியாது. பாதுகாப்பான நிலையான தேசிய சர்வதேசிய சூழலை உருவாக்குவதில் தங்களுக்குள்ள கடமையை உறுப்பு நாடுகள் வெளிப்படுத்தின. காமன்வெல்த் அமைப்பில் உள்ள 54 நாடுகளின் தலைவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இம்மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றார்

பெற்ற தாயின் வயிற்றை வாளால் கிழிப்பது போல சேர்த்த பணத்தை காக்க கழகத்தை காட்டிக் கொடுக்க...?


நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. நமது கழகத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்படவுள்ளது. அதற்கு முன்பு புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கல் ஆகிய பணிகளில் விரைந்து ஈடுபடுமாறு நமது பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். அந்தப் பணிகளை நீங்கள் விரைவில் மேற்கொள்ளவிருக்கிறீர்கள். என்னென்ன விமர்சனங்கள்? எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? பேசுகிறார்கள்? அப்பப்பா? "குலைந்தது கட்சி! தொலைந்தது இனிமேல்! சீந்துவார் யாருமில்லை! சீராட்டும் பாராட்டும் பெறாமல் "சீ'' என்றிகழப்பட்டு, தெருப்புழுதியிலே சேர்க்கப்பட்டுவிடும்.

சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை. அதையொட்டி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலே ஒரு மாநகராட்சியைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இடைத்தேர்தலிலோ வித்தியாசம் இரு மடங்காகி விட்டது. என்றெல்லாம் கூறி மாடகூடங்களில் இருந்து மமதையை மலையென மனத்தில் வளர்த்துக்கொண்டு, "வீழ்ந்தது கழகம், இனி எழவே முடியாது'' என்றெல்லாம் எக்காளமிடுகின்றனர். கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். 

கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர். துரோகத்தைத் தூள் செய்து பகையைப் புறங்கண்டு நீ தூக்கி உயர்த்தியிருக்கிற இரு வண்ணக் கொடியை காணும்பொழுதும், அந்தக் கொடியின் பட்டொளியில் 62 ஆண்டு கால இயக்கச் சரித்திரத்தைப் படிக்கும் பொழுதும், ஓரம்போகியார் எனும் ஒரு பெரும் கவிஞர் எழுதிய புறப்பாடல் ஒன்றை நான் உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன். அந்தக் கவிஞர் எழுதிய பாடலில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடுகிறார்கள்.

போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒருவன் உடனே களம்புகுமாறு வீரர்களுக்கெல்லாம் செய்தி அனுப்புகிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளிலிருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். போர் தொடங்கி விடுகிறது. அந்தப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம் போகியாரின் விழிகள் வட்டமிடுகின்றன. அவன் தேர்ப்படையிலோ, யானைப் படையிலோ, புரவிப்படையிலோ இடம்பெற்று அந்தக் களத்திற்கு வரவில்லை. தன்னந்தனியனாக, நூலரி மாலையை அணிந்து கொண்டு, கையில் ஓர் வாளுடன் காலாட் படை வீரனாக களத்திலே நுழைகிறான். கடும் போரிடுகிறான்.

அந்த வீரன்; காலாட்படை வீரன்; எதிரிப் படை வீரனை நோக்கிப் பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன். இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகெனக் கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான். அந்த வாள் வீச்சு, மாரிக்கால மின் வெட்டின் வீச்சு. யானை வீழ்கிறது. யானையை வீழ்த்திய அவன் வாளும் வளைந்து விடுகிறது. யானையின் மீதிருந்து விழுந்த வீரன், எழுந்து வந்து அவனைத் தாக்கி அழிப்பதற்குள் வாளை நிமிர்த்தியாக வேண்டும். என்ன செய்தான் தெரியுமா? அவன் வாளை நிமிர்த்திக் கொள்ள உடனடியாக எந்த வசதியும் கிட்டவில்லை. எதிரியோ எழுந்து விட்டான். விரைவில் நெருங்கி விடுவான். பளிச்செனத் தோன்றியது ஒரு அரிய யோசனை அந்த மாவீரனுக்கு. கோணிய வாளை எடுத்தான் - அங்கே தன்னால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த யானையின் மத்தகத்திலே அந்த வாளை அழுத்தி நிமிர்த்துக் கொள்கிறானாம். அவனது வளைந்து போன வாளை நிமிர்த்திக் கொண்டான் என்பதைக் கண்டதும் எதிரிப்படையின் வீரன் எடுக்கிறான் ஓட்டம் - புறங்காட்டி ஓடுகின்ற அவனைப் பார்த்து அந்த வீரன் நகைக்கத் தொடங்கினான்.

ஓரம்போகியார் சித்தரிக்கும் அந்தத் திறன் மிகு தீரனாகத்தான் உன்னை - நமது கழகத்தை - நான் கருதுகிறேன். நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல நமது விரோதிகள் ரதங்கள் ஏறி வந்து நம்மைத் தாக்க முயலலாம். நமக்கெதிரான விமர்சனங்கள் யானைகள் மீது ஏறி வந்து நம்மை எதிர்க்கலாம். துரோகிகளோ குதிரைப்படை கொண்டு வந்து நம்மை நிலைகுலையச் செய்ய யத்தனிக்கலாம். நமது புறநானூற்றுப் புலவர் வியந்து பாராட்டிய வீரன் எதிரிப்படையை விரட்டியது போல, கொல்ல வரும் பகையை - தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும்.நாம் வெற்றியினைப் பெற்றிட உழைப்போம் - ஒற்றுமையோடு உழைப்போம் - ஓய்வில்லாமல் உழைப்போம் - உறுதியோடு உழைப்போம். கண்மணியாம் நமது கழகத்தை வளர்ப்போம். உறுப்பினர்களை அணி அணியாகச் சேர்ப்போம். புதிய வாக்காளர்களை பட்டியலில் இணைப்போம்’’ என்று கூறியுள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...