|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 October, 2011

யார் போதிதர்மன்? முருகதாஸ்!


முன் சக்கரம் பழுதானதால் விமானத்தை சாதுர்யமாக தறை ஈராக்கிய விமானி!NISSAN விளம்பரம்! !!


7 ஆம் அறிவுக்கு பிறகு மக்கள் வரலாற்றை ஆராய ஆரம்பித்து விட்டார்கள்! இபோது சோழர்கள்!

யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்? 
சோழர் காலம்: தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். 

சான்றுகள்: கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.

கல்வெட்டுகள்: சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.

மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.

அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன. 

நினைவுச் சின்னங்கள்: சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும். 

நாணயங்கள்: சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன. 

இலக்கியம்: சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.

அயல்நாட்டு சான்றுகள்: சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.

பிற்கால சோழ அரச குலம்: பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.

முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953: உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார். இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.


முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014: இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044: முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது. இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.

முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170: சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன. சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

சுய உந்துதலே குழந்தையின் ஊட்டச்சத்து!


இவ்வுலகில் பிரளயம், பூகம்பம் மற்றும் இன்னபிற இயற்கைப் பேரிடர்கள் பல ஏற்பட்டாலும், இந்த சுய உந்துதலே ஒவ்வொரு உயிரினத்தையும் நிலைத்து பிழைக்கச் செய்கிறது. மத நூல்கள் உட்பட, பலவிதமான நன்னெறி நூல்களிலும் இந்த சுய உந்துதல் போதிக்கப்பட்டுள்ளது. 
இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, மனிதனுக்கு துணைபுரியும் ஒரு மாபெரும் அம்சம் சுய உந்துதல். 
* உலகின் ஒவ்வொரு சாதனையாளரையும் சாதிக்க வைத்தது இந்த சுய உந்துதலே.
* மூட நம்பிக்கையால் சீரழிந்து கிடந்த சமூகத்திற்கு பகுத்தறிவையும், மனித முயற்சிகளின் மாண்பையும் உணர்த்தி, ஏமாற்றுக் கூட்டத்தாரிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க புத்தரைத்(உலகின் ஜோதி) தூண்டியது சுய உந்துதல்தான்.
* இந்த சுய உந்துதல் என்பது ஒரு மனிதனை சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு மாற்றுகிறது. இந்த உந்துதல்தான் நமது உள்ளார்ந்த திறன்களை நமக்குப் புரியவைத்து, நமது பலவீனங்களை மறக்கச் செய்கிறது.
* உங்களின் குழந்தை சாதனையாளராக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த சுய உந்துதல் பண்பை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தவும்.
* ஒவ்வொரு குழந்தையும் இயற்கையிலேயே  ஓரளவு சுய உந்துதல் பண்போடுதான் பிறக்கின்றன. ஏனெனில், அந்தப் பண்பு, ஒரு மனிதன் உயிரோடு வாழ்வதற்கான அடிப்படை சக்தியாகும்.
குழந்தையின் சுய உந்துதலை அதிகரிப்பதற்கான சில முக்கிய யோசனைகள்
* உங்கள் குழந்தையின் மூளையானது, எப்போதுமே நேர்மறையான செயல்பாடுகளில் ஆழந்திருக்கும்படி வாய்ப்புகளை உருவாக்கவும்.
* வீட்டில், ஆரோக்கியமான, ஆர்வமூட்டும் கற்றல் சூழலை குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும்.
* நேர்மறை எண்ணம் உள்ளவர்களுடன் மட்டுமே உங்களின் குழந்தையை பழக விடவும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் தொடர்பைத் தவிர்க்கவும்.
* தனக்குள்ளேயே முடியும் - நம்மால் முடியும் என்ற வகையில் பேசிக் கொள்வது சுய உந்துதலை அதிகரிப்பதற்கான வழியாகும்.
* உங்கள் குழந்தையிடம் எப்போதுமே படைப்பாக்க சிந்தனைகளைத் தூண்டவும். ஏற்கனவே இருக்கும் விஷயங்களையே திரும்ப திரும்ப பேசி சிலாகிப்பதை விட்டுவிட்டு, புதிதாக உருவாக்கும் எண்ணத்தை குழந்தையிடம் உருவாக்கவும்.
* உலகில் புதிதாக சாதனைப் புரிந்தவர்கள், படைப்பாளிகள், புகழ்பெற்ற தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அனுபவக் குறிப்புகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவும்.

பெற்றோர் பங்கு: ஒரு குழந்தையின் சுய உந்துதல் மேம்படுவதில் பெற்றோரின் பங்கு பற்றி விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தையின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்தான். பள்ளியில் ஒரு குழந்தைக் கற்பதைவிட, பல மடங்கு வாழ்க்கைப் பாடங்களை வீட்டில்தான் கற்றுக்கொள்கிறது. எனவே, வீடு மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களில்தான் ஒரு குழந்தையின் மனப்பாங்கு உருவாக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் திறன் மேம்பாட்டினால் அது பெரும் நற்பெயரில், பெற்றோர்களுக்கு சமபங்கு கிடைக்கிறது. எனவே அதற்கேற்ப பெற்றோர் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்மறை செயல்பாடுகளைத் தவிர்த்து, உங்கள் குழந்தையிடம் நேர்மறையாகவே செயல்படுங்கள். குழந்தை செய்யும் தவறுகளைத் திருத்துவதில் நேர்மறை அணுகுமுறையைக் கடைபிடியுங்கள். கடுமையான அணுகுமுறையைத் தவிர்க்கவும். உங்களிடமிருந்து கிடைக்கும் உற்சாகம், பாராட்டுதல்கள் மற்றும் பரிசுகளை குழந்தைகள் எப்போதுமே எதிர்பார்க்கின்றன. உங்களின் குழந்தை அசாத்திய அறிவைக் கொண்டிருக்கவில்லை என்றாலும்கூட, உங்களின் அணுகுமுறையே அவர்களை சிறப்பானவர்களாக மாற்றிவிடும். ஏனெனில் எல்லாக் குழந்தைகளுமே பிறவி மேதைகளாகப் பிறப்பதில்லை. உங்கள் குழந்தையின் வளரும் செயல்பாட்டில் நீங்களும் எவ்வளவோ கற்றுக்கொள்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உலகம் கைப்பற்றுவதற்கே! மனச் சிறையிலிருந்து உங்கள் குழந்தையை விடுதலைப் பெறச் செய்யுங்கள். சுதந்திரமான மற்றும் தனித்துவம் வாய்ந்த சிந்தனைகள் உங்கள் குழந்தையிடம் பெருகி வரட்டும். இளம் வயதிலேயே செயல்பட உங்களின் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கவும். உங்களின் இல்லமானது, போக்குவரத்து தடைகளற்ற ஒரு சீரான மற்றும் விசாலமான நெடுஞ்சாலைப் போன்று இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு வேண்டாத கட்டுப்பாடுகளை சுமத்தக்கூடாது என்பதுதான். அந்தக் கட்டுப்பாடுகள் உங்கள் குழந்தைக்குள் ஒரு மேதை உருவாவதை தடுத்துவிடும். உங்கள் குழந்தையைப் பொறுத்தவரை, உலகம் என்பது வெல்வதற்கானது! மாறாக, அடங்கி வாழ்வதற்கல்ல.

அவர்களே செய்யட்டும்: உங்கள் குழந்தைகளுக்கான வேலையை அவர்களையே செய்ய விடுங்கள். சில தடுமாற்றங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும், எல்லாம் போகப் போக சரியாகிவிடும். உங்களின் குழந்தை ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், தடை செய்யாதீர்கள். அந்த விஷயத்தின் அடிப்படைகளை சொல்லிவிட்டு, அவற்றை குழந்தையே செய்ய அனுமதியுங்கள். அடிக்கடி போய் நச்சரிக்காதீர்கள். உங்களது பாணியையே பின்பற்ற வேண்டும் என்றும் நினைக்க வேண்டாம். உதாரணமாக, ஒரு குழந்தை சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கான முயற்சிகளுக்கு அனுமதியுங்கள். விளைவுகள் விரும்பியபடி இல்லாவிட்டாலும், கவலையில்லை. நாளாவட்டத்தில், உங்களின் குழந்தை நன்றாக சமைக்கப் பழகியிருக்கும்.

தோல்விகூட புதுவகை வெற்றிக்கு வழி: உங்கள் குழந்தையின் செயல்பாட்டில் ஏற்படும் தோல்விகளை எண்ணி வைத்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால், உங்களின் தவறுகள் நினைவுக்கு வரும்.

சில சமயங்களில் தவறுகள்கூட புதிய செயல்முறைகளுக்கு வழிவகுக்கும். பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் தவறான செயல்பாடுகள் புதிய சாதனைகளுக்கு வித்திட்டுள்ளன. உங்களின் குழந்தை தனது செயல்பாட்டில் சிறுசிறு தவறுகள் செய்வதால் உலகமே ஒன்றும் தலைகீழாகி விடப்போவதில்லை. எனவே, குழந்தையின் தவறுகளை எக்காரணம் கொண்டும் தூற்றாதீர்கள்.
உங்கள் குழந்தை ஒரு ரோபோவாக இருக்க முடியாது. அது தனித்துவமாக செயல்பட வேண்டுமெனில், தனது முயற்சிகளில் புதுப்புது அம்சங்களை செய்து பார்க்கும். அதை தடைசெய்யாதீர்கள்.

உங்கள் குழந்தை நீங்கள் அல்ல! "உங்கள் குழந்தை உங்களின் வழியாக பிறக்கிறதே தவிர, அது நீங்கள் அல்ல" என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே, உங்களின் ஆசை-அபிலாஷைகளை அதனிடம் திணிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் தனித்துவமான அம்சங்களுடன் உலகில் பிறக்கிறார்கள். உங்களைப் போன்றே அவர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் வழி எதுவோ, அதில் அவர்களை செல்ல விடுங்கள்.

இலக்கு நிர்ணயித்தல்: ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையான இலக்கு இருந்துகொண்டே இருக்கும். இலக்கு இல்லாவிட்டால், மனித வாழ்வு சுத்தமாக கலையிழந்துவிடும். ஒவ்வொருவரின் வாழ்விலும் இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இலக்கை மையமாக வைத்தே இயங்குகிறது.

உங்கள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏதேனும் ஒரு இலக்கைக் கொடுத்துப் பழக்குங்கள். அந்த இலக்கை முடித்தவுடன், பரிசுகளையும், பாராட்டுகளையும் வழங்குங்கள். அதேசமயத்தில், கொடுக்கப்படும் இலக்கானது குறிப்பிட்ட காலத்தில் அடையக்கூடியதாக இருக்கட்டும். குழந்தை, மிரண்டு போகுமளவிற்கு எந்த இலக்கையும் தந்துவிட வேண்டாம்.இலக்கை நிர்ணயித்துப் பழக்குவதன் மூலம், பிற்காலத்தில், தனது லட்சியத்தை அடைய, குழந்தைகள் தங்களுக்குப் பொருத்தமான இலக்கை, தாங்களே நிர்ணயித்துக் கொள்வார்கள்.

குறிப்பு: ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும். அதன்மூலம் பெற்றோர் மற்றும்  குழந்தையின் வாய்ப்புகளும் மாறுபடும். குழந்தையின் சுதந்திர சிந்தனையை வளர்ப்பது என்றால், அதன் இஷ்டத்திற்கு விட்டுவிடுவதல்ல. நல்லது - கெட்டதை சரியாக புரிய வைப்பது பெற்றோர்களின் கடமை. உலகின் நிலையை தெளிவாக அவர்களுக்குப் புரிய வைப்பதும், சமூகத்தின் சவால்களை தெரிய வைப்பதும் முக்கியமானவை. அப்போதுதான் ஒரு குழந்தை சுதந்திரமாக செயல்படும்போது, சரியான பாதையில் செல்லும். இல்லையெனில், சுதந்திரம் என்ற பெயரில், ஒரு குழந்தையின் எதிர்காலம் முற்றிலும் சீரழிந்துவிடும். ஏனெனில், நம்மைச் சுற்றிலும் நல்ல விஷயங்களைவிட, தீமைகளே எங்கும் நிறைந்துள்ளன என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். 

சரக்கு விற்பனை 30 சதவீதம் எகிறியது !

உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை எதிரொலியாக, "டாஸ்மாக்' சரக்கு விற்பனை சராசரியை விட, 30 சதவீதம் எகிறியுள்ளது.தமிழகம் முழுவதும், 6,690, "டாஸ்மாக்' சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. இதில், நாளொன்றுக்கு 50 கோடி ரூபாய் வரை சரக்குகள் விற்பனையாகின. ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பால், சரக்கு விற்பனை எகிறியுள்ளது. தேர்தலுக்காக, நேற்று மாலை 5 மணி முதல், 19ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. ஓட்டு எண்ணிக்கை தினமான 21ம் தேதியும் விடுமுறை. இதனால், சரக்குகளை பதுக்கும் வேலைகள் கடந்த ஒருவாரமாக அதிகரித்துள்ளது.கடந்த 15 நாட்களில் மட்டும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் சரக்குகள் விற்பனை நடந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 91 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை ஆகியுள்ளன. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும்போது, "உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, சராசரியைவிட சரக்கு விற்பனை 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 70 சதவீதம் வரை பிராந்தி, ரம் வகைகள் விற்பனையாகியுள்ளது. தேர்தலுக்குப்பின், தீபாவளி வருவதால், விற்பனை மேலும் அதிகரிக்கும்' என்றார். 

2012ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.7% ஆக!

 2012ம் ஆண்டு உலக அளவில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 9.4 சதவீதமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2012ல் சீன பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமே இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது. 2011ம் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர் விலை நிர்ணயம் அடிப்படையிலான சீனாவின் பணவீக்கம் 5.5 சதவீதத்திலேயே உள்ளது. ஏற்றுமதி, முதலீடு, நுகர்வோர் ஆகிய மூன்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதார அடிப்படையிலான சீனாவின் வளர்ச்சி 2011ம் ஆண்டின் முதல் பாதியில் 9.6 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

2012ல் தங்கம் விலை புதிய சாதனை படைக்கும் !

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலை, 2012ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டும் என பல்பொரும் நிதியக மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை, பிறகு அதே நிலையிலேயே சில நாட்கள் நீடித்தது. இதனால் பரிவர்த்தனை வர்த்தகர்கள், மத்திய வங்கிகள் உள்ளிட்ட நீண்ட கால விற்பனையாளர்களின் பங்குகளில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 17 சதவீதம் வரை தங்கம் விலை அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு செப்டம்பர் மாதத்தின் முன் பகுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 300 டாலர்கள் வரை அதிகரித்து 1920.20 டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடியும் தங்கம் விலை தொடர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்ப அழைக்கும் உரிமை இந்தியாவில் எடுபடாது தேர்தல் கமிஷன்!

தேர்தல் விதிமுறைகளில் மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்கும் உரிமையையோ அல்லது திரும் அழைக்கும் உரிமையையோ சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எடுபடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிராகரிக்கும் உரிமையை அறிமுகப்படுத்தம் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர், இந்த உரிமையை விதிமுறைகளில் சேர்ப்பது தொடர்ச்சியான தேர்தல்களுக்கு வழிவகுக்கும் என்றார்.எனினும் வாக்காளர்கள் நிராகரித்து விடுவார்கள் என்ற பயத்தில் கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு வேட்பாளர்கள் தயங்குவார்கள். இதனால் தேர்தல் செலவைக் கட்டுப்படுத்த முடியும் என அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளது குறித்து விவாதம் நடத்தத் தயார் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...