|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2012

மௌனகுரு DVD

t

இந்திய திருமணச் சட்டம்...

1891ம் ஆண்டு பெண்ணுக்கு, குறைந்தபட்ச திருமண வயது, 12 என ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியது. மரபுக்கு எதிரானது என மக்கள் எதிர்த்தனர். 1929ம் ஆண்டு, பெண்ணுக்கு ,15 வயது, ஆணுக்கு, 18 வயது என்ற நிலை வந்தது. ஆனால், அந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 1948ல், இந்தியாவில் பெண் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து தன் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உரிமை உள்ளது என்ற சட்டம் வந்தது. 1955ல் இந்து திருமணச் சட்டம் மற்றும் மனவிலக்கு(விவகாரத்து) சட்டம் கொண்டு வரப்பட்டது. திருமணம் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது. பலதார மணம் சட்டத்துக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டது. 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இச்சட்டங்கள் இருந்தபோதும், 50 சதவீதத்துக்கு மேல், 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலையில், பெண் பிறப்பு தடுக்கப்படுவதால், ஆண், பெண் எண்ணிக்கை வேறுபாடு அதிகம் உள்ளது. திருமண வயதுடைய ஆண்களுக்கு, பெண்கள் கிடைக்காத சூழலும் உள்ளது. இளம் வயது திருமணத்தை தவிர்க்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குழந்தை திருமணங்களை தடுக்க, பெண் குழந்தைகளை மேல்படிப்புக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இளம் வயது திருமண பாதிப்புகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்ணுக்கு சொத்தில் சமபங்கு அளித்தல், ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் மதிப்பு, மரியாதை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவியரிடத்தில் இத்தகவல்களை தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடப்பது தெரியவந்தால், தங்கள் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., பஞ்சாயத்து தலைவர், போலீஸ், சமூக நல அலுவலர், மாஜிஸ்திரேட், 

குழந்தைகள் நல உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம், புகார் தெரிவிக்கலாம். இளைஞர்கள் சமூக சேவையாக கருதி, கிராமப்புறங்களில், கல்வியறிவற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். யார், யாருக்கு காப்பு...: குழந்தை திருமணத்தை நடத்திய இரு தரப்பு பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் மாப்பிள்ளை, திருமணத்தை நடத்தும் புரோகிதர், பூசாரி, நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள், அக்கம், பக்கத்தினர், முன்னின்று நடத்தும் சமுதாய தலைவர்கள், நிச்சயித்த நபர்கள், அமைப்புகள், புரோக்கர்கள், சமையலர் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும், குழந்தை திருமண தடைச்சட்டம், 2006ன்படி குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமினில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப ஒன்றோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தை திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அத்திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.

அமெரிக்க நகர மேயராக இந்தியர்.

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ்வில்லா நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் சத்யேந்திர சிங் ஹுஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு தென்மேற்கில் 193 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந் நகரத்தில் 43 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் சத்யேந்திர சிங் ஹுஜா மட்டுமே சீக்கியர். இந் நகரம் மூன்று அமெரிக்க அதிபர்களை உருவாக்கியுள்ளது. தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மடிசன், ஜேம்ஸ் மன்ரோ ஆகியோரின் தாயகமான இந்த நகரின் மேயராகப் பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று ஹுஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், 19 வயதில் படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கேயே நிரந்தரமாகத் தங்கி சுமார் 38 ஆண்டுகளாக சார்லோட்டஸ்வில்லா நகரில் வசித்து வருகிறார்.

விக்கிபீடியா போராட்டம்!

அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள பைரசி தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை விக்கிபீடியா இணையதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச இணையதளங்களை தணிக்கை செய்ய புதிய மென்பொருட்களை கொண்டுவருவது இணையதளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வது போன்றதாகும்.  1800 விக்கிபீடியர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிலளித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இந்த சட்டம் இணையதள சுதந்திரத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என விக்கிபீடியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது

குங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு சரியா?

நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.

பேராசிரியர் மோகனுக்கு கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது!


பனிக்காலத்துக்கு ஏற்ற காய்கள்...


சீசனுக்கு ஏற்ற காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது உடலுக்கு ஊட்டம் தரும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிக்காலத்தில் இந்த காய்கறிகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

அதிரடி ஆரஞ்சு சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது.

ஊட்டம் தரும் ஆப்பிள் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள். அந்த அளவிற்கு பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது பயன்தரக்கூடியது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.

கண்ணுக்கு ஒளி தரும் காரட் கிழங்கு வகை காயான காரட் உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது. கரோட்டின் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் அதிகம் கொண்டுள்ளது. மேலும் வைட்டமின் பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. கால்சியம் பெக்டேட் காரட்டில் அதிகம் உள்ளது. இது பனிக்காலத்தில் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

கடுகு இலைகள் பனிக் காலத்தில் கடுகு செடியில் இருந்து கிடைக்கும் இலைக்கள் மிகவும் சத்து நிறைந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். பச்சை கடுகில் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் வைட்டமின்கள், தாது உப்புகள், கரோட்டீன்கள் அதிகம் உள்ளன. 

பச்சை பட்டாணி பச்சைப்பட்டாணியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஊட்டச்சத்தினை அதிகரிக்கும். இது வயிறு புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நார்ச்சத்து டர்னிப் கிழங்குவகை காய்கறியான டர்னிப்பில் போலேட், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் உள்ளன. இந்த டர்னிப் வகை காய்கறியை பனிக் காலத்தில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

பாலக்கீரை சத்து நிறைந்த உணவாக கொண்டாடப்படும் பாலக்கீரையில் ப்ளேவனாய்டுகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் பனிக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.

வெந்தையக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. இது நார்ச்சத்து அதிகம் கொண்டது. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுகிறது. வெந்தைய சப்பாத்தி பனிக்காலத்திற்கு ஏற்ற உணவு.

முள்ளங்கி சாம்பார் பனிக்காலத்தில் முள்ளங்கி சாம்பார் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இந்த காய்கறியில் பொட்டாசியம், போலிக் அமிலம் அதிகம் உள்ளது. இதனை சாலட் போலவும் சாப்பிடலாம்.

இதே நாள்...


  • மொனாகா தேசிய தினம்
  •  தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்(1917)
  •  வளைகுடாப் போர் துவங்கியது(1991)
  •  ஐ.நா., சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது(1946)

தூக்கம் கம்மியானால் இதயநோய்.


நள்ளிரவில் தூங்கி அதிகாலையில் கண்விழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

6 மணி நேர தூக்கம் அவசியம் இரவில் தாமதமாக தூங்குவதும், அதே சமயம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலையில் எழுவதும் இன்றைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பழக்கமாக உள்ளது. உடற்பயிற்சிக்காக தூக்க நேரத்தை குறைக்கும் இளைஞர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிவதில்லை. ஏழு மணி நேரம் மிக நல்லது.முடியாவிட்டால் 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே ஆபத்தை அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில், சுமார் 4.7 லட்சம் பேரிடம் வார்விக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது நிரூபணமாகியுள்ளது.

உடலோடு ஒட்டிய டைம்பாம் ”பின் தூங்கி முன் எழுவது உடலிலேயே கட்டிக்கொண்டிருக்கும் ‘டைம்பாம்’ க்கு சமம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ அல்லது தூக்கம் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 48 விழுக்காடு அதிகமாக உள்ளது. மேலும் ‘ஸ்ட்ரோக்’கால் இறப்பதற்கான வாய்ப்பும் மற்றவர்களை காட்டிலும் 15 விழுக்காடு அதிகமாக உள்ளது” என்று தெரியவந்துள்ளதாக வார்விக் பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் சர்க்கரை நோயும், உடல் பருமனும் இணைந்த டயப்ஸிட்டி (diabetes and obesity) – என்ற நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைவான தூக்கம் ஆபத்து லண்டனில் சமீபத்தில் மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன் எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள். முதல்முதலாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர்,குறைவான நேரம் தூங்குபவர்களாகவும்,அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவுமே இருப்பது தெரியவந்துள்ளது” என்கிறார் இருதய சிகிச்சை நிபுணரான மேத்தா. எனவே சரியான தூக்கமே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்றும் மருத்துவர்கள்

கொள்ளைக்காரன் MOVIE ONLINE



அஜீத்-அசத்தல் போஸ்டர்!






பில்லா 2 படத்தின் கலக்கலான போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். " கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு’ என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

நூறு சதவிகித ஒத்துழைப்பு இந்த படத்தில் அஜீத் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், ‘டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜீத் என்றார். ’பில்லா 2’ படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜீத் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பில்லா 2 படத்தில் அஜீத்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜீத், அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார்

தாய்மையை அனுபவித்து உண்பது சேய் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது!


கர்ப்பிணிப் பெண்கள் ஜிங்க் எனப்படும் துத்தநாகம் சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வது குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்ப காலமான ஒன்பது மாதமும் உற்சாகத்துடன் தாய்மையை அனுபவித்து உண்பது சேய் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் மருத்துவர்கள். கர்பிணிகளுக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்... கர்ப்ப காலத்தில் சமச்சீரான சத்து நிறைந்த உணவை உண்பது கர்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் அவசியமானது. முதல் மூன்று மாதங்களுக்கு அதிகமாக மசாலா உள்ள உண்வுகளை சாப்பிடாதீர்கள். அவை வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். எனவே லைட் ஆன அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிரம்பிய உணவை உட்கொள்ள வேண்டும். வெள்ளரி மற்றும் தயிர் சோறு போன்ற மிதமான சுவையான உணவை சாப்பிடவும்.

இரும்பு சத்து அவசியம் கர்ப்ப காலத்தில் அதிக அளவு இரும்பு சத்து மிகவும் முக்கியமாகும். ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்க இரும்பு சத்து நிறைந்த கீரைகள், பேரிச்சம்பழம் போன்றவைகளை உண்ணவேண்டும். ராஜ்மா , சாக்வாலா போன்ற உணவுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான இரும்பு சத்து அளவை பராமரிக்க உதவும். அதோடு சத்து நிறைந்த பாலக் பன்னீர், மேத்தி ரோட்டி பீன் சூப் போன்றவை சாப்பிடலாம். எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்குத் தேவையானது கால்ஷியம். எனவே பால் பொருட்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவும். இது தாய்ப்பாலுக்கு நன்மை அளிக்கக்கூடியது. பால், பனீர், சீஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளுடன் கால்ஷியம் உள்ள உணவை சேர்க்கவேண்டும். மலச்சிக்கல் போக்கும் நார்ச்சத்து கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நார்சத்து உள்ள உணவுகள் மலச்சிக்கலை அகற்ற உதவுகின்றன. பழங்கள், கீரை வகைகள் மற்றும் முழு கோதுமை தயாரிப்புகள் போன்ற இயற்கையான அன்ப்ரோஸெஸ்ட் உணவை சாப்பிடலாம். கொய்யாப் பழத்தில் நார்சத்து அதிக அளவில் இருப்பதால் அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 

வளர்ச்சிக்கு ஏற்ற துத்தநாகம் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஜிங்க் மிகவும் முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ப்ராக்கேலி மற்றும் கீரை போன்ற பச்சிலை வகைகளை தினமும் முறை தவறாமல் சாப்பிடுவதிலிருந்து தேவையான ஜிங்க் அளவை கர்ப்பிணிகள் பெற முடியும். தண்ணீர் அவசியம் உடலில் நீர் தேங்கம் பாதிப்பு இருந்தாலும் கூட நீங்கள் தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உணவின் பிற்சேர்க்கையாக பழரசங்கள், சூப், மோர் மற்றும் இளநீர் பயன்படுத்துங்கள். இவற்றில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன மற்றும் உடனடியாக சக்தி கிடைக்கும். கலட்டோகாக் உணவுகள் கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்திற்கு பூண்டு, வெந்தயம், சப்ஜா, பால் மற்றும் பாதாம் கொட்டை சாப்பிடவும். இவை கலக்டோகாக் உணவு எனப்படுகின்றன. அதாவது இவை தாய் பாலை ஊக்குவிக்க உதவும்.

தியானம் பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கும்.

ப்ரௌவ்ன் பல்கலைக்கழகம் ஒன்று 44 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது அந்த ஆய்வில் பங்கேற்ற 44 மாணவர்களில் 30 பேர் பெண்கள். 12 வாரங்களுக்கு தியானம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியின் போது அமைதி, உற்சாகமான, பாலுணர்வை தூண்டும் படங்களை காண்பிக்கப்பட்டது. அப்போது தியானப்பயிற்சி செய்த பெண்கள், ஏராளமானோர் எளிதில் உணர்ச்சி வசப்பட்டனர். மேலும் தியானம் பயிற்சி செய்த பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே தியானம் மேற்கொள்ளும் பெண்களின் கவனச்சிதறல் ஏற்படாமல் இருந்ததும் தெரியவந்ததாக டெய்லி மெயில் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு உளவியல் பற்றிய தகவல்களை வெளியிடும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் 100% பாதுகாப்பானவை அல்ல டெல்லி ஹைகோர்ட்!


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நூறு சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியும், மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறவேண்டும் என்றும் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இயந்திர வாக்குப்பதிவு முறையை அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துவிட்ட நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்கும் என்றும் சுப்ரமணிய சாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ராஜீவ் சஹாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை அல்ல என்று தெரிவித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து நிலவும் சந்தேகங்களை முழுமையாக தீர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். எனினும், ஓட்டு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தலாம் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி சாமியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள், டோணி செயலற்றவர்!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அந்நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறிய பேட்ஸ்மேன்களை உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணியை செயலற்றவர் என்றும் பழித்துள்ளன. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணி செயலற்றவர் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது குறித்து 'தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உலகிலேயே வலுவான கிரிக்கெட் அணியாக இருந்த இந்திய அணி தற்போது ஆட்டம் கண்டுபோயுள்ளது. திறமையான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணியில் யாரும் விளையாடவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள். எதிரணியின் பந்து வீச்சாளர்களை பயப்பட வைத்த லட்சுமன் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்துவிட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஷேவாக், அரைசதம் கூட அடிக்கவில்லை. கேப்டன் டோணியின் பேட்டிங் ஜொலிக்கவில்லை. அவர் தனது அணியை ஊக்குவிக்கவில்லை. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.

செயலற்ற கேப்டன்: இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள கேப்டன்களில் மிகவும் மந்தமான, செயலற்றவராக டோணியைக் குறிப்பிடலாம். இவர் தாமதமாக செயல்பட்டதால் பலபோட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்களான வார்னர், கோவன் இணைந்து 88 ரன்கள் சேர்த்த பிறகே வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை களமிறக்கினார். 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்த உமேஷ் யாதவை, கேப்டன் டோணி உள்பட இந்திய வீரர்கள் யாருமே பாராட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து 'தி டெய்லி டெலிகிராப்' என்ற பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது, தாமதமாக பந்துவீசிய சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய கேப்டன் டோணி அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே தவித்து வரும் இந்திய அணிக்கு மேலும் சிக்கலாகி உள்ளது.

'பார்ம்' இல்லாமல் தவித்து வரும் ஷேவாக் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஆஸ்திரேலியாவில் ஷேவாக் தற்போது ஆடியுள்ள 3 போட்டிகளின் மொத்த சராசரி 19 ரன்கள் தான். தனிப்பட்ட முறையில் ரன் சேர்க்க தவித்து வரும் அவர் எப்படி அணியை வழிநடத்துவார். டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சராசரியாக 47.08 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 22.9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் 4 பேர் 134 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஆனால் இந்திய அணியில் ஒருவர் மட்டுமே அதிகபட்சமாக 83 ரன்களை எடுத்தார் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து 'ஹெரால்டு சன்' என்ற பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி அடைந்த சரிவில் இருந்து தற்போது மீண்டு வருகின்றது. அந்த அணியின் புதிய பயிற்சிக் குழு சிறப்பாக செயல்படுகின்றது. போட்டியின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த அணி கவனம் செலுத்தியது. ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் இந்திய வீரர்கள், பயிற்சி நேரங்களில் வீணாக பொழுதை போக்கினர். பெரும்பாலான நேரம் இந்திய வீரர்கள் மரங்களின் நிழலில் தான் கழித்தனர் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து 'சிட்னி மார்னிங் ஹெரால்டு' என்ற பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது,கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. அப்போது இதேபோல இந்திய அணியை படுதோல்வி பெற செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியை படுதோல்வி அடைய செய்துள்ளனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு மைக்கேல் கிளார்க் புத்துயிர் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

அவ்வையாருக்கு அரசு சார்பில் சிலை முதல்வர் ரங்கசாமி!


அவ்வையாருக்கு அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என, முதல்வர் ரங்கசாமி கூறினார். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் ரங்கசாமி பேசியபோது,   ‘’அரிய கருத்துக்களைக் கொண்ட, உலகப் பொது மறையாகப் போற்றப்படும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் தின விழாவைக் கொண்டாடும் வேளையில், திருக்குறளை மாணவர்கள் அனைவரும் படித்து உணரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு படித்துணர்ந்தால், அவர்கள் வாழ்வு சிறக்கும். மாணவர்களின் வாழ்வு சிறந்தால், நாடு சிறப்பாக இருக்கும். 

எந்த ஒரு கருத்தையும் யார் கூறினாலும், அதில் உள்ள உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, நமக்கு ஒருவர் தீங்கு செய்தாலும் நாம் திருப்பி அவருக்குத் தீங்கு செய்யாமல், நன்மையே செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல அரிய கருத்துக்களைக் கூறும் திருக்குறளைப் பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அவ்வையாருக்கு அரசு சார்பில் சிலை நிறுவப்படும்’’ என்று தெரிவித்தார்.

ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றிக் கொல்லப்பட்ட தமிழன்!

சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும்,அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துறையின் உதாசீனப் போக்கையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில்,    ‘’சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது. கடந்த 8ஆம் தேதி பம்பையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வென்னீர் ஊற்றியதால் இடுப்பிலும், முதுகிலும் ஏற்பட்ட கடுமையானத் தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட சாந்தவேலுவின் உடல் நிலை மோசமானதையடுத்து,  அவரது மனைவியும் உறவினர்களும் அவரை சென்னைக்கு அழைத்து வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிக்காத நிலையில், திங்கட்கிழமை சாந்தவேலு உயிரிந்துள்ளார்.

முதல் முறையாக சபரிமலைக்குச் சென்ற சாந்தவேலு, அங்கிருந்த தேநீர் கடைக்காரருக்கும் தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் விளைவாகவே கடைக்காரர் உள்ளிட்ட சிலர் தன்னைத் தாக்கினார்கள் என்பதையும், அப்போது கடைக்காரர் கொதிக்கும் வென்னீரை தன் மீது ஊற்றியதாகவும் கோட்டயம் மருத்துவமனையில் தன்னை வந்த பார்த்த மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மகரசோதியை முன்னிட்டு சபரிமலைக்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பம்பையில் குவிந்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப் பட்டுள்ளதாக கேரள அரசும், அதன் முதலமைச்சர் உம்மண் சாண்டியும் கூறிய நிலையில், அங்கு காவலர்கள் யாரும் வந்து தகராறைத் தடுக்காத்தும், அந்தச் சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாததும் ஏன்?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை காரணமாக கேரளத்து அரசியல்வாதிகள்தமிழர்களுக்கு எதிராக கிளப்பிவிடும் பொய்ப் பரப்புரையின் காரணமாக பதற்றம் நிலவிவரும் நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி அளித்த உறுதிமொழி வெற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாகியுள்ளது. கேரளத்தில் தமிழர்களுக்குஎதிரான பகையுணர்வு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒருஅத்தாட்சியாகும். சாந்தவேலுவை தன்னோடு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமி தன் குழுவினருடன்,தகராறு நடந்தபோது அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அவரது மனைவி தமிழக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகாரின் மீது தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி முழுமையான புலனாய்வு செய்து, சந்தவேலுவைக் கொன்ற மலையாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர்கட்சி கேட்டுக்கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்குப் பின் ஐயப்ப பக்தர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். அது இப்போது ஒரு கொலையில் முடிந்துள்ளது.இப்படிப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னரும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குத் தமிழ் பக்தர்கள் செல்ல வேண்டுமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

கோயில்கள் நிறைந்த நம் தமிழ்நாட்டில் எல்லா கடவுள்களுக்கும் ஆலயங்கள்உள்ளதே. தமிழ்க் கடவுளாம் முருகனின் ஆறுபடை வீடுகளைத் தாண்டி புனிதத்தலம் வேறு என்ன வேண்டும்? தமிழனை எவ்வளவு அடித்தாலும் அவன் சபரிமலைக்கு வருவான் என்ற எண்ணம் காரணமாகவே, சபரிமலை பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படாததும், அதன் காரணமாகவே கடந்த ஆண்டு புல்மோட்டில் விபத்தும் ஏற்பட்டது. போதுமான தூய்மைச் சூழலற்ற நிலையிலேயே சபரிமலை யாத்திரைக்கு தமிழர்கள் சென்றுவருகின்றனர். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தமிழர்கள் அங்கு சென்றுவருவதால்தான் இன்றைக்கு ஒரு ஐயப்ப பக்தர் இப்படி கொடூரமான கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்குச் செல்வதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி உள்ளன்போடு வேண்டுகோள்விடுக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...