|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 August, 2011

இதே நாள்...


சுற்றுச்சூழல் மாசுபாடு...

மனிதன் சுற்றுப்புறச்சூழலை பல்வேறு வகையினில் மாசுபடச் செய்கின்றான். சுற்றுச்சூழல் மாசுபாடு மனித உடல் நலத்தினை பல்வேறு வழிகளில் பாதிப்படையச் செய்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கரைந்துள்ள மாசுக்கள் நம் உடலில் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, புரோன்சிடிஸ் (நம் சுவாசப் பைகளுக்கு காற்றினைக் கொண்டு செல்லும் சுவாச நாளங்களின் மெல்லிய சவ்வு வீக்கமடைதல்) மற்றும் எம்பைசிமா (நுரையீரல் காற்றறை திசுக்கள் சேதமடைதல்) போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், இருதய நோயுடையோர் ஆகியவர்களில் ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் மோசமானவை.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் இடம்பெற்றுள்ள கார்பன் மோனோ ஆக்ஸைடு (co) நம் உடல் நலத்திற்கு தீங்கிழைக்கக் கூடியது. நம்மிடையே உபயோகிக்கப்படும் வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை பழையதும், நன்கு பழுது பார்க்கப்படாதவையுமாகும். அவற்றின் பொறிகளில் (Engine) எரிபொருள்கள் முழுமையாக எரிக்கப்படாமையினால் கார்பன்-டை-ஆக்ஸைடு (co) உருவாக்கப்பட்டு வெளிவிடப் படுகிறது. கார்பன்- மோனோ-ஆக்ஸைடு கரைந்துள்ள காற்றினை சுவாசிப்பதனால் இரத்தத்திலுள்ள ஹீமோ குளோபின்கள் ஆக்சிஜனை எடுத்துச்செல்லும் திறனை இழந்துவிடுகிறது. இது இறுதியில் அனோசியா நோய்க்கு வழி வகுக்கிறது. அதுமட்டுமின்றி ஆஞ்சினா (ஆக்சிஜன் குறைபாட்டினால் ஏற்படும் நெஞ்சுவலி), மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அதீத குளிரி லிருந்து பாதுகாத்துக்கொள்ள உடலைச் சூடாக்குகின்றனர். இதற்காக இரவு நேரங்களில் அறைகளின் கதவுகளையும் சன்னல்களையும் மூடிவைத்து தீ மூட்டுகின்றனர். இவ்வாறு செய்யும்போது அறையில் காற்றோட்டம் தடைபட்டு கார்பன் மோனோ ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதுடன் ஆக்சிஜனின் அளவு குறைகிறது. இதனால் அறையில்  உறங்கும் மக்கள் உறக்கத்திலேயே உயிரிழக்க நேரிடுகிறது. ஏனெனில், கார்பன் மோனோ ஆக்ஸைடுக்கு மணமில்லை, சுவையில்லை, உணர்வது கடினம்.

காற்றில் கலந்துள்ள எல்லாவித நுண்துகள்களும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை. மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றில் எரிக்கப்படும் எரிபொருள்கள் சரியற்ற முறையில் எரிக்கப்படுவதனால் நுண்துகள் மாசுக்கள் வெளியேறி காற்றில் கலக்கிறது. கார்பன் துகள், சிலிக்கா துகள், நுண்ணிய மட்துகள்,  பல்வேறு தாதுக்கள், உலோகங்கள், சிமெண்ட், ஆஸ்பெஸ்டோஸ் போன்றவை காற்றில் மறைந்துள்ள நுண்துகள் மாசுக்கள்.

இம்மாசுக்கள் ஆஸ்துமா, புரோன்சிடிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடியது. மேலும் நுண்துகள் மாசு படிந்த சூழலில் நீண்ட காலமாக வாழ்வோரின் ஆயுட்காலம் மிகக்குறுகிய காலத்தில் முடிந்துவிடும். மேலும் நுரையீரல் திசுக்கள்  பாதிப்படைவதுடன் மிக மோசமான சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் ஆகியவை ஏற்படும். சுவாசத்தின் வழியே நுரையீரலுக்குள் சென்று படியும் சிலிக்கா துகள்கள் சிலிக்கோஸிஸ் நோயை ஏற்படுத்தும். இதனைப் போலவே நுரையீரலில் படியும் நிலக்கரி நுண்துகள்கள் "கருப்பு நுரையீரல் நோயை' ஏற்படுத்தும்.

நம்முடைய உடலில் இத்தகைய மாசுக்களை வடிகட்டி அனுப்ப நம் நாசிகளில் மெல்லிய முடிகள் இருப்பினும் இவற்றால் மிக நுண்ணிய துகள்களை வடிகட்ட இயலாது. மேலும் அதிகப்படியான நுண்துகள் மாசுக்கள் காற்றில் கலந்துள்ள போது இவ்வடிப்பான்கள் செயலற்றதாகி விடுகிறது. இவ்வகையான நுண்ணிய துகள்கள் பல அபாயகரமான வேதிப் பொருட்களை எடுத்துச்செல்லும் வாகிணிகளாக செயல்படுகிறது. இதன் மூலம் வேதிப் பொருட்கள் நுரையீரலில் சென்று படிந்து, புரையோடி, புற்று நோயாக மாறுகிறது.

பல்வேறு எரிபொருள்களில் கலந்துள்ள கந்தகமானது எரிதல் நிகழ்ச்சியின் போது ஆக்சிஜனேற்றமடைந்து உருவாகும் கந்தக டை ஆக்ஸைடு காற்றை மாசுபடுத்தும் மற்றொரு மாசாக்கி, கந்தகம் கலந்துள்ள தாதுக்களையும் தாது உப்புகளையும் வேதிவினைகளுக்குட்படுத்தும் வினைகளில் சல்பர் டை ஆக்ஸைடு (So2)  அதிகமாக உருவாகிறது. கந்தக டை ஆக்ஸைடு ஆஸ்துமா நோயாளி களுக்கு மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

தொழிற்சாலைகளில் எரிபொருள்களுடன் காற்று இணைந்து நடைபெறும் எரிதல் நிகழ்ச்சியின்போது காற்றிலுள்ள நைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (Nox) உருவாகிறது. நைட்ரஜன் ஆக்ஸைடு (Nox)அதிகப்படியான வெப்ப இழப்பை ஏற்படுத்துவதுடன் சுவாசிக்கும்போது நுரையீரல் எரிச்சல், ஆஸ்துமா, புரோன்சிடிஸ், சளி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

வளி மண்டலத்தின் தாழ்நிலையிலேயே ஓசோன் வாயு உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலவகை நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (Nox) சூரிய ஒளியின் முன்னிலையில் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ஓசோன் வாயு  (O3)  வாயு உருவாகிறது. ஓசோன் வாயு இருமல், நெஞ்சுவலி ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் நிம்மோனியா, சளி ஆகியவற்றை தடுக்கும் எதிர்ப்புச் சக்தியினை குறைக்கக் கூடியது

பென்சீன், ஃபார்மால்டிஹைடு, காரியம், காட்மியம், டையாக்சின் போன்ற நச்சுப்பொருட்கள் கலந்த காற்றை சுவாசிப்பதனால் புற்றுநோய், சந்ததி உருவாக்கமின்மை போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.

நீர் மாசுபாட்டினால் நம் நாட்டில் அதிக எண்ணிக்கை யிலான மக்கள் பாதிப்படைகின்றனர். நீர் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மழைக் காலங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை போன்றவற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கி னால் அசுத்தங்கள் சேர்ந்து குடிநீர் எளிதில் மாசுபடுகிறது. இத்தகைய அசுத்த நீரில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் கலந்திருக்கும், இதனால் டைபாய்டு, பாராடைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகிறது. அசுத்த நீரிலுள்ள புரோட்டோசோவாக்களினால் அமோயிக் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. வைரஸ்களால் மஞ்சள் காமாலை, இளம்பிள்ளைவாதம் போன்றவை ஏற்படும். நீரில் கலந்துள்ள புளூரைடு, ஆர்சனிக், காரீயம், பாதரசம், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், நைட்ரைடுகள், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்கள் உடல்  ஊனம், உறுப்புகளின் வளர்ச்சியின்மை, குன்றிய மனவளர்ச்சி மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

எங்கும் எதிலும் மாசுகள் கலந்துள்ள இன்றைய உலகில் ஒன்று இதனை எதிர்கொள்ள வேண்டும். இல்லையேல் மாசற்ற உலகினை உருவாக்க வேண்டும். இதில் இரண்டாவது வகை சாத்தியமல்ல. ஆனால், முதல் வகை நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதனால் அதனைக் கடைபிடிப்பது சிரமமான காரியமல்ல.  பண்டைய மனிதன் தன் உணவுக்காக இயற்கையினையே சார்ந்திருந்தான். விலங்குகளின் இறைச்சியும் தாவரங்களில் பழம், கொட்டை போன்றவற்றை உண்டு வாழ்ந்தான். இதனால் பண்டைய மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தடுக்கும் தன்மையும் மிகுந்திருந்தது. தற்போதைய மனிதர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுதல்களும், பகட்டிற்காக உணவு வகைகளில் ஏற்படுத்திக்கொண்ட மாறுதல்களுமே இதன் மூலகாரணம். நோய் எதிர்ப்பு சக்தியினை நம் உடல் மிக எளிதாக பெறுவதற்கு உணவில் இயற்கையில் கிடைக்கும் பழவகைகளை உட்கொள்வதே  சிறந்த வழி.

நம் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய மர ஆப்பிள் (Wood Apple) என்று அழைக்கப்படும் விளாம்பழம்,            வில்வம் பழம், (Bael) கற்றாழை  (Mucilage),, டேனின்ஸ் (tannins) மிக முக்கிய நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டது. இது முக்கியமாக மலச்சிக்கலை போக்கக்கூடிய அருமருந்து.

விளாம்பழக்கூழ் ஈரல், இருதயம் மற்றும் வயிறு பாகங்களுக்கு வலிமையை கொடுக்கவல்ல சிறந்த ஊட்டச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் B.C மற்றும் புரோட்டீன் ஆகிய தாதுக்கள் நிரம்ப பெற்றுள்ளது. இது பெப்டிக் அல்சரிலிருந்து விடுபட உதவக்கூடிய இயற்கை உணவு. இதன் பழக் கூழானது உடலின் நீர் இழப்பினை சரிசெய்வதுடன் அதீத வெப்பத்தினால் ஏற்படும் வெப்ப உலர்தலை சரிசெய்கிறது. மேலும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தவல்லது.

கொய்யாப்பழம் நம் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பழவகை. நம் உடலுக்கு இன்றியமையாத தாதுக்களான கால்சியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம் மற்றும் துத்தநாகம் ஆகியன அடங்கியுள்ளன. இதன் பழக்கூழானது ஆரோக்கியமாகவும், நோயற்றதாகவும் வைக்கக்கூடிய பல்வேறு வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், பிளாவினோய்டு மற்றும் சபோனின்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. நார்சத்தினை அதிக அளவில் கொண்டது. இதனை உட்கொள்வதால் அல்சர் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை தடுக்கப்படுகிறது. முக்கியமாக இரைப்பையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கவல்லது. கொய்யாப்பழம் உயர் ரத்த அழுத்தத்தினையும், உயர் கொழுப்பு அளவினையும் கட்டுப்படுத்தக்கூடியது. இதுவரை அறியப்படாத முக்கியமான தகவல் இப்பழம் அதிகப்படியான வைட்டமின் C -யை கொண்டது என்பதே. 100 கிராம் பழத்தில் 180 மி.கி வைட்டமின்கள் கொண்டிருப்பதினால் பல உடல் சம்பந்தமான உபாதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது.

பப்பாளி கிராமப்புறங்களில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பழம். காய் பருவத்திலுள்ள பப்பாளி டை பெப்டிக் நோயாளிகளுக்கு அருமருந்து. பப்பாளி உணவு செரிமானத்தை தூண்டுவதுடன் உணவுப்பாதையிலிருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்கிறது. பப்பாளிப்பழம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததோடு மட்டுமின்றி புற்றுநோயை தடுக்கவல்ல பீட்டா கரோட்டீன் மற்ற பழங்களை விடவும் அதிக அளவில் (100 கிராம் பழத்தில் 2700 மைக்ரோ கிராம்) கொண்டுள்ளது. வைட்டமின் ஈ, பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு மற்றும் புரோட்டீன் ஆகியனவற்றை கொண்டுள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவல்லது. பப்பாளி பழம் உண்பதனால் நாம் உண்ணும் உணவிலுள்ள நஞ்சு நீக்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஆ சிறுவர்களுக்கு ஏற்படும் குருட்டுத்தன்மையை தடுக்கிறது.


பலாப்பழம் இந்தியாவில் பல யுகங்களாக விளையும் பழவகை. பழுக்காத காய், காய்கறியாகவும், சிப்ஸ், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பலாப் பழத்தில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஈ, ரிபோஃப்ளவின், தயமின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மூலநோயுள்ளவர்களுக்கு இதன் பழக்கூழ் மிகச்சிறந்த நிவாரணி, இதன் கொட்டைகள் காய்கறியாகவும், வறுத்தும் உட்கொள்ளப்படுகிறது.

பலாப்பழம் அதிக அளவில் உட்கொள்வதினால் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இது தொற்று நோய்க்கும், நச்சுப்பொருட்களுக்கும் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தவல்லது.

நாவற்பழம் நம் நாட்டில் அதிக அளவில் விளையக்கூடியவை. சாலையோரங்களிலும், வசிப்பிடங்களின் அருகாமையிலும் நாவற்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. நாவற்பழக்கூழ் செரிமானத்தை தூண்டுவதாகவும் ஆற்றல் மிக்க நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் C, இரும்புச்சத்தினை தரவல்ல ஃபோலிக் அமிலம், கரோடின், நார்ச்சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. உடல் நலனுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் தாதுக்கள் அடங்கியுள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியினையும் பெறலாம்.

""அவ்வைக்கு அரிய நெல்லிக்கனியை அதியமான் ஈந்தான்'' என சங்ககால இலக்கியங்களில் படித்திருக் கிறோம் அரிய வகை மருத்துவ குணங்களைக் கொண்ட நெல்லிக்கனியை புசிப்பதினால் அவ்வை நெடுநாள் வாழ வேண்டுமென விரும்பிய அதியமான் வாயிலாக நெல்லிக் கனியின் சிறப்பினை அறியலாம். அடர்ந்த காடுகளில் வளரும் நெல்லிமரங்கள் தற்போது விளைநிலங்களிலும் பயிர்செய்யப்படுகிறது. நெல்லிக்கனியின் கூழ் வைட்டமின் C-யினை நிரம்பப் பெற்றிருப்பதுடன் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பினை குறைக்கவல்ல பெக்டினையும் அதிகமாக கொண்டது. இதிலுள்ள டேனின் நெல்லிக்கூழை பதப் படுத்தலின் போது வைட்டமின் ஈ சிதைவதை தடுக்கக் கூடியது. நெல்லிக்கூழ் இரத்த சோகை, ஆஸ்துமா, மலச்சிக்கல், அல்சர், வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வல்லது. நெல்லிக்கனி புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய ஆயுர்வேத மற்றம் யுனானி மருந்துகளில் முக்கிய பகுதிப்பொருளாக சேர்க்கப்படுகிறது.

பத்து வருடங்களுக்கு முன்னர் நம் சாலைகளில் இருமருங்கிலும் காணப்பட்ட புளிய மரங்கள் இன்று அறவே இல்லாமல் போய்விட்டது. அதிக அளவிலான நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் A மற்றும் C நிரம்பபெற்றுள்ள  புளிய உணவு சமைப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. நல்ல ருசியான சட்னி வகைகளிலும், சர்பத் போன்ற பாணங்களிலும் புளி பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கவல்லது புளி.

அத்திப்பழம் பொதுவாகவே விலையுயர்ந்த பழமாகக் கருதப்படுகிறது கார்போஹைட்ரேட்கள், புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஆ மற்றும் ஈ நியாசின், ரிபோஃபிளேவின், தையமின் ஆகிய ஊட்டச்சத்துகள் நிரம்பப்பெற்றுள்ளது. அத்திப்பழம் குறிப்பிடத்தக்க அளவு கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துகளை கொண்டது. கரையும் நார்ச்சத்து இரத்தத்திலுள்ள கொழுப்பினை கட்டுப்படுத்தவும், கரையா நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. மேலும் புற்றுநோயை தடுக்கவல்லது.

மாதுளைப்பழம் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக  அளவில் விளைகிறது. அதிக அளவில் வைட்டமின் E1 மற்றும் E 2 நியாசின், கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களை கொண்டது. சுற்றுச்சூழல் மாசி னால் நம் உடலில் எளிதாக பாதிப்படையக்கூடிய சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு பயன்படுகிறது.

கடற்கரையோரங்களிலும், தீவுகளிலும் அதிக அளவில் வளரக்கூடியது. தென்னை, தென்னை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிடப்பட்ட பயிர்வகையாகவும் வளர்க்கப்படுகிறது. இளநீரானது அதிக அளவில் சர்க்கரை, நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. இளநீர் உடலுக்கு நீர்ச்சத்தினை கொடுக்கக்கூடிய ஐந்து வகையான மினாற்பகுதிகளை கொண்டது. பூஞ்சை மற்றும் வைரஸ்களை எதிர்க்கக்கூடிய மோனோலாரினை கொண்டது. மேலும் இளநீர் தொடர்ந்து அருந்துவது சுற்றுச்சூழல் மாசுக்களின் பாதிப்புக்களை தடுப்பதுடன் ஊட்டச்சத்து குறைப்பாடினை களையவும் வழிவகுக்கும்.

ஆரஞ்சு, மாம்பழம், லிட்சிப்பழம், ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை எளிதில் கிடைக்கக்கூடிய பழவகைகள். வாழைப்பழம் நம் உடல் உற்பத்தி செய்யமுடியாத எட்டு அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் உற்பத்தி நிலையங்களிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல பயணச்செலவு, பாதுகாப்பு செலவு, லாபத்தொகை ஆகியவற்றினால் அதிக விலையில் விற்கப்படுகிறது.          ஆனால் இதனை நாமே வளர்க்கும் போது இதன் விலை மலிவாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருக்கமுடியாது. பழமரங்கள் வளர்ப்பதில் நம்மிடையே இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மரங்கள் வளர்ப்பதில் தமிழ்நாட்டினர்களிடையே அதிக ஆர்வம் தேவைப்படுகிறது. பழமரங்கள் வளர்ப்பதினால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கட்டுப்படுத்தவும், நல்ல மழையை பெறவும் முடியும்.    

Bieber, Gomez shine at Teen Choice Awards 2011


Boeing debuts 'dreamliner' airplane...!


Rioting continues unabated in London...?


Gwyneth Paltrow's Topless Spread


Save The Children...


Kate Upton Sexy Photo Shoot ...


லோக்பால் - எதிராக அண்ணா ஹசாரே விழிப்புணர்வுப் பேரணி!

வலிமையற்ற லோக்பால் மசோதாவுக்கு எதிராக அண்ணா ஹசாரே பைக் பேரணியில் கலந்துகொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்.

வலிமையற்ற லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வலிமையான லோக்பால் மசோதா குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் மும்பை தாதரில் இருந்து ஆசாத் மைதான் வரை இன்று பைக் பேரணி மேற்கொண்டார் அண்ணா ஹசாரே.
அண்ணா ஹசாரே மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் இருவரும் ஒரு திறந்த ஜீப்பில் கிழக்கு தாதரில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் இருந்து இந்தப் பேரணியைத் துவக்கினர்.


தானே உள்ளிட்ட இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த சமூகத் தொண்டர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். தேசபக்திப் பாடல்களைப் பாடியும், லோக்பால் பில் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை வலியுறுத்தியும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியதாக ஊழலுக்கு எதிரான அமைப்பின் தொண்டர் ப்ரபுல் வோரா கூறினார்.

ஆசாத் மைதானத்தில் இன்று மாலை நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் அண்ணா ஹஸாரே கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். மேலும், ஆசாத் மைதானில் இருந்து ஆகஸ்ட் க்ரந்தி மைதான் வரை ஒரு மாபெரும் பேரணிக்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதில் அண்ணா ஹஸாரே ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறினார் வோரா. மேலும், கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் ஊழலுக்கு எதிரான அமைப்பின் பெயரில் ஒரு தகவல் மையம் மும்பையில் ஏற்படுத்தப்பட்டது என்றும், இந்தப் பேரணி குறித்து தகவல்களை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொலைபேசியில் பேசி கேட்டறிந்தனர் என்றும் வோரா கூறினார்.

ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு !

ஆசிய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து வரும் கடுமையான சரிவு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த 10 வாரங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு 41 பைசா சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.45.38 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசா குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்!

புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது. ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும்.

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945
மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.

ரத்த பரிசோதனையில் 15 நிமிடங்களில் எய்ட்ஸ் தாக்குதலை அறியும் !

எய்ட்ஸ் நோய் தாக்கத்தை 15 நிமிடங்களில் கண்டறியும் புதிய 'சிப்'பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே மனிதன் பயப்படும் நோய்களில் மருந்து இல்லாததும், பீதியை ஏற்படுத்துவதுமான எய்ட்ஸ் நோயை கண்டறிய பல ரத்த பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. மேலும் அதன் ரிசல்ட் கிடைக்கவும் பல நாட்கள் முதல் வாரங்கள் வரை ஆகிறது.

இதில் பலர் மனதளவில் பெரும் சிரமத்திற்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனர். எய்ட்ஸ் நோயை மிக விரைவாக கண்டறியும் ஆராய்ச்சியில், கொலம்பியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டது. இதில், பல சோதனைகளுக்கு பிறகு எய்ட்ஸ் நோயை 15 நிமிடங்களில் கண்டறிந்து உறுதிப்படுத்தும், 'சிப்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

எம் சிப் எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் விலை இந்திய மதிப்பில் 50 முதல் 100 ரூபாய்க்குள் மட்டுமே. கைக்கு அடக்கமான இந்த சிப்பை எங்கும் எடுத்து செல்லலாம். ஒரு சொட்டு ரத்தத்தை சிப்பின் குறிப்பிட்ட பகுதியில் செலுத்தப்படுகிறது. அப்போது, சிப்பினுள் ரத்த பிளாஸ்மா தட்டுகள், 'பயோ-மார்க்கர்'களுடன் வேதிவினை நடக்கிறது. நோய்த் தாக்கம் உள்ள நிலையில் அதற்கான லைட் ஒளிர்கிறது.

இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், எய்ட்ஸ் மட்டுமல்லாது, பால்வினை நோய், சில வகையான கேன்சர் நோய்கள், காசநோய் தாக்குதலையும் அறிய பயன்படுத்தலாம். ஆப்பிரிக்காவின் கிகாலி, சுவாண்டா நகரங்களில் உள்ளவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில், 100 பேரிடம் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தபடியாக, கர்ப்பணிகளிடையே பரிசோதனை நடத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சுகப்பிரசவத்தை அளிக்கும் குங்குமப்பூ!

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே ‘குங்குமப்பூ’ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்.

இத்தாவரம் வடமேற்கு நாடுகளிலும், இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிர் செய்யப்படுகின்றது. இது வாசனையுடனும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
உணவுப் பொருள்களுக்கு நிறம் உண்டாக்கவும் வாசனை உண்டாக்கவும் சேர்க்கின்றனர்.

அழகு தரும் குங்குமப்பூ: குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவம் எளிதாகும்: கர்ப்பம் தரித்துள்ள தாய்மார்கள் இதனை வெற்றிலையுடன் கலந்து தின்றாலும் அல்லது காய்ச்சிய பாலில் இட்டு அருந்தினாலும், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி இன்றியும் குழந்தை பிறக்கும் என்பர். மாதவிலக்கு, வலியைப் போக்கும் குணம் கொண்டது.

பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும் போது சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும். குழந்தை பிறந்தபின் சிறிதளவாக 3 வேளைகள் கொடுக்க இரத்தப்போக்கு நீங்கும்.

20 கிராம் பூவைத் தண்ணீரில் அரைத்து, உருண்டை செய்து உள்ளுக்குள் கொடுக்க வயிற்றுக்குள் இறந்துபோன குழந்தை வெளிப்படும். மாதவிலக்கை தாராளமாகப் பிரியச் செய்ய உள் மற்றும் வெளிப்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. தலைவலி, மூக்கில் நீர்வடிதல், இவற்றிற்கு குங்குமத்தை தாய்ப்பாலில் உறைத்து நெற்றியில் பற்று போடலாம். தண்ணீர் தாகம், தலைவலி, கண்ணில் பூ விழுதல், கண்ணோய், வாந்தி, காது நோய், வயிற்று அழுக்குகள் போகும்.

விளாம் பிசின், பனை வெல்லம் இவைகளுடன் சேர்த்தரைத்து துண்டுத்தாளில் வைத்து தடவி கன்னப்பொறியின் மீது பற்றாக போட வலி நீங்கும். மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் சேர்க்கலாம். குங்குமப்பூ 1 பங்கும், தண்ணீர் 80 பங்கும் ஊற வைத்து வடிகட்டி வேளைக்கு 50 - 100 மி.லி. அளவு கொடுக்க பலவிதநோய்கள் தீரும். 10 கிராம் குங்குமப்பூவை சுமார் 15 பலம் நீரில் சேர்த்துக் குடிநீர் செய்து கொடுத்தால் பசி அதிகம் உண்டாகும்.

இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ: இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர குங்குமப்பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள். இதன் நாரினை ஆண்களின் சிறுநீர்க்குழாயில் வைத்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். இதனால் விந்துக் குறைவு நிவர்த்தியடையும். தடைப்பட்ட சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்யும். இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்குச் சக்தி தரும். மலச்சிக்கலை உண்டாக்கும் கட்டி, வீக்கங்களைக் கரைக்கும்.

திருமணம் சுமையல்ல...?

நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம் என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது. திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே காததூரம் ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது பழமொழி அதனை போற்றி பாதுகாப்பது அனைவரின் கடமை. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வு தெரியவந்துள்ளது

திருமணத்தின் அவசியம்: மனித வாழ்க்கையில் திருமணம் எந்த அளவிற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

WHO-வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அதில் 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்…

பறந்துபோகும் மனச்சோர்வு: இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது. அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.

தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சத்தியமங்கலம் காட்டில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு!


சத்தியமங்கலம் காட்டில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக, ஈரோடு மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி அருண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி டி.அருண் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளில் சத்தியமங்கலம் காட்டில் புலிகளின் எண்ணிக்கை 10ல் இருந்து 18ஆக உயர்ந்துள்ளது. இது 2009 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 8 புலிகள் அதிகம்.

ஈரோடு மாவட்டத்தில் வனப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தான் வனவிலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. அண்மையில் நடந்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, சத்தியமங்கலத்தில் 785 யானைகளும், 564 காட்டெருமைகளும், 18 புலிகளும் உள்ளது.

மேலும், குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களிலும் யானைகள் புகுந்து நாசப்படுத்துவதை தவிர்க்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டு வருகின்றது, என்றார்.

இலங்கையை முற்றுகையிட அமெரிக்கா உளவு பார்த்து வருவதாக இலங்கையின் 'தேசப்பற்றுள்ள தேசிய பாதுகாப்பு இயக்கம்'!

இலங்கையை முற்றுகையிட அமெரிக்கா உளவு பார்த்து வருவதாக இலங்கையின் 'தேசப்பற்றுள்ள தேசிய பாதுகாப்பு இயக்கம்' தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் இலங்கை வான் பகுதிக்குள் அதிரடியாகப் பறந்தன அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள்.

அமெரிக்க கடற்படையின் 7வது பிரிவைச் சேர்ந்த இந்த விமானங்கள் பிதுருதலகலா என்ற இடத்தின் மீது பறந்தன. இதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் நிமலசிறி கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. இது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் புகார் தரப்படும் என்றார்.

ஆனால் இந்த ஊடுருவலை அமெரிக்கா உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. இந் நிலையில் இலங்கை அரசு தனது படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில், யுத்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் மிகவும் தீவிரமாகவே காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை விஷயத்தில் அமெரிக்கா மிகவும் தீவிரமாகவே செயற்படுகிறது. அது மட்டுமன்றி அனுமதியின்றி ஏனைய நாடுகளில் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துதல், சிறு நாடுகளை ஆக்கிரமித்தல் என்று பல்வேறு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா அண்மைக்காலமாக தீவிரமாக செயற்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியப் பயணத்தின்போதும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார். தற்போது ஆசிய பசிபிக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 7வது சிறப்புக் கூட்டுப்படையின் 10 போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் ஊருவிச் சென்றுள்ளன. இந்த ஊருவல் முதல் தடவையாக நடந்ததாகக் கூறமுடியாது. ஏனெனில் தற்போது வெளிப்படுகின்ற தகவல்களைப் பார்த்தால் பல தடவை மிகவும் ரகசியமான முறையில் அமெரிக்க விமானங்கள் வேவுப்பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அமெரிக்காவினால் எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கை போர் குற்றம்-விசாரி்க்க அமெரிக்கா ஆதரவு: இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை மேற்கொள்ளும் எந்த விசாரணையையும் அமெரிக்கா ஆதரிக்கும் என்றார். அமெரிக்காவுக்கான இந்தியா டுடே-ஹெட்லைன்ஸ் டுடே குழுமத்தின் நிருபர் தேஜிந்தர் சிங் இது தொடர்பாக டோனரிடம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

போலி என்கௌண்டர் செய்யும் போலீசாரை தூக்கிலிட வேண்டும் உச்ச நீதிமன்றம்!

போலி என்கௌண்டர் செய்யும் போலீசாரை தூக்கிலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தை கையில் வைத்திருக்கும் போலீசார் மக்களை காக்க வேண்டியவர்களே தவிர, அவர்களை கொல்லும் கூலிப்படையல்ல என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கத்ஜு மற்றும் சி.கே. பிரசாத் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.

இது குறித்து நீதிபதி கத்ஜு கூறுகையில், போலி என்கௌண்டர் மூலம் மக்களைக் கொல்வது ஒரு திட்டமிட்ட கொலையாகும். பெருங்குற்றமாகக் கருதி அதை செய்த போலீசாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.

கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி ராஜஸ்தான் போலீசின் தனிப்படை தாதா சிங்கை போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றது. இதில் தொடர்புடைய 2 மூத்த அதிகாரிகளான கூடுதல் டிஜிபி அர்விந்த ஜெயின் மற்றும் எஸ்பி அர்ஷத் ஆகியோரை சரணடையுமாறு உத்தரவிட்டபோது தான் நீதிமன்றம் இவ்வாறு கூறியது. இந்த 2 அதிகாரிகளும் சரண் அடையாவிட்டால் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அவர்களை கைது செய்யலாம் என்று அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ராஜேந்தர் ரத்தோர் தலைமறைவாகிவிட்டார் என்று தாரா சிங்கின் மனைவி தெரிவித்தார். அதற்கு ரத்தோர் சரணடையாவிட்டால் அவரைக் கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சாதாரண மக்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை அளிக்கலாம். ஆனால் போலீசார் குற்றம் செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றனர்.

ராஜஸ்தான் போலீஸ் தனது கணவரை கடத்தி, அநியாயமாக போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றுவிட்டதாக தாரா சிங்கின் மனைவி சுஷீலா தேவி புகார் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்குமாறு ராஜஸ்தான் நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்டது. தாரா சிங் பல குற்றங்கள் செய்தவன். அவன் தலைக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்று ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் மகாராஷ்டிரா போலீசார் ஒரு தொழில் அதிபரை போலி என்கௌண்டரில் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து போலி என்கௌண்டர் செய்யும் போலீசாருக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. உயர் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கூறினார்கள் என்பதற்காக என்கௌண்டர் என்ற பெயரில் கொலை செய்யும் போலீசாரை எச்சரிக்கின்றோம். போலி என்கௌண்டர் செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேசியகீதத்தில் உள்ள "சிந்த்" என்ற வார்த்தையை நீக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு!

சுதந்திரதினத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்திய தேசிய கீதத்தில் இருக்கும் "சிந்த்" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு "சிந்து" என்று மாற்றுமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்டே மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்டே தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நமது தேசிய கீதத்தில் உள்ள "சிந்த்" என்ற வார்த்தை கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் "சிந்து" என்று அரசால் மாற்றப்பட்டது. ஆனால் அந்த மாற்றத்தை செயல்படுத்தாமல் தொடர்ந்து தவறாக "சிந்த்" என்று தான் பாடி வருகிறோம். "சிந்த்" என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி. "சிந்து" என்பது இந்தியாவில் ஓடும் நதி. நம் நாட்டில் இரண்டு வேறுபட்ட தேசிய கீதத்தை பாடிவருகிறோம். சிலர் சிந்து என்ற சரியான வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சிந்த் என்ற தவறான வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றனர்.

எனவே, தேசிய கீதத்தில் உள்ள சிந்த் என்ற வார்த்தையை நீக்கி விட்டு சிந்து என்ற வார்த்தையை சேர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறும் என்று தெரிகிறது.

சுவிஸ் வங்கியில் ரூ.35.000 கோடியா?நானே கேள்வி நானே பதிலில் கருணாநிதி மறுப்பு!

சுவிஸ் வங்கியில் தான் ரூ. 35.000 கோடி பணம் போட்டு வைத்திருப்பதாக வெளியான செய்திக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு சுவிஸ் வங்கியில் ரூ. 35,000 கோடி இருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டதாக ஒரு தகவல் பரவியது. கருணாநிதிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயும், கலாநிதி மாறனுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் சுவிஸ் வங்கியில் உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதை கருணாநிதி மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு தமிழ் பத்திரிகை 35 ஆயிரம் கோடி சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. எது பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும்.

தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம். புதிய தலைமை செயலகத்தில் ஆளுநர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.

சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா அரசுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது போல புதிய தலைமை செயலக வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சமச்சீர் கல்வி திட்டத்தை தாமதமாக செயல்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் இடைக்கால இழப்பீட்டை ஈடுசெய்ய கல்வியாளர்களை கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். சமச்சீர் கல்வியின் வெற்றி, சமான்ய மக்களுக்கு, மாணவர்களுக்கு தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக அந் நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

இலங்கை பிரச்சனையில் அரசியல் ஆதாயத்திற்காக பேசுபவர் ஜெயலலிதா. தி.மு.க. தமிழ் இனத்திற்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. தமிழ் இன படுகொலையை திமுக எப்போதும் ஆதரித்தது கிடையாது. இலங்கையில் போர் நடந்தபோது, போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று கூறியவர்தான் ஜெயலலிதா என்றார்.

பொய் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தால் அபராதம்:இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி:- திமுக ஆட்சிக் காலத்தின் போது உண்மையாக தங்கள் சொத்துக்களை விற்றவர்களே, தற்போது திமுக மீது புகார் கூறினால், அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு வீண் புகார் கூறுகிறார்களே?

பதில்:-அதனால் தான் திமுக ஆட்சிக் காலத்தில் பொய்யான புகார்களைக் கூறுவோருக்கு தண்டனை அளிக்க ஒரு சட்டமே கொண்டு வரப்பட்டது. நேற்றைய தினம் கூட, சென்னை உயர் நீதிமன்றத்தில் தவறான நோக்கத்துக்காக,பொது நல மனு தாக்கல் செய்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பில் பிரச்சினைக்குரிய இடம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் முன்சீப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு உள்ளதாகவும், அதிலே எந்த உத்தரவும் இன்னமும் வழங்கப்படாத நிலை உள்ளதாகவும், மனுதாரர்கள் பொதுநல மனு என்ற பெயரில் தவறான நோக்கத்துடன் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.அதைப் போலவே நில அபகரிப்பு தொடர்பாக பொய் வழக்கு தொடுப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டால்,பொய் புகார்களும் அதனால் ஏற்படும் கொடுமைகளும் குறையும் அல்லவா? 

கேள்வி:- அதிமுக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை குறித்து புகழ் மாலை சூட்டுவதில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொள்கிறார்களே?

பதில்:- நிதி நிலை அறிக்கை பற்றி நான் ஏற்கனவே விளக்கமாக சொல்லியிருக்கிறேன்.மேலும் அதைப் பற்றிக் கூற வேண்டுமேயானால் காலியாக உள்ள 60 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு அதிமுக ஆட்சி பின்பற்றப் போகும் முறை பற்றி எந்தவிதக் குறிப்பும் இல்லை.அண்ணா பல்கலைக்கழகங்களை இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக ஆக்கப்போவதாகச் சொன்னார்கள்.அது என்னவாயிற்று என்று நிதி நிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை.

அனைத்துத் துறைகளிலும் 2 லட்சம் காலிப்பணி இடங்கள் இருப்பதாக அதிமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி சொல்லி வருகிறது.அவற்றை நிரப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை.2004-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குள்ளான பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவேன் என்று தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கூறிய வாக்குறுதி பற்றி எதுவும் இல்லை. டாஸ்மாக் பணியாளர்களின் நிரந்தரம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பும் இல்லை.

ஒன்றே கால் கோடி மாணவ-மாணவியரின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட சமச்சீர் கல்வி குறித்து ஒரு வார்த்தைகூடச் சொல்லப்படவில்லை.நீதி மன்றங்கள் பல முறை காலக்கெடு விதித்து,அதற்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டுமென்று கூறியும்,அதை மதிக்கவே இல்லை.கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.

சென்னை உயர் நீதிமன்றமே கல்விக் கட்டணக் குழுத் தலைவரை 19-ம் தேதிக்குள் நியமித்தாக வேண்டுமென்று கட்டளையிட வேண்டிய நிலைமை அல்லவா ஏற்பட்டிருக்கிறது.அருந்ததியர்க்கான தனி இட ஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.துப்புரவுப் பணியாளர்களின் துன்பத்தைத் துடைக்கவும்-அவர் தம் தன்மானம் காக்கவும்; பல திட்டங்களைக் கழக அரசு செயல்படுத்தி வந்தது.குறிப்பாக,மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிச் சுமக்கும் கொடுமையைத் தவிர்க்கும் நடவடிக்கையிலே கழக அரசு முயற்சி மேற்கொண்டது.

அந்தத் திட்டத்திற்காக அப்போது குரல் கொடுத்த மார்க்சிஸ்ட்கள்,இப்போது தோழமை கருதி,வாய் மூடிக் கொண்டிருக்கிறார்கள்போலும்!அந்தப் பணியாளர்களைப் பற்றி இந்த நிதி நிலை அறிக்கையிலே எதுவும் இல்லை.இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு தொடருமா என்ற சந்தேகம் இஸ்லாமியர்களுக்கு உள்ளது. இந்த அய்யப்பாட்டினைப் போக்கிடும் வகையில் அறிவிப்பு எதுவும் இல்லை.மத்திய அரசின் "ஆதார்''திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டவர்கள்,"சாதி வாரிக் கணக்கெடுப்பைப்"பற்றி எதுவும் சொல்லவில்லை.கரும்பு, நெல், பால் போன்றவற்றின் கொள்முதலுக்குக் கூடுதல் விலை தரப் போவதாகத் தேர்தலுக்கு முன்னால் உறுதிமொழி கொடுத்தவர்களின் நிதி நிலை அறிக்கையிலே,அவற்றைப் பற்றியெல்லாம் எந்தக் கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...