|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 February, 2012

பார்த்ததில் பிடித்தது!


இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுமா?


ஐ.நா. மனித உரிமை சபையின் 19வது மாநாடு தொடங்கியுள்ளது. இலங்கைக்கு எதிரான மாபெரும் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளதைத் தொடர்ந்து இலங்கை அரசும், ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தினரும் பெரும் பீதியடைந்துள்ளனர். 30 நாடுகள் வரை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இலங்கையின் பெரும் பீதிக்குக் காரணமாகும். கடைசி நேரத்தில் தீர்மானத்தை முறியடிக்க தேவையான வேலைகளைச் செய்ய 50க்கும் மேற்பட்ட இலங்கை அரசுக் குழு ஜெனீவாவுக்கு ஏற்கனவே வந்து முகாமிட்டுள்ளது. மொத்தம் நான்கு வாரங்களுக்கு நாட்களுக்கு இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. வாரத்திற்கு ஐந்து நாள் கூட்டம் நடைபெறும். மாநாட்டின் இறுதியில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

முன்னதாக நடைபெறும் உறுப்பு நாடுகளின் உரையாற்றலில் இலங்கை சார்பில் அந்த நாட்டு அமைச்சரான மகிந்தா சமரசிங்கே பேசவுள்ளார். இந்த கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை யார் கொண்டு வரப் போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவே இதைக் கொண்டு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று அல்லது தென் அமெரிக்கா இதைக் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 15ம் தேதிக்குள் அனைத்துத் தீர்மானங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால் அந்தத் தேதிக்குள் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் தாக்கலாகும் என்று தெரிகிறது.

எத்தனை நாடுகள் ஆதரவு? ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மொத்தம் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதையும் தாண்டி 30 நாடுகள் வரை ஆதரவாக இருப்பதாக பரபரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்கலாம் என்பதுதான் பரபரப்பின் உச்சமாகும். அமெரிக்கா,கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மிகவும் உறுதியாக உள்ளன. அமெரிக்கா ஒரு படி மேலே போய் சமீபத்தில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்தது. அதேபோல ஆப்பிரிக்க நாடுகளும் கூட இலங்கைக்கு எதிராகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள் பல, விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவானவை என்பது நினைவிருக்கலாம்.

தீர்மானத்தைத் தடுக்க இலங்கை கடும் முயற்சி இதற்கிடையே தீர்மானத்தை தடுக்க இலங்கை கடைசி நேர முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த வேலையை அங்கு சென்று முகாமிட்டுள்ள 50 பேர் கொண்ட இலங்கை குழு மேற்கொண்டுள்ளதாம். இப்போது தீர்மானம் எதுவும் வேண்டாம், மாறாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இதுகுறித்து யோசிக்கலாம் என்று இலங்கைத் தரப்பில் கூறப்பட்டதாம். ஆனால் அதை ஐ.நா. மனித உரிமைகள் சபை நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ராஜபக்சே மற்றும் அவரது கூட்டத்தினர் மீது போர்க்குற்றங்கள் எழுந்துள்ளன. இது பற்றி ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்க ஆதரவுடன் கனடா கொண்டு வந்த தீர்மானமும் ஏற்கனவே ஒரு முறை தோற்கடிக்கப்பட்டது. அப்போது இந்தியா, இலங்கைக்கு தீவிர ஆதரவாக இருந்தது நினைவிருக்கலாம். இப்போது இலங்கைக்கு எதிராக மீண்டும் இத்தீர்மானத்தை நேரடியாகவே கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதுதான் இலங்கையை பீதிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மாநாடு மார்ச் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஜெனீவாவில் குவிந்துள்ள இலங்கைக் கூட்டம் இலங்கை அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் உட்பட 50க்கும் மேற்பட்ட இலங்கை குழுவினர் ஜெனிவா வந்துள்ளனர். தங்களுக்கு சாதகமாக எந்த விஷயமும் இல்லை என்பதால் ராஜபக்சேவும் அவரது கூட்டத்தினரும் பெரும் அச்சத்தில் உள்ளனராம். தீர்மானம் நிறைவேறினால் உலக அளவில் அது இலங்கைக்கு விழும் மிகப் பெரிய சம்மட்டி அடியாக இருக்கும் என்பதால் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் தங்களது பார்வையை ஜெனீவா பக்கம் திருப்பியுள்ளனர்.

இலங்கை அரசை ஆதரிக்காதீர் வைகோ!

இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ  உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆனால், உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, இலங்கை அரசு, தனக்குத்தானே ஒரு விசாரணைக்குழுவை நியமித்துக்கொண்டது. அந்தக் குழு, அனைத்து உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, கோயபெல்ஸ் பாணியில், இலங்கை அரசின் நடவடிக்கைளை நியாயப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.


2009 ஆம் ஆண்டு மே மாதம், இரண்டு மூன்றாவது வாரங்களில் நடைபெற்ற கொடூரமான படுகொலைகளுக்குப் பிறகு, ஜெர்மனியின் முன்னெடுப்பில், பதினாறு நாடுகள், ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தை, ஜெனீவா நகரில் கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அக்கூட்டம், 2009 மே மாதம் கடைசி வாரம் நடைபெற்றது. ஆனால், அந்தக் கூட்டத்தில், போர்க்காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டுகின்ற வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற, இந்தியா பெரிதும் உதவியது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ் இனத்துக்கு எதிராக மேற்கொண்ட, மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இப்போது, உலக நாடுகளின் மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டது. எனவே, பிப்ரவரி 27 ஆம் நாள், ஜெனீவா நகரில் நடைபெறுகின்ற, ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை, அமெரிக்காவும், மேலும் பல நாடுகளும் கொண்டு வருகின்றன.


இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் இனக்கொலை நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான   அத்தகைய ஒரு தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு எவ்வித ஆதரவும் அளிக்கக்கூடாது என்று, நான் தங்களுக்கு ஏற்கனவே எழுதி உள்ள பல கடிதங்களில் கேட்டுக் கொண்டு உள்ளேன். ஆனால், பிப்ரவரி 27 ஆம் நாள், மகிந்த சமரசிங்கே என்ற இலங்கை அரசுப் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் நடைபெற இருக்கின்ற மிக முக்கியமான வாக்குப்பதிவில், “இந்தியா இலங்கை அரசை ஆதரிக்கும்” என்று தெரிவித்து இருப்பது, பேரதிர்ச்சியாக உள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராஜபக்சேவை பிப்ரவரி 26 ஆம் நாள் நேரில் சந்தித்து, ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என உறுதி அளித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


இது உண்மையாக இருக்குமானால், இந்த நடவடிக்கை, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழர்களின் படுகொலையால், தமிழகத்திலும், உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் இதயத்தில் குருதி வடிந்து கொண்டு இருக்கின்றது.
உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அரசு நிறுத்தப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமானால், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு; கூட்டுக் குற்றவாளி என்ற நிலைமையே ஏற்படும்.  ஏற்கனவே காயப்பட்டுப் புண்ணாகி இருக்கின்ற தமிழர் நெஞ்சில் மேலும் தீ வைக்கின்ற எந்த நடவடிக்கையையும்  மேற்கொள்ளாதீர்கள் என வேண்டுகிறேன். ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு ஆதரவான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

நடிப்பு விதேசிகள்!


ஒர் அரசியல்வாதி என்ன தொழில் செய்தார் அல்லது செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரிந்தால்தான், அவருடைய சொத்து மதிப்பு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பல கோடியாக உயர்ந்திருப்பதற்கான காரணத்தை ஒரு குடிமகன் புரிந்துகொள்ள முடியும். எந்தத் தொழிலும் செய்யாமல், பதவிக்காக அரசு வழங்கும் சம்பளத்தில் மட்டுமே வாழ்க்கை நடத்திக்கொண்டு, அதேசமயம் சொகுசு கார், பங்களா, மகன் பெயரில் பல கோடி ரூபாய் ஷேர் என்பதெல்லாம் சாத்தியமில்லை.  அவ்வாறு தொழில் செய்ததாகக் கூறினாலும், அந்தத் தொழில் நிறுவனத்தின் பெயர் என்ன? அது எங்கெல்லாம் செயல்பட்டது? அதன் உற்பத்தி அல்லது விற்பனைப் பொருள் என்ன? என்பது தெரிந்தால்தான், அந்த நிறுவனம் உண்மையிலேயே செயல்பட்டதா அல்லது ஊழல் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் "லெட்டர்பேட்' நிறுவனமா என்பதை ஒரு குடிமகன் அறியமுடியும்.  இதை, எனது சொந்த விஷயம், மூன்றாவது நபர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று ஒரு கட்சியின் தலைவர் சொல்கிறார் என்றால், அவரைப் பற்றி நாம் என்னவென்று சொல்வது? அப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாரும் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திதான்.
 
சென்னையைச் சேர்ந்த வி. கோபாலகிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சோனியா காந்தி கடந்த 10 நிதியாண்டுகளில் வருமானவரித் தாக்கல் செய்த ஆவணங்களைக் கோரினார். முதலில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்தபோது, வருமான வரித் துறையின் தலைமை பொதுத் தகவல் அலுவலர் இதில் சோனியாவின் கருத்தைக் கேட்டு, ஆர்டிஐ சட்டம் பிரிவு 2-ன் கீழ் சோனியா காந்திக்கு இது தொடர்பாக ஜனவரி 23-ம் தேதி கடிதம் எழுதினார்.  வருமான வரித் தாக்கல் விவரங்களை வெளியிடுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்துள்ள பதில் இது:  ""....பொதுவாழ்வில் வெளிப்படைத் தன்மை என்ற போர்வையில் (கேட்கப்படும்) இத்தகைய கேள்விகளுக்கு மூன்றாம் நபருக்குப் பதில் சொல்வதன் மூலம், தனிநபர் அந்தரங்கத்தில் மற்றவர்கள் தேவையின்றி நுழைவதாக ஆகிவிடும். வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட வருமானவரித் தாக்கல் தனிப்பட்டது, ரகசியமானது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 138-ன் படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது...''
 
அந்தரங்கம் புனிதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வருமானத்தில் அந்தரங்கம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தனிநபருக்கே, மேற்சொன்ன சட்டத்தின்படி மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூடாதது என்று ஒவ்வொரு நபரும் சொல்வாரேயானால், என்ன ஆகும்? அரசு அலுவலர் தொடங்கி, அமைச்சர்கள் வரை அனைவரும், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கு வரி செலுத்தத் தவறியவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள். அவர்கள் முறைகேடாக, லஞ்சத்தால் பதவியின் ஆதாயத்தால் பொருள் சம்பாதித்த குற்றவாளிகளாகக் கருத இடமில்லாமல் போய்விடும்.  பொது வாழ்க்கைக்கு வரும்போது, குறிப்பாக தேர்தலில் போட்டியிடும்போது, ஒரு வேட்பாளர் தனக்குள்ள சொத்து விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உருவாக்கப்பட்டதன் காரணமே, பொதுவாழ்க்கையில் வருபவரின் பொருளாதார வசதி என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்ளத்தான்.  சோனியா காந்தி தனிநபர் அல்ல. அவர் ஒரு தேசியக் கட்சியின் தலைவி. ஆண்டுதோறும் வருமான வரித் தாக்கல் செய்கின்றார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரின் வருமான வரித் தாக்கல் விவரம் தெரிந்தால்தானே, அவர் வளர்ச்சி அவரது வருமானத்துக்குப் பொருந்துவதாக உள்ளதா, அவர் கூடுதல் வருமானத்துக்கு ஆதாரமாகக் காட்டும் நிறுவனங்கள், பங்குகள் எப்படிக் கிடைத்தன, பழையதா, புதிதா என்பதையெல்லாம் கணிக்க முடியும்.
 
நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ-வும் தனது வருமானவரி, தன் குடும்ப ரத்த உறவுகளின் வருமான வரித் தாக்கல் விவரங்களை அவர்களாகவே ஆண்டுதோறும் வெளியிடும் நடைமுறையை அரசியல் சட்டப்படி கட்டாயமாக்குவதுதான் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும்.  தனிநபர் சுதந்திரம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, பலரும் தவறுகள் செய்து வருவதால்தான் மக்களுக்குப் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களாட்சித் தத்துவம் செயல்பட வேண்டுமானால் அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் இருந்தாக வேண்டும். அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டுப் பொது வாழ்க்கையை வரித்துக் கொள்பவர்கள் நேர்மையாளர்களாக இல்லாமல் போனால் அதன் விளைவு மக்களாட்சியையே தடம்புரளச் செய்துவிடும்.
 
வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருப்பதில் என்ன பிரச்னை? நியாயமாக நேர்மையாகச் சம்பாதித்த வருவாய்க்கு உரிய வரியைச் செலுத்துவதுதானே வருமான வரி. இந்தக் கணக்குகளை யார் வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம் என்கிற நிலைமை ஏற்படும்போதுதான், ஊழல்வாதிகள்,கள்ள மார்க்கெட்டில் தவறாகப் பணம் சம்பாதிப்பவர்கள், தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் போன்றவர்களின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொள்ளவும், சந்தேகம் ஏற்படும்போது விசாரணைக்கு வலியுறுத்தவும் முடியும்.  செல்போன் யுகத்தில் தனிமனித உரிமைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கும்போது, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பொது வருமானம் பற்றிக் கேட்பதை தனிமனித உரிமை மீறல் என்று சொன்னால் எப்படி ஏற்பது? தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் மூடி மறைக்க ஆசைப்படுகிறார்கள். இவர்களெல்லாம் ஊழலை ஒழிக்கப் போவதாக உத்தரப் பிரதேசத்தில்போய் வாய்ப்பந்தல் போடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

1 லட்சம் கோடி பொக்கிஷத்தை பாதுகாக்க பாதாள அறை!

1 லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்களை கொண்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், பொக்கிஷங்களை பாதுகாக்க உயர் பாதுகாப்பு கொண்ட புதிய பாதாள அறை உருவாக்கப்பட உள்ளது.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் உள்ள விலை மதிக்க முடியாத வைரம், தங்கம், வெள்ளி, ரத்தினங்களால் வடிவமைக்கப்பட்ட ஏராளமான ஆபரணங்கள் மற்றும் பொருட்களை, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மதிப்பீடு செய்து வருகிறது.பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் "இஸ்ரோ உதவியுடன் விஞ்ஞானப்பூர்வமாக பொக்கிஷங்களை மதிப்பிடும் பணிகள் கடந்த வாரம் துவங்கின.இந்நிலையில், மதிப்பீடு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் நிபுணருமான எம்.வி.நாயர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள அரிய பொருட்களை பாதுகாக்க, பூமிக்கு அடியில் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய அறை ஒன்றை உருவாக்கும் யோசனை உள்ளது. இந்த கட்டமைப்பு தொடர்பான விவரங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். இதற்கான செலவுகள் குறித்தும் மதிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றார்.

கோவா திரைப்பட விழாவில் பங்குபெற்ற "தி ஆர்டிஸ்ட்'

  1. இம்முறை, ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், மவுனப் படமான "தி ஆர்டிஸ்ட், அயர்ன் லேடி, ஹ்யூகோ, தி டிசண்டன்ட்ஸ், மிட் நைட் இன் பாரிஸ் ஆகிய படங்கள் முன்னணியில் இருந்தன.சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகியவற்றிற்காக, ஐந்து ஆஸ்கர் விருதுகளை, "தி ஆர்டிஸ்ட்' படம் வென்றது. அதே போல், கலை இயக்கம், சவுண்டு மிக்சிங், எடிட்டிங், விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்டவற்றிற்காக, "ஹ்யூகோ' படம், ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றது.மூன்றாவது விருதுமுன்னாள் பிரிட்டன் பிரதமரான மார்கரெட் தாட்சரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும், "அயர்ன் லேடி' படத்தில், தாட்சர் வேடத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரீப்புக்கு, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் கிடைத்தது. இது, இவர் பெறும் மூன்றாவது ஆஸ்கர் விருது என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான், பாகிஸ்தான் படங்கள்சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான விருதை, ஈரானின் "ஏ செபரேஷன்' படம் வென்றது. மிகச் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை, பாகிஸ்தானின் "சேவிங் பேஸ்' குறும்படம் பெற்றத

  1. பாகிஸ்தானில், பெண்கள் மீது நடத்தப்படும் ஆசிட் வீச்சு குறித்து எடுக்கப்பட்ட படம் தான் "சேவிங் பேஸ்'. பிரான்சில் தயாரிக்கப்பட்ட "தி ஆர்டிஸ்ட்' படம், 1927 முதல் 1932 வரையிலான காலகட்டத்தில், ஹாலிவுட்டில் நடக்கும் திரையுலக மாற்றங்களால் பாதிக்கப்படும் மவுனப் பட கதாநாயகனை மையமாகக் கொண்டது.பொதுவாக, ஹாலிவுட் படங்கள் தான், சிறந்த படம் உள்ளிட்டவற்றுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் செல்லும். இதற்கு மாறாக, இம்முறை பிரெஞ்சு படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான் கச்சேரி: இவ்விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, இசைக் கச்சேரி நிகழ்த்தினார். "127 ஹவர்ஸ்' படத்தில், தான் இசையமைத்த பாடல்களை அங்கு பாடினார். ரிலையன்ஸ் தொழிலதிபர் அனில் அம்பானியும் கலந்து கொண்டார். "தி ஹெல்ப், வார் ஹார்ஸ், ரியல் ஸ்டீல்' ஆகிய படங்களைத் தயாரித்த, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "ட்ரீம் வொர்க்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தில், 51 சதவீதம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பங்குகளை வைத்துள்ளது.ஈரானில் கொண்டாட்டம்; ஈரானின் பாரசீக மொழியில் எடுக்கப்பட்ட, "ஏ செபரேஷன்' படம், ஈரானிய நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்டது. நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் குடியேற வேண்டும் என விரும்பும் மனைவி, அல்ஜமீர் என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது தந்தையை விட்டு விட்டு வரத் தயங்கும் கணவன் இடையிலான பிரச்னைகளை, இப்படம் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது. சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான ஆஸ்கர் விருதை, இப்படம் பெற்றிருக்கிறது என்ற தகவல் வெளியானதும், ஈரானில் மக்கள் மத்தியில், மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது.இஸ்ரேல் படமான, "பூட்நோட்' என்ற படமும், ஆஸ்கருக்கு வந்திருந்தபடியால், இந்த வெற்றி இஸ்ரேலுக்கு எதிரான வெற்றியாக அங்கு சித்திரிக்கப்படுகிறது. அதோடு, ஈரானிய பண்பாட்டுக்கு, அமெரிக்காவில் கிடைத்த வெற்றி எனவும், ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஈரானில், செயற்கைக்கோள் வழியான வெளிநாட்டு சேனல்கள் தடை செய்யப்பட்டிருப்பதால், தேசிய தொலைக்காட்சி, செபரேஷன் படத்திற்கான விருது வழங்கும் காட்சிகளை, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...