|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 November, 2011

சுவிட்ஸர்லாந்து கோல்டுதான் சூப்பர்!

சர்வதேச அளவில் தங்கத்தை வாங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த15 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலையில் இந்தியாவின் மொத்த தங்க மதிப்பு 24 லட்சம் கோடி. அதாவது இந்திய பட்ஜெட்டை விட இருமடங்கு அதிகம். உலகம் முழுவதும் பல நாடுகளிடமிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்தாலும், அதிக அளவு வாங்குவது சுவிட்ஸர்லாந்திடமிருந்துதான். கடந்த ஆண்டு மட்டும் இந்த நாட்டிலிருந்து ரூ 6 லட்சம் கோடி அளவுக்கு சுவிஸ்ஸிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உலகின் அனைத்து நாட்டு தங்கமும் ஒரே தரம்தான் என்றாலும், சுவிடஸர்லாந்து தங்கத்தின் ஜொலிப்பு மட்டும் கூடுதலாக இருக்குமாம். இந்த தங்கத்தில் செய்யும் நகைகளின் ஃபினிஷிங் வெகு அழகாக அமையுமாம். எனவே வர்த்தகர்கள் அதிகமாக சுவிட்ஸர்லாந்து தங்கத்தையே நாடுகிறார்கள்.

சுவிட்ஸர்லாந்துக்கு அடுத்து அதிக அளவு இந்தியா தங்கம் வாங்கும் நாடு தென் ஆப்ரிக்கா. அதற்கு அடுத்த இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு. சர்வதேச அளவில் தங்க இருப்பு வைப்பதில், அமெரிக்காதான் வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது. ஆனால் தங்க மார்க்கெட்டைக் கட்டுப்படுத்துவதில் படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள். 1970-ல் மொத்த தங்க மார்க்கெட்டில் 47 சதவீதம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வசமிருந்தது. ஆனால் 2010-ல் இது 27 சதவீதமாக சுருங்கிப் போனது. ஆனால் 1970-ல் 35 சதவீத மார்க்கெட் ஆதிக்கம் கொண்டிருந்த இந்தியாவும் கிழக்கு ஆசியாவும், இப்போது 58 சதவீதத்தை கைவசம் வைத்துள்ளன. இது உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்.

எதற்கெடுத்தாலும் தொணதொணக்கும் மனைவியா ?


இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள். குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி. நம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை. எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள். பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பல சண்டைகள், பூசல்கள், மோதல்களை பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்காவிடமும், எதிர்வீட்டு எமிலியிடமும், 3வது வீட்டு மும்தாஜிடமும் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர்.

கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். இந்நிலையில் பல பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதே தவறு. அவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம்.

இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தான் வேலையின்றி இவ்வாறு செய்கிறார்கள் என்றால். வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. மதிய உணவு இடைவேளையில், கையில் சாப்பாடும், வாயில் கணவர்களையும் போட்டு பிசைந்து சாப்பிடும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். பிற பெண்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே கணவரைக் குறைபாடுவது, நாத்தனார்களை வறுத்தெடுப்பது, மாமியாரை மகா கடுமையாக பேசுவது என பற்களுக்குள் போட்டு குதறி எடுத்து விடுவார்கள். ஒருவர் இப்படி பேச ஆரம்பித்தால் உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு, ஆமாமா, எங்க ஊட்டுலயும் இப்படித்தான் என்று ஆரம்பித்து வம்பளக்கும் செயல்களை நிறைய இடங்களில் பார்க்கலாம். தாம்பத்ய வாழ்க்கையில் எப்போதுமே, எதையுமே பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மன நல நிபுணர்கள். தாம்பத்ய வாழ்க்கை என்றில்லை, எதையுமே, எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.

கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.கணவர்தான் என்றில்லை, மனைவி சரியில்லாவிட்டாலும் கூட இதேபோல கடைப்பிடித்து அவர்களைத் திருத்த கணவர் முயற்சிக்கலாம். இப்படி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது. இப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த 'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...!

தோல்நோய்களை குணமாக்கும் சல்மூக்ரா எண்ணெய்!


மரங்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. டையேஷியஸ் மரம் அல்லது சல்மூக்ரா எனப்படும் பசுமை மாறா மரம் மேற்கு மலைத் தொடர்களின் காடுகளிலும் கொங்கனில் தெற்குப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது இந்த மரத்தின் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. இந்த விதைகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் விதைகளில் ஹிட்னோகார்ப்பிக் மற்றும் சால்மூக்ரிக் அமிலங்கள், கோர்லிக், ஒலியிக் மற்றும் பால்மிட்டிக் அமிலங்கள் இவற்றோடு க்ரைசோக்ரைசால், ஐசோஹிட்னோ கார்ப்பின் அகிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

சல்மூக்ரா எண்ணெய் விதைகளில் உள்ள டேனின்கள் காய்ச்சலை குணமாக்கும். அலோபதி மருத்துவத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த எண்ணெயாக சல்மூக்ரா எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் லேப்ரஸிக்கு பயன்படுத்தப்படுகிறது.

தோல்நோய்களுக்கு மருந்தாகும் தோல்நோய்களுக்கு மருந்தாக இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆழமான வெட்டுக்காயம், தோல் நோயினால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கி மேற்புறத்தோலினை பழைய நிலைக்கு கொண்டுவரும். என்சைமா, அரிப்பு, படை உள்ளிட்ட தோல்நோய்களுக்கும் இந்த சல்மூக்ரா எண்ணெய் சிறந்த மருந்தாகும். குழந்தை பிறப்பிற்கு பின்னர் வயிற்றுப்பகுதி சுருங்கி தழும்பு ஏற்படும் போது அவற்றை நீக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.

குஷ்டநோய்க்கு மருந்து சால்மூக்ரா களிம்பு ஒரு பகுதி எண்ணெய் 4 பகுதி வாஸலினுடன் கலந்து தயாரிக்கப்படும். இது பல தோல்நோய்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். எலுமிச்சை சாற்றோடு கலந்து வாத நோயில் ஏற்படும் சுளுக்குகளை குணப்படுத்தும். விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் குஷ்ட நோய்க்கு மருந்தாகும். 5துளிகள் அளவு எடுத்து படிப்படியாக 30 துளிகள் வரை அதிகரித்து தசைக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும். இதற்கு எத்தில் எஸ்டர்கள் மற்றும் ஹிட்னா கார்ப்பிக் அமில உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அரைத்த விதைகள் பிற பொருட்களான சல்ஃபர்,கற்பூரம்,எலுமிச்சை சாறு ஆகியவற்றோடு கலந்து மற்றும் ஜட்ரோஃபா சர்க்காஸ் விதை எண்ணெயோடு கலந்து காயங்கள் மற்றும் புண்கள் குணப்படுத்தப் புறப்பூச்சாகப் பயன்படும்.

காலி டப்பா - மத்திய அரசின் லோக்பால் பற்றி அன்னா!


மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள லோக்பால் மசோதா ஒன்றுமே இல்லாத வெறும் காலி டப்பா என்று அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் லோக்பால் வரம்பிற்குள் குரூப் சி, குரூப் டி அரசு ஊழியர்கள் உட்பட அனைவரையும் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாதாரண மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசின் வலுவற்ற லோக்பால் மசோதாவை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார் அன்னா ஹஸாரே. இந்த நிலையில் நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் மீண்டும் லோக்பால் மசோதா குறித்த கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் குளிர்காலக் கூட்டத் தொடருக்குள் ஜன்லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த நாள் முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்க குதிப்பேன் என்று அன்னா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜன் லோக்பால் மசோதா மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ., நீதித்துறை,குரூப்சி, குரூப் டி அசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு லோக்பால் வரம்பிற்குள் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அன்னா ஹசாரே குழு அனைவரையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு ஊழியர்கள் பெறும் லஞ்சத்தினால் சாதாரண மற்றும் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அனைவருமே லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல சிபிஐ அமைப்பை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வந்து தீரவேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் லோக்பால் அமைப்பு ஒரு போஸ்ட் ஆபிஸ் போன்றதுதான் புகாரைப் பெற்று சிபிஐக்கு அனுப்புவதும், சிபிஐ அளிக்கும் அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்புவதும் லோக்பால் அமைப்பின் பணி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.அதேபோல் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகளையும் கண்டிப்பாக லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்றும் ஊழலுக்கு எதிரான குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

மக்கள் காதுகளில் ஜெ. இனியும் பூ சுத்த முடியாது- கருணாநிதி!


 3 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியிலேயே அச்சடிக்கப்பட்டு, சட்டசபையிலேயே படிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட திட்டங்களையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, இன்றைய சீர்கேடுகளுக்கெல்லாம் தி.மு.க. அரசுதான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுவது நியாயம் தானா? என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அறிவித்து விட்டு, இவ்வாறு செய்வதற்கு இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க.தான் காரணம் என்றும், மின் வாரியம் உள்பட அனைத்துத் துறைகளின் சீர்கேடுகளுக்கும் தி.மு.க. ஆட்சிதான் பொறுப்பு என்றும் பழியைத் தூக்கி தி.மு.க. மீது சுமத்தி அறிக்கை விட்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

இந்த ஆண்டு மே திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைகளை பெற்று பேரவையில் 4-8-2011 அன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், பத்தி 6: மின் ஆளுகை முயற்சிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும், பத்தி 50: உலக அளவில் தமிழ்நாடு உற்பத்தி சார்ந்த தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக கருதப்படுகிறது என்றும், பத்தி 58: நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிலம் ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் 25 இடங்களில் 2,256 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளது என்றும், பத்தி 68: 2011-2012 ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தித் திறன் 3,280 மெகாவாட் ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டு, பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் படிக்கப்பட்டது.

அதிலே கூறப்பட்ட 3,280 மெகாவாட் மின்சாரம் கூட கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டங்களால் கிடைக்க கூடியதே தவிர, அ.தி. மு.க. ஆட்சியின் 3 மாத காலங்களிலே உற்பத்தியானதல்லவே. எனவே 3 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியிலேயே அச்சடிக்கப்பட்டு, அவையில் படிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட திட்டங்களையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, இன்றைய சீர்கேடுகளுக்கெல்லாம் தி.மு.க. அரசுதான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுவது நியாயம் தானா? ஏடுகள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

அது மாத்திரமல்ல, 4-8-2011 அன்று பன்னீர்செல்வம் படித்த அதே நிதி நிலை அறிக்கையில் மின்சாரத்துறை வளர்ச்சியடைய பல்முனை உத்திகளை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வருவதாகவும், மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்கவும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியதோடு, மின் வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் இன்றைய நிலை என்ன?

2 மணி நேரமாக தி.மு.க. ஆட்சியில் இருந்த மின்வெட்டு, தற்போது 5 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த புதிய மின் உற்பத்தித் திட்டங்களும் தொடங்கப்படவும் இல்லை. இந்த நிலையில் அம்மையார் ஜெயலலிதா, தி.மு.க. அரசுதான் சீர் கேடுகளுக்கெல்லாம் காரணம் என்றும், நான் நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உண்மையை நன்றாகவே உணரத் தலைப்பட்டு விட்டார்கள். அவர்கள் காதுகளில் இனி பூ சுற்ற முடியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல்!


நெல்லை மாவட்டத்தில் சீதோஷ்ண நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் குழந்தைகளை ஒரு வித வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது. கடந்த மாதம் 22ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியது. சென்னை, கோவை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் தமிழகத்தில் இயல்பாக 430 மிமீ மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிய 2 வாரங்களிலேயே 210 மிமீ வரை மழை பெய்துள்ளது. 

ஆனால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. இதனால் இம்மாவட்டங்களில் அணை, குளங்கள் நிரம்பவில்லை. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. பகலில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் பனி பெய்வதுமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு வித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. பெரும்பாலும் இக்காய்ச்சல் குழந்தைகளையே பாதிக்கிறது. ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிட்டால் வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் பரவி விடுகிறது. மேலும் இக்காய்ச்சல் 4 நாள் முதல் 5 நாள் வரை நீடிக்கிறது. சீதோஷ்ண நிலை மாறி உள்ளதால் அடிக்கடி பள்ளி செல்லும் குழந்தைகள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. காய்ச்சல் பரவி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பார்த்ததில் பிடித்தது!



பஸ் கட்டண உயர்வை எதிர்த்து 'டிராபிக்' ராமசாமி வழக்கு!


பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பொது நலன் வழ்ககு தொடர்ந்தார். இதை வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு ராமசாமி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இது குறித்து டிராபிக் ராமசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இதை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எனது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்று நாளை விசராணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். பெட்ரோல் விலையை ஏற்றுகிறார்கள் என்றால் ஒரு நாளைக்கு முன்பே அது குறித்த செய்தி நாளிதழ்களில் வருகிறது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தியிருக்கிறார்கள் என்றால் அது சட்டவிரோதமாகும். எனது மனுவில் இந்த கட்டண உயர்வை மக்கள் விரோதச் செயல் என்று குறிப்பிட்டுள்ளேன் என்றார்

தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு நடிகர் சிவக்குமார்!


திரு. சிவக்குமார் அவர்களே! சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது. இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.  பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.

"பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.
உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது? குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா சிவக்குமார்?
மனைவி கணவனிடத்தில் அந்தரமாக பேசியதை எப்படி நீங்கள் உளவு பார்த்தீர்கள்? அப்படியே யாரவது ஒருத்தி உங்கள் காதுபட பேசியிருந்தால் அவள் நிச்சயம் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. அவளுக்கு அகராதியில் வேறு பெயர். ஒருவேளை சினிமாத் துறையில் நீங்கள் பழகிய பெண்கள் உங்களிடம் இவ்வாறு பேசினார்களோ?  தமிழ்ப் பெண்களை இதைவிட வேறு யாரும் கொச்சைப்படுத்தி பேச முடியாது என்பது என் கணிப்பு. நடிகை குஷ்பு "தமிழ் நாட்டிலே எந்தப் பெண்களும் கற்புடையவளாக இல்லை" என்று சொன்னதற்காக தமிழகமே கொந்தளித்தது. உங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து கேள்விக் கேட்க ஏன் இன்னும் யாருக்கும் துணிவில்லை?

தமிழகத்தில் இருக்கும் மாதர் சங்கங்களுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டிக் கொண்டு வழக்குகள் தொடர்ந்த அரசியல் கட்சிகள் உங்கள் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?  உங்களின் இந்தச் செயலுக்கு வருந்தி மானமுள்ள மறத் தமிழர்களிடம் நீங்கள் மண்டியிடுவது எப்போது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளது அந்த இணையதளம். மேலும்,   ’’சிவக்குமாரின் எண்ணங்கள் வேண்டுமானால் செத்து ஒழிந்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக இருக்கலாம். அதற்காக ஆதாரங்கள் இல்லாத, பீதி கிளப்பக்கூடிய, உண்மைக்கு புறம்பான,  அருவருக்கத்தக்க விஷயங்களை மேடையில் வாதங்களாக வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் (கல்லூரியின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன்) நமது இலக்கியச் செல்வர் சிவக்குமார் ஆற்றிய சொற்பொழிவு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பெங்களுரில் ஏதோ ஒரு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே PUB (ஒயின் ஷாப்) திறந்து வைத்திருக்கிறார்களாம், ஏனென்றால் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியில் சென்று குடித்து வந்து கல்லூரியின் பெயர் கெட்டுப் போவதால் அதைத் தடுக்கும் விதத்தில் கல்லூரி வளாகத்தினுள்ளேயே இந்த ஏற்பாடாம். ஆளாளுக்கு அவரைப் பிடித்து “அது எந்தக் கல்லூரி? பெயரைச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டு பிரச்சினை செய்ய திக்குமுக்காடிப்போய் எதோ சொல்லி சமாளித்திருக்கிறார். மேடையில் உணர்ச்சிகரமாக பேசி ‘திரில்’ ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உண்மைக்குப் புறம்பான இது போன்ற செய்திகளை அவர் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

அதே மேடையில் அவர் கூறிய இன்னொரு செய்தி. ஹைதராபாத்தில் வசிக்கின்ற காதலித்துத் திருமணம் செய்துக்கொண்ட  சென்னையைச் சேர்ந்த இளந்தம்பதியரின் வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார். கணவனுடைய நண்பனோடு மனைவியும், மனைவியின் தோழியோடு கணவனும் உறவு வைத்திருந்தார்களாம். இரு ஜோடிகளுக்கும் இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இதனைக் கண்டுக் கொள்ளாமல் பரஸ்பர உறவுகொண்டு வாழ்ந்து வருகிறார்களாம்.

இதுதான் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்களுடைய இன்றைய பரிதாப நிலைமை என்று கூறியிருக்கிறார். சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யாவும் காதலித்துத்தான் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால் காதலித்து திருமனம் செய்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்று சொல்ல வருகிறாரா சிவக்குமார்?’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளது அந்த இணையதளம்.

கடலில் கறுப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரையில் இன்று (21/11/2011) மீனவர்கள் தங்களது படகுகளில் கறுப்புக்கொடி ஏந்தி கடலில் ஆர்ப்பாட்டம் 

பார்த்ததில் பிடித்தது! கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்!


இதே நாள்...


  • உலக மீனவர்கள் தினம்
  •  உலக தொலைக்காட்சி தினம்
  •  வங்கதேச ராணுவத்தினர் தினம்
  •  இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)
  •  இந்திய விடுதலைக்கு பின் முதல் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(1947)

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை நாளை காலைக்குள் மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்!

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை நாளை காலைக்குள் 
மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பணியாளர்களை சேர்த்ததை, வரும் புதன்கிழமைக்குள் உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்நலப் பணியாளர்கள் தாக்கல் செய்த மனு குறித்து விசாரித்த நீதிபதி சுகுணா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கு தொடர்ந்தவர்களை மட்டும் பணியில் சேர்த்தால் மட்டும்போதாது, பணிநீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரம் பேரையும் பணியமர்த்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் இறுதி விசாரணை, வியாழக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு ஒரே ஊசியில் 5 தடுப்பு மருந்து!


ஒரே ஊசியில் 5 தடுப்பு மருந்துகளைக் கொண்ட, "பென்டா வேலன்ட்' தடுப்பூசி திட்டம், தமிழகத்தில் டிசம்பர் 17ல் துவக்கப்படும்,'' என, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறினார். ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் ஆகிய 3 நோய்களுக்கும், "டிபிடி' முத்தடுப்பு தடுப்பூசி போடப்படும். இந்த மூன்று தடுப்பு மருந்துகளோடு, "ஹெப்படைடீஸ் பி' மஞ்சள் காமாலை தடுப்பு மருந்து, மூளைக் காய்ச்சலைத் தடுக்கும், "ஹிப்' தடுப்பு மருந்து ஆகிய 5 தடுப்பு மருந்துகளையும், ஒரே தடுப்பூசியில் (பென்டா வேலன்ட்) போடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பு மருந்துகளையும் தனித்தனியாக போடும் போது, குழந்தைகளை அதிக முறை ஊசியால் குத்தி, துன்புறுத்த வேண்டியிருக்கும். மேலும், ஒவ்வொரு முறை தடுப்பூசி போடும் போது, ஓரிரு நாட்கள் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆனால், 5 தடுப்பு மருந்துகளையும் ஒரே ஊசியில் போடுவதால், குழந்தைகளுக்கு தொந்தரவுகள் குறைவு என்பதால், தமிழக சுகாதாரத் துறை பென்டா வேலன்ட் தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தது.

ஆனால், சில குழந்தை மருத்துவர்கள் இதுபற்றி கூறும் போது, ""பென்டா வேலன்ட் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்காது. எல்லா தடுப்பு மருந்துகளையும் ஒரே ஊசியில் கொடுப்பதால், மருந்தின் வீரியம் குறைய வாய்ப்புள்ளது. மேலும், பக்க விளைவுகள் ஏற்படும் ஆபத்துண்டு,'' என, தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், பென்டா வேலன்ட் தடுப்பூசி சிறப்பானது; பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டதால் தமிழகம், கேரளத்தில் பென்டா வேலன்ட் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறும் போது, ""பென்டா வேலன்ட் தடுப்பூசி திட்டம் நவம்பரில் துவங்குவதாக இருந்தது. சில நடைமுறை காரணங்களால், வரும் டிசம்பர் 17ல் துவக்கப்படும்,'' என்றார். சுகாதாரத் துறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறும் போது,""சில மாவட்டங்களில் மட்டும் இப்போது சோதனை அடிப்படையில் "பென்டா வேலன்ட்' தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு மட்டும், இத்தடுப்பூசி போடப்படுகிறது. தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில், செவிலியர்களுக்கு இப்போது தான் பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என்றார். கிராமப்புற செவிலியர்கள், கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, தடுப்பூசி போட உள்ளனர். பென்டா வேலன்ட் தடுப்பூசி போட, இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பார்த்ததில் பிடித்தது!


இதற்கும் ஒரு "ஜே' போடுங்கள் ஒட்டு போடாததால் கருணாநிதி கடுப்பு!

 எலைட் ஷாப்கள், பெரிய ஷாப்பிங் மால்களில், "ஏசி' பார் வசதியுடன் திறப்பதற்கான முயற்சி நடக்கிறது' என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, இதற்கும் ஒரு "ஜே' போடுங்கள் என காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சேலத்தில் இருந்து பிற ஊர்களுக்குபஸ் கட்டண விவரம்!

சேலத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, புதிய பஸ் கட்டணம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. சேலத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் புதிய கட்டண விவரம் வருமாறு 

(அடைப்பு குறிக்குள் பழைய கட்டணம்):
சேலம்-சென்னை ரூ. 240(185),
சேலம்-நெல்லை ரூ.300(225),
சேலம்-மதுரை ரூ.180(140),
சேலம்-கோவை ரூ.120(95),
 சேலம்-எர்ணாகுளம் ரூ.300(270),
சேலம்-பெங்களூரு ரூ.225(200),
 சேலம்-விருதுநகர் ரூ.215(190).

சேலத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டண விவரம் வருமாறு:
சென்னை ரூ.193, (115),
காஞ்சிபுரம் ரூ.161,(95),
வேலூர் ரூ.124, (70),
தஞ்சை .111, (68),
மதுரை ரூ.140, (80),
திருப்பூர் ரூ.73, (42),
கோவை ரூ.97, (55),
புதுக்கோட்டை ரூ.114, (68),
பெங்களூரு ரூ.131, (68).
ஓசூர் ரூ.97, (55),
ஊட்டி ரூ.125, (75),
பழனி ரூ.103, (60),
விழுப்புரம் ரூ.103, (60),
 திருப்பத்தூர் ரூ.70, (40),
வேலூர் 121, (40),
கிருஷ்ணகிரி ரூ.67, (37).
தர்மபுரி ரூ.39, (22),
நாமக்கல் ரூ.32, (19),
கரூர் ரூ.59, (.38),
 பாண்டிச்சேரி ரூ.130, (73),
திருச்சி ரூ.83,(50),
ஏற்காடு ரூ.17(11).
ஊத்தங்கரை ரூ.54, (31),
அரூர் ரூ.39, (22),
கொல்லிமலை ரூ.48, (30),
திருவண்ணாமலை ரூ.91, (52),
ஆத்தூர் ரூ.33, (20).

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...