|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 May, 2014

தட்டிக்கேட்ட ராஜா கார்த்திக்.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்; மத்திய சுற்றுலா அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஆந்திராவில், தெலுங்கானாவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடந்தது. இதையொட்டி, ஐதராபாத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், நடிகர் சிரஞ்சீவி, தன் மனைவி, மகள், நடிகரும், மகனுமான ராம்சரண் தேஜா ஆகியோருடன் வந்தார். அப்போது, ஓட்டுச் சாவடி யில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். சிரஞ்சீவியும், அவரின் குடும்பத்தினரும், வரிசையில் நிற்காமல், நேராக ஓட்டுச் சாவடிக்குள் சென்று, ஓட்டளிக்க முயற்சித்தனர். அப்போது, வரிசையில் நின்றிருந்த, ராஜா கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தினார். ''நீங்கள், எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,யாக வேண்டுமானாலும் இருக்கலாம்; மத்திய அமைச்சராக கூட இருக்கலாம். ஆனால், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

நீங்கள், மூத்த குடிமகனோ, மாற்றுத் திறனாளியோ இல்லை. எனவே, வரிசையில் நின்று, ஓட்டளியுங்கள்,'' என்றார். இதனால், சிரஞ்சீவி, கடும் அதிருப்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து, வரிசையில் நின்றிருந்த மற்ற வாக்காளர்களும், சிரஞ்சீவிக்கு எதிராக, கோஷமிட்டனர். வேறு வழியில்லாமல், சிரஞ்சீவி, வரிசையில் நின்று, ஓட்டளித்தார். சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி, தைரியமாக கேள்வி கேட்ட இளைஞரை, அங்கு நின்றிருந்த வாக்காளர்கள், கை கொடுத்து, பாராட்டினர். இளைஞர் ராஜா கார்த்திக் கூறுகையில், ''நான், லண்டனில் வசிக்கும் இந்தியன். ஓட்டு போடுவதற்காக, ஐதராபாத்துக்கு வந்துள்ளேன். சிரஞ்சீவியை நான் மதிக்கிறேன். ஆனால், அவர், விதிமுறைகளை மீறுவதை, அனுமதிக்க முடியாது,'' என்றார்.

ஒண்ணுக்கும் பிரோஜனம் இல்லாத கல்லூரிகள்.


தமிழகத்தில் உள்ள 54 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள், பள பளா கட்டடங்கள் என்று தமிழகத்தில் புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தரம் என்னவோ மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. இதனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது கடந்த வாரம் வெளியான அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள். அதன்படி, இந்த ஆண்டில் முதல் செமஸ்டரில் 54 கல்லூரிகளில் ஒருவர் கூட பாஸ் ஆகாத கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இதற்கு என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை.

தேர்வு முடிவுகள் அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளதாம். இதனால், இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் எதனடிப்படையில் தங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பது என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.421 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் கீழேதான் தேர்ச்சி விகிதம் உள்ளது. 115 கல்லூரிகள்தான் 50 சதவீத தேர்ச்சியைத் தாண்டியுள்ளன.  357 கல்லூரிகளில் 40 சதவீதத்திற்கும் கீழே உள்ளது தேர்ச்சி விகிதம். 59 கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச பாஸ் சதவீதமே 87.45 சதவீதம்தான்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...