|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2012

மத்திய அமைச்சரின் பேச்சால் கேரளாவில் சலசலப்பு!

ஜன.16: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் நேற்று கூறிய ஒரு கருத்தால், கேரளத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 115 வருட பழைமையான முல்லைப்பெரியாறு அணை, தற்போது பாதுகாப்பாகவுள்ளது. கீழே விழுந்துவிடும் அளவுக்கு அது இல்லை என்று அவர் தெரிவித்திருந்த கருத்து இப்போது சர்ச்சையாகியுள்ளது. கேரளத்தின் ஆளும் கூட்டணியின் நேசக் கட்சியான கேரள காங்கிரஸ் (மணி), அணை எதிர்ப்பு குழு நடத்தவுள்ள வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது முடிவினை அறிவித்தது. அக்கட்சியின் பி.சி.ஜார்ஜ் இதற்கான தனது முடிவினைத் தெரிவித்தார். இது, ஆளும் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கேரள அரசியல் பிரமுகர்கள் கருதுகிறார்கள்.

மனைவி ஜாலி தட்டிகேட்ட கணவனை கொதிக்கும் எண்ணெய் உற்றி கோலை!


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகில் உள்ள அரங்கனூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் பெரியசாமி (வயது-32). லாரி ஓட்டுனரான இவரது மனைவி பெயர் சித்ரா (வயது-28), இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளது.கடந்த ஆறாம் தேதி இரவு பெரியசாமியின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரகள் ஓடிப்போய் பார்த்தபோது, பெரியசாமி உடலெல்லாம் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு கட்டிலில் கிடந்துள்ளார்.

என்ன நடந்து என்று பக்கத்து வீட்டுகாரர்கள் விசாரித்தபோது, தன்னுடைய மனைவி சித்ரா, தான் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது தனது பிறப்புறுப்பின் மீதும், வயிறு நெஞ்சு மற்றும் உடலின் மீதும் கொதிக்கவைத்த சமையல் எண்ணையை எடுத்து ஊற்றி விட்டதாக சொல்லியுள்ளார். கொதிக்கும் எண்ணையால் வெந்துபோன உடலுடன் மோசமான நிலையில் இருந்த பெரியசாமியை உறவினர்கள் கொண்டு போய் சிகிச்சைக்காக சேலம் அரசு மருதத்துவமனையில் சேர்த்தனர். பெரியசாமிக்கு மருத்துவர்கள் தவிர சிகிச்சை கொடுத்தபோது, மிகவும் மோசமாக வெந்து போயிருந்த பெரியசாமியின் உடல் மிகவும் மோசமடைந்து வந்தது, சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தநாள் பெரியசாமி இறந்து போனார்.முதலில், இது குறித்து சித்ராவிடம் போலீசார் விசாரணை செய்ததில், தன்னை தூங்க விடாமல் பெரியசாமி “செக்ஸ்” தொந்தரவு செய்ததால் தான் எண்ணையை காய்ச்சி ஊற்றினேன் என்று முதலில் கூறியுள்ளார். 

ஆனால், போலீசார் விசாரணையில் அந்தப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் சித்தராவுக்கு “கூடாநட்பு” இருப்பதாகவும், அதை தெரிந்துகொண்ட  பெரியசாமி மனைவியை கூடாநட்பு வேண்டாம் என்று கண்டித்து வந்ததாகவும், சம்பவ தினத்தன்று இரவு எட்டு மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சித்ரா வீட்டுக்கு அருகில் உள்ள மறைவான இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததை பார்த்த பெரியசாமி மனைவியை கூப்பிடு கண்டித்தார் என்றும், இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் கடைசியில், மனைவியை வீட்டுக்கு கூட்டிவந்த பெரியசாமி சிதராவை அடித்தார் என்று பக்கத்து வீட்டுகார்கள் கூறியுள்ளனர். பின்னர் சித்ராவிடம் போலீசார் மீண்டும் தீவிரமாக விசாரணை செய்ததில், தான் விருப்பம் போல மூன்றாம் நபர்களுடன் “கூடநட்பு” கொள்ள கணவரான பெரியசாமி இடையூறாக இருந்ததாகவும், இதை விரும்பாத சித்ரா கனவனை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதற்காக வீட்டில் இருந்த “ரீபைன்ட்” ஆயிலை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெரியசாமியின் மீது ஊற்றி கொலை செய்தேன் என்று சித்ரா போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

9 தமிழறிஞர்களுக்கு விருது...

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவ்வாண்டு தமிழக அரசின் விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு: திருவள்ளுவர் விருது  புலவர் செ.வரதராசன், தந்தை பெரியார் விருது  டாக்டர் விசாலாட்சி நெடுஞ் செழியன், அண்ணல் அம்பேத்கர் விருது  பேராசிரியர் முனைவர் க.காளியப்பன், பேரறிஞர் அண்ணா விருது  இரா. செழியன், பெருந்தலைவர் காமராஜர் விருது  திண்டிவனம் கே.இராமமூர்த்தி, மகாகவி பாரதியார் விருது  முனைவர் இரா. பிரேமா, பாவேந்தர் பாரதிதாசன் விருது  கவிஞர் ஏர்வாடி சு.இராதாகிருஷ்ணன், தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது  பேராசிரியர் முனைவர் நா.செயப்பிரகாசு, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது  பேராசிரியர் முனைவர் இரா. மோகன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மோடி பிரதமராக வேண்டும்..அல்லது ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்-சோ.


ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் ஆண்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினி, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன், இயக்குனர் கே.பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் சோ, 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் புதிய அரசு அமைவதில் அதிமுகவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்து, அவர் பிரதமரானால் நாடே பெரும் உற்சாகம் அடையும். 

ஒருவேளை பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், பாஜக ஆதரவுடன் ஆட்சி அமையலாம் என்ற நிலை ஏற்பட்டால், ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அத்வானி பேசுகையில், நாடாளுமன்றத்தில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில் அதிமுக எங்களுக்கு எந்தக் குறைவும் அற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அதிமுக-பாஜக கூட்டணி இயல்பான கூட்டணி. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பொதுவான கொள்கைகளே இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே கூறிவிட முடியாது என்றார். நரேந்திர மோடியை மிகக் கடுமையாக எதிர்க்கும் பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை சோ விமர்சித்தார். அவரது தலைமையிலான அரசிலும் பிகாரில் பெரிய வளர்ச்சி ஏதும் நடந்துவிடவில்லை என்றும், நிதிஷ் குமார் தான் பாஜக கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதெல்லாம் சரிவராது என்றார்.

புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் நீரிழிவு மருந்துகள்!


டைப் 2 நீரிழிவு நோய்க்காக உட்கொள்ளப்படும் மருந்துகள் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருந்துகள் எவ்விதம் செயல்புரிகின்றன என்பது கண்டறியப்படவில்லை என்று தென்கொரியா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தென்கொரியா நாட்டின் சியோல் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் டிராஸ்கோ, ஏராளாமான நீரிழிவு நோயாளிகளிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டார். அப்போது டைப் 2 நீரிழிவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்கொள்ளும் மருந்துகள் மார்பு, கல்லீரல், லிவர் போன்ற இடங்களில் புற்றுநோய் தோன்றுவதை தடுப்பதாக கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். புற்றுநோய் செல்கள் ஏற்பட்டாலும், இந்த மருந்துகள் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதாகவும் கூறியுள்ள ஜேம்ஸ், அது எவ்விதம் செயல்புரிகிறது என்று கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மார்பகப் புற்றுநோய் தாக்கியவர்களின் தசைகளை சிறிதளவு எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது நீரிழிவு மாத்திரைகள் மூலம் மார்பகத்தில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறையத்தொடங்கியதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும் ஈஸ்ரோஜன் சுரப்பும், மார்பகத்தின் வளர்ச்சியும் அதிகரித்ததும் ஆய்வில் தெரியவந்தது. மார்பகப் புற்றுநோய் தாக்கியவர்களுக்கு ஈஸ்ரோஜன் சுரப்பதில் மாறுபாடு ஏற்பட்டது. அதேசமயம், நீரிழிவு மாத்திரைகள், ஈஸ்ரோஜன் சுரப்பை சரிசமமாக கட்டுப்படுத்தியது. இந்த ஆய்வு முடிவானது தென்கொரியாவில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

சுயநலமிகளை காலம் சக்கையென துப்பிவிடுகிறது!


என் குடும்பம், என் மனைவி, என் துணைவி, என் மகன்கள், என் மகள்கள், என் பேரன், என் பேத்திகள் என்று தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, தன்னை சுற்றியே சிந்திக்கும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பிவிடுகிறது; தூரவே வீசிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் பதிவுகளும், சுவடுகளும் இல்லாத பாலைவனம் ஆகிவிடுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 95வது பிறந்த நாளையொட்டி அக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளே!. பெருமிதம் கொள்ளத்தக்க தன் வாழ்நாள் சேவைகளாலும், தன்னிடமிருந்து இந்தச் சமூகம் பெற்றுக்கொண்டதெல்லாம் நல்லதை மட்டுமே என்னும் பெருமை கொண்ட வாழ்வாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைத்த இடம் பிடித்து நினைவில் இருந்து நீங்காது வாழுகின்ற காவியமாம், கழக நிறுவனத் தலைவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதில் நாம் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியும், எல்லையில்லா இன்பமும் கொள்கிறோம். இந்த நன்னாளில், அந்த மாசற்ற தலைவரின் மங்காத நினைவுகளை, புரட்சித்தலைவர் மீது அளவற்ற அன்பும், பற்றுதலும் கொண்டிருக்கும் கழகக் கண்மணிகளாகிய உங்களோடும், தமிழக மக்களோடும் பகிர்ந்து கொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்தை தொடவிருக்கும் நிலையிலும், அவரது நிலைத்த புகழும், நிகரில்லா அழகும், நீதி உரைத்த அவரது தெளிவும், நேர்மைக்கே எந்நாளும் அஞ்சாது வாழ்ந்திட்ட அவரது நேர்மைத் திடமும் இன்றும் தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.என் குடும்பம், என் மனைவி, என் துணைவி, என் மகன்கள், என் மகள்கள், என் பேரன், என் பேத்திகள் என்று தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, தன்னை சுற்றியே சிந்திக்கும் சுயநலமிகளை காலம் சக்கையென துப்பிவிடுகிறது; தூரவே வீசிவிடுகிறது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணம் பதிவுகளும், சுவடுகளும் இல்லாத பாலைவனம் ஆகிவிடுகிறது.

ஆனால், தனக்காக வாழாது பிறரின் சிரிப்பில் தன் அகம் மகிழ்ந்து, பிறர் பசி தீர்ப்பதில் தன் மனம் நெகிழ்ந்து, இவ்வுலகில் இருக்கும் காலமெல்லாம், இல்லையென சொல்லாமல் எதிர்வந்து நிற்போர்க்கு அள்ளி அள்ளி கொடுத்து, பெறுபவர் முகம் பூரிப்பது கண்டு, அதில் உச்சி குளிர்ந்து, வள்ளலெனவே வாழுகின்ற மனித மகான்களை இந்தப் பூமி உள்ள காலம்வரை மானுடம் நெஞ்சார நினைத்தே போற்றும் என்பதற்கு நம் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் நிலைத்த புகழ் ஓர் நிகரில்லா சாட்சி அல்லவா!.

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்' என்றே, தான் பாடிய பாடலுக்கு தானே இலக்கணம் ஆனவர் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அல்லவா? தன்னை பெற்றெடுத்த தாயையும், தன்னை ஆளாக்கி அழகு பார்த்த கலைத்தாயையும் கண்ணாகக் கருதி எந்நாளும் போற்றியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 'நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்' என்று தன்னை அரசியலில் அடையாளம் காட்டிய பேரறிஞர் அண்ணாவை கொடியிலும், கொள்கையிலும், தன் இதயத்திலும், இயக்கத்தின் பெயரிலும் கொண்டு 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்தை நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

கருணாநிதி என்னும் தீய சக்தியை வேறோடு சாய்த்து தமிழகத்தை 'இரட்டை இலை' மயமாக்கினார். 'செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என்பதெல்லாம் நடை முறைக்கு சாத்தியமாகாதே என்னும் யதார்த்தத்தை தான் பசித்திருந்த போதும், பட்டினி கிடந்தபோதும் உணர்ந்து உள்வாங்கிக் கொண்ட காரணத்தால், தன் கரங்களில் செங்கோல் கிட்டியதும் 'பசி' என்ற வார்த்தையை பள்ளிக் கூட வளாகங்களில் இருந்தே விரட்டி அடிக்கும் விதத்தில், 'சத்துணவுத் திட்டம்' என்னும் சரித்திரப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்று, அவர் காட்டிய வழியில் தப்பாது நடக்கிற உங்கள் தாயின் கழக அரசும் விலையில்லா அரிசியை ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கே உள்ளம் குளிர்ந்திட அள்ளித்தந்து 'பசி, பஞ்சம், வறுமை' என்னும் அத்தனை வார்த்தைகளையும் தமிழகத்தின் எல்லையில் இருந்தே ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தி இருக்கிறது.நம் கழக அரசு அன்னமிடுவதில் தொடங்கி, அறிவுசார் புரட்சிக்கு அச்சாரமிடுவது வரை எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கும் தலையாய முயற்சியில் விரைந்து செயல்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்க்கு மடிக்கணினி, பாடப் புத்தகங்கள், சீருடைகள், பூகோள வரைபடத் தொகுப்பு, அகராதி, வண்ண பென்சில்கள், காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணங்கள், சேட்டிலைட் கல்வி எனப்படும் செயற்கைக் கோள் வழிபாட வகுப்புகள் என உலகத்தரத்திற்கு நாளைய தமிழ் சமூகத்தை அழைத்துச் செல்லும் புரட்சியை நோக்கி உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான கழக அரசு வெற்றி நடைபோடுகிறது. அதே வேளையில், வறுமைக்கோட்டிற்கு கீழே வாழப் போராடுகின்ற மக்களை கைதூக்கிவிடவும், ஏங்கி நிற்கும் ஏழைகளை தாங்கிப் பிடித்திடவும், விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகளை வழங்கி, பொருளாதார விடியலுக்கும், விவசாயம் சார்ந்த வெண்மைப் புரட்சிக்கும் தமிழகத்தை அழைத்துச் செல்லும் வேட்கையோடும் நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றி நடைபோட்டு வருகிறது.

இப்படி, மக்கள் திலகம் அடித்தளமிட்ட அவரது மகத்தான வழியிலேயே மக்கள் சேவையை தொடர்ந்து ஆற்றி வரும் அதே வேளையில், புரட்சித் தலைவரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியையும், பல்கி பெருகிக் கிடக்கும் அவரது குடும்பத்தையும், தமிழ்நாட்டு அரசியலில் இருந்தே முற்றிலுமாய் அகற்றுவதற்கான காரியத்தை வெற்றிகரமாய் கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதர வோடும் செவ்வனவே செய்து கொண்டிருப்பதை இந்த நன்னாளில் எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். தலைமையின் மீது பற்றுதலும், நன்றியுணர்ச்சியும் கொண்டு பணியாற்றுவதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிஞ்சுவதற்கு இன்னொரு இயக்கம் இம்மண்ணில் இல்லை. ஆனால், 'கட்சியில் தலைமை நாற்காலியை பெரியாருக்காக காலியாக வைத்திருக்கிறேன்' என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை தீயசக்தி கருணாநிதி காற்றில் பறக்க விட்டு, அந்த தலைமைப் பதவியை தன்வசம் ஆக்கிக் கொண்டார்.

எனக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் இல்லாது, கோடானு கோடி உடன்பிறப்புகளாகிய என் உயிரினும் மேலான எனதருமை கழகக் கண்மணிகளின் இன் முகத்தில் படரும் புன்னகைக்காகவும், ஏழரை கோடி தமிழ் மக்கள் என் மீது கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காகவும், என்னை மெய் வருத்தி உழைத்து, நான் புரட்சித் தலைவருக்கு அன்று தந்திட்ட உறுதியை, செய்திட்ட சத்தியத்தை இம்மியும் பிசகாமல் நிறைவேற்றி வருகிறேன் என்பதை பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெல்வதற்கு இன்னொரு இயக்கம் இம்மண்ணில் இல்லை என்னும் அரசியல் பொற்காலத்தை உருவாக்கி இருக்கிறோம். 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்', 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்னும் புரட்சித் தலைவரின் வைர வரிகளை இன்னும் பட்டை தீட்டி 'எப்படை வரினும் இப்படையே வெல்லும்' என்னும் கம்பீர நிலைக்கு கழகத்தை உயர்த்தி இருக்கிறோம். நான் முன்பே சொன்னது போல், சாதனைகளுக்கும், வெற்றிகளுக்கும் முற்று என்பது கிடையாது.

கழகத்தின் வெற்றித்தேரோட்டம் தமிழகத்தின் எல்லை கடந்து இந்திய தேசத்தின் உச்சம் தொடுகிற பொற்காலத்தை எட்டுவதற்கு நாம் ஆயத்தமாவோம்! இந்திய அரசியலை தீர்மானிக்கும் ஈடு இணையில்லா இடத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இமயம் என உயர்த்திட இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்' என்பதற்கேற்ப உலகமே உயர்த்திப் போற்றுகின்ற நம் ஒப்பற்ற தலைவராம், பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மலாம், கழகம் கண்டெடுத்த கலியுக வள்ளலாம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நல்வழியில் நாளும் நடப்போம்!

இனிவரும் நாளெல்லாம் நமக்கென்றே உழைப்போம்! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 95வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி மற்றும் இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே கம்பீரமாய் நிற்கும் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி உவகையுடன் கொண்டாடிட வேண்டும் என்று என தருமைக் கழக உடன் பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அண்ணா நாமம் வாழ்க!புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!

இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலை 2000 கோடியில் ஐதராபாத்தில்.


இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக் கழகம், 2,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத்தில் அமைக்கப்படவுள்ளது.அரசு-தனியார் பங்களிப்புடன், இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலை கழகம் ஐதராபாத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ளது. யஷ் பிர்லா குரூப்புக்கும், ஆந்திர மாநில அரசுக்கும் இடையே, இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் இந்த பல்கலை கழகம் அமைக்கப்படவுள்ளது.இதுகுறித்து யஷ் பிர்லா குரூப் தலைவர் யஷ் பிர்லா கூறியதாவது: இந்தியாவில் உள்ள பெற்றோர், தங்கள் மகன் அல்லது மகள், இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்றும், மருத்துவம் படிக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட்டு தொடர்பான கல்வியை கற்பிக்க வைக்கின்றனர்.

இதனால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அவர்களால் சாதிக்க முடிகிறது. நம்மால் சாதிக்க முடியவில்லை. இந்த எண்ணத்தை மாற்றும் வகையிலும், விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்த பல்கலை கழகம் அமைக்கப்படவுள்ளது. அனைத்து விளையாட்டுக்களுக்கான பயிற்சிகளும், ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் அளவுக்கு, இந்த பல்கலைகலையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.விளையாட்டு பல்கலையை தொடர்ந்து, ஆயூர்வேத மருத்துவ வசதியுடைய கிராமத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும், எங்கள் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது

இதே நாள்...


  • தாய்லாந்து ஆசிரியர் தினம்
  •  இஸ்ரேல் கொடி நாள்
  •  கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது(2003)
  •  வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)
  •  பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்(1761)

மாட்டுப்பொங்கல்...


பசுவுக்கான நேரம்: சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு "கோதூளி' என்று பெயர். அதிகாலைப் பொழுதை ஜோதிட சாஸ்திரம், "கோதூளி லக்னம்' என்று பசுவின் பெயரால் குறிப்பிடுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை,மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, "பிரம்ம முகூர்த்தம்' என்றும் குறிப்பிடுவர். கோதூளி லக்னத்தில் கோயில்களில் விஸ்வரூபதரிசனம் நடத்தி சுவாமிக்கு முன் கோபூஜை நடத்துவர்.

ஒரு பிடி புல்லை போடுங்க! தர்மதேவதையின் வடிவமாகத் திகழும் பசுவைப் பாதுகாத்தால் உலகில் தர்மம் நிலைத்திருக்கும். தவம், தூய்மை, கருணை, சத்தியம் என்னும் நான்கும் நான்கு கால்களாக தர்மத்தை தாங்குகின்றன. கலியுகத்தில் கலியின் கொடுமை தீர கோபாலகிருஷ்ணரை வழிபட்டு பசுக்களைப் பாதுகாக்கவேண்டும். மகாபாரதத்தில், பீஷ்மர் தர்மத்தை உபதேசிக்கும்போது, கோசம்ரக்ஷணம் என்னும் பசுபாதுகாப்பு பற்றி விளக்குகிறார். பசுவைத் தானம் அளித்தால் பெரும் பாவம் கூட நீங்கும். ""எந்த நாட்டில் பசுக்கள் தங்களுக்கு இம்சை நேருமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த நாட்டில் பாவம் என்பதே இருக்காது. அந்நாடே ஒளியுடையதாய் பிரகாசிக்கும்,'' என்றுசியவன மகரிஷி கூறியுள்ளார். இதற்காக, பெரிய கோயில்களில் கோமடம் நிறுவி பசுக்களைப் பாதுகாத்தனர். ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தினக்கடமைகளில் ஒன்றாக, "கோகிராஸம்' என்பதைக் குறிப்பிடுகிறது. ஒருகைபிடி புல்லையாவது பசுவுக்கு கொடுப்பதே கோகிராஸம் எனப்படும்.

மாலை நேரப்பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம் உண்டு. கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்று விட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவர். பசுவின் கழுத்தில் மணியும், வேட்டியும் கட்டுவர். மாட்டுக் கொட்டிலின் முன் பொங்கலிட்டு, காளை, பசுவிற்குப் படையலிடுவர். பொங்கல் பொங்கும் போது, ""பட்டிபெருக பால் பானை பொங்க'' என்று சொல்லி குலவையிடுவர். அதன்பின்னர், பசுமாட்டை கோயிலுக்கும், காளைமாட்டை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.

வெள்ளை மனசு: நல்ல மனிதனைக் குறிப்பிடும்போது, "அவனுக்கு பாலைப் போல வெள்ளை மனசு' என்று குறிப்பிடுவர். குழந்தையின் சூதுவாது ஏதும் அறியாத தன்மையை, "பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தை' என்பர். பாலைக் காய்ச்சக் காய்ச்ச தன் சுவையைக் கூட்டுவது போல, நல்லவனுக்கு துன்பம் நேர்ந்தாலும் தன் உயர்ந்த குணத்தை ஒருபோதும் விடுவதில்லை என்று அவ்வையார் நல்லவரை பசும்பாலோடு ஒப்பிடுகிறார். நிலாவினைக் குறிப்பிடும்போது, "பால்நிலா' என்றே சொல்வர். கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் என்றாலே அது "பாலபிஷேகம்' மட்டும் தான். இவ்வாறு உயர்ந்த குணத்தின் பிரதிபலிப்பாக பசுவின் பால் விளங்குகிறது.

ஆயுசு வரை பால் தரும் கோமாதா: பசு பற்றி காஞ்சி பெரியவர் "அம்மா' என்று குரல்கொடுப்பது பசு. ஆனால், அந்தப் பசு நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அதுபோல, நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய் ஆகியவையும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. நம்முடைய ஆயுசின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய்பால் தருகிறாள் என்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே உத்தமமான தாய்க்கு ஈடாக, பசுவை, "கோமாதா' என்று சொல்கிறோம். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனகமாதா என்போம். அதே மாதிரி கோமாதாவும் இருக்கிறாள். பூமிக்குள் இருந்து காய்கறி, பழம், உலோகங்கள் தரும் தாயை "பூ மாதா' என்கிறோம். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும், அன்பே உருவமான துமான தாயன்பை, மாத்ருத்வம் என்னும் தாய் தத்துவத்தைக் கண்டு, நம்முடைய முன்னோர் கோமாதா என்றும், பூமாதா என்றும் சொன்னார்கள்.

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் பாகவதத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. மாட்டுப்பொங்கலான இன்று பாலகிருஷ்ணரை தியானித்து இதனைப் பாராயணம் செய்தால் நற்பலன் உண்டாகும்

* மேலான கடவுளே! அனைத்து உயிர்களின் உள்ளும் புறமும் வீற்றிருப்பவனே! மாயையில் இருந்து விடுவிப்பவனே! யாரும் அறியமுடியாத அதிசயமானவனே! அழிவற்றவனே! ஞானம் நிறைந்தவனே! பக்தியோகம் அறியாத நான் உம்மை வணங்குகிறேன்.

* வசுதேவரின் பிள்ளையே! தேவகியின் வயிற்றில் உதித்தவனே! நந்தகோபரின் குமாரனே! பசுக்களைப் பரிபாலனம் செய்தவனே! கிருஷ்ணனே! உம்மை பலமுறை வணங்குகிறேன்.

* நாபிக்கமலம் கொண்டவனே! தாமரை மாலை அணிந்தவனே! தாமரை மலரைப் போன்ற கண்களைக் கொண்டவனே! பத்மரேகை அமைந்த திருப்பாதங்களைக் கொண்டவனே! உம்மை சரணடைகின்றேன்.

* சிறையில் வாடிய தேவகியைக் காத்தவனே! அரக்குமாளிகையில் நெருப்பிட்டபோது பாண்டவர்களைக் காத்தவனே! திரவுபதியின் மானத்தைக் காத்த தயாபரா! ஜகத்குருவான கிருஷ்ணா! பிறவிச்சுழலில் இருந்து காத்தருள்வாயாக.

* பற்றற்ற ஞானியர் நெஞ்சில் குடிகொண்டவனே! முகுந்தனே! வசுதேவனே! கிருஷ்ணா! அடக்கம் கொண்ட நல்லவர்களால் மட்டும் அடையத் தக்கவனே! ஏழைகளையும், நல்லவர்களையும் சொத்தாக நினைப்பவனே! மோட்சத்தை அருள்பவனே! உம் திருவடியில் அடைக்கலம் புகுந்துவிட்டேன். காத்தருள்வாயாக.

பசு ஸ்லோகம் சொல்லுங்க! ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகவோ அல்லது பலம் இழந்தோ இருந்தால் பசுசாபம் இருக்கும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது. இதனால், தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருக்க நேரிடும். இதற்குப் பரிகாரமாக வெள்ளிக்கிழமையில் பசுவை வழிபடுவது சிறந்த பரிகாரம். காலையில் நீராடி பச்சைப்புல், அகத்திக்கீரை முதலியவற்றை எடுத்துக் கொண்டு பசுவை மூன்றுமுறை வலம் வந்தபடி இந்த பசு ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கொடிய பாவம் கூட இவ்வழிபாட்டின் மூலம் நீங்கும் என்று முனிவர்கள் கூறியுள்ளனர். இவ்வழிபாட்டை வெள்ளியன்று சுக்கிர ஓரையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.

ஸ்லோகம்:
ஸெளர பேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரைலோக்ய மாதர:!!

பொருள்: காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை அருள்பவளே! தூய்மையானவளே! புண்ணிய வடிவானவளே! மூவுலகத்திற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்தப் புல்லைப் பெற்றுக் கொள்வாயாக. இந்த ஸ்லோகத்தைச் சொல்லியபடி பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கவேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...