|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 October, 2011

இந்த வார ராசி பலன் (10-10-11 முதல் 16-10-11 வரை)


மேஷம்பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலத்தில் சில சலுகைகள் பெறக்கூடும். சிலருக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.


ரிஷபம்பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். வரவுக்கேற்ற செலவும் உண்டு. மனதிற்குப் பிடித்தவர்களை சந்தி்த்து மகிழக்கூடும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

மிதுனம்பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். மனதில் புது தெம்பு பிறக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் பணிகளை உற்சாகமாக செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு எதிராபாராத பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும்.


கடகம்பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனை தீரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். பணி நிமித்தமாக வெளியூருக்கு செல்ல நேரலாம்.

சிம்மம்பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட நடக்கும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களிடம் எந்த ரகசியத்தையும் கூற வேண்டாம்.


கன்னிபொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் நலம் மேம்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

துலாம்பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. செலவுகள் அதிகமாகலாம். பெண்களுக்கு: கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. சேமிப்பு செலவாகும். சமைக்கும்போது கவனமாக இருக்கவும். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பளு அதகரிக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.


விருச்சிகம்பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளக்கூடும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வீண் செலவுகளை குறைக்கவும். வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

தனுசுபொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். வருமானம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் மேம்படும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். குழந்தைகள் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.


மகரம்பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். மனம் குதூகலமாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்களைத் தேடி வரும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். சகோதரி உறவுகளில் நடக்கும் மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்துவிடுவீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சக ஊழியர்களிடம் எந்த ரகசியத்தையும் கூற வேண்டாம். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். 

கும்பம்பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு சீராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமுதாயத்தில் மதி்ப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

மீனம்:  பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடன்கள் வசூலாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குல தெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடலாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

அதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்!


சிறுகீரை: சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பாஷானத்தின் வீறு தணிந்து அதனால் வந்த வியாதியும் குணமடையும். 

முளைக்கீரை; முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு,வயிற்றுப்புண் சரியாகும். வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும். மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும். இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது. உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

சாணாக்கீரை: இந்தக்கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மகோதரம் என்னும் வியாதியை இது பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த புண்களைக் கூட அகற்றிவிடும்.நெஞ்சில் கபம் கட்டியிருக்கும் போது இந்தக்கீரையை சமைத்து சாப்பிட்டால் கபம் உடைந்து வெளியேறிவிடும்.

சிறுபசலைக்கீரை: மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. இதைச்சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உடல்சூட்டைத்தணிக்கும். குளிர்ச்சியைத் தரக்கூடியது. கபத்தை உண்டுபண்ணும். சிறுநீர் தொடர்புடைய அனைத்து வியாதிகளையும் குணமாக்கும். இதில் வைட்டமின் பி உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது.

அரைக்கீரை; இதை சாப்பிட்டுவர பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். இரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.

புளியரைக்கீரை: இதை உட்கொண்டால் மூலம் தொடர்புடைய வியாதிகள் குணமடையும், வாத நோயை தணிக்கும். பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும்.

மிளகு தக்காளி கீரை: உடலில் வீக்கம் இருந்தால் அதை வாடச்செய்யும்.வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி , சிரங்குகளைக் குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை குணமாகும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.

இலட்சக்கெட்டை கீரை: இந்தக்கீரையை சாப்பிட்டு வர வாதம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும், வாயு தொடர்புடைய நோய்கள் தீரும். இவை சாம்பிள்தான். காய்கறி கடைகளில் கிடைக்கும் அனைத்து வகை கீரைகளும் சத்து நிறைந்தவைதான். எந்த சீசனில் என்ன கீரை கிடைக்கிறதோ அவற்றை வாங்கி உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம்.

ராம்சரணுக்கு வரதட்சணையாக ரூ 120 கோடி, ஒரு குட்டிவிமானம்!


தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணுக்கு வரதட்சணையாக மட்டும் ரூ 120 கோடியும் ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட குட்டி விமானமும் வழங்கப்பட உள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவர் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் தமிழகத்தில்தான்.

1980-ல் தஞ்சாவூரில் பிறந்தார். ஊட்டி கான்வென்ட் மற்றும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தார். நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர். 

2007-ல் சிறுத்த என்ற தெலுங்கு படம் மூலம் ராம்சரண் கதாநாயகனாக அறிமுகமானார். 2009-ல் அவர் நடித்த மகதீரா படம் ரிலீசாகி ஆந்திராவில் வசூலை அள்ளியது. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப் பட்டது.

இப்போது ரச்சா என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மணமகளும் பார்த்துவிட்டனர். மணமகள் பெயர் உபாசனா கேமினேனி. அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி இவர். அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், பி பாஸிடிவ் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் உள்ளார். இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ராம்சரணுக்கு ரூ.120 கோடி வரதட்சணை அளிக்கப்பட உள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவியுள்ளது. திருமண பரிசாக ஜெர்மனியில் தயாரான நவீன ரக குட்டி விமானம் ஒன்று வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதே நாள்...


  • பிஜி குடியரசு தினம்(1970)
  •  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
  •  இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)
  •  தமிழறிஞர் மு.வரதராசன் இறந்த தினம்(1974)
  •  தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது(1991)
  • கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ்!



     சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி "சூப்பராக' தட்டிச் சென்றது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியாவில் மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்றிரவு சென்னையில் நடந்த பைனலில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. "டாஸ்' வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்பஜன் "பேட்டிங்' தேர்வு செய்தார்.



    வெட்டோரி ஜாலம்: மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. அவசரப்பட்ட பிலிஜார்டு(3) ரன் அவுட்டானார். நானஸ் "வேகத்தில்' கன்வர்(13) காலியானார். பின் பிராங்க்ளின், அம்பதி ராயுடு சேர்ந்து பொறுப்பாக ஆடினர். அரவிந்த் ஓவரில் பிராங்க்ளின் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பட்கல் பந்தில் ராயுடு(22) வெளியேறினார். தில்ஷன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த யாதவ்(24), தேவையில்லாமல் ரன் அவுட்டானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிராங்க்ளினும்(41) ரன் அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது. அடுத்து வந்தவர்கள் ஏமாற்ற, விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. போட்டியின் 16வது ஓவரை வீசிய வெட்டோரி இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் "அதிரடி' போலார்டை(2) அவுட்டாக்கினார். 3வது பந்தில் ஹர்பஜனை(0) பெவிலியனுக்கு அனுப்பினார்.



    மலிங்கா அதிரடி: கடைசி கட்டத்தில் வெட்டோரி, அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய மலிங்கா நம்பிக்கை தந்தார். ராஜூ பட்கல் வீசிய போட்டியின் 19வது ஓவரில் சதிஷ்(9), மலிங்கா(16) அவுட்டாக, ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. மும்பை அணி 20 ஓவரில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


    விக்கெட் மடமட: போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தார். அகமது ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார். இவர், மலிங்கா "வேகத்தில்' 27 ரன்களுக்கு அவுட்டானார். ஹர்பஜன் சுழலில் "ஆபத்தான' கெய்ல்(5) வெளியேற, மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இதற்கு பின் வந்தவர்கள் சேப்பாக்கம் ஆடுகளத்தின் மந்தமான தன்மையை உணர்ந்து விளையாட தவறினர். அதிரடியாக ஆட முற்பட்டு, விக்கெட்டுகளை வீணாக பறிகொடுத்தனர். அரியானாவை சேர்ந்த சாகல் "சுழலில்' அகர்வால்(14) சிக்கினார். பின் ஹர்பஜன் பந்தில் விராத் கோஹ்லி(11) அவுட்டாக, பெங்களூரு அணியின் நம்பிக்கை தகர்ந்தது. தொடர்ந்து அசத்திய சாகல் பந்தில் அருண் கார்த்திக் "டக்' அவுட்டானார். போலார்டு பந்தில் முகமது கைப்(3) வீழ்ந்தார். போராடிய சவுரப் திவாரி(17), அகமது பந்தில் அவுட்டானார். "டெயிலெண்டர்களும்' சொதப்ப, பெங்களூரு அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் தேடியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை மலிங்கா கைப்பற்றினார்.


    ரூ. 12 கோடி பரிசு: சாம்பியன்ஸ் லீக் தொடரில், கோப்பை வென்ற "ரிலையன்ஸ்' முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 12 கோடி பரிசாக தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற தொழில் அதிபர் மல்லையாவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ரூ. 6 கோடி பரிசாக பெற்றது.


    சபாஷ் ஹர்பஜன்: சச்சின் இல்லாத நிலையில் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்திய ஹர்பஜன் மும்பை அணிக்கு கோப்பை வென்று தந்தார். பைனலில் சுழல் ஜாலம் காட்டிய இவர், 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.

    மாமியார் கொடுமை மருமகன் தற்கொலை!


    மாமனார், மாமியார் கொடுமை தாங்க முடியாத மருமகன் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு மாமனார், மாமியார் தான் காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். 

    சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (25). நெசவு தொழிலாளி. கடந்த ஆண்டு அவர் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் மீனாட்சியை மணந்தார். கடந்த வாரம் மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க குணசேகரன், தனது தாயுடன் சென்னையில் உள்ள மீனாட்சி வீட்டுக்கு வந்தார். அங்கு மீனாட்சியின் பெற்றோர் அவரை உதாசினப்படுத்தியுள்ளனர். இதனால் குணசேகரன் மனமுடைந்து வீடு திரும்பினார். 

    இந்நிலையில் அவர் கடந்த 6-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குணசேகரனின் வீட்டுக்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை செய்தபோது குணசேகரன் தன் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. 

    13 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, 
    நான் எட்டாம் வகுப்பு வரை படித்து இருக்கிறேன். தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் டி.டி.பி. கோர்ஸ் படித்து முடித்து இருக்கிறேன். இதை தெரிந்துதான் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணம் நடந்த நாளில் இருந்தே என்னிடம், உனக்கு அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்து விட்டோம். அதிகமாய் படித்து பணக்கார ஆண் மகனாய் பார்த்து எனது மகளை திருமணம் செய்து இருக்க வேண்டும் என்று கூறி எனது மாமியார் என் மனதை காயப்படுத்தினார். 

    ஒருநாள் குடும்பத்தகராறு காரணமாக எனது மனைவியை குமாரபாளையத்தில் உள்ள அவரது அக்காள் வாணி வீட்டில் விட்டுவிட்டனர். இதை அறிந்து என் நண்பர் மூலம் எனது மாமனாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டேன். அதற்கு அவர், நான் நினைத்தால் 5 நிமிடத்தில் வரதட்சணை கொடுமை என்ற பெயரில் உன்னையும், உன் குடும்பத்தினரையும் உள்ளே தள்ளி விடுவேன். நீ ஒருத்தியை வைப்பாட்டியாக வைத்து இருக்கிறாய் என்று கூறி வெளியே வரமுடியாதபடி செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டினார். எனது மனைவியை சந்தித்து பேசியபோது, நீ எனக்கு தேவையில்லை. எனது தாய், தந்தையர் தான் எனக்கு முக்கியம் என்று கூறிவிட்டாள். பின்னர் கர்ப்பிணியான என் மனைவியை சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நானும் அங்கு சென்று 5 நாட்கள் தங்கி இருந்தேன். 

    அப்போது என் மனைவியின் எதிரிலேயே என்னை ஜாடை, மாடையாய் திட்டினார். மேலும் என் மனைவி இல்லாதபோது, நீ ஊருக்கு போ. இங்கே இருக்க வேண்டாம். குழந்தை பிறந்தால் நாங்களே சொல்கிறோம். நீ இங்கே இருந்தால் என் மகளின் மனதை மாற்றி உன்னோடு அழைத்து சென்றுவிடுவாய் என்று என் மாமியார் கூறினார். நானும் ஊருக்கு வந்துவிட்டேன். 

    சென்ற 4ம் தேதி காலை 8.11 மணிக்கு என் மனைவி பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். எனக்கு மதியம் 3.30 மணிக்கு தகவல் தந்தனர். நானும், என் அம்மாவும் அன்று இரவே சென்னைக்கு சென்றோம். என் குழந்தையை பார்த்து நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். இந்த சந்தோஷம் சில நிமிட நேரம்தான். என்னிடம் தனியாக பேசிய மீனாவின் அம்மா, குழந்தையை பார்த்துவிட்டு உடனே நீ செல்லவேண்டும். என் பெண்ணிடம் நீ எதுவும் பேசக்கூடாது. உன் குழந்தை எங்கள் பெண்ணுக்கு தேவையில்லை. அதை அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடுகிறோம் என்றார். மேலும் என் மனைவிக்கும், எனக்கும் விவாகரத்து வாங்கிவிட்டு அவளுக்கு வேறு திருமணம் செய்ய போவதாக மிரட்டினார். நான் என்ன செய்வேன். 

    ஐயா, நான் ஒரு ஏழை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவியுடன் வாழ மிகுந்த ஆசை. ஆனால் அவளது தாய், தந்தையர் எங்களை வாழவிட மாட்டேன் என்கிறார்கள். என் மனைவியும் என்னை புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய இந்த தற்கொலைக்கு முழுக்க, முழுக்க எனது மாமனாரும், மாமியாரும்தான் காரணம் என்று அவர் அதில் கூறியிருந்தார்.

    மருத்துவமனையை வாங்க பேரம் பேசும் நித்தியானந்தா!

    திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார்.   இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.
    இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது.  வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலை பேசிவருவதாக கூறப்படுகிறது.
    அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது.   இதிலிருந்து தப்பினால் போதும் என அத்திட்டத்தை அப்போதுகைவிட்டிருந்தார். தற்போது அவர் மருத்துவமனையை வாங்க நேற்றும் இன்றும் திருவண்ணாமலையில் தங்கி நேரிடையாக பேரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.

    தமிழை கொச்சை படுத்திய ஷாருக்கான் திருத்திய பெண் நிருபர்!

    ஷாருக்கான் நடித்து பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தி படம் ரா-1. இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஷாருக்கான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய தில்சே இந்தி படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்திலும் அவர் நடித்திருந்தார். அஜீத்துடன் அசோகா என்ற படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரா-1 படம் தீபாவளி அன்று வெளியாகிறதுஇந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஷாருக்கான், 

    ''உலகத் தரம் வாய்ந்த சினிமா கலைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இதை நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். உலகத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அவரோடு நடிக்க இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தமிழில் நேரடியான படங்கள் நடிக்க ஆசை தான். ஆனால், என்னால் தமிழ் பேசி நடிக்க முடியாது. அப்படி நடித்தால், காது கேளாத வாய் பேச முடியாதவனாகத்தான் நடிக்க முடியும்'' என்றார். (இதைச் சொல்லும் போது, ஆங்கிலத்தில் deaf and dumb என்ற வார்த்தைகளை உச்சரித்தார்).

    அப்போது விழாவுக்கு வந்த பெண்மணி ஒருவர் எழுந்து, ஷாருக்கானை பார்த்து ஆவேசமாக பேசத் தொடங்கினார். ''இந்தியாவின் மிகப்பெரிய நடிகர். நீங்களே இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பது, எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. நீங்கள் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று தனது பேச்சை தொடர்ந்தார். திடீரென்று குறுக்கிட்ட ஷாருக்கான், ''அதற்கு பதிலாக எந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால், அதை நான் திருத்திக்கொள்கிறேன்'' என்றார். 

    அப்போது அந்த பெண்மணி, Mute என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்றதும், அதனை ஷாருக்கான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சென்னை வந்து இதுவரை ரஜினியை சந்திக்கவில்லை. சந்திக்கப்போகிறேன் என்றும் கூறினார். விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மேடையில் ரா-1 படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஷாருக்கான் நடனம் ஆடி, வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

    பொதுநல வழக்கு எதிரொலி சென்னை ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

    டெல்லி ஹைகோர்ட் வளாகத்திலேயே கடந்த மாதம் 7ந் தேதி குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குண்டுவெடிப்புக்கு பொருப்பேற்றுக்கொண்ட தீவிரவாத அமைப்போ, தீவிரவாதி அபசல் குருவை விடுதலை செய்யவில்லை என்றால் இன்னும் பலநீதிமன்றங்களில் குண்டுவெடித்து சிதறும் என்று மிரட்டியுள்ளது. இதனால், நாடுமுழுக்க உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்பது வழக்கறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்த சட்டக்கல்லூரி பேராசிரியரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் பல்வேறு அதிர்ச்சித் தகவலை சுட்டிக்காட்டுகிறார் நம்மிடம். “உயர்நீதிமன்ற பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்று அரசுமேல், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரே வழக்கு தொடர்ந்தார்... பிப்ரவரி 2007ல். அப்போது, தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதியரசர் சந்துருவும் தமிழக தலைமை செயாளருக்கும், காவல்துறை தலைவருக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்கள். 

    அந்த உத்தரவில் நீதிமன்ற பாதுகாப்புக்கு 254 காவலர்களை கட்டாயப்பணியில் 24 மணிநேரமும் ஈடுபடுத்தவேண்டும். அவர்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதியின்றி வேறு எந்த பணிக்கும் அனுப்பக்கூடாது. காவலர்கள் தங்குவதற்காக உயர்நீதிமன்றமே தன்னுடைய செலவில் தங்கும் இடவசதிகளை  ஏற்படுத்தித்தரும்’ என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்ப்பை  மாநில அரசு  காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்த உத்தரவு வந்த சில நாட்களிலேயே உத்திரபிரதேசம் லக்னோவில் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பரபரப்பானது. அதன் விளைவாக மத்திய அரசு... அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், அனைத்து நீதிமன்றங்களின் பாதுகப்பையும் உடனடியாக பலப்படுத்தவேண்டும் என்று ஒரு வழிகாட்டுதலை உத்தரவிட்டிருந்தது. 

    அதற்குப்பிறகுதான் இப்படியொரு பாதுகாப்பை உருவாக்கியது தமிழ அரசு. அதாவது... ஏழு கேட்டுகளின் வழியாக உள்ளே நுழையும்போது... ஃப்ரேம் மெட்டல் டிடெக்டர் (வெடிகுண்டு பரிசோதனை கருவி)  என வைத்துக் கொண்டு... போலீசார்  நன்றாக பரிசோதனை செய்துவிட்டுத்தான் உள்ளே அனுப்புவார்கள். ஆயுதம் தாங்கிய அதிரடிப்படை போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வெளி ஆட்கள் உள்ளே யாரைப் பார்க்கப் போகிறார்களோ அவர்களிடம் கடிதம் பெற்றிருக்கவேண்டும். இல்லையென்றால்  அவரே வந்து அழைத்துச் செல்லவேண்டும். அதுவே வழக்கறிஞர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், வழக்கறிஞர்களின் அங்கீகரிக்கப்பட்ட கிளர்க்குகள் என்றால் பதிவாளரால் கொடுக்கப்பட்டுள்ள ஐ.டி.கார்டை காண்பித்தால் பரிசோதனை இல்லாமல் உள்ளே சென்றுவிடலாம். உள்ளே, நுழையும் டூவீலர்கள் ஃபோர்வீலர்களின் நம்பர்களை குறித்துவைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல், ஆட்டோக்கள் வந்தால் வழக்கறிஞர்களை உள்ளே இறக்கிவிட்டுவிட்டு உடனடியாக கிளம்பிவிடவேண்டும். அதன் எண்களையும் குறித்துக் கொள்ளவேண்டும்.

    இதையெல்லாம் 2009 ஜனவரியிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடைபிடித்துக் கொண்டுதான் வந்தது காவல்துறை.  ஆனால், மறுமாதமே போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்குமிடையே ஏற்பட்ட கடும்மோதலுக்கு பிறகு மாநில அரசே இந்த பாதுகாப்புகளை நிறுத்திவிட்டது. ஆனால், இந்த பாதுகாப்புகளை மீண்டும் மாநில அரசு  அமல்படுத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 2009 அக்டோபர் 29 ந்தேதி.. ஆனால்,  ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் மாநில அரசோ, உள்துரை அமைச்சகமோ நீதிமன்றத் தீர்ப்பை கண்டுகொள்ளவே இல்லை. 

    இதனால் உயர்நீதிமன்றத்தின் நிலைமை எப்படி மாறிப்போனது தெரியுமா? என்றவர் சொல்லும்போதே பரிதாபமாக இருக்கிறது. “நீதிமன்ற பாதுகாப்பில் வெறும் 60 போலீஸார்தான். இதில், 40க்கு மேற்பட்டவர்கள் ஆயுதங்களே இல்லாத பெண் காவலர்களே. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கு அதிகமானோர் வந்துபோகிறார்கள். இதற்குள் 74 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அப்பேர்ப்பட்ட நீதிமன்றத்தில் யார் வேணும்னாலும் உள்ளே வரலாம்...போகலாம் என்கிற அவல நிலை உருவானது. ஹைகோர்ட்டுக்கு வெளியே விற்குற வெள்ளைச்சட்டை கருப்புப் பேண்டை மாட்டிக்கிட்டு உள்ளே வந்தா வழக்கறிஞர்னு நினைச்சுக்கிட்டு(?).. போலீஸார் எந்த கேள்வியும் கேட்பதில்லை.  உள்ளே நுழையும்போது வெடிகுண்டு சம்பந்தமான எந்த பரிசோதனைகள் மட்டுமல்ல சின்ன செக்கப் கூட செய்வதில்லை. ஆட்டோக்கள் உள்ளே வந்து நிறுத்தி ஆட்டோ ஸ்டேண்டுகளே உருவாகிடுச்சு.  டெல்லியில் குண்டுவைத்த தீவிரவாதிகளை அடையாளம் காணமுடியாமல் போலிஸார் மண்டையை பிய்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணமே நீதிமன்ற வளாகத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாததுதான். இன்னைக்கு, டீ கடைகளில் கூட ரகசிய சி.சி.டி.வி. கேமராக்கள் பொடுத்தப்பட்டிருக்கு. ஆனா, இவ்ளோ பெரிய நீதிமன்றத்தில் எந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் கிடையாது.  ஒரு ரூபாய்க்கு விற்குற அட்வகேட் ஸ்டிக்கரை வாங்கி கார்ல ஒட்டிக்கிட்டு உள்ளே நுழையுற ரவுடி கும்பல்கள்...நீதிமன்ற வளாகங்களிலேயே கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதும்... வழக்கை வாபஸ் பெறவைக்க வன்முறைகளில் ஈடுபடுவதும் நடக்குது. 

    சில வாரங்களுக்கு முன்பு ஒருத்தன் வழக்கறிஞர் மாதிரி உள்ள நுழைஞ்சு நீதிமன்ற ஊழியர்களை கத்தியை காட்டி மிறட்டிய சம்பவம் நடந்துருக்கு. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் டெல்லியில் குண்டுவெடித்த மறுநாள் 8ந் தேதியே...  உயர்நீதிமன்றத்தில் உடனடியாக பாதுகாப்புகளை பலப்படுத்தவேண்டும் என்று  கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தேன். இதன் பலனாக சி.சி.டி.வி. கேமரா, பேக்கேஜ் ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்து பதுகாப்புகளையும் அமல்படுத்தக்கோரி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்கிறார் அதிரடியாக. இதன் தொடர்ச்சியாக கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், இணைக் கமிஷனர் ஜெயராமன், துணைக் கமிஷனர்கள் அன்பு, சந்தோஷ் குமார், உதவிக் கமிஷனர்கள் முரளி, நரசிம்மவர்மன், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில், கடந்த 9ஆம் தேதி 400 போலீசார் அதிரடியாக பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினார்கள். 

    அதற்குப் பிறகு துணை கமிஷனர் அன்பு நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில், ஐகோர்ட்டில் 6 மெயின் கேட்டுகளுக்கும் செக் போஸ்ட்கள் அமைத்து, அங்கு மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் குடும்ப நல கோர்ட்டுக்கு பின்புறம் உள்ள மைதானத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். சட்டக் கல்லூரி போலீஸ் நிலையம் அருகே உள்ள வாசல் வழியாக, உள்ளே வரவேண்டும். பார்வையாளர்களை சோதித்து அவர்களுக்கு உரிய அடையாள அட்டையை வழங்க சோதனை மையம் ஒன்று புதிதாக அமைக்கப்பட உள்ளது. இங்கு மூன்று ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.வக்கீல்கள் செல்வதற்கு, வருவதற்கும் தனி வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளது. வக்கீல்களை பார்க்க வரும் பார்வையாளர்கள், அவர்கள் பார்க்க வரும் வக்கீல்களிடம் இருந்து உரிய அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும். இல்லையென்றால் அனுமதி கிடையாது. 200 பெண் போலீசார் உள்பட 430 போலீசார் பாதுகாப்பு பணியில் மூன்று ஷிப்ட்டாக ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து கேட்டுகளிலும் பாதுகாப்பு பணிக்காக 60 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பாதுகாப்பு இருக்கும். வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கும், மோப்ப சக்தி திறன் வாய்ந்த இரண்டு மோப்ப நாய்கள் கொண்ட மோப்ப நாய் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஐகோர்ட் வளாகம் முழுவதும் சுற்றி வந்து சோதனையில் ஈடுபடுத்தப்படும் என்று கூறினார்.

    மேலும், ஐகோர்ட் பாதுகாப்புக்கு அனைத்து கேட்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டதும், கேமராக்கள் பொருத்தப்படும். சென்னை கோட்டையில் உள்ள பாதுகாப்பு போலவே, சென்னை ஐகோர்ட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஐகோர்ட் பாதுகாப்புக்கு தலைமை தாங்க விரைவில் ஒரு துணைக் கமிஷனர் தனியாக நியமிக்கப்படுவார். அவருக்கு கீழ் ஒரு கூடுதல் துணைக் கமிஷனரும், இரண்டு உதவிக் கமிஷனர்களும், 7 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த பொதுநல வழக்குக்கு கிடைத்திருக்கும் ஆரம்பகட்ட வெற்றி!


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...