|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 August, 2011

இந்திய பொன்னுதாங்கோ!


மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?

மாங்கல்ய தந்துனா என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. தந்து என்றால் மஞ்சள் கயிறு என்று பொருள். திருமாங்கல்ய சரடு என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை விதந்துஎன்று குறிப்பிடுவார்கள். அதாவது மாங்கல்ய கயிறு இல்லாதவள் என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.

புது விதமான இந்தியன் மெஹந்தி டிசைன்!










பிறக்கும் குழந்தைக்கும், எரிக்கும் சடலத்திற்கும் லஞ்சம் இந்தியா ஒளிர்கிறது?

எங்கும் ஊழல், எதிலும் ஊழல்,' என, இந்தியராய் நாம் சந்தித்த சங்கடங்கள் ஏராளம். இழந்தால் தான் இந்தியாவில் எதையும் பெற முடியும் என்ற கருத்தை வேரறுக்க தொடங்கிய அமைதி யுத்தம் தான் ஹசாரே. நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள், நம்மை பணையம் வைத்து, சொத்து குவிப்பதற்கு கடிவாளம் போட, சரியான கயிறு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் வளர்ந்து வரும் நாடாக நாம் இருந்தோமே தவிர, வளர்ந்த நாடாக மாறவில்லை. ஊழலும், லஞ்சமும் வளர்ச்சியின் தலையை தட்டின. காக்க வேண்டியவர் கடமை தவறுவதும், கேட்பவர் கேலிகூத்தாவதும் இனி தொடரக்கூடாது. பிறக்கும் குழந்தைக்கும், எரிக்கும் சடலத்திற்கும் லஞ்சம் வாங்குது தான் இன்றைய லட்சணம். இந்நிலை மாற வேண்டும் என்பதற்கு தான், ஊழல் எதிர்ப்பு அலை ஆர்ப்பரித்து அடிக்கிறது. டில்லியில் தொடங்கிய போராட்டம், கன்னியாகுமரி வரை ஒலிக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியனின் உரத்த குரலாக மாறியுள்ள ஜன் லோக்பால் அமலுக்கு, மதுரையிலிருந்து கிளம்பிய தொழிலதிபர்களின் ஆதரவுக்குரல்கள்:

சோமசுந்தரம்(மதுரை பேக்கேஜிங் பிரைவேட் லிட்., உரிமையாளர்): அரசியல் வாழ்க்கையில் தூய்மை வர, ஹசாரே போராட்டம் மட்டுமே தீர்வு. முழுமையான லோக்பால் மசோதா நிறைவேறினால், நாட்டில் அரசியல் ஒழுக்கம் வரும். நேர்மையான தேர்தல் நடக்கும். இளைஞர்கள் அரசியலுக்கு வருவார்கள். சிறந்த சேவையாளர்கள் கிடைப்பர். வீட்டுக்கும், நாட்டுக்கும் ஆரோக்கியம் தரும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

வேல் சங்கர்(எஸ்.பி.எஸ்., கடலைமாவு உற்பத்தியாளர், மதுரை):தடம் மாறிச்சென்ற இந்தியாவின் பாதையை முறைப்படுத்த ஒருவர் போராடுகிறார். கோடிக்கணக்கானோர் ஆதரிக்கின்றனர். விமர்சிப்போருக்கு, பலன் இப்போது தெரியாது. வருங்கால இந்தியா வளமுடன் வாழ, "ஜன் லோக்பால்' சரியான தீர்வு. வளர்ந்த நாடாக இந்தியா மாற, இதுவே நல்ல தருணம்.

எம்.வாசுதேவன் (ஈஸ்வரி ஸ்டோர்ஸ் உரிமையாளர், திண்டுக்கல்): இந்தியாவின் ஊழல் நோய்க்கு, ஹசாரே போராட்டம் தக்க மருந்து. நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு நன்மை செய்யாமல், சொத்து சேர்க்கின்றனர். ஹசாரே லோக்பால் இதற்கு கடிவாளமாக இருக்கும். லஞ்சம், ஊழலில் இருந்து விடுபடுவதே உண்மையான சுதந்திரம்.

என்.ராஜேந்திரன்(பிரிஸ்டினோ மினரல் வாட்டர் நிறுவன உரிமையாளர்,தேனி): சுயநலம் கருதி அரசியல் வாதிகள் மறைத்த, "லோக்பால்' சட்டம், அன்னாவால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியா அரசியல் அமைப்புச்சட்டத்தில் இடம்பெற்றதாகும். இதை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே நாடு வளர்ச்சியடையும்.

கண்ணப்பன்(பாரத் அக்ரோ உரிமையாளர், பரமக்குடி): ஊழல் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்துவதை எந்த குடிமகனும் எதிர்க்க மாட்டான். ஏதோ ஒருவகையில் அனைவருக்கும் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது.

எம்.எம். குணசேகரன் (அண்ணாமலையார் டிரேடர்ஸ் உரிமையாளர், காரைக்குடி): நாட்டின் நலனுக்கான உண்ணாவிரதத்தை, ஒவ்வொரு குடிமகனும் ஆதரிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. மக்களுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்ற, அரசியல் வாதிகள் தயங்கவேண்டியதும் இல்லை.

சசி(வனிதா பயர் ஒர்க்ஸ் உரிமையாளர், சிவகாசி): ஒட்டுமொத்த இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் நபராக அன்னா ஹசாரே மாறியுள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் தொழில் நடத்த முடியும் என்ற கட்டாயம் வந்துவிட்டது. இதற்கு இந்த போராட்டம் முற்றுப்புள்ளி வைக்கும்.

இதே நாள்...


  • சமூக சேவகி அன்னை தெரசா பிறந்த தினம்(1910)
  •  தமிழறிஞர் திரு.வி.கல்யாணசுந்தரனார் பிறந்த தினம்(1883)
  •  அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)
  •  தந்தி மூலம் முதல் செய்தி அனுப்பப்பட்டது(1858)
  • எலும்பு முறிவை குணமாக்கும் குங்கிலிய பிசின்!

    குங்கிலியம் என்பது மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரம். இது தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது இந்தியாவின் கிழக்குப்பகுதி நேபாளம் ஆகிய இடங்களில் மிதமாக அல்லது மெதுவாக வளரும் மரம். இமயமலைப்பகுதிகளிலும், பஞ்சாப், பீகார், மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளும் குங்கிலியம் மரம் அதிகமாக காணப்படுகிறது.

    வட மாநிலங்களில், தேக்கு மரத்துக்கு இணையான சால் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. சால் மரத்தின் மற்றொரு வகை ஜலரி மரம். சால் மரங்கள் அதிக உயரம் வளரக் கூடியவை. ஜலரி மரங்கள் மூன்று மீட்டர் வளரும் தன்மை கொண்டவை.ஜலரி மரங்கள், வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவராத்திரியில் மட்டும் அபூர்வமாக பூ பூக்கிறது. சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.மலை கிராம மக்கள், ஜலரி மர பூக்களை சிவனுக்கு மாலையாக படைக்கின்றனர். தெய்வத் தன்மை கொண்டதாக கருதப்படுவதால், வீட்டு உபயோகத்துக்கும், விறகாகவும் பயன்படுத்துவதில்லை.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
    ஃபியூரனோன்,ஹோப்பிபால் பீனால், ஃபர்ஃபியுரால்,ஹோமோகடிக்காலின் மோனோ & டை மெத்தில் எஸ்டர், பென்ட்டோளை, லிக்னின்,டான்னின் ஆகிய மருந்துப்பொருட்கள் உள்ளன.

    பெரும்பாடு மேகம் போம் பேரா உடலில்
    அரும்பிய புண் ஆறும் இவையல்லால் _ துரும்பாம்
    எலும்புருக்கி புண் சீழும் ஏகும் உலகில்
    சலம் பருகும் குங்கிலியத்தால்.”

    என்று குங்கிலியத்தின் பயன் பற்றி பழம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    வயிற்றுப்போக்கு கட்டுப்படும்: இந்த மரத்தின் தண்டுப்பட்டை மருத்துவ குணம் கொண்டது. தண்டில் இருந்து கிடைக்கும் பிசின் துவர்ப்புள்ளது. வயிற்றுப் போக்கையும் சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.

    இளநீரில் காய்ச்சி வடித்த குங்கிலிய பஸ்பத்தை சாப்பிட வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, சிறுநீர் நாள ரணம் போன்றவை குணமாகும். குங்கிலிய வெண்ணெயை கொட்டைபாக்களவு வீதம் தினம் இருவேளையாக அருந்திவர வெள்ளை, வெட்டை, நீர்சுருக்கு, எரிச்சல், பிரமேகம் முதலியன குணமாகும். எலும்புறுக்கி நோயை கட்டுப்படுத்தும்.

    நறுமணம் தரும் குங்கிலியம்: குங்கிலியம் பிசினில் இருந்து மூலிகை மருந்துகள், வாசனை திரவியம், கிருமி நாசினி தயாரிக்கப்படுகின்றன. மரத்தின் பிசின் துவர்ப்பி, சிறுநீர் பெருக்கி, ஊக்கமளிக்கும், கப நிவாரணி. முறிந்த எலும்பை ஒட்ட வைக்கும். விந்துவை வளர்த்தல், கபம், வாதம், நீரிழிவு நோய்களுக்கு நிவாரணம் தருகிறது. கொழுப்பை குறைக்கிறது. ரத்த மூலத்தை குணப்படுத்தும்.

    தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் குங்கிலியம் ஜலரி மரங்கள் காணப்பட்டாலும், தளி வனப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.ஜலரி மரங்கள் இருக்கும் இடத்தில் மூன்று கி.மீ., சுற்று வட்டாரத்தில் நறுமணம் வீசுகிறது. இந்த மணத்தை நுகர, பாம்புகள் அதிகளவில் படையெடுக்கின்றன.

    இதயநோயை தடுக்கும் ஓமேகா எண்ணெய்!

    பாஸ்ட்புட், அளவுக்கு அதிகமான நொறுக்குத் தீனி, என ஆரோக்கியமற்ற உணவுகளை இன்றைய இளைதலைமுறையினர் உட்கொள்கின்றனர். இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்புகள் தேங்கி சிறு வயதிலேயே உடல் பருமன், இதயநோய் உள்ளிட்ட பல நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். நோயில் இருந்து உடலை பாதுகாக்க அளவிற்கு அதிகமான கொழுப்பு சத்து உடலில் சேருவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கொழுப்புச் சத்துக்கள் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. ஒரு கிராம் கொழுப்புச் சத்து நம் உடலுக்கு 9 கிராம் கலோரியை தருகிறது. இது கிட்டத்தட்ட, மாவுச்சத்து மற்றும் புரதம் அளிக்கும் கலோரி சக்தியை விட இருமடங்கு அதிகம். ஒரு கிராம் புரதம் (அ) மாவுச்சத்து தருவது 4 கலோரிகள் தான்.

    கொழுப்புச் சத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட நாட்களாகவே உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து, ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்கி இதயத்தை தாக்கும் என்பது தற்போது நன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவர கொழுப்புகளை விட விலங்கு கொழுப்புகள் ஆபத்தானது என்பது உண்மை. ஆனால் மீன்களிலிருந்து கிடைக்கும் ஓமேகா - 3 எண்ணை கொழுப்பு உடலுக்கு நன்மை தரக்கூடியது.

    கடலுணவுகளில் காணப்படும் ஒமேகா – 3 என்ற எண்ணை ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்த்து, ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. பல வழிகளில் இதயத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஒமேகா எண்ணெய் வகைகள் ; ஒமேகா எண்ணைகளான ஒமேகா – 3, ஒமேகா – 6,ஒமேகா – 9 கொழுப்பு அமிலங்கள் நம் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. உடல் நலத்தை பாதுகாக்க ஒமேகா – 3 மற்றும் ஒமேகா – 6 கொழுப்பு அமிங்களை கொண்ட எண்ணை மற்றும் இதர உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். ஒமேகா – 3 கொழுப்பு அமிலமும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலமும் உணவில், 1 : 1 (அ) 1 : 4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்

    ஆரோக்கியம் தரும் மீன்கள் : ஒமேகா – 3 செறிந்த உணவுகளில் முதன்மையானவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், மாக்கரல் வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா – 3 உள்ளது. இந்த வகை மீன்களை (வறுக்காமல்) உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது.

    ஒமேகா – 3 பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் உள்ளது. குறிப்பாக சணல் விதை எண்ணை, வாதாம் கொட்டைகள், பசலைக்கீரை, பரங்கி விதைகள், சோயா பீன்ஸ், கோதுமை வித்து, கடுகு கீரை, இவைகளில் ஒமேகா – 3 நிறைந்துள்ளது. ஆளி விதைகள் ஆளி விதை எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. அதில் ஒமேகா−3 அதிகம் காணப்படுகிறது. தினமும் 2 மேஜைக்கரண்டி பொடித்த சணல் விதைகளை சூப் (அ) பருப்புகளுடன் கலந்து சாப்பிடுவது நல்லது. வாரம் 3 முறை மீன்கள் உட்கொள்வது தேவையான அளவு ஒமேகா – 3 அமிலத்தை தரும்.

    தானியங்கள், பருப்புகள்: சருமப் பாதுகாப்பு, முடி வளர்ச்சி, சீரான ரத்த ஒட்டம் இவற்றுக்கு உதவும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் முதலியன – தானியங்கள், முட்டை, கோழி, இறைச்சி, சோள எண்ணை, சூர்ய காந்தி, பருத்தி விதை, சோயா பீன் எண்ணைகளிலும் ஒமேகா – 6 அதிகம் காணப்படுகிறது. ஒமேகா – 9 அமிலங்களை நம் உடலே தயாரித்துக் கொள்ளும்.

    நினைவாற்றலை அதிகரிக்கும்: நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை, செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. பக்கவாதம் வருவதை தடுக்கிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன. மூளை செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கும். மனச்சோர்வு, இதர மனநோய்களின் சிகிச்சைக்கு பயன்படுகிறது.

    ஜீரணம் தரும் களாக்காய்!

    எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. தடிப்பான பச்சை இலைகளையுடையது. வெண்மையான பூக்களையும்,சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்பழங்களையும் கொண்டது. பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

    ஆரோக்கியம் தரும் காய்: களக்காய் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை கொண்ட பழமாகும். இதில் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழங்களில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகமிருப்பதால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் குறைக்க பயன்படுகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து,

    பித்தத்தை கட்டுப்படுத்தும். இதுதவிர, கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்காக ஊறுகாய் போட்டு களாக்காயை பயன்படுத்துகின்றனர். மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு களாக்காய் நல்லது.

    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இலைகளில் காரிசிக் அமிலம், காரினால் போன்றவை உள்ளன. கனிகளில் அமினோ அமிலங்கள், குளுக்கோஸ், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ஊட்டசத்துமிக்க களாக்காய் இலைகள், கனி மற்றும் பட்டை போன்றவை மருத்துவ பயன் உடையவை. இலைகளின் கசாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு மருந்தாகும். முதிராக்கனிகள் சத்து மிக்கவை. ஊட்டத்திற்கு உகந்தவை. வேர் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. கசப்பானது. வயிற்றுப்போக்கு தூண்டுவது. சொறி சிரங்கு போக்கவும் பயன்படுகிறது.

    கண்நோய் தீரும்: தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டுவரக் கண்களிலுள்ள வெண்படலம்,கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.

    ஜீரணம் தரும் களாக்காய்: காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் உட் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும். களாப்பழத்தைஉணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும். களாப்பழம் உடல் சூட்டைத் தணிக்கும். சூடு காரணமாக தொண்டையில் வலி உள்ளவர்கள் இரண்டு வேளை மட்டும் களாப்பழத்தை உண்டால் தொண்டை வலி குணமாகும்.

    கருப்பை அழுக்கு தீரும்: வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும். சளியகற்றும்,மாத விலக்கைத் தூண்டும். வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக் கலந்து தினமும் 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம், சுவையின்மை, தாகம், அதிக வியர்வை தீரும்.

    பிரசவமான பெண்களுக்கு 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டு சுண்டக்காச்சி வடிகட்டி காலை,மாலை இருவேளை கொடுத்து வர மகப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.

    சிங்கப்பூரில் 7-ஆம் அறிவு இசை வெளியீடு!

    சூர்யா - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 7-ஆம் அறிவு படத்தின் இசை வெளியீடு சிங்கப்பூரில் நடக்கிறது.
    செப்டம்பர் 10-ம் தேதி பிரமாண்டமாக நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்புகிறது சன் டிவி.

    ரஜினி நடித்த எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்த அரங்கிலேயே ஏழாம் அறிவு பாடல்களையும் வெளியிடுகிறார்கள். படத்தின் வெளியீட்டு உரிமையையும் சன் பிக்சர்ஸ்தான் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில்!

    இது இன்னைக்கு! 
    அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது. அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'மல்டி ஸ்டாரர்' படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

    இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு 'மங்காத்தாவே' நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

    படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

    புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை!

    பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    தமிழக கல்வித் திட்டத்தில் சில மாற்றங்களை சட்டசபையில் ஜெயலலிதா இன்று அறிவித்தார். அதன் விவரம்: அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இந்த அரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை ரூ. 419.60 கோடி செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்- மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது.

    அதன்படி, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன்.
    உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

    இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.99.29 கோடி செலவு ஏற்படும். முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள். பொதுப் பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது.

    இதனை நன்கு உணர்ந்த எனது அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை மிகவும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்வி ஆண்டில் ரூ.1,082.71 கோடி மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.

    மேலும், நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    1985ம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கற்றலுக்குத் தேவையான ஜியோமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ரூ.119.48 கோடி செலவிடப்படும்.

    சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் பள்ளிக் கூடங்களில் அமையப் பெற வேண்டும் என்பது எனது திடமான எண்ணம் ஆகும். எனவே, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 60 கோடி செலவு ஏற்படும்.

    அதிமுக தேர்தல் அறிக்கையில், குழந்தைகளின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது, Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.

    10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

    கணினி மூலம் கற்பது பள்ளிகளில் தற்போது இன்றியமையாததாக உள்ளது. மாணவ, மாணவியர்கள் தமது பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பற்பல குறிப்புகளையும் பாடத்திற்கு ஏற்ற மேற்கோள்களையும் மற்றும் தேவையான தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு கணினி முக்கியமான ஒன்று என்பதனை உணர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1 மற்றும் +2 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளேன்.

    அதனைத் தொடர்ந்து, எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்/ ஆசிரியைகளின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் ICT@Schools (Information and Communication Technology@Schools), Tamil Nadu என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.

    இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைகோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த அவைக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத்திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

    வேலூர் சிறை அதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சகம், உடனடியாக மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவு கடிதம் அனுப்பியது!

    10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் இனி புகைப்படத்துடன் வழங்கப்படும்!

    10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.  எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...