|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 February, 2014

உலக தாய்மொழி தினம் இன்று.

Posted Date : 14:23 (20/02/2014)Last updated : 20:40 (20/02/2014)
பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் . 1999 யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது . மொழியெல்லாம் ஒரு சிக்கலா என்று இன்றைக்கு பலபேர் கேட்கலாம். ஆனால்,மொழி தேசங்களை கூறுபோடும் வல்லமை படைத்தது என்பதே உண்மை. மதத்தை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் என்கிற தேசத்தை உருவாக்கினார்கள். ஆனால்,மிகக்குறைவான மக்கள் பேசிய உருதுவை மட்டும் தேசிய மொழியாக அறிவித்துவிட்டு வங்க மொழியை புறக்கணித்தார்கள் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள். அதை எதிர்த்து இதே தினத்தில் போராடிய எண்ணற்ற கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பின்னர் மொழிசார்ந்த சிக்கல் தனி வங்கதேசத்துக்கே வழிவகுத்தது.
தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை ;ஒரு இனத்தின் பண்பாடு,கலாசாரம்,வாழ்க்கைமுறை,சிந்தனை எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றும்,நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு அன்னை ,மொழிக்கு உண்டு . அன்னை மொழியை பிழையற பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது வருத்தமான நிகழ்வு . உலகில் அதிக இலக்கிய நோபல் பரிசுகளை அள்ளி இருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள் ! ஆங்கில மொழியின் சொற்கள் தன்னுடைய மொழியில் கலக்கக்கூடாது என்று சட்டமியற்றுகிற அளவுக்கு மொழிப்பற்று கொண்ட அவர்களுக்கும் இங்கிலாந்துக்கும் சில நாட்டிகல் மைல் தான் தூரம்.
அன்னை மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அறிவியலில் அதிகபட்ச நோபல் பரிசை பெற்றவர்கள் எல்லாம் தங்களின் தாய்மொழியில் பயின்றவர்களே. இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளும் தாய்மொழி வழிக்கல்வியே தேவை என்று வலியுறுத்தினார்கள்.
ஏசு காலத்தில் பேசப்பட்ட அராமிக் மொழி மற்றும் ஹீப்ரு மொழியில் யூதர்களின் இஸ்ரேல் நாட்டால் இரண்டாவது மொழி உயிர்த்திருக்கிறது. ஏசு பேசிய அராமிக் உயிர் பெறவே இல்லை. ஐஸ்லாந்து மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியை சில லட்சம் பேரே பேசுகிறார்கள். தாய்மொழியை பயன்படுத்துவது என்பது பெருமைக்குரிய ஒன்றாக அவர்களால் பார்க்கப்படுகிறது. சூடான் நாட்டில் தூய அன்னை மொழியில் மட்டுமே பேசுவார்கள். ஆங்கில வார்த்தையின் கலப்பைக்கூட பார்க்க முடியாது. ஆங்கிலம் இணைப்பு மொழி என்பதும்,வேலை வாய்ப்பில் அது பங்காற்றுகிறது என்பது ஒருபுறம் இருக்க புரிதலுக்கு அன்னை மொழியே பெருமளவில் உதவும் என்பதும்,சரிசமானமான கல்வி வழங்கப்படும் பொழுது தாய்மொழியே தனித்து மின்னும் என்பதும் உண்மை.
பாரதி காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார் ." உங்கள் அன்னை மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே ? "என கேள்வி எழுப்ப,"இனிமேல் அவ்வாறே செய்கிறேன் நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் ?" என காந்தி கேட்க பிறர் மனம் நோக எழுதும் பொழுது அன்னை மொழியை உபயோகப்படுத்த கூடாது என்பதே எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார் பாரதி .தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப்பாடம் நடத்தினார் பாரதி . அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல ;அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

14 February, 2014

உன்னை மட்டுமே காதலித்துக்கொண்டு...!

பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் காதலி ஜோசபைனுக்கு எழுதியது 
உன்னை விட்டு பிரிந்த பின்னர் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். உன்னோடு அருகில் இருப்பது தான் எத்தனை சந்தோசமானது ? ஓயாமல் உன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய அன்பு மிகுந்த தொடுதல்கள்,கண்ணீர்,பாசம் பொங்கும் அக்கறை எல்லாவற்றிலும் வாழ்கிறேன் நான். ஒப்பிட முடியாத ஜோசபைனின் அழகு மனதில் காதல் தீயை கொழுந்து விட்டு எரிய வைக்கிறது. எல்லா வகையான அக்கறைகளில் இருந்து,கொடுமைப்படுத்தும் கவனிப்புகளில் இருந்து விடுதலை கிடைத்து உன்னோடு என்னுடைய எல்லா பொழுதுகளையும் கழிக்க முடியுமா ? உன்னை மட்டுமே காதலித்துக்கொண்டு,உன்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று சொல்வதன் உற்சாகத்தை உணர்ந்து கொண்டு,அதை உன்னிடம் நிரூபிப்பதில் வாழ்நாளையே எப்பொழுது கழிக்க முடியும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.

ஓவியர் ப்ரீடா காலோ டீகோ ரிவீராவுக்கு எழுதியது
உன்னுடைய கரங்களுக்கு,பச்சை தங்கம் போல ஒளிரும் கண்களுக்கு  இணையானது எதுவுமில்லை. என் உடல் முழுக்க உன்னாலே எல்லா நாளும் நிரம்பியிருக்கிறது. என்னுடைய இரவின் கண்ணாடி நீ. வலிதரும் மின்னலின் வெளிச்சம் ,பூமியின் ஈரப்பதம். உன்னுடைய கரத்தின் இடுக்குகள் என்னுடைய வசிப்பிடம். உன்னுடைய ரத்தத்தை என்னுடைய விரல்கள் தொடுகின்றன. உன்னுடைய மலர் வீழ்ச்சியில் இருந்து வரும் வாழ்க்கை ஊற்றை உணர்வதே  எனக்கு முழு மகிழ்ச்சி. உன்னுடையதான என்னுடைய நரம்புகளை அந்த ஊற்றால் நிறைக்கிறேன் நான் !"

கவிஞர் ஜான் கீட்ஸ் காதலி ஃபேனிக்கு எழுதியது 
நீயில்லாமல் நான் வாழமுடியாது. எல்லாவற்றையும் நான் மறந்துவிடுகிறேன். ஆனால் உன்னை பார்த்ததும் அங்கேயும் என் வாழ்க்கை நின்று விடுகிறது,அதைத்தாண்டி எதையும் நான் பார்ப்பதில்லை. என்னை நீ உறிஞ்சிக்கொண்டாய். நான் கரைவது போல இந்த கணத்தில் உணர்கிறேன். ஆண்கள் மதத்துக்காக ஆண்கள் தியாகிகளாகி உயிர் துறப்பார்கள் என்பதை கேட்டு நடுங்கியிருக்கிறேன். இப்பொழுது நான் நடுங்கவில்லை. நானும் மதத்துக்காக உயிர் துறக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். காதல் என் மதம் ; அதற்காக இறப்பேன் நான். உனக்காக என்னால் இறக்க முடியும். என்னுடைய சமயம் காதல்,நீயே அதன் அடிப்படை. எதிர்க்க முடியாத அளவுக்கு என்னை ஆட்கொண்டு பேரின்பம் தருகிறாய் நீ !

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் காதலி ஸ்டெல்லா கேம்ப்பெல்லுக்கு எழுதியது 
என்னுடைய இருப்பிடமற்ற போக்கிரிபெண் எனக்கு
திரும்ப வேண்டும்
என்னுடைய கருப்பழகி, தேவதை எனக்கு வேண்டும்'
என்னைத்தூண்டும் அவள் வேண்டும்
என் அன்பானவள் அவளின் ஆப்பிள்களோடு வரவேண்டும்
அழகு,மதிப்பு,புன்னகை, இசை, காதல், வாழ்க்கைஅ மரத்துவம் எனும் ஏழு விளக்குகளை
எற்றுபவள் எனக்கு வேண்டும்
என்னுடைய உத்வேகம், முட்டாள்தனம், மகிழ்ச்சி, புனிதம், பைத்தியக்காரத்தனம், சுயநலம்
எல்லாமும் வேண்டும்.
என்னுடைய நல்லறிவு ,புனிதப்படுத்தல்
என்னுடைய தூய்மை,மாற்றத்தை தந்தவள்
கடலின் நடுவே எனக்கான வெளிச்சம்
பாலைவனத்தின் நடுவே எனக்கான பேரீச்சை
தோட்டத்தின் காதல் மலர்கள்
பெயரில்லா பல லட்சம் ஆனந்தம்
என்னுடைய அனுதின சம்பளம்
என் இரவின் கனவு
என் செல்லம்
என் நட்சத்திரம்
இசைமேதை பீத்தோவன் "சாகவரம் பெற்ற பிரியைக்கு" எழுதியது 
பீத்தோவன் இறந்த பின்னர் அவரின் கடித குவியலில் இருந்து "immortal beloved" என்று ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் ததும்பும் கடிதங்கள் கிடைத்தன. அவர் யாரென்றே தெரியவில்லை. இருந்தாலும் அந்த கடிதங்கள் உருக்கி விடுபவை ஏன் மிகவும் நேசிக்கிற ஒருவரிடம் இருந்து பிரிந்தே இருக்குமாறு நேரிடுகிறது ? வியன்னாவில் என்னுடைய வாழ்க்கை துன்பமயமாக இருக்கிறது. உன் காதல் மாந்தருள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாகவும்,சோகம் நிறைந்தவனாகவும் ஆக்கியிருக்கிறது....அமைதியாக இரு. என்னை காதலி ! இன்று-நேற்று-எத்தகைய கண்ணீர் தரும் காத்திருப்பை உனக்கு நான் தந்திருக்கிறேன். உனக்காக,என் வாழ்க்கையான உனக்காக... தொடர்ந்து என்னை காதலி ! உன் காதலனின் நன்றி மிகுந்த இதயத்தை எப்பொழுதும் தவறாக எடை போட்டு விடாதே.
நோபல் பரிசை ஏற்க மறுத்த சார்த்தர் தன் காதலி பூவாருக்கு எழுதியது
இன்று இரவு இதுவரை நீ அறியாத வகையிலே உன்னை காதலிக்க போகிறேன். உனக்காக என் காதலை மேலும் செம்மைப்படுத்திக்கொண்டே இருக்கிறேன். அந்த காதலை எனக்குள் செலுத்தி அதுவாகவே ஆகிக்கொண்டு இருக்கிறேன் நான். இது உன்னிடம் நான் ஒத்துக்கொள்வதை விட அதிகமாக நிகழ்கிறது,உனக்கு கடிதம் எழுதுகிற பொழுது அடிக்கடி நிகழ்கிறது. என்னை புரிந்துகொள் ! வெளி  விஷயங்களில் கவனம் செலுத்துகிற பொழுதும் உன்னை காதலிக்கிறேன். டூலோஸ் நகரில் உன்னை வெறுமனே காதலித்தேன். இன்று இரவு வசந்த காலமாலையில் உன்னை நேசிக்கப்போகிறேன். ஜன்னல்களை திறந்து வைத்து காதலிக்க ப்கிறேன். நீ என்னவள்,யாவும் என்னுடையது !  என் காதல் சுற்றியிருப்பவற்றை மாற்றுகிறது,சுற்றியிருப்பவை என் காதலை மாற்றுகிறது
கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் 
எத்தனையோ பெண்கள் உலகில் இருக்கிறார்கள். அதில் சிலர் அழகிகளாக இருக்கிறார்கள். ஆனால்,ஒரு பெண்ணின் ஒவ்வொரு பண்பும்,ஏன் சுருக்கங்கள் கூட என்னுடைய வாழ்க்கையின் உன்னதமான,இனிமையான நினைவுகளை தருகிற முகத்தை நான் வேறெங்கே  கண்டுபிடிப்பேன் ? என்னுடைய முடிவில்லாத துயரங்கள்,என்னுடைய ஈடுசெய்ய முடியா இழப்புகள் எல்லாவற்றையும் உன்னுடைய முகக்களையில் படித்து விடுகிறேன். உன்னுடைய இனிமை மிகுந்த முகத்தை முத்தமிடுகிற பொழுது என்னுடைய துயரங்களையும்  முத்தமிட்டு வெகுதூரத்துக்கு அனுப்பிவிடுகிறேன். உன்னுடைய கரங்களில் புதைந்து உன் முத்தங்களால் புத்துயிர் பெறுகிறேன் நான் என் பிரியத்துக்குரியவளே பிரியா விடை தருகிறேன். உனக்கும், நம்பிள்ளைகளுக்கும் ஆயிரம் முத்தங்கள் !

பாப்லோ நெரூடா தன்னுடைய காதலி மடில்டா உருட்டியாவுக்கு எழுதியது 
காடுகள் அல்லது கடற்கரைகள் வழியாக நடக்கிற பொழுது,மறைந்த ஏரிகளின் வழியாக நாம் கடந்து வருகிற பொழுது சாம்பல் தூவப்பட்ட நிலங்களில் இருந்து தூய்மையான மரக்கட்டைகளை நாம் சேகரித்தோம். அந்த மரக்கட்டைகள் நீரில் அடித்துக்கொண்டு முன்னும்,பின்னும் நகர்ந்து வந்தவை இல்லையா  ? இந்த மென்மையான பொருட்களை வெட்டுக்கத்தி மற்றும் சிறுகத்தியால் இந்த காதல்மர அடுக்குகளை நான் கட்டினேன். பதினான்கு பலகைகளை கொண்டு  சின்னஞ்சிறிய வீடுகளை கட்டினேன் நான். இந்த வீடுகளில் நான் ரசித்த,பாடல் பாடிய உன் கண்கள் வாழட்டும் ! என் காதலின் அடிப்படைகளை உனக்கு அறிவித்த பின்னர் இந்த நூற்றாண்டை உனக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த மரக்கவிதைகள் நீ உயிர் தந்ததால் எழப்போகின்றன.

எழுத்தாளர் பிரான்ஸ் காஃப்கா தன்னுடைய காதலி பெலிஸ்க்கு எழுதியது 
உன்னிடம் ஒரு உதவியை நான் கேட்கப்போகிறேன். அது உனக்கு பைத்தியக்காரத்தனமானதாக தெரியலாம். அது இதுதான். எனக்கு வாரம் ஒருமுறை மட்டுமே கடிதம் எழுது. அப்படி நீ ஒரே ஒருமுறை எழுதினால் எனக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கடிதம் வந்து சேரும்.  உன்னுடைய கடிதங்கள் அனுதினமும் வருவதால் அவற்றை என்னால் தாங்கமுடியவில்லை. உன்னுடைய ஒரு கடிதத்துக்கு நான் பதிலெழுதிய பின்னர் விளக்க முடியாத அமைதியோடு படுக்கையில் வீழ்கிறேன். என் இதயம் என் உடல் முழுமைக்கும் நான் உனக்கு மட்டுமே உரியவன் என்று துடிக்கிறது. இதைத்தவிர எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. ஆனால்,இது வலிமையாக நினைப்பதை சொல்லவில்லை. இதனாலே நீ என்ன அணிந்திருக்கிறாய் என்று நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அது என்னை குழப்பி என் வாழ்க்கையை எதிர்கொள்ளாமல் தடுமாற செய்கிறது. நீ என்னை நேசிக்கிறாய் என்று நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. அப்படி தெரிந்து கொண்டால் அலுவலகத்தில் அல்லது வீட்டில் அமர்ந்திருப்பதை விட கண்களை மூடிக்கொண்டு உனக்காக இதயத்தை திறந்துகொண்டு வேகமாக நகரும் ரயில் முன்னாள் விழுந்து விடுவேன் நான் !"

13 February, 2014

"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம்!



இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்தி… படித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்… நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்…


புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்கலூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை “திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

காலம் மாறிவிட்டதாம்!


"இளநீர்க்காரணீடம் பேரம் பேசி... இருபது ரூபாய்க்கு கோக் வாங்கிக் குடித்தான்"

"பதநீரைக் கண்டு பதறிப்போய் ஒதுங்கி... பெப்சி வாங்கிக் குடித்தான்"

"நுங்கு திங்க நொந்துபோய்... ஸ்லைஸ் குடித்தான்"

காலம் மாறிவிட்டதாம்! அதனால் உணவை மாற்றிக்கொண்டானாம்!!

"இயற்கைக்கு முரணாக கண்டதைக் குடித்ததில், தின்றதில்ஆஸ்பத்திரியில் அட்மிட்   சில லட்ச 
செலவில் உடல் தேறி ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான்..."

அதே இளநீர்க்காரனும்.. பதநீர்க்காரனும்.. நுங்குக்காரனும் வாசலில், வீதியில் ஆரோக்கியமாய் வியாபாரத்தில்..!

உண்மைச் சம்பவம்!


 இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில்
விழுந்துவிட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு கிணற்றை எட்டிப்
பார்த்த முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி. தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள் கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன் அருகில் பெரிய ராஜநாகம் படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தது.

கிணற்றில் ஒரு பகுதி கரையும் மறு பகுதி தண்ணீரும் இருந்தது.ராஜநாகம் நாய் குட்டிகளை ஒன்றும் செய்யவில்லை, நாய் குட்டிகள் தண்ணீரில் இறங்காதவாறு காவல் காத்து கொண்டு இருந்தது. ராஜநாகம் மற்றும் நாய் குட்டிகள் 48 மணி நேரம் கிணற்றில் ஒன்றாக இருந்தன.இந்த 48 மணி நேரமும் நாய் குட்டிகள் தண்ணீரில் விழாதவாறு ராஜநாகம் அமைதியாக காவல்
காத்து கொண்டு இருந்தது. பிறகு வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கிய போது ராஜநாகம்
மறு கரைக்கு சென்றது.நாய் குட்டிகளை காப்பாற்றிய வனத்துறையினர் அந்த ராஜநாகத்தையும் காப்பாற்றி காட்டில் விட்டனர்.

”அதிகம் விஷம் உடைய ஒரு ராஜநாகம் இரண்டு சிறிய உயிரனத்துக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பு கொடுக்கும் இந்த பூமியில் தான், சின்னஞ்சிறு குழந்தைகளையும்
சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது” இதுபோன்ற உயிர்களிடத்தில் இருந்தாவது நல்ல பண்புகளை கற்று கொள்ளுங்கள் மனித மிருகங்களே...!

பாலுமகேந்திரா நம்மோடு வாழும் பாலுமகேந்திரா!


09 February, 2014

நண்பனா இருக்கிறது கஷ்டம் ப்ரோ!


ஹீரோக்கள் பற்றிப் பேசியிருக்கோம். ஹீரோயின்கள் பற்றிப் பேசியிருக்கோம். ஹீரோவுக்கு நண்பர்களாய் வரும் பரிதாபத்துக்குரிய ஜீவன்களைப் பற்றி என்னைக்காவது யோசிச்சிருக்கோமா? ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருந்து அவஸ்தைப்படுகிறவங்களோட மைண்ட் வாய்ஸ்ங்க இது.
கேங்கா குட்டிச் சுவத்துல உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருக்கும்போது அந்தப் பக்கம் ஏதாவது ஒரு பொண்ணு கிராஸ் பண்ணிட்டாப் போதும், அந்தப் பொண்ணு ஒருவேளை ஹீரோவோட ஃப்ரெண்டை லுக் விட்டிருந்தாக்கூட, ''மச்சான் அவ உன்னைத்தான்டா பாக்குறா''னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்லணும்.
இந்த ஹீரோவுக்கு லவ் ஃபெயிலியர் ஆனாப் போதும். உடனே பீர் பாட்டிலோட ஒரு காதல் தோல்வி டாஸ்மாக் பாட்டுப் பாடறதுக்கு ரெடி ஆகிடணும். அதில் அவிய்ங்க சொல்ற மொக்கைத் தத்துவத்துக்கெல்லாம் ஃபீல் ஆகணும். கருமம்டா.
ஹீரோ புதுசா ரூட் விடுற  அந்தப் பொண்ணு காந்தி பார்க்குக்கு மூணாவது தெருவுல குடியிருந்தாலும் சரி, அந்த பார்க்கிலேயே குடியிருந்தாலும் சரி... அட்ரஸ் தேடி ஹீரோகிட்ட ஒப்படைக்க வேண்டியது நம்ம தலையாயக் கடமைங்க.
ஹீரோவுக்கு மட்டும் மும்பை, கேரளா வெளிநாட்டுல ஆரம்பிச்சு, வடநாட்டுல தொடங்கி கொடநாடு வரைக்கும் ஹீரோயின் தேடுற நம்ம  டைரக்டருங்க நமக்கும் சில நேரம் ஜோடினு ஒண்ணு போடுவாங்க. ஹூம், என்னத்தச் சொல்ல, அதே அருக்காணிகள்தான்.
அப்புறம் பாருங்க... இந்த ஹீரோயின்ஸ் சில நேரம் தண்ணிக்குள்ள விழுந்தாலோ அல்லது அவங்களை ரவுடி குரூப்ஸ் தொரத்திக்கிட்டு வந்தாலோ நாம என்னதான் ஸ்விம்மிங்ல கோல்டுமெடலும் கராத்தேவுல எல்லா கலர்லேயும் டஜன் கணக்குல பெல்ட் வாங்கியிருந்தாலும் நாம காப்பாத்தக் கூடாது. ''மாப்ள... காப்பாத்து''னு எக்கோ வாய்ஸ்ல ஹீரோவைத்தான் கூப்புடணுமாம். பாடியை டச் பண்ற எந்த விஷயமா இருந்தாலும் அவர்தான்  டீல் பண்ணனும்னு கம்பெனி ரூல்ஸு.
17 தடவை டேக் வாங்கி ரெண்டு லைன்ல ஹீரோ சொல்ற அந்தபஞ்ச் டயலாக்குக்குக் கையில் உள்ள ரேகை அழியிற வரைக்கும் கை தட்டுவானுங்க. நாம என்னதான் கருத்தா, பக்கம் பக்கமா டயலாக் பேசுனாலும் ''பையன் வரவர நல்லா காமெடி பண்றான்ல?''னுதான் கமென்ட்ஸ் வரும்.
இந்த ஹீரோ வாங்கிக் கொடுக்கிற ஓசி தம்முக்கும் ஒண்ணேகால் ரூபா டீக்கும் நாள் பூரா நாயைவிடக் கேவலமா அவங்க கூடவே டிராவல் பண்ணனும். மொத்தத்துல ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருக்கிறவங்க வெட்கம், மானம், ரோஷம், காதல் ஏன் சில நேரம் ஏ.டி.எம்-மையும் கூட அடகு வெச்சிட்டுத்தான் பொழப்பை நடத்தணும்.
இதாவது பரவாயில்லைங்க, பல படங்களில் ஹீரோவை வில்லனோ, வில்லனோட அடியாளோ கத்தியால குத்த வர்றப்போ, சடார்னு குறுக்கே பாய்ஞ்சு, சதக்குனு கத்திக் குத்தை வயித்துல வாங்கணும். இதுக்கெல்லாம் என்ன தியாகி பென்ஷனா தருவாய்ங்க?
''ஃப்ரெண்டு கேரக்டர், அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்லாம் வேணாம். லேட்டானாலும் பரவாயில்லை. நடிச்சா ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான்''னு ஒருத்தர் சொன்னாரே, காரணம் இப்போ புரியுதா?

முடிந்தது மாருதி 800 சகாப்தம்!


இந்தியர்களின் கார்விருப்பத்தை நிறைவு செய்த மாருதி 800 வகை கார் உற்பத்தியைநிறுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிறிய வகை கார்களை உற்பத்தி செய்யும் விதமாக ஜப்பான் நாட்டை சோ்ந்த சுசூகி நிறுவனத்துடன் இணைந்து மாருதி 800 கார்கள் தயாரிக்கப்பட்டன. கடந்த 1980-ம் ஆண்டுகளில் அதன் விலை 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதன்விலை ரூ.2.35 லட்சமாகும் எத்தனை சிறியவகை கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் இந்த மாருதி 800 வகை கார்களை விரும்பியவர்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இதன் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தப் போவதாகவும், இந்த வகை கார்களுக்கான உதிரி பாகங்கள் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள்வரை மட்டுமே சந்தையில் விற்பனை செய்யப்படும் என மாருதி சுசூகி நிர்வாக இயக்குனர் சி.வி.ராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டின் ஐதராபாத் பெங்களூரு, கான்பூர், புனே உள்ளிட்ட 13 நகரங்களில் மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவை தற்போது முற்றிலும் நிறுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஆல்டோ, வேகன், ஸ்விப்ட் போன்ற பிராண்டுகளின் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியை அதிகரி்க்கச்செய்யவும் விற்பனையை அதி்கரிக்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மாருதிசுசூகி டீலர்களிடம் எத்தனை 800 வகை கார்கள் உள்ளன என்றும் தெளிவாக கூறமுடியாது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3 முதல்4சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறியவகை கார்களுக்கு முன்னோடி: தற்போது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10, ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800 மட்டுமே. மேலும் நடுத்தர மக்களிடம் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதும் இவையே. குறைந்த அளவே காசு இருந்தால் போதும். கார் வாங்க வேண்டிய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை ஈடுகட்டியது மாருதி 800 என்றால் மிகையில்லை.

எரிப்பதும்,எரிவதும் நியாயமா.?

சாதி மதம் பாராமல்,நேரம் காலம் பார்க்காமல்,மழை,வெயிலை பொருட்படுத்தாமல் ஏழை,எளியவர்களை நாளெல்லாம் சுமந்து செல்லும் என்னை ஏன் உங்களது கோபத்திற்கு ஆளாக்கி தீயால் எரிக்கிறீர்கள்,கல்லால் எரிக்கிறீர்கள்...என்று பஸ்சே பேசுவது போல சென்னை தாம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை கவர்ந்துள்ளது.

06 February, 2014

கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் கொடுக்க கூடாது!


சினிமா நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் கொடுக்கும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, இனிமேல் புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே அளிக்க வேண்டுமே தவிர கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட தயாரிப்பாளர் ஒருவரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போதே சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், "முக்கிய பிரமுகர்கள் பலர் நேரடியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளிப்பது தவறான முன்னுதாரணம். புகார்கள் மீது நேரடியாக தலையிட கமிஷனர் அலுவலகத்திற்கு அதிகாரம் இல்லை. புகார்கள் மீது முதல்கட்டமாக 7 நாட்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் கோர்ட் தீர்ப்பு குறித்து டி.ஜி.பி., உள்துறை செயலரிடம் தெரிவிக்க வேண்டும்" என மேலும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் எதிரொலியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், புதிய நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், "பொது மக்களிடம் இருந்து கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் பெறப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட வேண்டும். அங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் உதவி கமிஷனர் அல்லது துணை கமிஷனர் அல்லது இணை கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுக்கலாம். அதன் பிறகும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கமிஷனர் அலுவலகத்தை நாடலாம்" என்று கூறப்பட்டுள்ளது. 

“மினரல் வாட்டர் குடித்தால் நாம் உருப்படவே மாட்டோம்!

இந்த உலகம் தோன்றக் காரணமானதும், இயங்க அடிப்படையானதுமான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள்தான் இந்த நிகழ்வின் கருப்பொருள்.நிலத்தின் தொன்மை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் தன்மையில்  முல்லை நிலத்தில்தான் சிறு கலப்பை உருவானது என்பதையும், மருத நிலத்தில் சற்றே பெரிய கலப்பை உருவானது என்பதையும் சங்க இலக்கியத்தில் இருந்து அவர் விவரித்தார். அரச்சலூர் செல்வம், இந்த உலகம் எப்படி நீரால் சூழப்பட்டுள்ளது என்பதையும், சிறு துண்டு நிலத்தைத்தான் மனிதகுலம் பங்கிட்டு வாழ்கிறது என்பதையும் எளிமையாகப் புரியவைத்தார்.
நெருப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய  ம.செந்தமிழன், ''அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம் என்பதே இந்த உலகின் இணையற்ற தத்துவம்'' என்றார். மேலும், ''புலனறிவால் உணரக்கூடிய நெருப்பு என்பது வேறு. நெருப்பின் சாரமான வெப்பம்தான் அதன் குணம். இந்த வெப்பம்தான், உலகத்தை இயக்குகிறது; உயிர்களை இயக்குகிறது. ஒரு மனிதனின் உடல், எப்போது வெப்பத்தைத் தக்கவைக்கும் திறனை இழந்து சில்லிட்டுப் போகிறதோ... அப்போது அவன் இறந்துவிட்டான் என்று பொருள். இந்த உலகத்துக்கும் அது பொருந்தும்''
எளிய பேச்சுத் தமிழில் நீர் அரசியல் குறித்த சாளரங்களைத் திறந்துவிட்டார் கவிஞர் நக்கீரன். ''அமீனா புகுந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாதுன்னு சொல்வாங்க. நான் சொல்றேன், உலக வங்கி புகுந்த நாடும், ஐ.எம்.எஃப். (சர்வதேச நாணய நிதியம்) புகுந்த நாடும் உருப்படாது. உலக வங்கி என்பது, உலக அளவிலான வட்டிக் கடை. ஐ.எம்.எஃப். என்பது ஓர் உலகக் கந்துவட்டிக் கடை'' என்றவர், அந்த வட்டிக் கடையின் உதவியுடன் சென்னையின் சதுப்புநிலமான பள்ளிக்கரணையை எப்படிக் குப்பைக் கொட்டும் இடமாக மாற்றினார்கள் என்பதை நெஞ்சம் பதைபதைக்க விவரித்தார். இறுதியில், ''இவ்வளவையும் கேட்டுவிட்டு வெளியில் சென்று தாகமாக இருக்கிறது என ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கினால், நம்மால் உருப்படவே முடியாது என்று சொல்லி விடைபெறுகிறேன்'' என்று விடைபெற்றபோது, கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.
காற்று எனும் தலைப்பில் பேச வந்த கி.வெங்கட்ராமனின் பேச்சு, முக்கியத்துவம் உடையது. அவர், இந்த ஐம்பூதங்களை மீட்டெடுக்க வேண்டிய அரசியல் தளத்தின் அவசியத்தைப் பேசினார். ''காற்றுக்கும் நீருக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பேசப்பட வேண்டியவை என்பதை ஏற்கிறேன். ஆனால், அரசியல்ரீதியாக அதிகாரத்தை வென்றெடுக்காமல் உங்களால் ஐம்பூதங்களைக் காப்பாற்ற முடியாது. நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டியது, அரசியல் தளத்தில் மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களே'' என்றார். தமிழ்நாட்டின் வானிலை, காலநிலை குறித்து அனுதினமும் மக்களுக்கு அறிவிக்கும் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் ஆகாயம் குறித்தும், புவி வெப்பமயமாதல், அதன் பாதிப்புகள், மாற்று வழிமுறைகள் குறித்தும் பேசினார்.

02 February, 2014

உறவுகளை வளர்ப்போம்!

இன்றைய யந்திரத்தனமான வாழ்வியல் சூழலில் பெரியோர்கள், பணிக்குச் செல்லும் ஆண்கள், பெணகள் மட்டுமின்றி மாணவ மாணவியர், குழந்தைகள் உள்பட அனைவருமே மன அழுத்தத்திற்கு உள்ளாவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. மனச்சோர்வு, மன உளைச்சல் உயர் ரத்தஅழுத்தம், கோபதாபங்கள், வெறுப்பு என அன்றாடம் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் காணப்படுகிறது. விளைவு இளம் தம்பதியினரிடையே மணமுறிவு காதலர்களுக்கிடையே கசப்புணர்வு, நண்பர்களுக்கிடையே பகைமையுணர்வு, பெற்றோர்-குழந்தைகளுக்கிடையே தவறான புரிதல் மற்றும் குழந்தைகளுக்கு மூளை வறட்சி எனப்பெருகி தற்கொலை, கொலைகள் நடப்பதற்குக்கூட வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
மனித உறவுகளுக்கிடையேயான நெருக்கம் குறைந்து இடைவெளி அதிகமானதே அனைத்திற்கு அடிப்படைக் காரணம். இதனால் நம் உடலில் பிட்யூட்டரி சுரப்பியில் "ஆக்ஸிடாலின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறைந்து போகிறது. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் இயக்கத்தையும் சீர்செய்து அமைதிப்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக்க வல்லதுதான் இந்த "ஆக்ஸிடாலின்' ஹார்மோன்.
நாம் நேசிக்கும் மனிதர்களை அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து ஆரத்தழுவிடும்போது இந்த ஹார்மோன் நன்றாகச் சுரக்கிறது. இதுமட்டுமல்லாமல் கட்டித்தழுவும் இருவருக்கிடையேயான உறவு பலப்படுவதுடன் பலவித நன்மைகளும் விளைவதாக நரம்பியல் நிபுனர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் ஆய்வுகள் மூலம் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, சோர்வான மனநிலை, மனக்கவலை, ரத்தக் கொதிப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு போன்ற தருணங்களில் கட்டியணைத்தால் ரத்த அழுத்தம் குறைந்து மூளை சுறுசுறுப்பாகிறதாம். நாம் யாரைக் கட்டியணைக்கப் போகிறோம் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். மனதிற்கினிய, தோழமையுணர்வுடைய நண்பர்களை நட்போடும், உண்மையான அன்போடும் ஒருவர் கட்டித்தழுவும் பொழுதே பலவீனமான மனம் கூடப் பலப்படுகிறதாம்! இனிமையான மனமாறுதல்களையும் உணர முடிகிறதாம்!
குடும்பங்களில் சமூகச் சுழலில் இவை நண்பர்களுடன், பெற்றோர்களுடன், தம்பதியருடன், காதலர்களுடன், குழந்தைகளுடன், செல்லப் பிராணிகளுடன் என்று பலதரப்பட்ட உறவுகள் மாறுபட்டாலும் உணர்வுகள் ஒன்றுதான். அதாவது ஒரு தாய் தன் சேய்க்குப் பாலூட்டும் போது ஏற்படும் சொற்களால் விளக்கிட முடியாத ஒரு ஆனந்தப் பரவச உணர்வைப் போல நாம் அன்பானவர்களைக் கட்டியனைக்கும்போது இருவருக்குள்ளும் ஏற்படுகிறதாம். இது உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் மனக்குறைகளையும் களைந்திட வழிவகுக்கிறதாம். தவறே செய்தாலும்கூட நம் நேசத்திற்குரியோர், நம்பிக்கைக்குரியோர் நமது முந்தைய அன்பான செயல்பாடுகளை எண்ணிப் பார்த்து தவறை மன்னித்து மறந்து விடுவதற்கும் மனப் பக்குவத்திற்கு வந்துவிடுகிறார்களாம்.
அதே போலவே மனதிற்குப் பிடிக்காதவர்களையோ உள்மனதில் உண்மையான அன்பில்லாதவர்களையோ ஒருவர் கட்டியணைக்கும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு ஒருவித பதற்றம் அதிகரித்து ஆத்திரத்தை வரவழைக்கவும் கூடும். இதனால் ஒருவரின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் குறைந்து போக வாய்ப்புள்ளதாம்! மேலும் இந்த எதிர்மறையான மனப்போக்கால் "ஆக்ஸிடாலின்' ஹார்மோன் சுரக்காத காரணத்தால் அன்பு மேம்பட வாய்ப்பில்லாமல் காலப்போக்கில் வெறுப்பே மேலோங்கி உறவு முறிந்து போவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிய வந்துள்ளதாம்.
பிறகென்ன...? மனதிற்கினிய நண்பர்களையும் உறவுகளையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்போடு கட்டித் தழுவுவதில் என்னதடை? கட்டித் தழுவிடுவோம்! நம் உறவுகளை மேம்படுத்திடுவோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...