|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 April, 2012

பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்.


முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பெருமைக்குரியவரான ஆங்கிலேய பொறியாளர் கர்னல் பென்னிகுயிக்குக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கு இன்று முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி வைத்தார்.தேனி - குமுளி நெடுஞ்சாலையில், லோயர் கேம்ப்பில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில் இந்த மணிமண்டபம் அமைகிறது. இங்கு பென்னிகுயிக்கின் முழு உருவச் சிலையும் நிறுவப்படுகிறது.இதற்கான அடிக்கல்லை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.

பென்னிகுயிக்கை தேனி மாவட்ட மக்கள் தங்களைக் காத்த தெய்வமாக வணங்கி வருகின்றனர். மேலும் ஐந்து மாவட்ட மக்களின் வறட்சியைப் போக்கியதால் பென்னிகுயிக்குக்கு தென் மாவட்டங்களில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னி என்று பெயரிடுவது வழக்கமாக உள்ளது.பென்னிகுயிக்கின் மணிமண்டபம் 2500 சதுர அடிப் பரப்பளவில் அமையவுள்ளது. இதற்காக ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார். மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு பென்னிகுயிக்கின் பேரன் அழைக்கப்படுவார் என்றும் முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன என்பது நினைவிருக்கலாம்.

மிக மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்ட நகரம்!


இந்தியாவிலேயே மிக மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்ட நகரம் என்ற பெயரை பெங்களூர் பெற்றுள்ளது.வாகன ஓட்டிகளின் நடத்தை (motorist behaviour) குறித்து டெல்லியைச் சேர்ந்த க்ரீன் குரூப் என்ற அமைப்பு நாட்டின் சென்னை, பெங்களூர், புனே உள்பட 7 முக்கிய பெருநகர்களில் ஆய்வும் கருத்துக் கணிப்பும் நடத்தியதில், பெங்களூர் தான் மிக மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.மேலும் பாதசாரிகளுக்கு கொஞ்சம் கூட வசதியே இல்லாத நகரம் என்ற பெயரையும் பெங்களூர் பிடித்துள்ளது. முக்கிய சாலைகளில் நடந்து செல்வோருக்கு தேவையான வசதியோ, சாலைகளை கிராஸ் செய்வதற்கு போதிய வசதியோ, பாதசாரிகளுக்காக வாகனங்கள் நின்று செல்வதோ பெங்களூரில் அரிய விஷயம்.

பிளாட்பார்ம்களிலேயே வாகனங்களை ஓட்டிச் செல்வது, பள்ளிக் குழந்தைகள்- முதியோர் சாலையைக் கடப்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் வாகனம் ஓட்டுவது ஆகியவை பெங்களூரில் தினந்தோறும் நடக்கும் காட்சிகள்.குறிப்பாக பார்வையில்லாதோர், மாற்றுத் திறனாளிகளுக்கு கொஞ்சமும் உதவாத சாலைகள் பெங்களூர் சாலைகள். முக்கிய சாலைகளை கடக்கக் கூட இந்த நகரில் சுரங்கப் பாதைகள் கிடையாது. இருந்தாலும் அவை பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு.


தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தலைவர் டி.கே.ரங்கராஜனும் இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப்போல சொல்லியிருக்கிறார்கள்.

1987-ல் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13-வது திருத்தம் என்று ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பரவல் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஆனால் அந்தத் திருத்தத்தை அரை மனதுடன் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவாக்கி வருகிறது.அதனால் தான் இன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே "இலங்கையில் தமிழர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும்; இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும்; சாத்தியம் தானா?'' என்று வினவியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார்.சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்..

டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. "மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன். இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள்'' என்று அவர் சொல்லியிருக்கிறார்.தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து "தனித் தமிழ் ஈழம்'' தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து; அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள். தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

"தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினையை-அடக்குமுறை அடாவடிகளாலோ, அதிகார அத்துமீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ-தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது 

உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.


உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'Einstein: His Life and Universe', என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும், பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக், ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாக, மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது, வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது, வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை லிஸ்ட்.அதை விட கொடுமை, தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...

நாடு திரும்பாவிட்டால் இனி ...?


மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்கள், இந்தியாவில் இருந்து கிளம்புவதற்கு முன், படிப்பு முடிந்ததும், இந்தியாவுக்கு திரும்புவதாக உறுதி அளித்து, அரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்ற டாக்டர்களில், 3,000 பேர், படிப்பு முடித்தவுடன் நாடு திரும்பவில்லை.இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, இனிமேல், இந்திய அரசிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் பெற்று வரும் மாணவர்களை மட்டுமே, சேர்த்துக் கொள்ள வேண்டும் என, அங்குள்ள மருத்துவ கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நம் நாட்டு அரசுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த ஆண்டிலிருந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக செல்லும் டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கு முன், சம்பந்தபட்ட டாக்டர்கள், படிப்பு முடிந்தவுடன், இந்தியாவுக்கு திரும்பி விடுவதாக கையொப்பமிட்டு, மத்திய அரசுடன், ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.படிப்பு முடிந்தவுடன் இந்தியாவுக்கு திரும்பவில்லை எனில், அதுகுறித்து அமெரிக்க அரசுக்கு இங்கிருந்து தகவல் தெரிவிக்கப்படும். இதன்பின், சம்பந்தபட்ட டாக்டர்கள், அங்கு பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

World Malaria Day


பெண்கள் வளர்ச்சியை முடக்கும் அபாயங்க.ள்


தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டில் மட்டும், கடத்தல், பலவந்தப்படுத்துதல் தொடர்பான சம்பவங்கள், முந்தைய ஆண்டை விட, 19 சதவீதம் அதிகரித்து உள்ளது.பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தாலும், அவர்கள் மீதான அடக்குமுறைகள், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது, வளர்ந்து வரும் சமுதாயத்தில், ஆண், பெண் இனப் பாகுபாட்டை அதிகரிக்குமே தவிர, பெண்களுக்குரிய முறையான அந்தஸ்தை தராது.

கேரளாவிலும் அதிகம்:கற்பழிப்பு, கடத்தல், மானபங்கம், வரதட்சணை கொடுமை போன்றவை, பெண்களை இன்னும் முடக்கிப் போட்டு விடுகிறது. என்னதான், பெண்கள் வன்கொடுமை சட்டம் இயற்றப் பட்டாலும், குற்ற வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.தமிழகத்தில் மட்டுமல்ல, படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, குறைவே இல்லை. கடந்தாண்டு ஜூன் மாதம் வரை, மானபங்கம் தொடர்பாக, 1,816 புகார்களும்; கணவன் கொடுமை தொடர்பாக, 2,679 புகார்களும், கேரளாவில் பதிவாகி உள்ளன.ஒருபுறம், பெண்கள் கல்வியறிவு மற்றும் வேலை வாய்ப்பு சதவீதம் அதிகரிப்பு தொடர்ந்த போதும், சமூக அளவில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து, இன்னமும் கிடைக்கவில்லையோ என்ற கேள்வி தொடரத்தான் செய்கிறது.

சிறுமியர் கடத்தல் குறைவு:தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில், கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைகள் இறக்குமதி, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதியப் படுகின்றன. பெண்கள் வன்கொடுமைச் சட்டம் வந்த பிறகு, இதர சட்டப் பிரிவுகளுடன் சேர்த்து, இப்பிரிவின் கீழும் வழக்கு பதியப் படுகிறது.சினிமா மோகத்தில் உள்ள சிறுமியரை, வேறு மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள், முந்தைய காலகட்டங்களில் அதிகளவில் நடந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், இதுபோன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.மேலும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் குறித்த புகார்களின் எண்ணிக்கையும், கணிசமாக குறைந்துள்ளன.ஒட்டு மொத்த புகார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைப் போல், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை, 14 ஆயிரத்து, 197 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில், ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்குகள் எண்ணிக்கை மட்டும், 13 ஆயிரத்து, 100. இவற்றில், 271 வழக்குகள், நீதிமன்றம் மூலம் தீர்வு காணப் பட்டுள்ளது.ஆண்டுதோறும், 6,000க்கும் மேற்பட்ட புகார்கள், காவல் நிலையத்திற்கு வரும் நிலையில், உடனடி தீர்வு காணாத பட்சத்தில், வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தான் செய்யும். கடந்தாண்டு இறுதி வரை, 5,012 புகார்கள் மீதான வழக்குகள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

கற்பழிப்பு, பாலியல் கொடுமை குறைவு!
குற்றம் 2009 2010 2011
கற்பழிப்பு 596 686 677
மானபங்கம் 1,242 1,405 1,467
கடத்தல் 1,113 1,464 1,743
வரதட்சணை மரணம் 194 165 152
கணவன் கொடுமை 1,460 1,570 1,812
பெண்குழந்தைகள் இறக்குமதி 0 0 0
வரதட்சணை தடுப்பு சட்டம் 207 199 195
பாலியல் கொடுமை 851 638 464
மொத்தம் 5,683 6,127 6,510


ஆண்டு நிலுவை வழக்குகள் 
2009 12,374
2010 12,653
2011 13,926

சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி !



\தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நூற்றாண்டு மாளிகை புதிய கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு சினிமா நூற்றாண்டு மாளிகை கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. இதனை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும் இந்த சபைக்கு புதிதாக கட்டப்பட இருக்கும் இன்னொரு கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நானும் இச்சபையில் நடந்த விழாக்களில் பங்கேற்று இருக்கிறேன். அதிலும் குறிப்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றது மறக்க முடியாதது.  இச்சபை திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், இத்துறையைச் சேர்ந்த அனைத்து பிரிவினரின் நலனுக்கும் பாடுபட்டு வரும் ஒரு சிறந்த அமைப்பு. இந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பல நூற்றாண்டுகளை கடந்து திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இப்போது புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்தின் திறப்பு விழாவை நேரில் வந்து திறந்து வைக்கிறேன் என்று கூறினார். முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர், இப்ராஹிம் ராவுத்தர், தாணு, முரளிதரன், டி.சிவா, அன்பாலாயா பிரபாகரன், சித்ரா லெட்சுமணன், ஞானவேல் ராஜா, ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

விற்பனையால் 11.62 பில்லியன் லாபம் ஆப்பிள்!

ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக விளக்கும் ஆப்பிள் நிறுவனம் காலத்திற்கு ஏற்றவாறு பல புதுமைகளை புகுத்தி வருகிறது. சமீபத்திய அந்த நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இப்படியே உயர்ந்து கொண்டு போனால் 2014ம் ஆண்டில் உலகின் 1டிரில்லியன் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த நிறுவனத்தின் லாபம் 11.6 பில்லியனாக இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் 5.98 ஆக இருந்துள்ளது. கடந்த 3மாதங்களில் ஐ-போன் மற்றும் ஐ-பேட்கள் அதிகளவு விற்பனையால் இவ்வளவு லாபம் பெற்றிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் 2ம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 35.1 மில்லியன் ஐபோன்களையும், 11.8 மில்லியன் ஐ-பேட்களையும் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.18 பில்லியனாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 64 சதவீதம் அதிகமாகும். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...