|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 February, 2012

சி அறையில் 420 தங்க குடங்கள்!


திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் சி அறையில் 3 கிலோ எடை கொண்ட 30 தங்க குடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் மேலும் 420 தங்க குடங்கள் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள சி பாதாள அறையைத் திறக்க மதிப்பீட்டுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 27ம் தேதி அந்த அறை திறக்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவினர் அங்கிருந்த தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்களை பிரித்து எடுத்தனர். அதன் பிறகு அவற்றிற்கு வரிசைப்படி எண்கள் கொடுத்து அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர்.

அப்போது சி அறையில் வைக்கப்பட்டிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்மநாப சுவாமியின் முகக்கவசம், தங்க அங்கி மற்றும் சிறப்பு பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டன. இது தவிர 3 கிலோ எடை கொண்ட 30 தங்க குடங்களுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறையில் மட்டும் 450 தங்க குடங்கள் இருப்பதாக கோவில் நிர்வாகம் மதிப்பீட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தனை குடங்களையும் கணக்கிட்டு மதிப்பீடு செய்ய மும்பையில் இருந்து நிபுணர் குழு வரவழைக்கப்படுகிறது. இந்த சி அறையில் இருக்கும் பொருட்களை மட்டும் மதிப்பீடு செய்ய 3 மாதங்களாவது ஆகும் என்று கூறப்படுகின்றது.

ஹெராயின் பயன்பாடு இந்தியா NO: 1




தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் ஹெராயின் போதைப் பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக ஐ.நா. சபையின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் டைரக்டர் ஜெனரல் ஓ.பி.எஸ். மாலிக் கூறியதாவது, ஹெராயின் போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து தெற்காசியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு கடத்தப்படுகிறது. தெற்காசியாவிலேயே இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 17 டன் ஹெராயின் பயன்படுத்தப்படுகிறது. அதன் மதிப்பு ரூ. 7,000 கோடி ஆகும்.

தெற்கு மற்றும் மேற்கிந்தியாவின் பெருநகரங்களில் உள்ள மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளது தான் இதற்கு காரணம். இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் ஹெராயின் இங்கிருந்து அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கைக்கு கடத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 7,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக ஓபியம் பயிரிடப்படுகிறது. இங்கு ஹெராயின் தவிர கொக்கைனுக்கும் மவுசு அதிகரித்துள்ளது என்றார்.கடந்த ஆண்டு 23 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப் பொருள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தை கொஞ்சம் வலுப்படுத்துங்கள்!


சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்று பொது மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.சங்கரன்கோவில் இடைத் தேர்தலையொட்டி நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, ஒரு கோடி... ஒன்றரை கோடி என்று உங்களிடம் (முதல்வர் ஜெயலலிதா) நிதி கொடுக்கிறார்களே அமைச்சர்கள்?. இந்தப் பணம் எப்படி வந்தது?. வெளிப்படையாகவே அவர்களால் இவ்வளவு பணம் கொடுக்க முடிகிறதென்றால், இதைவிட நூறு மடங்கு உங்களுக்கு கப்பம் கட்டினார்களா?.

திமுக அரசில் நிர்வாகச் சீர்கேடு என்றீர்களே. இப்போது உங்கள் ஆட்சியிலும் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்களே... ஆனால், சென்னையைச் சுற்றிலும் பெரும் தொழிலதிபர்கள் நடத்துகின்ற நிறுவனங்களுக்கு இந்த அளவுக்கு பாதிப்பில்லையே.. ஏன்?. எந்தக் கப்பம் உங்கள் தோட்டத்துக்கு வந்து சேர்கிறது?. பிரேக் இல்லாத வாகனமாகச் சென்று கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி. அதற்கு பிரேக் போடவேண்டும் இந்தத் தொகுதி மக்கள். வெற்றி பெற்று பிரேக்கை இயக்குபவராக இருப்பார் எங்களின் வேட்பாளர் சதன் திருமலைக்குமார். என் கொள்கையில் தவறு இருந்திருக்கலாம். எங்கள் அணுகுமுறையில் விமர்சனம் எழுந்திருக்கலாம். ஆனால் என் சொந்த வாழ்க்கையினை சுகபோகம் ஆக்கிக் கொள்வதற்காக நான் இம்மியளவும் நெறி தவறியதில்லை. இங்கே சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்றார்.

சீன பொருளாதாரம் படிப்படியாக சரியும் உலக வங்கி!


சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னும், 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் அறிவுரையை ஏற்பதாக சீனாவும் தெரிவித்துள்ளது. கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது. இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசரி, 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. கடந்த 2011ல், 8.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, 2026 - 2030க்குள் 5 சதவீதம் என்ற அளவிற்கு குறையும். இந்த வீழ்ச்சி விகிதத்தை தாமதப்படுத்துவது தான் சீனாவின் மிகப் பெரிய சவால். இதற்காக தற்போதைய பொருளாதார கொள்கைகளில் இருந்து மாறி, விரைவில் புதிய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசு நிறுவனங்களை விலக்கிவிட்டு, தனியார் மயமாக்கலுக்குத் தயாராக வேண்டும். சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். வங்கிகளை வர்த்தகமயமாக்கல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், நில வருவாயில் உள்ளூர் அரசுகளைச் சார்ந்திருத்தலைக் குறைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை சீனா மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் தான் சீன சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர் லீ கீகியாங், "பொருளாதார மாற்றத்தை சீனா ஏற்கனவே துவங்கிவிட்டது. நீண்ட கால நிலையான பொருளாதார வளர்ச்சி, சமூக பொருளாதார மேம்பாடு இவற்றில் சீனா கவனம் செலுத்தி வருகிறது' என்றார்.

இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு!

முத்தரப்பு தொடரில் இன்னும் ஒரு லீக் போட்டி மீதமுள்ளது (மார்ச் 2, ஆஸி-இலங்கை). இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா (19 புள்ளி), இந்தியா (15), இலங்கை (15) அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடைசி லீக் போட்டியில் இலங்கை வெல்லும் பட்சத்தில், இந்திய அணி வெளியேற நேரிடும். மாறாக ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது இத்தொடர் விதிப்படி, இரு அணிகள் மோதிய 4 போட்டியில் இந்திய அணி 2ல் வெற்றி பெற்றுள்ளதால், பைனலுக்கு சென்று விடும். 

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று. 40 ஓவரில் 321 ரன்கள் தேவை என்ற நிலையில், சச்சின், சேவக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இதை கோஹ்லி, காம்பிர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தியதே வெற்றிக்கு காரணம். பைனலுக்கு முன்னேற இனி எங்கள் கையில் எதுவும் இல்லை,'' என்றார்.

எங்கள் பக்கம் இந்தியா?


சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போவதாக உறுதியளித்துள்ளது என இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைக் கவுன்சிலின் 19 வது கூட்டம் துவங்கியது. கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய கமிஷனர் நவநீதம் பிள்ளை, தனது உரையில் இலங்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. சிரியா விவகாரம் தற்போது சூடுபிடித்திருப்பதால் அது பற்றி மட்டுமே குறிப்பிட்டார். எனினும், கவுன்சிலுக்கு அளிக்கப்படும் பரிந்துரையின் அடிப்படையில், உறுப்பு நாடுகளில் ஆய்வு செய்யும் சர்வதேச அமைப்பு எதையும் கவுன்சில் உருவாக்கவில்லை என்று மட்டும் தெரிவித்திருந்தார்.

என்ன தீர்மானம்? இலங்கை அரசு நியமித்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும், அவ்விதம் இலங்கை செயற்படுத்தாத போது, இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்றை அமைத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரியும், அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கவுன்சிலில் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இத்தீர்மானம் மார்ச் இரண்டாம் வாரத்தில் தாக்கலாகலாம் எனத் தெரிகிறது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஆகியவை ஆதரவளிக்கும் எனவும் தெரிகிறது.

இலங்கை தொடர் பிரசாரம்: இந்த ஆதரவை முறியடிக்கும் விதத்தில், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஒரு வாரத்திற்கு முன்பே ஜெனீவா சென்று அங்கு சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். இலங்கை அமைச்சர்கள் மேலும் சிலர், ஆப்ரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டனர். அதிபர் ராஜபக்ஷேவும், சிங்கப்பூர், பாகிஸ்தானுக்குச் சென்று வந்தார். இந்நிலையில், அமைச்சர் பீரீஸ் மீண்டும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அவசரமாக சென்றுள்ளார் என இலங்கை பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

அமைச்சர்கள் பேச்சு: நேற்று முன்தினம் ஜெனீவா கூட்டத்தில் பேசிய இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க,"தீர்மானத்தை தோற்கடிப்பதில் இந்தியா எங்களுக்கு நிச்சயம் உதவும் என நம்புகிறோம். எல்.எல்.ஆர்.சி., பரிந்துரைகளை ஏற்கனவே அமல்படுத்தத் துவங்கி விட்டதால் அதுகுறித்து ஒரு தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை' எனத் தெரிவித்தார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டியில், "இவ்விவகாரத்தில் இந்தியா எங்கள் பக்கம் இருக்கிறது. இதுகுறித்து இந்தியாவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது. இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என 100 சதவீதம் நம்புகிறோம்' என்றார். இதே கருத்தை, அமைச்சர் திஸ்ஸ விதரணவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு ஆதரவாக, இலங்கைக்கு இந்தியா துரோகம் செய்யாது எனக் கூறியுள்ளார். இலங்கை கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இதுகுறித்துக் கூறுகையில்,"மேற்குலக நாடுகளின் தீர்மானத்தைத் தோற்கடிக்க ஆதரவு தருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி உறுதியளித்துள்ளார்' என்றார்.

ஆர்ப்பாட்டங்கள்: அதேநேரம், தீர்மானத்தை எதிர்த்து இலங்கை முழுவதும் நேற்று முன்தினம் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என மக்களை அரசு நிர்பந்தப்படுத்தி வரச் செய்ததன் மூலம் தனது குறைகளை மறைக்க முயல்வதாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இத்தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு சரிவரத் தெரியாத நிலையில் இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு இந்திய அரசியல் உலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பிரதமருக்கு வைகோ கடிதம்: ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து எழுதியிருப்பதாவது: இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மகிந்த சமரசிங்கே கூறியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்திய ஐகமிஷனர் அசோக் கே. காந்தா, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து, இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் உண்மை தான் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா இழைக்கப் போகும் மன்னிக்க முடியாத மாபெரும் வஞ்சனையாக இது இருக்கும். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்குமானால், தமிழர் இனப் படுகொலைக்கு எதிரான கூட்டுக் குற்றவாளியாக இந்தியா நிற்க வேண்டி வரும். இவ்வாறு வைகோ அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாணவி ஸ்டெல்லாமேரி இந்த ஆண்டிற்கான சிறந்த சாரணர் இயக்கத்தினருக்கான ஜனாதிபதி விருது!


மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி ஸ்டெல்லாமேரி இந்த ஆண்டிற்கான சிறந்த சாரணர் இயக்கத்தினருக்கான ஜனாதிபதி விருது பெற்றார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் விருதை இவருக்கு வழங்கினார். ஸ்டெல்லாவை முதன்மை கல்வி அலுவலர் நாகராஜன், சாரணர் இயக்க பொறுப்பாளர் ரோணிக்கம், தலைமை ஆசிரியை நிர்மலா பாராட்டினர்.

இதே நாள்...


  • முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த தினம்(1896)
  •  பின்லாந்து, குளிர்காலப் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி முயற்சிகளில் இறங்கியது(1940)
  •  செயின்ட் பீட்டஸ்பர்க், புளோரிடா ஆகியன இணைக்கப்பட்டன(1892)
  •  ஹிலிகோலாந்து தீவு மீண்டும் ஜெர்மனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது(1952)

விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம்!

இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர். போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். விடுதலைப்புலிகள் பற்றிய ‘ஜப்னா’ படம் அரசியல் திரில்லர் கதையாக உருவாகிறது என்று தெரிவித்துள்ளார் அவர்.

2030 ல் இந்தியா இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும்.


வருகிற 2030 ஆம் ஆண்டு இந்தியா,இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக உலகின் முன்னணி சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான பி.பி. நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் ரஹ்ல் கூறியதாவது:  வரும் 2030 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் இந்தியாவும், சீனாவும் 35 விழுக்காட்டை கொண்டிருக்கும் என்பதால் இவ்விரண்டு நாடுகளும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளாகவும்,அதிக நுகர்வோர்களை கொண்டதாகவும் இருக்கும்.  மேலும் 2030 ஆம் ஆண்டு இந்தியா இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும்.அதன் 47 விழுக்காடு எரிவாயு தேவை மற்றும் 97 விழுக்காடு எண்ணெய் தேவை ஆகியவை இறக்குமதி வழியே பூர்த்தி செய்யப்படும்.  40 விழுக்காடு நிலக்கரி தேவைப்பாடு இறக்குமதியையே சார்ந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

24வது நாளாக ‌நீடி‌க்கு‌ம் அரசு சித்த மருத்துவ மாணவர்கள் போரா‌ட்‌‌ட‌ம்!

முதலாமாண்டு வகுப்புகளைத் திறக்ககோரி நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்க‌ளி‌ன் தொடர் உள்ளிருப்பு போராட்ட‌ம் 24வது நாளை எ‌ட்டியு‌ள்ளது. ஆனா‌ல் மாணவ‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌த்தை த‌‌‌மிழக அரசு க‌ண்டுகொ‌ள்ளவே இ‌ல்லை.  முதலாமாண்டு வகுப்புகளைத் திறக்கக்கோரி, நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டு வரும் உள்ளிருப்புப் போராட்டம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த போரா‌ட்‌ட‌ம் இ‌ன்று 24வது நாளை எட்டியுள்ளது.  த‌ங்க‌ளி‌ன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தைக் கை விடப்போவதில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளன‌ர்.  இதனடையே இந்த பிரச்னை குறித்த வழக்கு செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...