|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 June, 2011

இதே நாள்...


  • ருமேனியா கொடி நாள்

  •  சோமாலிலாந்து விடுதலை நாள்

  •  மடகஸ்கார் விடுதலை நாள்

  •  இந்திரா, இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(1975)

  • இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்!


    போதைப்பொருள், சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி "சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

    போதைப்பொருட்களை பயன்படுத்துதல், போதைப்பொருட்களை கடத்துதல், போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. தினமும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடக்கின்றன. புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போதைப்பொருட்களை கும்பல் கடத்துகிறது.

    போதைக்கு அடிமை ஹெராயின், அபின் , கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் உலகில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தி, அவர்களை மட்டுமல்லாமல், தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றனர். சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு, அதற்கு அடிமையாகி உள்ளனர். இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயம். இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி அப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

    439 கோடி: உலகளவில் 15 வயது முதல் 64 வயது உள்ளவர்களில் போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியே 90 லட்சம். இதில் வாழ்க்கையில் ஒருமுறையாவது போதை மருந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25 கோடியே 10 லட்சம். மொத்தமாக 439 கோடியே 60 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என ஐ.நா., சபை போதைப்பொருள் குற்றப்பிரிவு சார்பில் 2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போதைப் பொருளால் சமூகம் எவ்வாறு சீரழிந்து வருகிறது என்பதை காட்டுகிறது. அரசு ஒருபுறம் இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும், இச்செயலில் ஈடுபட்டோர் தானாக மனம் திருந்தி இதிலிருந்து விடுபட இந்நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    சமூக அவலத்தின் உச்சிக்கு சென்றோம்... மறுபிறவி எடுத்தோம்: "போதையின் பாதையில்' இருந்து மீண்டவர்களின் வடிகால்
    ஆண்... இனிய இல்லத்தின் தூண். குடும்பத்தை வழிநடத்தும் "ஆணிவேர்'. ஆணிவேர் நன்றாக இருக்கும் வரை, குடும்பமும் நன்றாக இருக்கும். மது, கஞ்சா, சிகரெட்... என ஆண்களை சீரழித்து, அவர்தம் குடும்பங்களை சீர்குலைக்கும் விஷயங்கள் சமுதாயத்தில் அதிகம். நல்ல வேலையை இழந்து, மனைவியிடம் மதிப்பிழந்து, பிள்ளையிடம் மரியாதை இழந்து, சமுதாயத்தில் பெயர் இழந்து, "மனிதன்' என்ற தகுதியை மொத்தமாக இழக்கச் செய்துவிடுகிறது "போதை'. போதையின் பாதையில் சென்று, மறுவாழ்வின் மூலம் குடும்பத்துடன் சந்தோஷமாக இணைந்த ஆடவர்களின் அனுபவங்கள், நம் ஒவ்வொருவருக்கும் பாடம். போதை எதிர்ப்பு தினமான இன்று இவர்கள் மீண்ட கதையை படிப்போம்...

    பாலகிருஷ்ணன் (சம்மட்டிபுரம், மதுரை): எம்.ஏ.,பி.எட்., முடித்து ஆசிரியராக பணியாற்றினேன். திருமணம் முடிந்த மூன்றாமாண்டு வரை மது, சிகரெட் பழக்கம் இல்லை. நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் மது குடித்தேன். சுவை பிடிக்கவே, தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தேன். வேலை போய்விட்டது. குடிப்பதற்காக ஏதாவது வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பரம்பரையாக பேக்கரித் தொழில் செய்ததால், ஓட்டலில் வேலை செய்தேன். வீட்டில் யாரும் மதிக்கவில்லை. தொடர்ந்து குடித்ததால், பசியும் மறத்து போய், உடல்நலம் கெட்டது. வீட்டில் இருந்த "குக்கரை' விற்று குடித்தேன். அதன்பின் "திரிசூல்' அமைப்பைப் பற்றி கேள்விபட்டு, சிகிச்சை பெற்றேன். மூன்றாண்டு கால இலவச சிகிச்சைக்கு பின், நன்றாக இருக்கிறேன். தற்போது பேக்கரி வேலையில் தான் இருக்கிறேன். வருமானம் குறைவாக இருந்தாலும், மது பழக்கத்தை விட்டதால், குடும்பமே நிம்மதியாக இருக்கிறது.

    வாசுதேவன் (முகுகுளத்தூர், ராமநாதபுரம்): பி.ஏ., டி.கோப்., முடித்து, 1994 ல் கூட்டுறவு சங்கத்தில் உதவி செயலாளராக பணியில் சேர்ந்தேன். அதுவரை எந்த பழக்கமும் இல்லை. கூடா நட்பால் மது பழக்கத்திற்கு அடிமையானேன். 2000ல் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். கட்டப்பஞ்சாயத்தில் துவங்கி, சிறுசிறு வேலை செய்தேன். வீட்டுக்காக இல்லை, குடிப்பதற்காக தான். குடிக்கும் வரை ஒன்றும் தெரியாது. காலையில் எங்கேயாவது தெருவில் விழுந்து கிடப்பதை நினைத்தால், "எனக்கே என்னை பார்த்தால் அவமானமாக இருக்கும்'. குடிப்பழக்கத்தை விடமுடியாமல் தவித்தபோது, இலவச சிகிச்சை மையத்தை பற்றி கேள்விபட்டேன். மனைவியிடம் பேசி, என்னை சேர்க்க சொல்லி வற்புறுத்தினேன். 2008ல் மீண்டும் வேலை கிடைத்தது. மூன்றாண்டு தொடர் சிகிச்சைக்கு பின், மனிதனாக மாறியுள்ளேன்.

    போதையால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, மனநல டாக்டர் ஆர். ரத்னவேல் கூறியதாவது: போதை என்பதும் ஒருவித நோய் தான். மது, ஊக்கமருந்து, கஞ்சா, கொக்கோ, ஒயிட்னர், தின்னர், புகையிலை, பீடி, சிகரெட், மயக்க, தூக்க மருந்துகள், வலி நிவாரணிகள் அனைத்துமே போதை ஏற்படுத்தக் கூடியவை. மருந்துகள் அனைத்துமே நோயை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதை அளவுமீறி பயன்படுத்தி, போதை மயக்கத்திற்கு ஆட்படுகின்றனர். பெரியவர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் கூட இப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர். ஒயிட்னர், தின்னர், நகப்பாலீஷ், இருமல் மருந்து, மயக்க மருந்துகளை மாணவர்கள் பயன்படுத்துவது முதலில் தெரியாது. அதற்கு அடிமையாகும் போது, பதட்டம், சந்தேகம், காதில் யாரோ பேசுவது போன்ற தோற்றம், தனிமையை விரும்புவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். கையில் காசு இல்லாத போது, வீட்டில் பொருட்களை திருடுவர். இளம் குற்றவாளிகள் உருவாவதற்கு இதுவும் காரணம். போதை பழக்கத்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடலும், மனதும் பாதிக்கப்படும். முறையான, தொடர் சிகிச்சையின் மூலம் யாரையும் நல்வழிப்படுத்தலாம்

    மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!

    சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஜூன் 26ம் தேதி சென்னை கடற்கரையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்துமாறு அனைவருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பாமக, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையில், மனிதகுல வரலாற்றில் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுதான் சிங்கள அரசு இலங்கைத் தீவில் நடத்திய தமிழ் இனப் படுகொலை ஆகும். கடந்த ஐம்பது ஆண்டுக்கால துன்பங்கள் சூழ்ந்த தமிழ் ஈழ மக்களின் வாழ்வில், இலட்சக்கணக்கான தமிழர்கள், குறிப்பாக, 2009ம் ஆண்டில் மட்டும், 30,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 1,40,000 தமிழர்கள், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலைக்கு உள்ளானதை நினைக்கும் போதே நெஞ்சில் வேதனைத் தீ எரிகிறது. 80,000க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டு உள்ளனர்.

    அது மட்டும் அன்றி, தாய்த் தமிழகத்து மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்தி வந்த தாக்குதல்களில், 543 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; 2000 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்; 700 மீனவர்களைக் காணவில்லை. சிங்கள அரசின் இனப்படுகொலையால் பலியான தமிழர்கள், உயிர்நீத்த தாய்த் தமிழகத்து மீனவர்களுக்கு நினைவேந்தல் செய்திடும் வகையில், சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை கடற்கரையில், கண்ணகி சிலை அருகில், மெழுகுவர்த்திகள் ஏந்தி, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கு பெற மே 17 இயக்கம் என்ற அழைப்பு விடுத்து உள்ளது.

    மெழுகுவர்த்தி எரிந்து ஒளி தருதல் போல, தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டு, தமிழ் ஈழ விடுதலை உணர்ச்சித் தீயை தமிழர் மனங்களில் வளர்த்த முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி, மெழுகுவர்த்தி ஏந்திடும் நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும், கழகக் கண்மணிகளும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் இன உணர்வாளர்கள் இதில் பங்கு ஏற்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளனார்.

    பழ.நெடுமாறன் கோரிக்கை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது.

    ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது சிறப்புக்குரியது. இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    பாமகவும் அழைப்பு: பாமக இணை பொதுசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஒன்றுபடாமல் எந்தபோராட்டமும் வென்றதில்லை மிகவிரைவாக முன்னேறிகொண்டிருக்கும் இந்த அறிவியல் உலகத்தில் ஒரு இனம் தன் சொந்தமண்ணை இழந்து . தாய் மகனை இழந்து மகன் தாயை இழந்து , பெண்கள் கற்பை இழந்து முள்வேலி முகாம்களுக்குள் அடைபட்டு மானம் ஒன்றே பிரதானம் என்று வாழ்ந்த இனம் இன்று ஒரு வேளை சோற்றுக்கு சிங்களவனிடம் கையேந்தி நிற்கிறது.

    அறவழி போரட்டத்தில் 35 ஆண்டுகள் போராடியும் கிடைக்காத உரிமைகள் ஆயுத போராட்டத்தின் மூலமாக பெறலாம் என்று இன விடுதலைக்கு போராடிய உன்னத தலைவனை 20க்கும் மேற்பட்ட நாடுகளின் துணையோடு வெற்றி பெற்று விட்டோம் என்று கூவி கொண்டிருக்கும் இனபடுகொலையாளன் ,போர்குற்றவாளி ராசபக்ச. அத்துடன் இல்லாமல் இன்று வரை தாய் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 மீனவர்கள் சிறீலங்காக் கடற்படையால் கொல்லப்பட்டது ராசபக்ச மற்றும் சிறீலங்கா சிங்கள இனவாத தலைமையினால் மட்டுமே.

    மேலும் நாம் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் உலக வரலாற்றில் தமிழனுக்கு இனி இழிநிலை தான் என்று வரலாறு நம்மை பழிக்க கூடாது. அடுத்தவர் வீட்டில் துக்க நிகழ்வென்றால் நாம் அதை அந்த துக்கத்தை பகிர்வது கிடையாதா?, ஒரு இனத்தையே அழித்திருக்கிறார்கள் கொல்லபட்டவர்களின் உறவுகளுக்கு துயர் துடைக்க வேண்டாமா?, அவர்களுக்கு நீதீ கிடைக்க வேண்டாமா? இதற்கு குரல் கொடுக்க தமிழனாக இருக்க வேண்டும் என்றில்லை மனிதநேயம் கொண்டவராக இருந்தால் போதும்.

    வெறும் 4 லட்சம் மக்கள் தொகையை கொணட ஒரு இனம் நாடு அடையும் போது 10 கோடி தமிழர்கள் சேர்ந்து தமிழீழத்தைஅடைய முடியாதா என்ன? இப்போது நடக்கும் போராட்டங்களில் உலகதமிழர்களில் 10 சதவீதம் கூட வீதியில் இறங்கி போராட வரவில்லை. தமிழனுக்கும் தமிழுக்கும் பிரச்சனை என்று வரும்போது ஒன்றிணைந்தால் நம்மை யாராவது வீழ்த்த முடியுமா? நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இதற்காக நாம் நிச்சயமாக ஒன்று கூடி போராடித்தான் ஆகவேண்டும்.

    வாருங்கள் சொந்தங்களே நம் இனவிடுதலைக்காக , தமிழனுக்கென்று உலக வரைபடத்தில் ஒரு நாடு உருவாக , பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நியாயம் கிடைக்க வாருங்கள் ஜூன் 26 மாலை 4 மணிக்கு ஐ.நா. சர்வதேச சித்திரவதைகளுக்கான எதிரான தினத்தில் மெரினா கடற்கரையில் மே 17 இயக்கம் நடத்தும் இந்த நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உலகத்தை திரும்ப செய்வோம் என்று கூறியுள்ளார்.

    சீமான் கோரிக்கை: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆகியோர் தாம் பெருமளவிற்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அப்படிப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியூம் சித்ரவதை மானுடத்திற்கு ஒவ்வாத நடவடிக்கை என்பதை உலகிற்கு உணர்த்தவூம் இந்நாள் ஐ.நாவால் கடைபிடிக்கப்படுகிறது.

    “சித்ரவதையென்பது மனித உரிமைக்கும் மனித நேயத்திற்கும் எதிரான பயங்கரத்தின் திட்டமிட்ட வடிவமாகும் சக மனிதனை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமான துன்பத்திற்கு ஆளாக்குவதாகும்“ என்று சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனம் கூறுகிறது. 1984 ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐ.நா. அவையால் வெளியிடப்பட்ட சித்ரவதைக்கு எதிரான பிரகடனத்தில் இலங்கை இந்தியா உள்ளிட்ட 147 நாடுகள் கையெழுத்துட்டுள்ளன. இலங்கை 1994ம் ஆண்டு இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டது.

    ஆனால் இந்த நாடுதான் சித்ரவதையை ஈழத் தமிழர்களுக்க எதிரான ஒடுக்குமுறையின் முதன்மை ஆயூதமாக இன்று வரை பயன்படுத்தி வருகிறது. உடல், மனரீதியாக பாதிப்பது பட்டினி போடுவது, சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்தல், வெள்ளை வேன்களைக் கொண்டு கடத்தல், காணடித்தல் குடும்பத்தினரை பிரித்தல், மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைக் கொண்டு கைது செய்வது விசாரணை என்ற பெயரில் சித்திரவதைச் செய்வது என அந்நாட்டின் பூர்வீக இனத்தையே வதைத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது ராஜபக்ச இனவெறி அரசு. போரின் போதும், போர் முடிந்த பின்னரும் வன்னி முகாம்களில் இத்தகைய வதைகளை இலங்கை அரசு வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறது.

    இரண்டரை ஆண்டுக்காலப் போரில் சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான ஆயூதங்களை பயன்படுத்தி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுக் குவித்தது அந்த இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசாலும் ராணுவத்தாலும் தொடந்து வதைபட்டு வருகின்றனர். தொடர் சித்திரவதை, கற்பழிப்புகள், கடத்திக் காணடித்தல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி மன உளைச்சலை அதிகரித்தல் என்று பலவழிகளிலும் ஈழத் தமிழினம் இன்று சிங்கள இனவெறியின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

    சிங்கள அரசின் மனிதாபிமானமற்றப் போக்கிற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மீனவர்களையும் சிங்கள் கடற்படை கால் நூற்றாண்டுக் காலமாக நடுக்கடலில் படுகொலை செய்தும் கண்ணியக் குறைவாக நடத்தியும் வதைத்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிங்கள கடற்படை கை கால்களை வெட்டி கொன்றதை விட வேற என்னா அத்தாட்சி வேண்டும்?.

    எனவே இலங்கை அரசின் தமிழின வதை போக்கை தோலுறுத்துக் காட்டும் முகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்போம். சிங்கள அரசின் இருண்ட இனவெறிச் சித்திரவதைக் கூடங்களை உலகம் இந்த ஒளியின் வழி காணட்டும். இந்த ஒளி ஈழத் தமிழருக்கு விடுதலையையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன பிடி உரிமையையும் பெற்றுத் தரும் பாதையை காட்டட்டும் என்று கூறியுள்ளார்.

    கொடுமைகளை செய்த ராஜபக்சே தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா ? மாநாட்டில் வைகோ பேச்சு


    மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு இன்று திருச்சியில் ஹோட்டல் பெமினாவில்  நடைபெற்றது.  அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள்.  அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது.   21 தலைப்புகளில்  21 வழக்கறிஞர்கள் பேசினார்கள்.இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார்.

    அவர்,   ‘’நடந்து முடிந்த தேர்தல் இயக்கத்துக்கு சோதனையான காலம். நமக்கு துரோகம்
    இழைக்கப் பட்டபோது  கழக வழக்கறிஞர்கள் நீங்கள் தான் தேர்தலை புறக்கணியுங்கள் என்று சொன்னீர்கள்  மிக துணிவான முடிவு உங்களால் தான் எடுக்க முடிந்தது.நமது இயக்கத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டது... நாம் சுயமரியாதை இயக்கத்தின் அடையாளம்....

    ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்...எத்தனையோ கஷ்டங்களை  சந்தித்துவிட்டோம்...இனி நமக்கு வசந்தம் வீசும்....  தனி நாடு கேட்டார் பெரியார்...சுய ஆட்சி கேட்டார் அண்ணா .... நாங்கள் அப்படி கேட்கவில்லை....  ஆனால்
    இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்....

    ஈழத்தின் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது...ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள்... என் இனம் அழிக்கப்பட்டபோது  பிரிட்டன் , இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது... நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா,மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே .... எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று   கேட்கமாட்டோமா?

    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான்...ஆனால் என் தமிழக மீனவன்
    543  பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா .....எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது. குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு ... என் தமிழக மீனவன் இலங்கை சிங்கள அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு...   சேனல் 4  ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது...பல கொடுமைகள் நடத்தப்படும்  காட்சிகளை இங்கிலாந்து பார்லிமென்ட் பார்க்கிறது... இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சே  தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா..   இசை ப்ரியாவை கொடுரமாக கேங் ரேப் செய்து கொள்கிறார்கள் ... அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் சிங்கள காடையர்கள்... ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள்... இதற்க்கு தீர்வு என்ன...சுதந்திரமான தனி ஈழம் தான்... அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும்... என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்..

    உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு  எடுத்து உருவாகிநீர்கள்... ஈழம் எப்போது.... சேனல் 4  ஒளி பரப்பிய காட்சிகளை கொண்டு போய்  அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள்.... நாம் என்ன தவறு செய்தோம்   தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா ?      வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம்...தன் மானத்தோடு வாழ்வோம்....’’ என்று பேசினார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...