|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 October, 2011

இதே நாள்...


  • ஈராக் விடுதலை தினம்(1932)
  •  ‌கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
  •  செர்பியா, குரொவேசியா, சிலவேனியா இணைக்கப்பட்டு, யூகொஸ்லாவிய ராஜ்ஜியம் என பெயரிடப்பட்டது(1929)
  •  ஐக்கிய ராஜ்ஜியம், வெற்றிகரமாக அணுஆயுதச் சோதனையை நடத்தியது(1952)
  •  அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது(1985)
  • ஐஐடிகளுக்கு தகுதி குறைவான மாணவர்கள் வருகின்றனர் நாராயணமூர்த்தி!

    ஐஐடிகளில் படித்துவிட்டு வெளியேறும் பொறியாளர்களின் தகுதி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய இன்ஃபோசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, இதுபோன்ற மதிப்புவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை அனுமதி கோரும் மாணவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை மறுஆய்வுசெய்வது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

    நியுயார்க்கில் 'பான் ஐஐடி' உச்சிமாநாட்டில் முன்னாள் ஐஐடி மாணவர்களிடையே நாராயணமூர்த்தி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். சமீபகாலமாக பொறியியல் மாணவர்களைத் தயார்செய்யும் பயிற்சி வகுப்புகள் காரணமாக ஐஐடிக்களில் நுழையும் மாணவர்களின் தகுதி மிகவும் மோசமடைந்துள்ளது என நாராயணமூர்த்தி தெரிவித்தார். பெரும்பாலான மாணவர்கள் தங்களின் பணிகளிலும், உயர் வகுப்பு பயிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகுதி குறைந்தவர்களாகவே உள்ளனர் என அவர் கூறினார்.

    80 சதவீத மாணவர்கள் கூட்டு நுழைவுத் தேர்வு மூலமாக எப்படியோ இடங்களைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் ஐஐடிக்கள், பணியிடங்கள் அல்லது உயர்கல்விக்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களுக்கு அவர்கள் வரும்போது அவர்கள் திறமை பயன்படுத்தப்படக்கூடிய அளவில் நன்றாக இல்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். ஐஐடிக்கு மாணவர்களைத் தேர்வுசெய்வதில் புதிய முறையை ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

    ரத்தசோகையை குணமாக்கும் வாயுவிளங்கா வேர்!


    இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் வளரும் கொடி வகையினைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் வாயுவிளங்கா. இது வெண்மை மற்றும் பச்சை வண்ணமுடைய மலர்களைக் கொண்டது. இதன் இலைகள், வேர், வேர்பட்டை மற்றும் கனி விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: விதைகளில் எம்பிளின் எனும் ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. எஸ்ட்ரோஜென் மற்றும் புரோஎஸ்ட்ரோஜென் போன்றவற்றை உருவாக்க எம்பெளின் உதவுகிறது.நிமோனியாவிற்கு மருந்து: இளம் இலைகள் இஞ்சியுடன் சேர்ந்து வாய்ப்புண் மற்றும் நாட்பட்ட புண்களுக்கு கொப்பளிப்பாக உதவுகின்றன. வேர்பட்டையின் தூள் பல்வலிக்கு சிறந்த மருந்தாகும். வேர்ப்பட்டையின் களிம்பு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மார்பில் பூசப்படுகிறது. வேரின் கஷாயம் இருமல் மற்றும் வயிற்றுப் போக்கினைச் சரிப்படுத்தும். கனிகள் ஜீரணம் மற்றும் உடலின் நலம் தேற்றுதல், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றல், சீதபேதியினை கட்டுப்படுத்தல், தசைகள் சுருக்கியாக பலவகைகளில் பயன்படுகின்றன. ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றிலும் உதவுகிறது.குளுமை தரும் கனி: விதைகளின் பொடி வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. விதைகளின் வடிநீர் காய்ச்சல், தோல்நோய்கள், மற்றும் மார்புவலி போன்றவற்றில் பயன்படுகிறது. கருத்தடையாகவும் பயன்படுகிறது.கனியின் சதைப்பகுதி பேதி தூண்டும். கனியின் சாறு குளுமை தருவதுடன் வியர்வை தூண்டுவியாகும் மலம் இளக்கியாகவும் செயல்படுகிறது.

    பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம்!


    பிரியமானவளே' திரைப்பட பாணியில், 2 ஆண்டு தற்காலிக திருமண ஒப்பந்த சட்டத்தை, மெக்சிகோ நாட்டில் விரைவில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் திருமணம் செய்து கொள்வதும், உடனே விவகாரத்து கேட்பதும் சர்வசாதாரணம். விவகாரத்து வழக்கு நீதிமன்றங்களில் குவிந்து, கால விரயம் ஏற்படுகிறது. மெக்சிகோவில் ஒரின சேர்க்கை திருமணங்களையும் அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், திருமணங்கள் எதுவுமே அதிக ஆண்டுகள் நிலைத்து நிற்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் அமெரிக்காவை போலவே 50 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்த நிலையை களைய மெக்சிகோ நாட்டின் திருமண சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் முதலில் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். அந்த 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னும் சுமூகமான உறவு தொடந்தால், அந்த திருமண ஒப்பந்தத்தை மேலும் நீட்டித்து கொள்ளலாம். தம்பதியரிடையே சண்டை, சச்சரவுகள் எழுந்து மனமுடையும் நிலை ஏற்பட்டால், அந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாங்களாகவே பிரிந்து சென்றுவிடலாம். விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

    இதற்கு யாரும் நீதிமன்றத்திற்கு சென்று விவகாரத்து கேட்டு காத்திருக்க வேண்டியதில்லை. இதன்மூலம் நீதிமன்றத்தின் காலவிரயம் தவிர்க்கப்படும். இந்த சட்டத் திருத்தத்தை விரைவில் கொண்டு வர, நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தரப்பில் ஆதரவு கிடைத்துள்ளது. சில கிறிஸ்தவ சங்கங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால், கிறிஸ்தவ திருமணங்களில் ஏற்கப்படும் உறுதிமொழிகளில் ஒன்றான, மரணம் நம்மை பிரிக்கும் வரை சேர்ந்து வாழ்வேன் என்ற வாக்கியம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

    இந்த சட்டத்திற்கு சட்ட வல்லுநர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, இந்த சட்டத்திருத்தம் வந்தால், திருமண உறவின் தன்மை சிதைந்துவிடும். சட்டசபை உறுப்பினர்களின் பொறுப்பற்ற தன்மையே இந்த சட்டத்தின் மூலம் தெரிகிறது. ஒரின சேர்க்கை திருமண சட்டமே, திருமண உறவிற்கு விரோதமானது. இந்நிலையில் ஒப்பந்த திருமண சட்டமும் அமலுக்கு வந்தால், திருமணத்தின் மொத்த சிறப்பும் இழந்துவிடும், என்றனர்.

    நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாயின்!


    மரங்களால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. மழை கிடைக்கிறது. பழங்கள், மருந்து, விறகு, சுத்தமான காற்று போன்றவை கிடைக்கின்றன. மரங்களை விட மிக அற்புதமான விஷயம் உலகில் இல்லை. மரங்களை நேசியுங்கள். மரங்கள் இந்தப் பூமியையே காப்பாற்றும். இயற்கையை அழித்து முன்னேற வேண்டும் என்ற போக்கு நிறைய நாடுகளிடம் உள்ளது. இது அபாயகரமானது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செய்யப்படும் முயற்சிகளே உண்மையான முன்னேற்றங்களுக்கு அழைத்துச் செல்லும்’ இவை சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாயின் சொற்கள். இயற்கையை நேசித்து மரங்களின் அன்னையாக வாழ்ந்த வங்காரி மாத்தாய் கடந்த ஞாயிறன்று மரணமடைந்து விட்டார் என்ற செய்தி இயற்கை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சிகரமானதுதான்.

    மரங்களின் அன்னை: தான் வாய்ச் சொல் வீரர் அல்ல செயல் வீரர் என்பதை அநேக இடங்களில் நிரூபித்துக்காட்டியவர் வங்காரி. இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னை சுற்றுச்சூழல் சீர்கேடு. காடுகள் அழிக்கப்படுவதால் பூமியின் வெப்பம் உயர்ந்து, துருவப்பிரதேசங்களில் இருக்கும் பனி உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதனால் எண்ணற்ற நிலப்பகுதிகள் மூழ்கக்கூடிய அபாயம் எழுந்துள்ளது. இதனை தடுப்பது குறித்து உலக நாடுகள் இப்பொழுதுதான் யோசித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க 1980களிலேயே யோசிக்க ஆரம்பித்து, செயலில் இறங்கியவர் வாங்கரி மாத்தாய். 1977-ம் ஆண்டு முதல் 12 ஆப்பிரிக்க நாடுகளில் இவர் ஆரம்பித்த பசுமைப்பட்டை இயக்கம் 3 கோடி மரங்களை நட்டு வளர்த்துள்ளது.இயற்கையின் பறவை: வாங்கரி மாத்தாய் பிறந்தது கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில். கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காரணத்தால் 8 வயதில்தான் அவர் கல்வி கற்க ஆரம்பித்தார். 1960-ம் ஆண்டில் கென்யாவிலிருந்து 300 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதில் ஒருவராகப் படிக்கச் சென்றார். உயிரியல் துறையில் இளநிலை, முதுநிலை பட்டங்களை முடித்தார். அப்போது அவருக்குச் சுற்றுச் சூழல் மீது ஈடுபாடு வந்தது. இரண்டு மாதங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஜெர்மன் பேராசிரியர் ஒருவரிடமிருந்து மைக்ரோஅனாடமி என்ற புதிய துறையில் உதவி ஆராய்ச்சியாளராகச் சேர்ந்துகொள்ள அழைப்பு வந்தது. பேராசிரியரின் தூண்டுதலில் ஜெர்மன் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்தார்.1966-ம் ஆண்டு அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த வாங்கரி, மத்தாய் என்ற கென்யரைச் சந்தித்தார். இருவருக்கும் நட்பு உருவானது. 1969-ம் ஆண்டு இருவரும் நைரோபியில் திருமணம் செய்துகொண்டனர். வாங்கரியின் கணவர் அரசியலில் நுழைந்தார். முதல் மகன் பிறந்தான். 1971-ம் ஆண்டு அனாடமியில் பிஹெச்டி பட்டம் பெற்றார் வாங்கரி. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பிஹெச்டி பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு: வாங்கரி வேலை செய்த பல்கலைக்கழகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் வழங்க வேண்டும் என்று போராடினார். சுற்றுச்சூழல் இயக்கங்கள், கென்ய செஞ்சிலுவைச் சங்கம், பெண்கள் இயக்கம் என்று ஏராளமான இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் வாங்கரி. அப்போது கிராமப்புறப் பெண்களிடம் பழகியபோதுதான், அவர்களின் பொருளாதாரத் தேவைகள், விவசாயப் பிரச்னைகள், நிலத்துக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.கென்யாவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டபோது, வாங்கரிக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராமப்புறப் பெண்களுக்கு வருமானம்தான் முதல் பிரச்னை. அவர்களுக்கு வருமானம் அளிக்கும் நேரத்தில் மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்குச் சரியான வேலை மரம் வளர்ப்பது. கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்தார். மரக்கன்றுகளைக் கொடுத்து தங்கள் நிலங்களில் நடச் சொன்னார். ஓரளவு வருமானத்தையும் அளித்தார். தங்கள் நிலங்களில் மரங்கள் வைத்து முடித்த பிறகு, பிற இடங்களிலும் மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பெண்களே மரக்கன்றுகளை உருவாக்கும் பண்ணைகளை ஆரம்பித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தனர்.அரசுக்கு எதிரான போராட்டம்: அரசியல்வாதிகள், அரசாங்கம் போன்றவற்றைப் பகைத்துக்கொண்டதால் பலமுறை வாங்கரியும் அவருடைய இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள். 1992-ல் ரியோடிஜெனிரோவில் நடந்த ஐ.நாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற வாங்கரிக்கு அந்த மாநாட்டில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மிக மோசமான ஊழல் பேர்வழிகளாக இருந்தனர். அவர்களால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடு. காட்டில் உள்ள மரங்களை அழித்தனர். ஊழல் செய்யக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதாக இல்லை. அரசியல் அமைப்பை மாற்றினால் தவிர, வேறு வழியில்லை என்பதை வங்காரி புரிந்துகொண்டார்.பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்து 1997 தேர்தலில் வாங்கரி போட்டியிட்டார். அவரைப் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரப்பப்பட்டன. சில வோட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால் அவருடைய மனம் சோர்வடையவில்லை. பசுமைப்பட்டை இயக்கம் மூலம் அமைதிக்காக மரங்களை நடும் பணிகளில் கவனம் செலுத்தினார். 2002-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாங்கரி மாத்தாய் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்றது. வாங்கரி 98% வோட்டுகளைப் பெற்றார். சுற்றுச்சூழலுக்கான இணை அமைச்சராக 2005-ம் ஆண்டு வரை செயல்பட்டார். பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திவந்தார்.சுற்றுச்சூழலுக்கான நோபல்பரிசு: 2004-ம் ஆண்டு அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு வாங்கரிக்கு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு வென்ற முதல் ஆப்பிரிக்க பெண் மற்றும் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர் இவர். ’இந்தப் பரிசு எளிய மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எங்கள் உழைப்பு ஒருநாள் உலகை மாற்றும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார் வாங்கரி மாத்தாய். கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்களிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்றும் அவருடைய இயக்கம் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வங்காரி மாத்தாய், கடந்த ஞாயிறன்று செப்டம்பர் 25- ம் நாள் தனது 71ஆம் வயதில், நைரோபியிலுள்ள மருத்துவமனையில் மண்ணுலக வாழ்வை விட்டு பிரிந்தார். ஆப்பிரிக்காவில், மரங்களின் அன்னை என போற்றப்பட்டு வந்த வங்காரி மாத்தாயின் மரணம் உலகில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்காரியின் உடல் மரித்து மண்ணுக்குள் சென்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் விதையாய் மாறி விருட்சமாய் வளர்ந்து நிற்கும் என்பது உண்மை.

    டீத் தூளில் கலப்படத்தை ஒழிக்க முடியாது தென்னிந்திய தேயிலை வாரியம்!


    சில்லரை வணிகத்தில் தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் பேசினார். கோவை வெள்ளக்கிணறு தேயிலை வர்த்தக சங்க 29வது பொதுக்குழு கூட்டம், தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் கலந்து கொண்டு பேசியதாவது, தென்னிந்திய தேயிலைத் தூள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இவ்வாறு ஏற்றுமதியாகும் தேயிலைத் தூளை கேரளாவில் மதிப்பு கூட்டு வரி இல்லை என்பதால் கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து அனுப்புகின்றனர். தமிழகத்தில் ஏற்றுமதிக்கான மதிப்புக் கூட்டு வரி (வாட்) நடைமுறையில் உள்ளதால், வர்த்தகர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சில்லரை வணிகத்தில் தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும். நுகர்வோர்கள் தான் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 1998ம் ஆண்டு பதியப்பட்ட எஸ்டேட்டுகளில் தற்போது 9 விழுக்காடு நிலப்பரப்பு குறைந்து காணப்படுகிறது. தேயிலை எஸ்டேட்டாக பயன்படுத்தப்பட்ட நிலத்தை சிலர் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    அவ்வாறு வர்த்தக நோக்கத்துடன் பயன்படுத்தும் அந்த நிலங்களை தேயிலை வாரியம் திரும்ப எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் 6 தேயிலை கொள்முதல் மையங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் கொச்சி, கோவை, குன்னூரில் உள்ளன. இதில் இந்திய அளவில் கோவை 5வது இடத்தில் உள்ளது, என்றார்.

    புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்!


    நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் அளப்பறிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கிராமப்புறங்களில் வீட்டு தோட்டங்களில் விளைவிக்கப்படும் சுரைக்காய் உடலுக்கு சத்து தருவதோடு மருத்துவகுணம் நிறைந்துள்ளது. வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும் சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள்.

    இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

    சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் பாட்டில்கார்டு (Bottle Gourd) என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

    செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை சிறிதளவு உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் காணப்படுகின்றன.உடல்சூடு தணியும்: இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.உடலுக்கு புத்துணர்ச்சி: சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு பலவகையான இன்னல்களை ஏற்படுத்தும். இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.நாவறட்சி நீங்கும்: சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.பித்தத்தைக் குறைக்க: உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. மலச்சிக்கலைப் போக்கும்கண்நோய்கள் நீங்கும்: ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.தூக்கம் வரவழைக்கும்:  தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும். சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.யார் சாப்பிடக்கூடாது: சுரைக்காய் எவரும் பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும். சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக சுரைக்காயைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...