|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 November, 2011

பெண்ணிண் அக்கெளண்டுக்கு வந்த ரூ. 29 கோடி!

 உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள மோடிநகர் பகுதி பஞ்சாப் நேசனல் பேங்க் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெண்ணின் அக்கெளண்டுக்கு ரூ. 29 கோடி வந்ததையடுத்து அந்தக் கணக்கை வங்கியின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் உள்ள பாரத் குக்கிங் கோல் லிமிட்டட் என்ற பொதுத் துறை நிறுவனத்தின் ஸ்டேட் வங்கியின் கணக்கிலிருந்து இந்தப் பணம் அந்தப் பெண்ணின் கணக்குக்கு வந்துள்ளது. சமீபத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 68 செக்குகள் ஒரு தபால் நிலையத்திலிருந்து திருடப்பட்டன. இதில் ரூ. 70 மதிப்புள்ள ஒரு செக் மோடிநகர் பஞ்சாப் நேசனல் பேங்கில் ஒரு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு, அந்தப் பணமும் எடுக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடி குறித்து பஞ்சாப் நேசனஸ் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த ரூ. 29 கோடி பணம் பெண்ணின் அக்கெளண்டுக்கு வந்துள்ளது. இதுவும் எல்ஐசிக்கு சொந்தமான திருடப்பட்ட காசோலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மனபாரம் குறைய அழுவது நல்லது...



வாய்விட்டு சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கண்ணீர் விட்டு அழுவதும் மிகவும் ஆரோக்கியமானதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அழுவதன் மூலம் மனதில் உள்ள அழுத்தம் கண்ணீர் மூலம் வெளியேறிவிடுகிறது. கண்களில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. உடலுடன் உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணீர் வகைகள் சோகத்தில் அழுவது, சந்தோஷத்தில் அழுவது, எரிச்சலில் அழுவது, உணர்ச்சி வசப்பட்டு அழுவது என கண்ணீர் பலவகைப்படும். மனிதர்களைப்போல விலங்குகளும் கண்ணீர் விட்டு அழுகின்றன. எனவே அழுவதற்காக வெட்கப்படத்தேவையில்லை. அழுகை என்பது ஆரோக்கியமானதே என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணீர் உருவாகக் காரணமான லாக்ரிமல் சுரப்பி காய்ந்து போனால் கண் உலர்ந்து விடும். கண்ணீரின் அளவு குறைந்து விடுவதால் கண்ணில் எரிச்சல் உணர்வு உண்டாகிறது. மண் விழுந்தது போன்ற கடுமையான எரிச்சலா கவும் இது இருக்கக்கூடும். வலி அதிகமாகும். கவனித்து சரி செய்து கொள்ளாமல் நீண்ட காலம் அலட்சியப்படுத்தினால் விழித்திரை யில் பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரலாம். அதனால் அடிக்கடி அழுவது கூட நல்லது தான். கண்ணீர் உண்டாகவில்லையென்றால் அதற்கேற்ப மருத்துவரை நாடவேண்டும்.

உலர்கண்களை தடுக்க கண்ணில் உள்ள மூன்று வெவ்வேறு படலங்களின் கூட்டு முயற்சிதான் கண்ணீர். இவற்றில் வெளிப்புறமாக உள்ள மெல்லிய படலம் அங்கு சுரக்கும் நீர் (அதாவது இமை யில் உள்ள லிபிட்) ஆவியாக மாறுவதைத் தடுக்கிறது. நடுப்படலமான லாக்ரிமல் சுரப்பி களில் நீர் சுரக்கிறது. கண்ணீரில் உள்ள உப்பும் அமிலமும் ஓர் அளவுக்குள் இருப்பதையும் இது உறுதி செய்துகொள்கிறது. கண் தொற்றுகளுக்குஎதிராகச் செயற்படும் சக்தியும் கண்ணீருக்கு உண்டு. உள்ளே இருக்கும் படலம் கண்ணீரை விழித்திரையோடு ஒட்டிக்கொள்ள வைக்கிறது. அதாவது கண்ணீர் சட்டென வெளியேறிவிடுவதில்லை. இந்த மூன்று படலங்களில் எது செயற்படா விட்டாலும் விழித்திரை உலர்ந்துவிடும்.

மனபாரம் குறையும் வயதாக ஆக இந்தப் படலங்களில் இயல்பாக உள்ள எண் ணெய் சுரப்பி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுகிறது. சிலவகை ஆண்டியாடிக் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போதும் இப்படி நேரலாம். கான்டாக்ட் லென்ஸ் அணியும் சிலருக்கு அதனாலேயே கண்களில் ஒவ்வாமை ஏற்படலாம். அதாவது அந்த லென்ஸ்கள் கண்ணீர்த் திவலைகளை உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே உலர்கண் கொண்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சந்தோசமென்றால் மகிழ்ச்சியை சிரிப்பாக வெளிப்படுத்துவதைப்போல துக்கமென்றால் அழுது வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் மனபாரம் குறையும், ஆரோக்யம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்

புற்றுநோயை குணமாக்கும் அகத்திப்பூ.



அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தருகிறது. அகத்திக்பூக்கள் சற்றுப் பெரியதாக இருக்கும். இவற்றை யாரும் சரியாக உணவாக உட்கொள்வதில்லை. இவற்றை கீரையுடனும் சமைத்து சாப்பிடலாம். தனியாக கூட்டு வைத்தும் சாப்பிடலாம். வெயிலில் அதிகமாக உழைப்பவர்களுக்கும், கண் எரிச்சல், தலைச்சுற்றல், சிறுநீரில் மஞ்சள் நிறமாக போவது போன்ற பாதிப்புகளுக்கு அகத்திப்பூக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

புகை பாதிப்பை போக்கும் அகத்திப்பூக்களை சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து உணவோடு உண்டு வர அந்த ஏழு நாட்களில் புகைத்த விஷம் மலம் மூலம் வெளியேறிவிடும். பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு அவற்றில் நாட்டத்தை குறைக்கச் செய்யும். சளித்தொல்லை,தும்மல்,பித்தம் ஆகியவற்றை நீக்கும் சக்தி அகத்திப்பூக்களுக்கு உண்டு. உடல்சூடு,மூலநோய்,வாதம், கீழ்வாதம்,மார்புச்சளி ஆகிய நோய்களை அகத்திப்பூக்கள் குணமாக்கும்.

பித்தம் குறையும் அகத்திப்பூக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி இடித்து தூளாக்கி சலித்து வைத்துக்கொண்டு இரவு உறங்கும் முன் காய்ச்சிய பசும்பாலுடன் அரை டீஸ்பூன் அகத்திப்பூ பொடி கலந்து பருகி வந்தால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.

புற்றுநோய்க்கு மருந்து அகத்திப்பூக்களுடன் மிளகு, சீரகம்,ஓமம்,பூண்டு வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர இதயப்படபடப்பு, இருதய வீக்கம், சிறுநீரகநோய், புற்றுநோய் கட்டுப்படும்.

கண்பார்வை தெளிவடையும் இரண்டுவாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையும், வாரம் ஒருமுறை அகத்திப்பூக்களையும் சமைத்து உண்பவர்களுக்கு கண்பார்வை தெளிவடையும். அகத்திப்பூவின் சாறை பிழிந்து கண்ணில் விட இடக்கண்நோய் நீங்கும். ரத்த சோகை குணமடையும் செந்நிற அகத்திப்பூவானது ரத்த ஒழுக்கு,ரத்தசோகை,கழலை,காய்ச்சல்,உடல்வலி, ஆகியவற்றைப் போக்கும் மருந்தாக செந்நிற அகத்திப்பூ பயன்படுகிறது.

மலேசியாவில் உள்ள மிகப் பழமையான சீக்கிய குருத்வாராவை புதுப்பிக்க அந் நாட்டு அரசு 16,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது!


மலேசியாவில் உள்ள மிகப் பழமையான சீக்கிய குருத்வாராவை புதுப்பிக்க அந் நாட்டு அரசு 16,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. மலேசிய மக்களில் 8 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். இதில் சீக்கியர்களும் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர் கடந்த 200 ஆண்டுகளாக மலேசியாவில் வசிக்கும் சீக்கியர்கள், அந் நாட்டின் சபா மாகாணத்தில் 1924ம் ஆண்டில் இந்த குருத்வாராவை கட்டினர்.
இந்த வழிபாட்டுத் தலத்தை சீரமைக்க மலேசிய அரசு 16,000 அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதே போல இந்து மதக் கோவில்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.


கட்டாக்கில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் முதல் ஒரு நாள் போட்டி!


ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நாளை இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. நாளைய முதல் போட்டியில் ஷேவாக் தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளை சந்திக்கிறது. கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த நிலையில் நாளை ஒரு நாள் போட்டிகள் தொடங்குகின்றன.

இந்த நிலையில் நாளை கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டித் தொடரில் கேப்டன் டோணி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வளிக்கப்பட்டுள்ளனர். டோணி தவிர, சச்சின், யுவராஜ் சிங் போன்ற அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை கருத்தில் கொண்டு டோணி, சச்சின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் கட்டி காரணமாக சிகிச்சை பெற்று வரும் யுவராஜூக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டோணிக்குப் பதிலாக ஷேவாக் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

ஷேவாக் இதுவரை 7 போட்டிகளில் கேப்டனாக இருந்து 4 வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். ஆனால் ஷேவாக் கேப்டனாக இருந்து தனிப்பட்ட முறையில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக இருந்து ஷேவாக் அடித்த அதிகபட்ச ரன்கள் 44. டோணிக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வார். இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆடரில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களை பெற்றுள்ளது. மேலும் மனோஜ் திவாரி, அஜின்கியா ரஹனே ஆகிய புதுமுகங்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சுழல்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஓஜா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கும் அஸ்வின், மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. மேற்கிந்திய தீவுகளை பொறுத்தவரை டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. சந்தர்பால், சம்மி, பிராவோ உள்ளிட்ட முக்கிய வீரர்களின் ஒத்துழைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி பலமிகுந்த அணியாகவே உள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை கட்டாக்கிலும், 2வது போட்டி டிசம்பர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது போட்டி டிசம்பர் 5ம் தேதி ஆமதாபாத்திலும் நடக்க உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக இந்தியாவிலிருந்து உரிய அனுமதி பெறாமல் ரூ. 1,650 கோடியை எடுத்துச் சென்றது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்!


தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக இந்தியாவிலிருந்து உரிய அனுமதி பெறாமல் ரூ. 1,650 கோடியை எடுத்துச் சென்றது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate-ED) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐபிஎல் 2 லீக் போட்டிகள் முதலில் இந்தியாவில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களையொட்டி இந்தப் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 1,650 கோடியை தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு சென்றது. ஆனால், இதற்கு உரிய அனுமதியை கிரிக்கெட் வாரியம் பெறவில்லை. இதையடுத்து அன்னிய செலாவணி சட்டத்தின் (Foreign Exchange Management Act-FEMA) கீழ் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசின் நகல் ஐபிஎல் கமிஷ்னர் லலித் மோடிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான், பிசிசிஐ முன்னாள் தலைவர் சஷாங் மனோகர், ரவி சாஸ்திரி ஆகியோரிடமும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மாவீரர் தினம் கொண்டாடிய ஈழ ஆதரவாளர்கள் கைது!






மாவீரர் தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி மாவட்டத்தில் ஈழ விடுதலை ஆதரவு கட்சிகளான புதிய தமிழகம் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் பாசறை, பெரியார் தத்துவ மையம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை இணைந்து, திருச்சி மாநகரில் அஞ்சலி செலுத்துவதற்காக 5 இடங்களுக்கு மேல் 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர். ஆனால், சம்மந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது என்றும், மாவட்டகாவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டனர். மாநகர காவல்துறை ஆணையரோ மேலிடத்தில் இருந்து ஈழ சம்மந்தமான பிரபாகரன் படங்களை வைக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளதால், அனுமதி கொடுக்க முடியாது என மறுத்ததோடு, மாநகர துணை காவல்துறை ஆணையரை பாருங்கள் என்று கூறியதும், அவரை சந்தித்தால், நாட்களை கடத்தி குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாள் அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டார் என்று ஈழ ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய வாக்கை வாங்கி ஆட்சி அமைத்து, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமை சீமான்!


19 11 2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19 11 2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை. அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6ம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் உள்ளரங்கங்களின் அந்நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அவர் பேசுகையில், என்ன உங்கள் பிரச்சனை. சீமானை பேசவிட்டால் விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசுவான். சீமானை பேசவிட்டால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவான். உன்னை யார் தடை செய்ய சொன்னது. தடையை நீக்கு என்கிறோம். நாங்கள் ஆதரித்து பேச வேண்டும் தடையை நீக்கு என்கிறோம். முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள். 

ஒரு பொது வாக்கெடுப்பை இந்த நாட்டில் இந்த அரசுகள் செய்யுமா. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை தேவையா இல்லையா. ஒரு வாக்கெடுப்பை நடத்துமா. 100க்கு 99 விழுக்காடு விடுதலைப்புலிகள் மீதான தடை தேவையில்லை என்று மக்கள் வாக்கு செலுத்துவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் எங்களுக்குள் திணிக்கிறீர்கள்.  விடுதலைப்புலிகளை பிறந்ததிலிருந்து ஆதரிச்சு பேசுகிறேன். என் ஆத்தா பேசுறாள். என் அப்பன் பேசுறான். என்னுடன் பிறந்தவன் அத்தனைப் பேரும் பேசுறான். என் உயிர் தமிழ்ச் சொந்தங்கள் அத்தனை பேரும் பேசுறான். அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆதரிச்சு பேசிட மாட்டேனா. பிரபாகரன் பிறந்த நாளை ரோட்டில் கொண்டாடவில்லை. ஒவ்வொரு தமிழனும் வீட்டில் கொண்டாடிக்கொண்டிருக்கிறான். 

உங்களுக்கு என்ன தெரியும், பிரபாகரனை யார் என்று தெரியுமா? என்ன தெரியும். மாவீரர் தினம் கொண்டாடிவிடுவார்கள். சுவரொட்டி ஒட்டக் கூடாது. மாவீரர் தினம் கொண்டாட அனுமதியில்லை. ஏன். என் இனத்தின் மானத்தையும், என் இனத்தையும் காப்பாத்த செத்தான்ல்ல அதுக்காக கொண்டாடிவிடக் கூடாது. என் நாடு. என் பூமி. மானத் தமிழர்கள் வாழுகிற பூமி. என் இனத்தின் மானத்தை காக்க செத்தவனுக்கு நான் நன்றி சொல்லக்கூட இந்த மண்ணில் உரிமை இல்லை. இத்தனை கூட்டங்கள் நாங்கள் நடத்தியிருக்கிறோம். 21 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து, பல்வேறு தலைவர்கள், பல்வேறு கட்சிகள் பேசியிருக்கிறார்கள். அதனால் இந்த மண்ணில் நடந்த ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை நீங்க சொல்லுங்க. பிறகு இந்த கூட்டத்துக்கு தடை போடுங்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய சட்டம், உங்களுடைய செயல்பாடுகளை முடக்கும். என்னுடைய பேச்சை நீங்கள் தடை செய்யலாம். ஆனால் என்னுடைய உணர்வையும், என்னுடைய கனவையும் எந்த சட்டமும் தடை செய்ய முடியாது. அதை நீங்க புரிந்து கொள்ள வேண்டும். 

நீங்கள் ஒவ்வொரு தடைவையும் இதை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு தடைவையும் பணிந்து பணிந்து போவோம் என்று எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இதுவெல்லாôம் சாத்தியமில்ல. குறைந்தபட்சமாவது ஒரு கட்டுப்பாடுகளை போட்டாவது கூட்டம் நடத்த அனுமதிச்சிருக்க வேண்டும்.  இது உண்மையிலேயே ஜனநாயக நாடா. அமெரிக்காவில் தடை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தடை இருக்கிறது. பிரான்சில் தடை இருக்கிறது. கனடாவில் தடை இருக்கிறது. ஜெர்மனில் தடை இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் தலைவர் பிறந்த நாளும், மாவீரர் தினமும் எழுச்சியாக் கொண்டாட அந்த நாடுகள் அனுமதிக்கிறது. ஏன். அந்த நாடுகள் கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியா கருத்து சுதந்திரமற்ற ஒரு சர்வாதிகார நாடு. 

இதில் தமிழர்களுக்கென்று ஒரு அரசு இருக்கிறது. எந்த தமிழனும் தமிழராக இருக்கக்கூடாதுன்னு சொல்றத்துக்கு ஒரு அரசு இருக்கிறது. இதைவிட ஒரு கேவலம். இதைவிட ஒரு இழிநிலை எதுவுமே இருக்க முடியாது. இந்த மண்ணின் மகன், ஒரு தமிழன் தன்னை தமிழன் என்று சொல்வதே தேசத் துரோக குற்றம் என்று சொன்னால் இதைவிட கொடுமை எங்கே இருக்கிறது. எங்களுடைய வாக்கை வாங்கி அதில் வலிமையைப் பெற்று ஆட்சியை அமைத்து, அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, எங்களிடமே அதைக்காட்டி, எங்களை நசுக்குவது, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமையானது. கடலூரில் கூட்டம் நடத்தக் கூடாது. ஏன். அங்க டிரைனேஜ் தோண்டிக்கிட்டு இருக்காங்களாம். கழிவு போவதற்கு கால்வா. அது தடைப்பட்டுவிடுமாம். என்னடா காலக்கொடுமையா இருக்குது. இதெயெல்லாம் முதல்ல நிறுத்திகிருங்க. எங்களை ஒருபோதும் நாங்கள் மாத்திக்கொள்ள முடியாது. அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு பேசினார்.

பிரபாகரன் படத்தை உடம்பில் பச்சை குத்தி ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவேன் சீமான்!





கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட 600 பேர் கலந்துகொண்டனர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் பல நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. பேராசிரியர் தீரன் பேசுகையில், பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டது. நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் அமைச்சர் அவர்கள் நிர்வாகத்தை பாருங்கள். நிர்வாகத்தை பார்க்காமல் நாங்கள் என்ன செய்கிறோம். எங்களுக்கு தடை விதிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய பணிகளை மக்களுக்காக பிரச்சனை பாருங்கள் என்றார்.

சீமான் பேசுகையில், சீமான் ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவான். பிரபாகரன் படம் இருக்கும் சட்டையுடன்போவேன். சட்டயை கழட்டச் சொன்னால் சட்டையை கழட்டுவேன். உள்ளே உடம்பில் பச்சை குத்தியிருப்பேன். அப்ப வெளியே போகச் சொல்ல முடியுமா? என்றார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்த மனைவி!


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கோடாரியால் வெட்டி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.  சித்தூர் மாவட்டம் சோமல மண்டலம் எர்ர நாதுலவாரிப்பள்ளியை சேர்ந்தவர் பாஸ்கர் (28), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுசீலா (23). சிடிஎம் சாலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர்.  இந்நிலையில் சுசீலாவுக்கும், அதே வீட்டில் குடியிருக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. மனைவியை பாஸ்கர் கண்டித்தார். ஆனால், சுசீலா கள்ளதொடர்பை கைவிடவில்லை. இதனால் அந்த வீட்டை காலி செய்துவிட்டு புங்கனூர் தியாகராஜ தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு பாஸ்கர் வீடு திரும்பினார். 

அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சுசீலாவுடன் அந்த வாலிபர் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதைக்கண்ட பாஸ்கர், அந்த வாலிபரை விரட்டிவிட்டு மனைவியை கண்டித்தார். இந்நிலையில் நேற்று பாஸ்கரின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர், கோடாரியால் வெட்டப்பட்டு பாஸ்கர் துடிதுடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து வழக்கு பதிந்து சுசீலாவிடம் தீவிரமாக போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் சுசீலா, அளித்த வாக்குமூலம்: 

’’கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நள்ளிரவில் கள்ளக்காதலனுக்கு போன் செய்து வரவழைத்தேன். அவர், சில ஆட்களை அழைத்து வந்தார். தூங்கிக்கொண்டிருந்த கணவரை கோடாரியால் வெட்டியும், தலையை உருட்டுக்கட்டையால் தாக்கியும் கொலை செய்தோம். இதையடுத்து சுசீலாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கள்ளக்காதலன் மற்றும் கொலையாளிகளை தேடிவருகின்றனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே, கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மக்களை ஆத்திரமூட்ட கேரளா சதித்திட்டம் வைகோ!


தென்தமிழ்நாட்டு மக்களுக்குப் பாசன நீரும், குடிநீரும் வழங்குகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே தீருவது என்று, கேரள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு, அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபடுகின்றது. புதிய அணை கட்டுவது என்ற பெயரால், தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, பல வழிகளிலும் களத்தில் இறங்கி உள்ளது. புதிய அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் கொடுக்க வாய்ப்புக் கிடையாது.

முல்லைப்பெரியாறு அணை, இந்தியாவிலேயே மிக வலுவானது. 200 அடிகள் அடிமட்ட அகலம் கொண்டது. அத்தகைய அடிமட்ட அகலம் கொண்ட அணை, இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது. 500 அடிகள் உயரத்தில், இடுக்கியில் கேரளம் கட்டி உள்ள அணையின் அடிமட்ட அகலம்கூட, 56 அடிகள்தான். ஆனால், கேரள மக்களுக்கு அச்சத்தை மூட்டி, முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் மனோநிலைக்கு அவர்களைத் தயார்படுத்த, முந்தைய அச்சுதானந்தன் அரசு செயல்பட்ட வழியிலேயே, இன்றைய உம்மண் சாண்டி அரசு ஈடுபட்டு உள்ளது. அதற்காக, இன்று கேரள அரசும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்பு நடத்துகின்றனர். 

இந்தப் பிரச்சினையில், தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு, தமிழகத்தின் உரிமையையும் நீதியையும் நிலைநாட்ட முனையாமல், ஓர வஞ்சகமாக, கேரளம் செய்யும் அக்கிரமமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டுகின்ற விதத்திலேயே செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டச் செய்து, அதன் விளைவுகளைக் காட்டி அணையை உடைக்கும் நோக்கத்தோடு, இன்று கேரளத்தில் நடைபெறுகின்ற போராட்டத்தில், பல இடங்களில் என்னுடைய உருவபொம்மையையையும் போட்டோவையும் போராட்டக்காரர்கள் எரித்ததோடு, "மரியட்டே மரியட்டே வைகோ மரியட்டே, சாகட்டும் சாகட்டும் வைகோ சாகட்டும்" என்று முழக்கங்களையும் எழுப்பி உள்ளனர். அத்துடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பழ.நெடுமாறன் ஆகியோரின் உருவ பொம்மைகளையும் எரித்து உள்ளனர். குறிப்பாக, குமுளி, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கட்டப்பனை, வெள்ளக்கடவு ஆகிய இடங்களில் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டபோது, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அருகில் இருந்து வேடிக்கை பார்த்து உள்ளனர். 

இதனை அறிந்து, பல இடங்களில் இருந்து வேதனையும், ஆத்திரமும் கொண்ட சகோதரர்கள், தங்கள் மனக்கொதிப்பைத் தொலைபேசியில் தெரிவிக்கின்றனர். எந்தக் காரணத்தை முன்னிட்டும், ஆத்திர உணர்ச்சிக்குத் தமிழக மக்கள் இப்போது இடம் கொடுத்து விடக் கூடாது. அப்படி ஆத்திரமூட்டுவதுதான், கேரளத்தினரின் திட்டம். தமிழகத்துக்கு வருகின்ற பேருந்துகள் மீதும் கல்வீசித் தாக்கிச் சேதப்படுத்தி உள்ளனர். பதிலுக்கு உருவ பொம்மை எரித்தலோ, பேருந்துகளுக்குச் சேதம் விளைவிப்பது போ ன்ற எந்தச் செயலிலும் தமிழக மக்கள் ஈடுபட வேண்டாம். முல்லைப் பெரியாறு அணையையும், தமிழகத்தின் உரிமையையும் காக்க, நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளவாறு, கேரளத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற பொருளாதார முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளத்தின் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் பழ. நெடுமாறன்!


பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அணையில் வெடிப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முற்றிலும் பொய்யானப் புகாரைக் கூறியிருக்கிறார்கள். 

பெரியாறு அணை உடைந்து அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான மக்கள் செத்து மிதப்பது போன்ற பொய்மை நிறைந்த காட்சிகள் அடங்கிய டேம் 999 என்ற திரைப்படத்தை கேரள முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் பார்த்த திரைப்படக் காட்சி ஒன்றும் தில்லியில் நடைபெற்றிருக்கிறது. ஆக டில்லியிலிருந்து சகல முயற்சிகளும் செய்து பெரியாறு அணையை இடித்துத் தகர்த்துவிட்டு புதிய அணை கட்டியே ஆகவேண்டும் என பிடிவாதமாக கேரள அரசும், அந்த மாநில அனைத்துக் கட்சிகளும் செயல்படுகின்றன. 

கேரளத்தின் பொய்யானப் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் செய்திருந்த போதிலும் அதுமட்டும் போதாது, கேரளத்தின் சதியை முறியடிக்க வேண்டுமானால், தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கொண்ட குழு உடனடியாக தில்லி சென்று பிரதமரையும் மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து தமிழகத்தின் நியாயங்களையும் உரிமைகளையும் விளக்கிக் கூறவேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கைக் குறித்து அனைவரும் ஒற்றுமையுடன் பேசி முடிவெடுத்துச் செயல்பட்டாக வேண்டும். விரைவாக இந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாவிட்டால் கேரளம் தனது சூழ்ச்சியில் வெற்றிபெற்றுவிடும். தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் எதிர்காலம் இருள்சூழ்ந்து போகும். இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 15 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் செபாஸ்டியன் வெட்டல்!.


ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 15 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார் ரெட்புல் கார் டிரைவரான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல்.  முன்னாள் உலகச் சாம்பியனான இங்கிலாந்தின் நிகெல் மான்செல் 1992-ம் ஆண்டில் 16 சுற்றுகளைக் கொண்ட கார் பந்தயத்தில் 14 சுற்றில் வெற்றி கண்டதே கடந்த 19 ஆண்டுகளாக சாதனையாக இருந்தது. இப்போது அதை வெட்டல் முறியடித்துள்ளார். ஏற்கெனவே இந்த சீசனில் வெட்டல் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார். 

 இந்த சீசன் எஃப் 1 போட்டிக்கான கடைசி சுற்று (19-வது சுற்று) பிரேசிலில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரேசில் கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் நடைபெற்ற இந்த சுற்றில் முதலிடம் பிடித்ததன் மூலம் 15-வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தார் வெட்டல். 4.3 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 11.918 விநாடிகளில் கடந்தார்.ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவர் மார்க் வெப்பர் (1:12.099 நிமிடம்) 2-வது இடத்தையும், மெக்லாரன் டிரைவர் ஜென்சன் பட்டன் (1:12.283) 3-வது இடத்தையும், மெக்லாரனின் மற்றொரு டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் (1:12.480) 4-வது இடத்தையும், இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெராரி பெர்னாண்டோ அலோன்ஸô 5-வது இடத்தையும் பிடித்தனர். 

 இந்த சீசன் எஃப் 1 போட்டியில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற 19 சுற்றுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா போட்டிகளில் மட்டுமே முதலிடத்தை தவறவிட்டார் வெட்டல். ஜெர்மனி போட்டியில் மட்டும் 3-வது இடத்தைப் பிடித்தார். இது அவரின் மிகப்பெரிய பின்னடைவாகும். அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் சுற்றிலேயே விலகினார். அந்த சுற்றில் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.  19 சுற்றுகளின் முடிவில் மெக்லாரன் டிரைவர் ஜென்சன் பட்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைவிட 10 புள்ளிகள் குறைவாகப் பெற்ற ஃபெராரி டிரைவர் அலோன்ஸô 3-வது இடத்தையும், 18 புள்ளிகள் குறைவாகப் பெற்ற ரெட்புல் அணியின் மற்றொரு டிரைவர் மார்க் வெப்பர் 4-வது இடத்தையும் பிடித்தனர். அணி பிரிவில் ரெட்புல் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மெக்லாரன் இரண்டாவது இடத்தையும், ஃபெராரி 3-வது இடத்தையும் பிடித்தன.

கனிமொழி ஜாமீன் குறித்து கருணாநிதி...

கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி அப்பாடா... வந்தியா? என்று கேட்பேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் 


வெளியிட்ட கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை:
செய்தியாளர் :- கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?
கருணாநிதி பதில் :- மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கேள்வி :- அவர்கள் வந்தவுடன் முதலில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் :- அப்பாடா! வந்தியா?
கேள்வி :- நீங்கள் இப்போது டெல்லி செல்கிறீர்களா?
பதில் :- இல்லை.
கேள்வி :- கனி இன்றைக்கே சென்னை வருகிறார்களா? எப்போது வருகிறார்கள்?
பதில் :- இன்னும் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் வர வேண்டும்.
கேள்வி :- இவ்வளவு நாள் தாமதமாக ஜாமீனில் விட்டிருக்கிறார்கள். தற்போதுள்ள சட்ட விதி முறைகளைப் பற்றி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
பதில் :- ஜாமீன் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் தாமதத்திற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்க முடியாது.
கேள்வி :- சிறையில் ஆறு மாத காலம் கஷ்டங்களை யெல்லாம் கனிமொழி அனுபவித்திருக்கிறார்கள். அதற்காக இப்போது கட்சியில் ஏதாவது பெரிய பதவி கிடைக்குமா?
பதில் :- “அப்பா” என்ற முறையில் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். “தலைவர்” என்பதற்காக நான் சர்வாதிகாரி அல்ல. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே கட்சிதான் எந்த முடிவையும் செய்யும்.
கேள்வி :- சென்னைக்கு எப்போது வருகிறார்கள் என்பது நிச்சயமாகி விட்டதா?
பதில் :- எப்போது வருகிறார் என்று தெரியவில்லை. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் மற்றவர்களும் அங்கே இருக்கிறார்கள். வழக்கறிஞர்களோடு நீதி மன்றத்தில் கலந்து பேசி சொல்வார்கள்.
கேள்வி :- தற்போது கிடைத்துள்ள ஜாமீன், வழக்கில் பிறகு கிடைக்கக் கூடிய வெற்றிக்கு முன்னுதாரணமாக இருக்குமா?
பதில் :- நான் நீதிமன்றங்களைப் பற்றியும், வழக்கின் போக்குகள் பற்றியும் விவாதிப்பது முறையல்ல!
கேள்வி :- தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், ராஜாவையும் ஜாமீன் போடச் சொல்லி வற்புறுத்துவீர்களா?
பதில் :- அதைப் பற்றி ராஜா என்னுடைய கருத்துக்களைக் கேட்டால் உரிய கருத்துக்களைச் சொல்வேன். இதுவரை ராஜா அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.
கேள்வி :- கனிமொழியை ஜாமீனில் விட்ட பிறகு, தான் ஜாமீன் கேட்பது பற்றி முடிவு செய்வேன் என்று ராஜா சொல்லியிருந்தாரே?
பதில் :- என்னிடம் கலந்து பேசி, அவர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.
கேள்வி :- கனிமொழி ஜாமீன் பெற்று சென்னைக்கு வரும்போது, கட்சித் தொண்டர்களின் வரவேற்பு பெரிதாக இருக்குமா? பலமாக இருக்குமா? ஏற்பாடு செய்யப்படுமா?
பதில் :- வரவேற்பு இருக்கும். அது பலமாக இருக்குமா, பெரிதாக இருக்குமா என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆறு மாதங்களாக சிறையிலே இருந்து விட்டு வருகிறார். உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு வரவேற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
கேள்வி :- கனிமொழியின் தாயார் எப்படி இருக்கிறார்?
பதில் :- அவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தாய் உள்ளம் அல்லவா?

தஞ்சை, கோவையில் மருந்தாளுனர் படிப்பு...


தமிழகத்தில் தஞ்சாவூர் மற்றும் கோயம்பத்தூரிலும் பி.பார்ம். எனப்படும் மருந்தாளுநர் படிப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் கூறினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தேசிய மருந்தியல் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் வி.எஸ். விஜய், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் 2,400 மாணவர்கள் மருந்தியல் பட்டயப்படிப்பு படித்து வருகின்றனர். இதுவரை 63 ஆயிரம் பேர் இப்படிப்பை படித்து முடித்துள்ளனர்.
மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மட்டுமே மருந்தாளுநர்கள் மருந்துகளை வழங்க வேண்டும். நோயாளிகளுக்கு நேரடியாக மருந்து வழங்குவதை தவிர்க்க வேண்டும். அதேப்போல ஒவ்வொரு மருந்து கடைகளிலும் மருந்தாளுநர்கள் பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம். 24 மணி நேரமும் மருந்தாளுநர்கள் பணியில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தஞ்சாவூர், கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பி.பார்ம்., படிப்பு அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

வலைதளங்களை குறிவைக்கும் வக்கிர கும்பல்...!


இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும். அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது; வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு வயதினரிடமும் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) எஸ். எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

"பேஸ்புக்' 'டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதன் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்களுடைய நண்பர்கள்,உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு பலர் "குட் பை' சொல்ல துவங்கிவிட்டனர்.சமூக வலைதளங்களில் தங்களின் விபரங்களை ஒருவர் பதிவு செய்யும் போது, தகவல்களுடன் சேர்த்து தங்கள் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். வலைதளங்கள் மூலம் ஒருவருடன் நண்பர்களாக வேண்டும் என்றால், தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்; மறுமுனையில் சம்பந்தப்பட்ட நபர் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இருவரும் வலைதளத்தில் நண்பர்களாகி கொள்ளவும், தங்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடவும், உறவுகளை இணைக்கும் பாலமாகவும் உதவி வரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவியருக்கு எதிரான சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

சமூக வலைதளங்களில் பெண்களின் பெயர்களை டைப் செய்தால், குறிப்பிட்ட பெயருக்கு 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த முழு விபரங்கள் போட்டோக்களுடன் வெளியிடப்படுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆசாமிகள், அறிமுகமில்லாத பெண்களுக்கு தாங்களாகவே, "நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என தெரிவிக்கும் தகவல்களை அனுப்புகின்றனர். தங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய வேண்டுகோளை ஏற்காமல் நிராகரிக்கும் பெண்கள் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். எனினும் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் நல்லவர்களை போல் சில நாட்கள் நடித்து அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். நாளடைவில் நேரில் சந்திப்பது, பொது இடங்களுக்கு சென்று வருதல், பண பரிமாற்றம் என துவங்கி, ஏமாறும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றியும், அவர்களிடமிருந்து பணம்,நகை, "லேப்டாப்' உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் சென்றுவிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பலர்,போலீசில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.

கோவை மாநகர சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கம்ப்யூட்டர்களில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தும்போது, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களின் அந்தரங்க தகவல்கள் குறித்து நெருங்கிய தோழிகளுடன் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். தனி அறையில் வைத்து அவர்கள் இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது' என்றனர். பெற்றோர், ஆசிரியர், உடன்பிறப்புகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் அறிவுரை ஒருபுறமிருந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும்போது பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

6 மாத சிறைவாசம் முடிந்தது...


பல முறை கிடைக்குமா, ஜாமின் கனியுமா என்ற பலத்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிலவி வந்த தருணத்தில் 4 முறைகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடியாகி வந்த போது இன்று அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் லைசென்ஸ் வழங்கி மத்திய தணிக்கை துறையில் ஒரு அதிகாரி தரப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றும், இல்லை 2 ஆயிரத்து 645 கோடிதான் என்று மற்றொரு அதிகாரியும் சொல்லி வந்தாலும் இன்னும் நஷ்டம் எவ்வளவு என்று அறுதியிட்டு சொல்ல முடியாத நிலை. இருப்பினும் சி.பி.ஐ., ஆயிரம் கோடி ஆதாயம் பெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் தனியார் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடித்தது. இது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று பின்னர் இதன் கண்காணிப்பில் விசாரணை நடந்தது. 

ராஜா மற்றும் இவரது உதவியாளர் , தொலை தொடர்பு அதிகாரிகள், கார்ப்பேரட் நிறுவன அதிபர்கள் , கனிமொழி எம்.பி., உள்பட 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் , செக்சன் 409 ( நம்பிக்கை மோசடி ) , 120 பி ( கிரிமினல் சதி ) ,420 ( ஏமாற்றுதல் ) , 468, 471 ( பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் ) , 12, 13(2) 13 ( 1 பி) ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.,சைனி ஏற்றுக்கொண்டதுன், இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக தாம் உணர்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

யாருக்கும் ஜாமின் கிடைக்காமல் 7 மாதம் கடந்தது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமின் கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின் மறுப்பது சட்ட விரோதம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூட ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது அடிப்படை சட்ட நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சஞ்சய் சந்திரா ( யுனிடெக் வயர்லெஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் ) வினோத் கோயங்கா ( ஸ்வான் டெலிகாம் இயக்குநர் ) , ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும அதிகாரிகள் கவுதம் தோஷி , ஹரி நாயர், மற்றும் சுரேந்திர பிபாரா ஆகிய 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமினை கடந்த ( புதன்கிழமை 23 ம் தேதி ) வழங்கியது. இந்த உத்தரவு மூலம் புதிய வழி பிறந்திருக்கிறது என்று ராஜாவின் வக்கீல் கூறியிருந்தார். 

192 நாட்கள் சிறையில் இருந்த கனிமொழி :சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து கனிமொழி உள்பட 6 பேர் ஜாமின் மனுவை விரைவில் விசாரிக்க வக்கீல்கள் டில்லி ஐகோர்ட்டில் வலியுறுத்தினர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை விசாரணையில் இருதரப்பு வாதங்களும் எடுத்துரைக்கப்பட்டது. ஜாமினுக்கு சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதீபதிகள் வழக்கை இன்று ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணை முடிவில் மனுவை விசாரித்த நீதிபதிகள் கனிமொழிக்கு உள்பட கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் கரீம் மொரானி, குசேகான் புரூட்ஸ் மற்றும் வெஜிடபுள் நிறுவனத்தை சேர்ந்த ஆசீப்பால்வா, ராஜீவ் அகர்வால், ஆகிய 5 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். முன்னாள் தொலை தொடர்பு செயலர் சித்தார்த்பெகுராவுக்கு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் கனிமொழியின் 6 மாத சிறைவாசம் முடிவுக்கு வந்தது. கனிமொழி கடந்த மே மாதம் 20 ம் தேதி கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் 2 முறையும், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தலா ஒரு முறையும் 4 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியிருக்கிறது. ஜாமின் கிடைக்குமா என பலமுறை எதிர்பார்த்து ஏமாந்த கனிக்கு இப்போது தான் ( 6 மாதத்திற்கும் மேல் சிறை - 192 நாட்கள் ) ஜாமின் கிடைத்திருக்கிறது.

நிபந்தனைகள் என்ன ?: 
1. ரூ, 5 லட்சம் பிணைத்தொகையாயுடன் கூடிய 2 பேர் ஜாமின்தாரர். 

2. விசாரணைக்கு கோர்ட்டில் தவறாமல் ஆஜராக வேண்டும். 

3. பாஸ்போர்ட்டை ஒப்படைத்து வெளிநாட்டுக்கு பயணம் செய்ய கூடாது. 

04. சாட்சிகளை கலைக்க தவறும் பட்சத்தில் ஜாமின் நிராகரிக்கப்படும்.
நீதிபதி ஓ.பி.,சைனி ஜாமின் மறுத்தது ஏன் ? : சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கலாகி கடந்த 2 முறை விசாரணைக்கு வந்தபோது : கனிமொழி, ஒரு பட்டதாரி அவர் ஒரு எம்.பி., , அவர் கலைஞர் தொலைக்காட்சியில் குறைந்த பங்குதாரர் ( 20 சதம்) மட்டுமே , கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் நிறுவனம் மூலம் வந்த 214 கோடி கடனாக பெறப்பட்டு , வட்டியுடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் கனிக்கு நேரடி தொடர்புக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அவரது குழந்தை பராமரிப்பு என பல காரணங்கள் கூறப்பட்டு வக்கீல்களின் வாதம் இருந்தது. ஆனால் நீதிபதி ஓ.பி.,, சைனி, எந்தவொரு வாதத்தையும் ஏற்க மறுத்து விட்டார். கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு பெண் என்பதற்காக இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் இவர் புரிந்துள்ள குற்றம் மற்ற குற்றவாளிகளின் குற்றத்திற்கு சமமானது தான். மேலும் நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு காரணமாக இருந்திருக்கிறார் . பெரும் குற்றம் புரிந்த இவர்களுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றார் நீதிபதி.

தமிழக வீரர் அஸ்வினுக்கு திலீப் சர்தேசாய் விருது...

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி, 

இந்திய அணி 2-0 கணக்கில் வெற்றி பெற உதவிய தமிழக வீரர் அஸ்வினுக்கு 

திலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது. அறிமுகமான முதல் டெஸ்ட் 

போட்டியிலேயே 9 விக்கெட்கள் வீழ்த்தியதின் மூலம், சாதனை பட்டியலில் 

இடம்பிடித்தார். இத்தொடரில், 22 விக்கெட்கள் மற்றும் 1 சதம் என கலக்கிய 

அஸ்வினுக்கு திலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 10ம் தேதி 

நடைபெற உள்ள விழாவில், ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் கொண்ட 

இவ்விருது அஸ்வினுக்கு வழங்கப்படுகிறது. திருமணமான மறுநாளில், 

போட்டியில் பங்கேற்றதன் மூலம், கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் 

டான் பிராட்மேன் வரிசையில் அஸ்வினும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...