|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2012

இதே நாள்...

உலக பாரம்பரிய தினம்
  • ஈரான் ராணுவ தினம்
  • ஜிம்பாப்வே விடுதலை தினம்(1980)
  • ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
  • அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது(1949)

நூறு ஆண்டுகளில் இந்தியர் யாரும் நோபல் பரிசு பெறவில்லை!




சி.பி.எஸ்.இ., சேர்மன் வினித் ஜோஷி உலகளவில் இந்தியாவில் அதிக மாணவர்கள், கல்லூரி செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள், இந்தியாவில் அதிகம் உள்ளனர். அதனால், 2020, 2030ம் ஆண்டிற்குள் இந்தியா இளைஞர்கள் நாடாக காணப்படும். இந்தியாவில் படித்த இளைஞர்கள், அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பா நாடுகளிலும் இன்ஜினியர்களாகவும், டாக்டர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் சிறந்து விளங்குன்றனர். இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நிரந்தர வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். பத்து ஆண்டில் தற்போதைய இந்திய கல்வி முறை நிறைய மாற்றம் கண்டுள்ளது. மாணவர்களுடைய அறிவையும், தனித்திறமைகளையும் மேம்படுத்தக்கூடிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெற்றோர், குழந்தைகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும், அவர்களுடைய எதிர்காலம் சிறக்க தங்களுடைய பங்களிப்பையும், ஊக்கத்தையும் வழங்க வேண்டும்.

கடந்த நூறு ஆண்டில் இந்தியர்கள் யாரும் நோபல் பரிசு பெறவில்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டும் தான் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்த குறையை போக்க தற்போதைய மாணவர்கள், சிறப்பாக படித்து அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அதற்கு பள்ளிகளும், பெற்றோரும் இணைந்து செயல்பட்டு சிறந்த மாணவர்களை உருவாக்கி, எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும். தற்போதைய போட்டி நிறைந்த உலகில், மாணவர்கள், படிப்பில் சிறந்த திறமைகளையும், முயற்சியையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அரசிடம் மண்ணெண்ணெய் பெற முடியாதவர்கள்.


மத்திய அரசிடம் வாதாடி மண்ணெண்ணெய் பெற்று மக்களுக்கு வழங்க முடியாதவர்கள், தி.மு.க., கூட்டு சதி என்று கூறி மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர்' என்று, கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை386 கொலை: பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிற எந்த நிகழ்வும், தமிழகத்தில் நடக்கவில்லை என்று, டில்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகத்தில், இந்த 11 மாத காலத்தில், 386 கொலைகள், 178 செயின் பறிப்புகள், 34 வழிப்பறிச் சம்பவங்கள், 10க்கும் மேற்பட்ட, "லாக்-அப்' மரணங்கள் நடந்துள்ளன. பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடந்து, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒரே மாதத்தில், 16 கொலைகள் நடந்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா அகராதிப்படி, இவை எல்லாம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத செயல்கள் போலும்.

அழுத்தம் தர வேண்டும்: தனி ஈழம் வழங்க தமிழர்கள் மத்தியில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று, எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐ.நா., தலையீட்டின்படி, இதுபோல பொது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, ஒரு சில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன. இந்த முயற்சிக்கு மத்திய அரசு தேவையான ஆதரவும், அழுத்தமும் தர வேண்டும்.

கோபத்தில் இருந்து தப்ப... : தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசிடம் வாதாடி, போராடி பெற வக்கற்றவர்கள் எதற்கெடுத்தாலும், தி.மு.க.,வை குறை சொல்வார்கள். தி.மு.க., ஆட்சியில், தமிழக தேவைகளுக்கு மத்திய அரசிடம் பலமுறை கடிதம் மூலமும், நேரிலும் சென்று கேட்டு, கோரிக்கை வைத்து அதிக மண்ணெண்ணெய் பெற்று மக்களுக்கு வழங்கினோம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், "தி.மு.க., கூட்டு சதி' என்று கூறி, பொதுமக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர். கடந்த 10 மாதங்களில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 149 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று, வருவாய் துறை அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சியில், 8 லட்சத்து 29 ஆயிரத்து 236 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தண்டியாத்திரை பாலம் தீயில்!

குஜராத் மாநிலம் தண்டியில் உள்ள ஒரு மரப் பாலத்தில் இருந்து மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியாகிர யாத்திரையை மேற்கொண்டார். இதனால் அந்த பாலம் `தண்டி பாலம்' என்ற பெயருடன் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. இன்று அந்த `தண்டி பாலத்தின்' அருகில் சிலர் குப்பை கூளங்களை தீ வைத்து கொளுத்தினர். அப்போது அந்த பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள மரப்பலகையில் தீ பிடித்தது. இதில் பாலத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்தது. இது தொடர்பாக அகமதாபாத் மாநகர அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

டீசல், கேஸ் விலையை உயர்த்த ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்!

 டீசல், கேஸ், கெரசின் விலைகளை உயர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது. நிதிப் பளுவை குறைக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது."நிதி பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இதை மேற்கொள்ள வேண்டியது அவசியம்' என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார்.பெட்ரோல் விலை சந்தை நிலவரத்தைப் பொருத்து நிர்ணயிக்கப்பட்டாலும், டீசல், கேஸ், கெரசின் விலைகளை அரசே தீர்மானிக்கிறது. இவற்றிற்கு அளிக்கப்படும் மானியத்தால் பட்ஜெட் செலவினம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 111 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, ஏப்ரல் மத்தியில் 120 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. எண்ணெய் பொருள்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மானியத் தொகை நிச்சயம் அதிகரிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


அரசு அளித்து வரும் மானியங்கள் நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து வருகின்றன. கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 5.9 சதவீதமாக உயர்ந்தது. அது நடப்பு நிதியாண்டில் 5.1 சதவீதமாக தொடரும் என்று தெரிகிறது.இந்தியா 80 சதவீத பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி மூலமாகவே பெறுகிறது. பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுவரும் மானிய அளவை இந்த நிதியாண்டில் ஜி.டி.பி.யில் 2 சதவீதமாகவும், வரும் காலங்களில் 1.75 சதவீதமாகவும் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.2012-13 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருள்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடியை மானியமாக அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் 2011 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் ஜி.டி.பி.யில் 4 சதவீதமாக உயர்ந்தது. நாட்டிற்குள் வரும் அன்னியச் செலாவணிக்கும், வெளியேறும் அன்னியச் செலாவணிக்கும் உள்ள வித்தியாசமே நடப்புக் கணக்குப் பற்றாக்குறையாகும்.

இயக்குநர் சங்கத்துக்காக தனி இணையதளம்!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்காக பிரத்யேகமான இணையதளம் மற்றும் வெப் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிமுக நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:இயக்குநர் சங்கத்துக்கு என ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறையாக செயல்படவில்லை. அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள்ளடக்கி புதிய வடிவில் இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணையதளமும் திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.


இந்த இணையதளத்தில் திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கும். இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரைப் பற்றிய முழுத் தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது, ஓர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டிய விதம், உறுப்பினர்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உதவித் தொகை, இயக்குநர் சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.24 மணி நேர வெப் டி.வி.யில் டிரெய்லர்கள் இலவசமாகவும், தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் விளம்பரங்கள் மிகக் குறைந்த கட்டணத்திலும் ஒளிபரப்பப்படும் என்றனர்

மனிதனை துண்டு துண்டாக வெட்டி சாப்பிடும் அரக்கர்கள்!











பார்த்ததில் பிடித்தது!








இலங்கையில் 30 வருடமாகவே தமிழர்கள் அகதிகளாகத்தான்!


இலங்கையில் தமிழர்கள் அகதிகளாக இருப்பது 30 வருடமாக இருக்கும் ஒன்றுதான். இருப்பினும் இடம் பெயர்ந்தவர்களில் 95 சதவீதம் பேரை மறுகுடியமர்த்தி விட்டோம் என்று இந்திய எம்.பிக்கள் குழுவிடம் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை போயுள்ளது. அங்கு இன்று தங்களது முதல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலில் பசில் ராஜபக்சேவை அவர்கள் சந்தித்துப் பேசினர். காபி, டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து இந்திய எம்.பிக்களை உபசரித்தார் பசில். பின்னர் அவர் இந்தியக் குழுவினரிடம் பேசுகையில்,இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக இருந்துவரும் ஒன்றாகும். இருந்தபோதிலும் இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோரை அனைத்து வசதிகளுடனும் அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளது.அவர்களுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகக் குறுகிய காலத்தில் வழக்கமான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம் என்றார்.தொடர்ந்து 4 நாட்களுக்கு இந்தியக் குழுவினர் இலங்கையில் பல்வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

ஹில் கிருஷ்ணன். நியூயார்க் நகராட்சி தேர்தலில்!


நெல்லையைச் சேர்ந்தவரான ஹில் கிருஷ்ணன் நியூயார்க் நகர சபை தேர்தலில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இப்பதவிக்குப் போட்டியிடும் முதல் தமிழர் மற்றும் இந்தியர் இவர்தான் என்பதால் ஹில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் ஹில் கிருஷ்ணன். மேல் கிழக்கு பகுதியிலிருந்து போட்டியிடும் ஹில் கிருஷ்ணனின் பூர்வீகம் நெல்லை மாவட்டமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஏகப்பட்ட கனவுகளுடன் அமெரிக்காவுக்கு வந்திறங்கினார். இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார். எர்கோனாமிக்ஸ் மற்றும் பயோமெக்கானிக்ஸ் பிரிவில் மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்தார் ஹில் கிருஷ்ணன். பின்னர் இங்கேயே செட்டிலானார். படித்துக் கொண்டே வேலை பார்க்கும்போதுதான் தனது வருங்கால மனைவி டெபியை சந்தித்தார். அப்போது அவரும் நியூயார்க் பல்கலைக்கழக மாணவிதான்.

இதுகுறித்து ஹில் கூறுகையில், ஒரே வருடத்தில் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். அது எனது வாழ்க்கையின் தரத்தை மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பாதையையும் கூட மாற்றிய்மைத்தது. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்க அது உதவியது. எனது குடும்பப் பின்னணிக்கும், எனது மனைவியின் குடும்பப் பின்னணிக்கும் இடையே நிறைய வேற்றுமைகள். ஆனால் அன்பும், பாசமும் எங்களை ஒன்று சேர்த்தது என்கிறார் ஹில்.ஹில் கிருஷ்ணனின் சொந்த ஊரானது நெல்லை மாவட்டம் வடுகச்சிமதில் என்ற கிராமமாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் பிஇ படித்தார்.

இவரது தந்தை பெயர் கிருஷ்ணன், தாயார் பெயர் லட்சுமி. இவரது தம்பி கார்த்திக் ஒரு பல் மருத்துவர். இன்னொரு சகோதரர் கணேஷ். தற்போது பேராசிரியராக பணியாற்றி வரும் ஹில் கிருஷ்ணன், தேர்தலில் வெற்றி பெறுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இவர் போட்டியிடும் பகுதியில் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு இந்தியரும், தமிழரும் இத்தேர்தலில் போட்டியிட்டதில்லை. அதை விட முக்கியமாக தெற்காசியாவிலிருந்து நியூயார்க் நகரசபை தேர்தலில் போட்டியிடும் முதல் நபரும் கிருஷ்ணன்தான்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், ஜனநாயகம் என்பது உள்ளாட்சி அமைப்புகளிலிருந்துதான் தோன்றுகிறது. எனவேதான் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கு வந்தபோது எல்லோரையும் போலவே ஒரு சூட்கேஸு்ம், மனம் நிறைய நம்பிக்கையையும்தான் சுமந்து வந்தேன். யாராவது உதவி செய்தால் எப்படி நன்றி சொல்வது என்று கூட எனக்கு அப்போது தெரியாது. ஆனால் இன்று ஒரு அமெரிக்கனாக நான் என்னை முழுமையாக உணர்கிறேன். நியூயார்க் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. அதனால்தான் இன்று நியூயார்க் மக்கள் முன்பு நிற்க முடிந்துள்ளது என்றார் ஹில் கிருஷ்ணன்.

ஆண்டுக்கு 132 முறை!


Sex Sells.... உலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு தூக்கி விடுவார்கள் மார்க்கெட்டை. அதேபோலத்தான் சினிமாக்களிலும், மீடியாக்களிலும் கூட செக்ஸ்தான் முக்கியக் கருவியாக இருக்கிறது.தாம்பத்யம் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலத்தில் செக்ஸ், பிற மொழிகளில் செஸ்ஸோ, செக்சாஸ், செஸ்க் என பலவித பெயர்களில் அழைக்கப்படுகிறது செக்ஸ் உறவு. செக்ஸ் விஷயங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி உள்ளன என்பதை படித்துப் பாருங்களேன்...

செக்ஸ் வரி செக்ஸ்சுக்கு வரி என்றதும் ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தியாவில் அல்ல ஜெர்மனியில்தான் இந்த கூத்து. ஜெர்மன் நகரங்களில் விபச்சாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அது மட்டுமல்ல அத்தொழிலில் ஈடுபடுவோர் அரசுக்கு வரி கட்ட வேண்டும். விபச்சார விடுதிகளில் ஈபி மீட்டர் போல மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்கின்றனராம். 200 க்கும் மேற்பட்ட செக்ஸ் தொழிலாளிகள் அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் ஈரோ சம்பாதிக்கின்றனர். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப வரியும் கட்டுகின்றனர். சந்தோஷத்திற்காக வரும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு அங்கு கையோடு ரசீதையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.

ஆண்மையின் அடையாளம் ரஷ்யா ரஷ்யர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று சமீபத்தில்தான் ஒரு கருத்துக் கணிப்பு கூறியது. ஆனால் நிஜத்தில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை ஒரு பெண்ணின் தாய்மைச் சாதனை கட்டியம் கூறுகிறது. ரஷ்ய பெண்மணி ஒருவர் 69 முறை தாய்மை அடைந்து பிள்ளை பெற்றுள்ளார். உலகிலேயே அதிக முறை தாய்மையடைந்து குழந்தை பெற்ற சாதனைக்குரியவர் இவர்தான். இதில் 16 முறை இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். 7 முறை தலா மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். 4 முறை தலா 4 குழந்தைகளைப் பெற்று பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு ஓய்வே இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!.

செக்ஸ் பொம்மைக்கு தடை உலகிலேயே கவர்ச்சிப் பெண்ணாக பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டனர் ஜெனீபர் லோபஸ். அதேபோல ஹாலி பெர்ரி, பிரிட்னி பியர்ஸ் ஆகியோரும் செக்ஸியானவர்களாக கருத்துக் கணிப்புகள் மூலம் அறியப்பட்டவர்கள். இவர்களால் அமெரிக்காவுக்கும் பெருமைதான். ஆனால் அமெரிக்காவில் செக்ஸ் விஷயத்தில் ரொ்ம்பவே இப்போது கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு அலபாமாவில் தடை உள்ளதாம். மற்ற பகுதிகளில் இப்படியெல்லாம் இல்லை.

அமெரிக்கர்கள்தான் டாப் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 132 முறை செக்ஸ் உறவு கொள்கின்றனராம். செக்ஸ் உறவு கொள்வதில் இவர்கள்தான் உலகிலேயே நம்பர் ஒன்னாக உள்ளனர். இரண்டாவது இடத்தை ரஷ்யர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் ஆண்டுக்கு 122 முறையும், முத்தத்திற்குப் பெயர் போன பிரெஞ்ச் நாட்டினர் 121 முறையும் உறவில் ஈடுபடுகின்றனராம். நான்காவது இடத்தில் கிரீக் நாட்டினர் உள்ளனர். உலகிலேயே குறைந்த அளவில் உறவில் ஈடுபடுவது ஜப்பான், மலேசியா, சீனர்கள்தானம். அவர்களுக்கு அதில் ஈடுபாடு அதிகம் இல்லை போல. இந்தியா இந்த விஷத்தில் ரொம்ப தூரத்தில்தான் உள்ளது.

சீனாவின் சக்தி செக்ஸ் மூலம் உடலில் எண்ணற்ற சக்தி கிடைக்கிறது என்பது சீனாவில் உள்ள தாவோயிச நம்பிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. செக்ஸ் உறவின்போது பெண்களிடமிருந்து வெளிப்படும் சக்தி தங்களை வந்தடைவதாக அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே தாவோயிஸ்டுகள் பலர் பல பெண்களுடன் உறவு கொள்வதை ஊக்கமளித்து வந்தனராம். இதன் மூலம் தங்களுக்கு பெருமளவில் சக்தி கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பெண்களே சக்தி என்ற நம்ம ஊர் தத்துவத்தை இவர்கள் இப்படி உல்டாவாக நம்பியுள்ளனர் என்பது சுவாரஸ்யமானதுதான்.

உடம்பே தட்டு ஜப்பானியர்கள் தாம்பத்ய உறவிற்கு முன்பு வித்தியாசமான முறையில் உணவுகளை உட்கொள்கின்றனர். அதாவது நிர்வாண நிலையில் பெண்களை படுக்க வைத்து தட்டு போல பாவித்து அவர்களின் உடம்பு மீது உணவு வகைகளை பரிமாறி சாப்பிடுகின்றனர். இதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு பெரும் கிளர்ச்சி ஏற்படுமாம். இப்படிப்பட்ட செயல்கள் இன்றும் கூட ஜப்பானில் நடைமுறையில் உள்ளதாம்.

ஆண்மை தினம் ஜப்பானில் கடந்த மார்ச் 15 ம் தேதி ஆண்மை தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமே ஆண்குறியைப் போற்றிக் கொண்டாடுவதாம். இந்த விழாவின் ஒரு பகுதியாக 250 ஆண்களும், 250 பெண்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உறவு கொண்டனர். அதுதொடர்பான டிவிடியையும் வெளியிட்டனர்.இப்படி செக்ஸ் விஷயங்கள் உலகம் பூராவும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

நீங்கள் பேசுவதை கவனித்த உங்கள் குழந்தை பேசுகிறது!

எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கும் போது நல்லவர்களாகத்தான் பிறக்கின்றனர். சமுதாயத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாறுவது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெற்றோர்களுக்கு பங்குண்டு ஏனெனில் அவர்கள் கற்றுக்கொள்வதே பெற்றோர்களைப் பார்த்துதான். எனவே குழந்தைகளுக்கு ரோல்மாடலாக திகழவேண்டிய பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

தேவையற்ற விமர்சனம் நம்முடைய நண்பர்களுக்கு நாம் செல்லப்பெயர் வைத்திருக்கலாம். அந்தப்பெயரை குழந்தைகள் முன்னிலையில் சொல்லி விமர்சிப்பது தவறான பழக்கம். ‘முட்டைக்கண்ணன்’ என்று பெயர் வைத்திருந்தால் அதை கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளும் குழந்தைகள், அடுத்தநாள் நண்பர் வரும்போது முட்டைக்கண்ணன் அங்கிள் வந்திட்டார் என்று கூற வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கை. அதேபோல் அவர்கள் டீச்சரைப் பற்றி குழந்தைகளிடம் கமென்ட் அடிக்கக் கூடாது. இதனால் குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

சண்டை வேண்டாம் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடவேண்டும். அது குழந்தைகளை மனதளவில் பாதிக்கும். கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. எனவே அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தீயவை பேசாதீர்கள் சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். அதேபோல் குழந்தைகள் முன்னிலையில் தீய சொற்களை பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொய் சொல்லாதீர்கள் சில பெண்மணிகள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். அது குழந்தைகளுக்கு தெரிந்து விட்டால் "அப்பாகிட்டே சொல்லாதே என்று கூறுவர். இது தவறான பழக்கமாகும். ஏனெனில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் குழந்தை "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று ப்ளாக்மெயில் செய்ய வாய்ப்புள்ளது.

கமிஷன் பழக்கம் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

முன் உதாரணம் குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை குழந்தை முன்னிலையில் மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

ஒப்பீடு வேண்டாமே படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது. அதேபோல் உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

ஆராய்ச்சி நிலையங்களில் பரிசோதனைகளுக்கு, உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தடை!


கல்விக்கூடங்கள் மற்றும் இதர ஆராய்ச்சி நிலையங்களில் பரிசோதனைகளுக்கு, உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் தடை விதித்துள்ளது.உடலை அறுத்து சோதனையிடல், மருந்து சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான நடைமுறை சோதனைகளுக்கு, பல கல்வி நிலையங்கள் மற்றும் பல்வேறுவிதமான ஆராய்ச்சி மையங்களில், உயிருள்ள விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்கு, இனிமேல் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், அதற்கு பதிலாக கணினி மாதிரிகள் போன்ற மாற்று அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பான வழிகாட்டுதல்கள், பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இந்திய மெடிக்கல் மற்றும் பார்மசி கவுன்சில்கள் போன்றவைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பிற்கான சட்டம் 1960, பிரிவு 15ன் படி இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் கூறப்படுவதாவது: மிருகங்களுக்கு இழைக்கப்படும் தேவையற்ற சித்ரவதைகள் மற்றும் கொடுமைகளைத் தடுக்கும் கடமை மத்திய அரசுக்கு உண்டு. உயிருள்ள விலங்குகளை நேரடியாக பரிசோதனை செய்யும் முறைகளுக்கு மாற்றாக இருக்கும் சிடி, கணினி மாதிரிகள் மற்றும் காட்சி மாதிரிகள் போன்றவை அனாடமி மற்றும் பிசியாலஜி கற்பித்தலில், சிறந்த மாற்றுகளாக மட்டுமின்றி, உயர்ரக கற்கும் கருவிகளாகவும் பயன்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

லிங்கமாக இருப்பது ஏன்?

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். 

கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.  தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.  சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

அதிர்ஷ்டமில்லாத குழந்தை புதைக்கப்பட்டது!


மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பிறந்த ஆண் குழந்தையை அதிர்ஷ்டமில்லாதது என நம்பி உயிரோடு புதைத்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், புதைக்கப்பட்ட அந்தக் குழந்தை இரண்டு நாட்களுக்குப் பின், உயிரோடு மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவிலிருந்து, 450 கி.மீ., தொலைவில் உள்ள நகரம் ஹபூர். இந்த நகரின் ஒரு பகுதியில் வசிப்பவர்கள், கடந்த சனியன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. எங்கிருந்த சத்தம் வருகிறது என, அவர்கள் தேடியபோது, பூமியின் மேல் பகுதியில் எந்தக் குழந்தையும் தென்படவில்லை. பின்னர், ஒரு வழியாக குழந்தையின் அழுகுரல் பூமிக்கு அடியில் இருந்துதான் கேட்கிறது என்பதைக் கண்டு பிடித்தனர்.

ஆண் குழந்தை: சத்தம் வந்த பகுதியை தோண்டிய போது, அங்கு மண்ணால் செய்யப்பட்ட ஜாடி ஒன்றில், ஆண் குழந்தை ஒன்று உயிரோடு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த குழந்தைதான் அழுதுள்ளது. குழந்தை உடல் முழுவதும் குங்குமம் பூசப்பட்டிருந்தது. ஜாடியின் அருகே பத்திக் குச்சிகளும் கிடந்தன. பிறந்து ஆறு நாட்களே ஆன நிலையில் இருந்த, அந்தக் குழந்தையை மீட்ட அவர்கள், மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு இருந்ததை கண்டு வியப்படைந்த டாக்டர்களும் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தைக்கு மஞ்சள் காமாலையும், கிருமி தொற்றும் பாதித்திருப்பதால், தற்போதைக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

மந்திரவாதி யோசனை: குழந்தையை மீட்டவர்கள் இதுபற்றி போலீசிற்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, குழந்தையின் பெற்றோரான கிரண்பால் சிங் மற்றும் அனிதாவைக் கண்டு பிடித்தனர். அப்போதுதான் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டதும், மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு இதைச் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கிரண்பால் மேலும் கூறியதாவது: அனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இரண்டு முறை கருச்சிதைவும் நிகழ்ந்துள்ளது. அதனால், இந்த முறை கர்ப்பம் தரித்ததும், மந்திரவாதி ஒருவரை நாடிச் சென்று யோசனை கேட்டோம். அவரோ, "பிறக்கப்போவது, துரதிருஷ்டமான குழந்தை. எனவே, அந்தக் குழந்தையை உயிருடன் புதைத்து விட வேண்டும். அதற்கு முன்னதாக பூஜைகள் செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் புதைத்து விடுங்கள். அப்படி புதைத்து விட்டால், உங்களின் துயரம் எல்லார் தீர்ந்து விடும். இனி பிறக்கப் போகும் குழந்தைகள் நல்லவையாக இருக்கும்' என்று கூறினார். அதை நம்பிய நாங்கள் குழந்தை பிறந்தவுடன் அவரிடம் தெரிவித்தோம். அவர் வந்து பூஜைகள் செய்த பின், குழந்தையை உயிரோடு புதைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். ஆனாலும், புதைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், அந்தக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டமானது என, பெற்றோரால் கருதப்பட்ட குழந்தை மரணத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், பெற்றோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். யோசனை சொன்ன மந்திரவாதியையும் தேடி வருகின்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...