|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 October, 2011

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதிர்க்காதா? உச்சநீதிமன்றம் வியப்பு??


திமுக எம்பி கனிமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று வெளியான செய்திக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர். 2ஜி வழக்கில் கனிமொழி மற்றும் சிலருக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதிர்க்காது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது.இந்த செய்தி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியப்பு தெரிவித்தனர்.


எனினும் இந்த செய்தி தவறானது என்று உச்சநீதிமன்றத்திடம் சிபிஐ விளக்கமளித்தது. நீதிமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட 2ஜி குற்றவாளிகளின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனிடையே 2ஜி வழக்கு தொடர்பாக சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்துக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. தொழிலதிபர்கள் சிறையில் அடைத்தால் அது முதலீட்டை பாதிக்கும் என சல்மான் குர்ஷித் தெரிவித்திருந்தார். இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது எங்களை பாதிக்கச் செய்யும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


சல்மான் குர்ஷித்தின் கருத்து வெளியான ஊடக செய்தியைக் குறிப்பிட்டுப் பேசிய நீதிபதி எச்எல்.தத்தி, எங்களுக்கு குழப்பமாக உள்ளது. தொழிலதிபர்களை சிறையில் அடைப்பதில் உச்சநீதிமன்றம் ஆர்வமாக உள்ளது என்பது போன்ற தோற்றத்தை அமைச்சரின் அறிக்கை உண்டாக்கியுள்ளது. அது எங்களை பாதிக்கச் செய்துள்ளது. அமைச்சர் வெளியிட்ட அறிக்கை சரியா தவறா? இதில் அரசின் நிலையை விளக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் "எஸ்கேப்' ஆகும் டாக்டர்கள்!


அரசு நிர்ணயித்துள்ள பணி நேரப்படி, பெரிய ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும், ஏதாவது ஒரு டாக்டர் பணியில் இருந்தாக வேண்டும். ஆனால் நடைமுறையில், பெரும்பாலான மருத்துவமனைகளில், பகல் 1 மணி வரை கூட, டாக்டர்கள் இருப்பதில்லை என்பது, ஊரறிந்த ரகசியம். நோயாளிகள் அழைத்தால், எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க, டாக்டர்கள் முன்வர வேண்டும். ஆனால், பெரும்பாலான டாக்டர்கள், 20 முதல் 25 கி.மீ., தொலைவில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் தங்கி, தனியாக கிளினிக் நடத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களின் அருகில் அவர்கள் தங்குவதில்லை.தகவல் அறியும் சட்டப்படி பெறப்பட்ட தகவல் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்களின் பணி நேரம், குறைந்தது 6 மணி நேரமும், அதிகபட்சமாக 12 மணி நேரமுமாக உள்ளது. இரவுப் பணி வரும் போது, 12 மணி நேரம் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். ஆனால், பல டாக்டர்கள் இரவில் தங்கியிருப்பதில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சென்னையில் இருந்து ( 100 கி.மீ.,) தினமும் ஒரு டாக்டர் வந்து செல்வதாக, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிலை தான் உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அதிக நேரம் பணிபுரிந்து களைத்துப் போய்விடுகின்றனர். இதனால், அவர்களது பணி நேரத்தை குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. பொது சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையில், 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, டாக்டர்களின் பணி நேரம் குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட பணி நேரப்படி கூட, யாரும் பணி செய்வதில்லை.

தமிழகத்தில், எந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலாவது டாக்டர்கள் பணி செய்கிறார்களா என, பரவலாக விசாரித்த போது, நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒருவரிடம் கேட்ட போது,"கிராமம் அல்லது சிறு நகரங்களில் எங்கள் குழந்தைகள் படிக்க நல்ல பள்ளி இல்லை. வேறு வசதிகளும் கிடைப்பதில்லை. எனவே, அருகில் உள்ள நகரத்தில் இருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது' என்றார்.சட்டசபையில் சில உறுப்பினர்கள் பேசும் போது,"ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தங்கியிருக்க, அவர்களுக்கு அங்கே குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கைபாண்டியனிடம் கேட்டபோது,"அரசு நிர்ணயித்துள்ள பணி நேரத்தில் டாக்டர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் மட்டுமல்ல, தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, பெரும்பாலான மருத்துவமனைகளில், பிற்பகலில் டாக்டர்கள் யாரும் வருவதில்லை. அவசர கிசிச்சை பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளில் மட்டும் டாக்டர்கள் பணியில் இருக்கின்றனர்.

அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் கனகசபை கூறும்போது,"ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் உள்ளனர். மாவட்ட ஆட்சியருடனான ஆய்வுக் கூட்டம், தாசில்தாருடனான ஆய்வுக் கூட்டம், பல்வேறு மருத்துவ முகாம்கள் என, அவ்வப்போது அவர்கள் வெளியே செல்ல வேண்டியுள்ளதால், சில நேரங்களில் மருத்துவமனையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எப்போதும் பிற்பகலில் இருப்பதில்லை என, ஒட்டு மொத்தமாகக் கூறுவதில் உண்மை இல்லை' என்றார்.

சமூக, சமத்துவத்துக்கான டாக்டர் சங்கத் தலைவர் ஜி.ஆர். ரவீந்திர நாத் கூறும் போது,"ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு இப்போது அதிக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டங்கள், சமூக திட்டங்களில் பங்கேற்பு என, மருத்துவமனைக்கு வெளியேயும் அவர்களுக்கு அதிக பணி உள்ளது. சிலர் "ஓவர் டைம்' செய்கிறார்கள் என்றே சொல்வேன். நீங்கள் சொல்வதெல்லாம், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. இப்போது அப்படி இல்லை' என்றார்.

சென்னை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத கிராம செவிலியர் கூறும் போது,"மாதத்துக்கு 15 முதல் 20 "டெலிவரி' பார்க்கிறோம். ஆனால், டாக்டர் எதற்கும் வருவதில்லை. பிற்பகலில் எந்த டாக்டரும் இருப்பதில்லை என்பது உண்மை' என அடித்துச் சொன்னார்.

இதே நாள்...


  • மாலாவி அன்னையர் தினம்
  •  ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
  •  கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
  •  சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)
  • எழுதுதல் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது!


    படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது" பிரான்சிஸ் பேகனின் ஒரு புகழ்வாய்ந்த பொன்மொழி இது.
    எழுதுவதில் ஒரு மந்திரம் இருக்கிறது. ஒரு குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது மற்றும் முன்வருகிறது.
    வரைதல் என்பதும் தகவல் தொடர்பின் ஒரு நிலை. தகவல்தொடர்பின் ஒரு அற்புத நிலையாக வரைதல் திகழ்கிறது. குழந்தைகளுக்கு இது ஒரு முக்கிய காலகட்டம். தன்னுடைய உணர்வுகளை எளிய முறையில் தெரிவிக்கும் வகை வரைதலாகும். எழுத்திற்கு முன்னர் வரைதலே, தகவல் தொடர்பாக இருந்தது. வரைதல் என்பது சிறந்த கலை என்றாலும், தகவல் தொடர்பு என்ற அளவில் இது மிகவும் இன்று ஒதுங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு அறிவியலாக வளரவில்லை. உங்கள் குழந்தையை வரைய ஊக்குவிக்கவும். தனது மனதில் இருப்பதை குழந்தை வரையப் பழகுவது நல்லது. பின்னர், சிறிது சிறிதாக அதை எழுதுவதற்குப் பழக்கலாம். அதிகமாகப் பேசும் குழந்தைக்கூட, எழுதும்போதுதான் திருப்தியாகவும், அமைதியாகவும் இருக்கும்.

    குழந்தையின் எழுதும் திறனை மேம்படுத்தல்: எழுதுதல் செயல்பாடானது, உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சி உணர்வையும், திருப்தியையும் தருகிறது. எழுதும் செயல்பாட்டில் ஒரு குழந்தை தன்னியக்க ஆனந்த செயல்பாட்டில் செல்கிறது. எனவே ஒரு வளரும் மேதைக்கு எழுத்து என்பது முக்கியமானது.பள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்புகையில், ஆசிரியரால் ஒவ்வொரு குழந்தையின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் தனியான கவனத்தைத் தர முடிவதில்லை. ஆனால் வீட்டில் பெற்றோர்களால் அதை செய்ய முடியும். எழுதுதலானது, ஒரு குழந்தையின் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. இதைத்தவிர, பிறருடன் ஒத்துப்போகும் திறன் மற்றும் அமைப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், நல்ல எழுத்துப் பயிற்சி ஒரு சிறந்த தகவல் தொடர்பாளராகவும் குழந்தையை மேம்படுத்துகிறது.

    ஊக்குவித்தல்: உங்கள் குழந்தைக்கு நல்ல எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, வற்புறுத்தக்கூடாது மற்றும் அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது. இதனால் உங்கள் குழந்தைக்கு எழுவதின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடும். மாறாக, சிறு பரிசுப் பொருட்கள், பாராட்டு மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கலாம். எழுதுவதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாற்றலாம். குழந்தையிடம், கதைகள் மற்றும் கவிதைகளைப் படிக்கலாம். கவிதைகளின் ஓசை நடையும், இனிய இசையும் குழந்தையின் கற்பனைத் திறனை வளர்க்கும். குழந்தையுடன் வார்த்தை விளையாட்டுக்களையும் விளையாடலாம். மேலும், வார்த்தை விளையாட்டை குடும்ப விளையாட்டாகவும் விளையாடலாம். க்ஷனரி(Dictionary) உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தையின் வார்த்தை அறிவு வளர்ந்து அதன்மூலம் அதன் எழுத்து வளம் மேம்படும். ஒரு குழந்தை அறிவாளியாக வளரும் செயல்பாட்டில் வார்த்தை வளம் என்பதும் மிகவும் முக்கியம்.

    நீங்கள் பணிக்கு செல்லும் பெற்றோராக இருக்கலாம். இதனால் போதுமான நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். எனவே, உங்களின் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை, எழுதுமாறு நீங்கள் கூறலாம். ஏனெனில், பல சமயங்களில் நேரடியாக பேசுவதைவிட, எழுதும்போது எண்ணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். குழந்தையின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு இந்த எழுத்துப் பழக்கம் மிகவும் முக்கியமானது. அடிக்கடி எழுதுவதால் குழந்தையின் தகவல் தொடர்பு திறனோடு, சிந்தனைத் திறனும் வளர்ச்சியடைகிறது.இடம், 

    நேரம் முக்கியமல்ல: உங்கள் குழந்தை வரைவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். அதேசமயம், அந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் உங்களின் குழந்தை அமர்ந்து எழுதினாலோ அல்லது வரைந்தாலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது. அதற்காக கடிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் குழந்தைக்கு சுதந்திரம்தான் முக்கியமே தவிர இடமல்ல. அது ஒன்றும் பெரிய தவறுமல்ல. மேலும், நீங்கள் உங்களின் குழந்தையிடம் சிறிய எழுத்துவேலை அல்லது வரையும் வேலையைக் கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி நெருக்கடி தரக்கூடாது. குழந்தைக்கு சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஒரு குழந்தை சிந்திப்பது என்பது நாம் சிந்திப்பது போன்றதல்ல. குழந்தை சிறிதுநேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். அதன் மூளை தயாராக நேரம் தேவை. எனவே, குழந்தை சிந்திப்பதற்கு நல்ல சுதந்திரம் முக்கியம்.

    முறையான அணுகுமுறை: ஒரு குழந்தையின் எழுத்து முயற்சியில் சிறுசிறு தவறுகள் ஏற்படுவது ஒரு தவிர்க்கவியலா அம்சம். ஆனால் ஒரு நல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தையின் கருத்துதான் முக்கியமே தவிர, அதிலிருக்கும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை போன்றவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவை காலப்போக்கில் சரிசெய்யத்தக்கவை.

    தனியுரிமை பாதுகாப்புஉங்கள் குழந்தை ஒன்றை எழுதியிருந்தால் அதை திருத்தி எழுத வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் குழந்தையின் தனித்தன்மை சிந்தனை பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தை எழுதிய விஷயங்களுக்கு அது மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும். குழந்தையின் தனித்தன்மையை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.

    விமர்சனம் தவிருங்கள்: ஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே உங்கள் குழந்தையின் எழுத்திலுள்ள நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்ட தவற வேண்டாம். நுட்பம், விரிவான விவரணங்கள், சிந்தனை மற்றும் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் போன்ற அம்சங்கள்தான் எழுத்தில் இருப்பதுதான் ஒரு வளரும் மேதையின் அடையாளங்கள். எனவே, அதுபோன்ற அம்சங்களை அடையாளம் கண்டு நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

    பின்பற்றுதல்: உங்கள் குழந்தையின் எழுத்தில், வேறு எவரின் தாக்கமாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அது ஒரு ஆரம்ப படிநிலை. உலகில் பல பெரிய எழுத்தாளர்கள், இளமையில் வேறு யாரேனும் ஒரு இலக்கியவாதியால் கவரப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு பிறரின் பாதிப்பு உங்கள் குழந்தைக்கு இருந்தாலும், பின்னாளில் அது தனது தனித்தன்மையைப் பெறும்.

    தகவல்தொடர்பை ஊக்குவித்தல்உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.
    மேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.

    கேட்பவற்றை எழுத வைத்தல்: உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தால்(ஆபாசமில்லாத பாடல்கள்) அந்த பாடலை டேப்-ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்க வைத்து, அந்த வரிகளை அப்படியே பேப்பரில் எழுத வைக்கலாம். இதுமட்டுமின்றி, கவிதைகள் மற்றும் செய்யுள்கள் போன்றவைகளை, புத்தகத்தில் படித்தாலும், அவற்றை தனியாக பேப்பரில் எழுத வைக்கலாம். சிறந்த எழுத்துப் பயிற்சியானது, உங்கள் குழந்தையின் கைத்திறனை மட்டுமின்றி, மூளைத்திறனையும் அதிகரிக்கின்றது.

    பட்டியலிடும் பழக்கம்: அதிகமான பாடங்கள் படிக்க வேண்டியிருந்தாலும் சரி, வீட்டில் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் சரி, புத்தகங்களை அடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அதிகமானப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்களுக்கு பட்டியலிட்டு வேலை செய்ய உங்கள் குழந்தையைப் பழக்கவும். ஏனெனில் இந்தப் பட்டியலிடும் பழக்கமானது, ஒரு அமைப்பு ரீதியான திறனை வளர்ப்பதோடு, எதையும் மறக்காமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒரு வேலையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற ஒரு வரைவு திட்டத்தையும் வழங்குகிறது.

    சஞ்சிகைகள்(Journals): சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவரை, முக்கியமாக 2 வகை சஞ்சிகைகள் இதற்கு பொருத்தமானவை. செய்தி சஞ்சிகைகள் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள். செய்தி சஞ்சிகைகள் விரிவான சமூக அறிவை வளர்ப்பவை.சுற்றுலா சஞ்சிகைகள் உலகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அதன்மூலம் விஷயங்களை எளிதில் கற்று, எழுதத் தூண்டுபவை. எனவே, சஞ்சிகைகளை உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் உலகை பரந்துபடச் செய்யுங்கள்.

    நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை. மேலே சொன்ன அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு யுகத்தில் இதுபோன்ற எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிடலாகாது. 

    காமா கதிர்களால் பூமிக்கு ஆபத்து!


    விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதால் வெளியாகும் காமா கதிர்வீச்சால், பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வாஸ்பார்ன் பல்கலைகழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் பிரென் தாமஸ் கூறியதாவது, விண்வெளியில் ஏராளமான நட்சத்திரங்கள் உலா வருகின்றன. இவை அவ்வப்போது, ஒன்றோடு ஒன்று மோதி கொள்கின்றன. இதனால் விண்வெளியில் பலவித கதிர்வீச்சுகள் வெளியாகின்றன. இதில் டன் கணக்கில் காமா கதிர்களும் வெளியாகின்றன.

    இந்த காமா கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள பாதுகாப்பு படலமான ஓசோன் படலத்தை அதிகளவில் பாதிக்கிறது. ஒரு நொடி நேரத்தில் வெளியாகும் காமா கதிர்களால் ஓசோன் படலத்தில் 2 துளைகள் விழுவதாக, விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர்.

    நீண்ட காமா கதிர்களை விட, சிறிய காமா கதிர்களின் தாக்கம் தான் அதிக சேதத்தை உண்டாக்குகிறது. காமா கதிர்களின் நேரத்தை விட, கதிர்வீ்ச்சின் அளவு தான் முக்கியமாக கருதப்படுகிறது.

    நட்சத்திரங்களின் மோதல் மூலம் முதலில் பூமியின் மேல் பகுதியில் உள்ள ஓசோன் படலம் முழுமையாக அழிந்துவிடும். மேலும், ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்கள் நிலைத் தன்மை இழந்து ஒன்றோடு ஒன்று இணைந்து, நைட்ரஸ் ஆக்சைடாக மாறும். பின்னர் மீதமுள்ள ஓசோன் படலத்தை முழுமையாக அழித்து, மழையோடு கரைந்துவிட செய்துவிடும்.

    ஓசோன் படலம் அழிந்தால், பூமியில் உள்ள கடல்வாழ் உயிரிகள், தாவரங்கள் மற்றும் மனித குலத்துக்கும் பேராபத்து ஏற்படும், என்றார். இதற்கு முன் நட்சத்திர மோதல்கள் எப்போதாவது நடந்துள்ளதா என்பதை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடுன்னு நச்சரிக்காதீங்க!


    குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

    குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

    குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்றார்.

    தமிழனைத் தலை குணிய வைத்த தமிழர்கள்!


    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், 'தினமணி'யில் எழுதியுள்ள கட்டுரை: இந்திய அரசிலும், அரசியலிலும் பல தமிழர்கள் உயர் பதவிகள் வகித்து தங்களது அறிவாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.

    இந்தியாவின் கடைசி கவர்னர்-ஜெனரலாக பதவி வகித்த ராஜாஜி, குடியரசுத் தலைவர்களாக டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், சி. சுப்பிரமணியம் போன்றோரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக உ. முத்துராமலிங்கத் தேவர், அகில இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக என். சிவராஜ் போன்றோர் பதவி வகித்து அப்பதவிகளுக்கும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

    ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் எனக் கருதப்படும் அலைக்கற்றை ஊழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர் முக்கியப் பங்கு வகித்திருப்பது, என்றும் மாறாத தலைக்குனிவைத் தமிழர்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

    தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ. ராசா அலைக்கற்றையை அளிப்பதில் கையாண்ட முறை ஊழல் நிறைந்தது. இதன் விளைவாக, அரசுக்கு வரவேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

    எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதையொட்டி பெரும் அமளி ஏற்பட்டது. இவ்வளவும் பகிரங்கமாக வெளியான பிறகும் அமைச்சர் ராசா தானாக முன்வந்து பதவி விலகவில்லை. விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகி இருக்கும்படி அவருக்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஆணையிடவில்லை.

    இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன் பிரதமரே முன்வந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து விசாரணைக்கு ஆணையிட்டிருப்பாரேயானால், உச்ச நீதிமன்றம் இப்பிரச்னையில் தலையிட்டு விசாரணையைத் தானே நேரடியாக மேற்கொள்ள நேரிட்டிருக்காது.

    ராசா பதவியில் தொடர்வதை உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகே அவரைப் பதவி விலக பிரதமர் அனுமதித்தார் என்பது வெட்ககரமானது. ஆ. ராசா, கனிமொழி மற்றும் சில உயர் அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும்போதே மற்றொரு மத்திய அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    நிதியமைச்சகத்தின் துணைச் செயலராக உள்ள ராவ் என்பவர் பிரதமரின் அலுவலகத்துக்கு மார்ச் 25-ம் தேதி அனுப்பிய ரகசியக் குறிப்பு அவர் மட்டுமே தயாரித்தது அல்ல. மாறாக, தொலைத் தொடர்புத் துறை, சட்டத்துறை, நிதித்துறை ஆகியவற்றின் செயலர்களும், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலரும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைச்சரவைச் செயலர் தலைமை வகித்திருக்கிறார்.

    ராவ் தயாரித்த குறிப்பில் நிதித்துறை 12 அம்சங்களைக் குறிப்பிட்டது. அதற்கு மேல் 14 அம்சங்களை அமைச்சரவை செயலகம் சேர்த்தது என்றும் திட்டவட்டமான தகவல்கள் கூறுகின்றன. அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம் ஆவார். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அனைத்தும், அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க நியாயமில்லை.

    இந்த மாபெரும் ஊழலை அமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால் அப்போதே தடுத்திருக்கலாம் என தனது குறிப்பில் ராவ் குறிப்பிட்டிருப்பது முக்கியமானது ஆகும். முளையிலேயே கிள்ளி எறித்திருக்கக்கூடிய இந்த ஊழல் முள்செடியை மரமாக வளர அனுமதித்தது ப. சிதம்பரமே என்பது தெளிவாகத் தெரிகிறது.

    பதவியில் மிக இளையவரான ராசா மட்டுமே இந்த ஊழலைச் செயதிருக்க முடியாது என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. எனவே, ஆ. ராசா செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் அனைத்திலும் ப. சிதம்பரத்துக்கும் பங்கு உண்டு எனக் கருத வேண்டியுள்ளது.

    சிதம்பரம் நிரபராதியாக இருந்தால் இந்த ஊழலைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடமிருந்தும் அதைப் பயன்படுத்தாதது ஏன்? அவ்விதம் அவர் செயல்பட முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தால், அவரை முடக்கிய அதிகார சக்தி எது? இந்தக் கேள்விகளுக்குரிய விடையை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை சிதம்பரத்துக்கு உண்டு.

    அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் ஆ. ராசாவும், ப. சிதம்பரமும் தன்னைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக 4-7-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். எனவே 2001-ம் ஆண்டு விலையில்தான் அலைக்கற்றை விற்பனை நடக்கப்போகிறது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கும் தெரிந்துதான் இருக்க வேண்டும். சிறந்த பொருளாதார நிபுணர்களான அவர்கள், இதனால் நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் என்பதையும் கணித்திருக்க வேண்டும். ஆனாலும் இந்த ஊழல் நடைபெறுவதைத் தடுக்க அவர்கள் எதுவுமே செய்யவில்லை. அவ்வாறு செய்யவிடாமல் அவர்களைக் கட்டிப் போட்ட சக்தி எது?

    நிதியமைச்சகத்தின் இந்தக் குறிப்பு வெளியான பிறகும் மத்திய புலனாய்வுத் துறை இதுவரை ப. சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரிடம் பெயரளவுக்குக் கூட விசாரணை நடத்தவில்லை.

    பிரணாப் முகர்ஜிக்கும் ப. சிதம்பரத்துக்கும் இடையே உள்ள பிரச்சினைபோல இது திட்டமிட்டுச் சித்திரிக்கப்படுகிறது. அலைக்கற்றை ஊழல் குறித்து எல்லாம் தெரிந்திருந்தும் அதைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருந்தும் அதை ஏன் ப. சிதம்பரம் தடுக்கவில்லை என்பதுதான் பிரச்னையே தவிர, இரு அமைச்சர்களுக்கு இடையிலான பிரச்னை அல்ல இது.

    இதற்கிடையில் சிறையில் உள்ள ஆ. ராசா பிரதமரையும், ப. சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின்முன் வைத்துள்ளார். பிரதமரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ராசாவைப் பின்னிருந்து இயக்கிய சக்தி எது என்பது அம்பலமானால் என்ன செய்வது என அவர்கள் பதைபதைத்துப் போனார்கள்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ஆ. ராசா, ப. சிதம்பரம் ஆகியோர் நேர்மையற்ற வகையில் நடந்துகொண்ட விதம் இந்திய அரசியலில் தமிழகத்துக்கு இருந்த பெருமையை சீர்குலைத்துள்ளது. அலைக்கற்றை ஊழல் புகார் எழுந்தவுடன் பதவியை விட்டு விலகவும் விசாரணையை எதிர்கொள்ளவும் ஆ. ராசாவும் முன்வரவில்லை. ப. சிதம்பரமும் முன்வரவில்லை.

    போதாக்குறைக்குத் தகவல் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவரான தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்திலேயே அலைக்கற்றை ஊழல் தொடங்கிற்று என்ற குற்றச்சாட்டு எழுந்து அதன்பேரில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

    ஆக, இந்தப் பெரும் ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவருமே தமிழர்களாக இருப்பது தற்செயலாக நேர்ந்தது அல்ல. திட்டமிட்டே இந்த ஊழலை இவர்கள் செய்துள்ளனர் என்பது வெளிப்படையானது.

    மத்திய நிதியமைச்சர்களாக பிரதமர் நேருவின்கீழ் பதவி வகித்த ஆர். கே. சண்முகம் செட்டியார், டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போது பதவிகளைத் துச்சமாக மதித்து தூக்கியெறிந்து விசாரணையை நெஞ்சுரத்துடன் நேர்கொண்டு தங்களின் தூய்மையை நிலைநிறுத்தினார்கள்.

    சுதந்திர இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராகப் பதவி வகித்த ஆர்.கே. சண்முகம் 1948 பிப்ரவரியில் வரி ஏய்ப்பு தொடர்பான சில வழக்குகளைத் திரும்பப் பெற ஆணை பிறப்பித்தார். இந்த வழக்குகள் நியாயமற்ற முறையில் தொடுக்கப்பட்டுள்ளன என்று அவர் நினைத்ததால் இந்த முடிவை எடுத்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே வரி ஏய்ப்புகள் தொடர்பான விசாரணைக் கமிஷன் ஒன்றை வரதாச்சாரி என்பவர் தலைமையில் இந்திய அரசு அமைத்திருந்தது.

    கமிஷன் விசாரணையில் இருந்த சில வழக்குகளைத் திரும்பப் பெற நிதியமைச்சர் சண்முகம் உத்தரவிட்டதன் விளைவாக, பிரச்னை எழுந்தது. கமிஷன் தலைவரான வரதாச்சாரியைச் சந்தித்து, தனது நடவடிக்கை குறித்து சண்முகம் விளக்கினார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பெரும் பிரச்னையாக ஆக்கினார்கள்.

    உடனடியாக ஆர்.கே. சண்முகம் செட்டியார் தனது நிதியமைச்சர் பதவியில் இருந்து 1948-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதியன்று விலகினார். பிரதமர் நேரு பதவி விலகலை ஏற்கத் தயங்கினார். மிகக் கடுமையான சூழ்நிலையில் சண்முகம் தன் பொறுப்பைத் திறம்பட நிர்வகித்ததாகவும் மிகுந்த வருத்தத்தோடு பதவி விலகலை ஏற்பதாகவும் அவருக்கு நேரு கடிதம் எழுதினார். அவரையடுத்து நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற ஜான்மத்தாய் இந்த வழக்குகள் சம்பந்தமான கோப்புகள் முழுவதையும் பார்வையிட்டு சண்முகம் இதுதொடர்பாக எந்தத் தவறும் இழைக்கவில்லை எனப் பகிரங்கமாகக் கூறினார்.

    அதைப்போல நிதியமைச்சராக டி.டி.கே. இருந்தபோது பிரதமர் நேருவின் மருமகனான பெரோஸ் காந்தி முந்திரா ஊழல் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். நொடித்துப்போன நிதிநிலைமையில் இருந்த முந்திராவின் நிறுவனங்களை மீட்பதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகம் 2 கோடியே 76 லட்சம் ரூபாய்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.

    தனி ஒரு மனிதரைக் காப்பாற்றுவதற்காக இந்த வழியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடைப்பிடித்திருக்கிறது. இந்தப் பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வற்புறுத்தினார்.

    ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அன்றாட நிர்வாகத்தில் நிதியமைச்சருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், நிதியமைச்சராக இருந்த டி.டி.கே. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டார்.

    அதற்கிணங்க 1958-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி சக்ளா கமிஷனை பிரதமர் நேரு அறிவித்தார். அமைக்கப்பட்டு 50 நாள்களில் அந்தக் கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே நிதியமைச்சர் டி.டி.கே. பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    பிரதமர் நேருவுக்கு அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், ""நிதித்துறைச் செயலர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைச்சர் என்ற முறையில் நான் தார்மிகப் பொறுப்பு ஏற்கிறேன்'' என்று கூறி தனது கண்ணியத்தையும், நேர்மையையும் நிலைநாட்டினார்.

    ஆர்.கே. சண்முகமும், டி.டி.கே.யும் மத்திய நிதியமைச்சர் பதவியைத் திறம்பட வகித்து தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தார்கள். ஆனால், ஜனநாயக நெறிமுறைகளை நிலை நிறுத்தவும் வெளிப்படையான, நேர்மையான, தூய்மையான நிர்வாகம் நடக்கவேண்டும் என்பதற்காகவும் தங்கள் பதவிகளைத் துறக்க முன்வந்ததன் மூலம் மக்களாட்சியின் மாண்பை பல படி உயர்த்தினார்கள்.

    மேற்கண்ட இருவரையும் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பொறுப்பை வகித்த ப. சிதம்பரம் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் தனது கண்ணெதிரே நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததோடு, அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் இருந்தது, அவரின் மீதான ஐயத்தை அதிகப்படுத்தியுள்ளது.

    மேலும் அந்த ஊழலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சாதிக்க முயல்வதும் அவருக்குப் பிரதமர் நற்சான்றிதழ் வழங்குவதும் ஜனநாயக ஆட்சி முறையைக் கேலிக் கூத்தாக்கிவிட்டது. நிர்வாகத்தில் நேர்மை என்பதையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது.

    ஆர். கே. சண்முகம், டி. டி. கே. ஆகியோர் தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து நிலைநாட்டிய உன்னதமான மரபுகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இதற்குக் காரணமானவர்கள் ஆ. ராசா, ப. சிதம்பரம் ஆகிய இரு தமிழர்கள் என்பதால் ஒட்டுமொத்த தமிழர்களும் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணை பகத்சிங் கிராந்தி சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் அடித்து உதைத்தனர்!


    அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணை பகத்சிங் கிராந்தி சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த இருவர் அடித்து உதைத்தனர்.காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.சில நாட்களுக்கு முன் வாரணாசியில் ஒரு கூட்டத்தில் பேசிய பூஷண், காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இந் நிலையில் இன்று பிற்கலில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள பூஷணின் சேம்பருக்குள் நுழைந்த இருவர் அவரை முதலில் முகத்தில் அறைந்துவிட்டு, அடித்து உதைத்தனர். அவரை தரையில் இழுத்துப் போட்டு மிதித்தனர். இதில் அவரது உடை கிழிந்தது.இந்தத் தாக்குதல் நடந்தபோது ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பிரஷாந்த் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். இதனால் இந்த சம்பவம் முழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தாக்கியவர்களைத் தடுக்க முயன்ற டிவி நிருபரையும் அந்த நபர்கள் தாக்கினர்.

    இதையடுத்து அருகாமையில் இருந்த பிற வழக்கறிஞர்களும் பொது மக்களும் ஓடி வந்து பூஷணைக் காப்பாற்றி, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைப் பிடித்தனர். இன்னொருவர் தப்பியோடிவிட்டனர்.பிடிபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாங்கள் இருவரும் பகத்சிங் கிராந்தி சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பிடிபட்ட நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து ஸ்ரீராம் சேனா அமைப்பின் நோட்டீஸ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந் நிலையில் தாக்குதலில் காயமடைந்த பிரஷாந்த் பூஷண், ராம் மனோகர் லோகியா மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...