|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2011

எகிப்தை போல இலங்கையிலும் ஆட்சியை கவிழ்க்க சதி: ராஜபக்சே!


 மனித உரிமைகள் மீறப்படுவதமாகக் கூறி எகிப்தைப் போல, இலங்கையிலும் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது. ஆனால் அது வெறும் பகல்கனவாகவே முடியும் என்று மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவுகளில் நம்பிக்கை வைக்காது, வெள்ளைக்காரர்களின் விருப்பத்துக்கேற்ப தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்திய காலம் மாறிவிட்டது. அந்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். பிரச்னையைத் தீர்ப்பதற்கு நாட்டைப் பிரித்து கொடுப்பது தான் தீர்வு என்று வெள்ளைக்காரர்கள் எண்ணியிருந்ததை,  நாம் நாட்டைப் பிரிக்காமலேயே தீவிரவாதத்துக்கு முடிவு கட்டி விட்டோம் என தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேடப் பலரும் முனைகின்றனர். அவர்கள் எதற்கு இதைச் செய்கின்றனர் என்று மக்களுக்குத் தெரியும். வதந்தி, சூழ்ச்சிகளுக்கு மக்கள் அகப்படக் கூடாது. ஒருபோதும் பின்னோக்கித் திரும்பிவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

ரூ 686 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமைத் திட்டம்


ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தை ரூ 686 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் வளம், காட்டின் வளத்தில் அமைந்துள்ளது என்பதையும், காடுகளை வளர்த்து கண்போல் காப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி பெருகும் என்பதையும் உணர்ந்த  முதல்வர் ஜெயலலிதா, மனித சமுதாயம் உயிர் வாழ்வதற்கு மாசற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தரும் வனங்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.  வனப்பகுதிகளைச் சார்ந்துள்ள கிராம மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்றிடும் வகையிலும், தமிழகத்திலுள்ள வன வளத்தினை அதிகரிக்கும் வகையிலும்,  முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியுடன், 2005-2006 முதல் 2012-2013 முடிய செயல்படும் தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டம் II என்ற   எட்டாண்டு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத் திட்டமானது  2012-13 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. 

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில்  “தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம்”  ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் 2011-12 முதல் 2018-2019 வரையிலான எட்டு ஆண்டுகளில் 686 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்திட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உயிரினங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படும் முறையினை மேம்படுத்தும் வகையிலும், தகுதியான மேலாண்மையால் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையிலும், வனப்பரப்பிற்கு வெளியே மரங்கள் நடப்படும். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கினை அடைதல், இசைவிணக்கமான பொருளாதார மேம்பாட்டினை அடைதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படும் இத் திட்டத்தில், பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு, இயற்கை வளத்தை அதிகரித்தல், நிறுவனத் திறனை மேம்படுத்துதல், ஆலோசனை சேவைகள் ஆகியவை சிறப்பு அம்சங்களாகும். 

இத்  திட்டம் தமிழ்நாடு காடுவளர்ப்புத் திட்டம் பகுதி I மற்றும் பகுதி II ஆகிய திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்ட வனப் பகுதிகள் நீங்கலாக, இதர வனப்பகுதிகளில்  2011-12 முதல் 2018-2019 வரையிலான எட்டு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்.  இத் திட்டத்தின் பணிகளை கண்காணிப்பதற்காக திட்ட மேலாண்மை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த,  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  மேலும், இத் திட்டம் சம்பந்தமாக, செயல்படுத்தப்பட  உள்ள பணிகள் குறித்து முடிவெடுக்க, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஓர் உயர்நிலை அதிகாரக் குழு ஏற்படுத்தப்படும்.   

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தில் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு திட்டத்திற்காக 93 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், இயற்கை வளத்தை அதிகரித்தலுக்கு 182 கோடியே 54 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்காக 260 கோடியே 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், ஆலோசனை சேவைகளுக்காக 6 கோடியே 93 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், இதர பணிகளுக்காக 143 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 686 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.  வன உயிரின மற்றும் உயிர்பன்மை பாதுகாப்பு பணிகள், சவால்கள் நிறைந்தவையாக உள்ளன. மக்கட் தொகை பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும், விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால்  உணவு , நீர் மற்றும் வாழ்விடம், ஆகியவற்றிற்காக பெரும்பாலும் வன விலங்குகள்  இடம் பெயர்ந்து, மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள் வனவிலங்குகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.  இதனால் விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை விரும்பி உண்ணும் பயிர்களை காட்டுப் பகுதிகளிலேயே வளர்ப்பது, காடுகளின் எல்லை ஓரமாக தடைகளை அமைப்பது, கிராம மக்களின் திறனை மேம்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மனித உயிருக்கும், விவசாய பயிர்களுக்கும் உடமைகளுக்கும் விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது போன்ற பல்முனை அம்சங்களை உள்ளடக்கிய செயல்திட்டத்தினை அமல்படுத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இத்  திட்டத்தின் முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில், யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்க 4 கோடியே 30 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி ஏற்கெனவே ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்கவும் மற்றும் பல்வேறு பணிகளை நடைமுறைப்படுத்தவும், தருமபுரி மண்டலத்திறகு 2 கோடியே 20 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், ஈரோடு வன மண்டலத்திற்கு 2 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயும், திண்டுக்கல் வன மண்டலத்திற்கு 50 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், மற்றும் திருநெல்வேலி வன மண்டலத்திற்கு 34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் 5 கோடியே 19 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வழங்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். வனத்துறையில், தமிழக அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களினால் காடுகளின் பரப்பு அதிகமாகி, பசுமையான சூழ்நிலை உருவாக வழிவகுப்பதுடன், காலந்தோறும் பருவமழை தவறாது பெய்ய வழிவகுக்கும்.  வனவிலங்களுக்கு தேவைப்படும் நீர் மற்றும் உணவு வகைகள் அவைகள் வசிக்கும் இடங்களிலே உருவாக்குவதினால், விலங்குகள் இடம் பெயர்வது முற்றிலுமாக தடுக்கப்பட்டு, மனிதனுக்கும் விலங்களுக்குமான மோதல்கள் தவிர்க்கப்படும்.

ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...?

ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் டைரக்டர் பாரதிராஜா. தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினரும் குரல் கொடுப்பார். அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டையை உலுக்கி கொண்டு இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திரையுலகினர் யாரும் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.  இந்நிலையில் முன்னணி ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து, ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா. பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் பாரதிராஜா, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே டில்லியில் போராட்டம் நடத்தியபோது, இங்கே தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டில்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் சம்பந்தப்பட்ட அந்த கலைஞனுக்கு இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன், அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது அந்த நடிகருக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா? என்று கடுமையாக சாடியுள்ளார்.  பாரதிராஜா இப்படி கடுமையாக சாடியிருக்கும் அந்த நபர் வேறுயாரும் அல்ல, நடிகர் விஜய் தான். இதற்கு விஜய் என்ன பதில் சொல்ல போகிறாரோ...?

இதே நாள்...


  • கோவா விடுதலை தினம்
  •  இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிறந்த தினம்(1934)
  •  தமிழக அரசியல் தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்(1922)
  •  முதல் இந்தோ-சீன போர் துவங்கியது(1946)
  •  போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)

560 பேர், சி.பி.ஐ.,யால் தேடப்பட்டு...


நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 560 பேர், சி.பி.ஐ.,யால் தேடப்பட்டு வருகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதால், சி.பி.ஐ.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல், வெளிநாடுகளிலும் சர்வதேச போலீசால் தேடப்படும் இந்தியர்கள் பட்டியலில், 650 பேர் உள்ளனர்.பயங்கரவாதம், கடத்தல், வங்கி மோசடி, கள்ளநோட்டு வினியோகம், போதைப் பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டு, சி.பி.ஐ., விசாரித்து வரும் வழக்குகளில், நம் நாட்டில் மட்டும், 560 பேர் தலைமறைவாகியுள்ளனர். இவர்களில் பலரையும் பல ஆண்டுகளாக, சி.பி.ஐ., தேடி வருகிறது.

தலைமறைவாகிவிட்டவர்கள் பலர், வேறு பெயர்களில் பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க, சி.பி.ஐ., நேரடியாக நடவடிக்கையில் இறங்க முடியாது என்பதால், சர்வதேச போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளது.ஆனால், சி.பி.ஐ.,கோரிக்கையை சர்வதேச போலீஸ் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு காரணம், இதை விட வேறு பெரிய வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை தேடவே, அவர்களுக்கு நேரம் போதவில்லை. சி.பி.ஐ., விசாரித்து வரும் வழக்குகளில், முக்கியமானதாக கருதப்படும், 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 10 பேர், சம்பவம் நடந்து, 18 ஆண்டுகளாகியும், சி.பி.ஐ.,யிடம் சிக்காமல் உள்ளனர். அதேபோல், 2007 ஐதராபாத் பள்ளி வாசலில் நடந்த தாக்குதலில், இரண்டுபேர் இன்னமும் சிக்கவில்லை.

இவர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் வரை வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.,யால் தேடப்படும் குற்றவாளிகளில் சிலர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், பல வெளிநாடுகளில் நிகழ்ந்த குற்றங்களில் ஈடுபட்டு, தலைமறைவாக உள்ள இந்தியர்கள், 650 பேரை சர்வதேச போலீசார் தேடி வருகின்றனர். இதில், மும்பை தாக்குதல், கேரளாவில் பேராசிரியர் கைவெட்டிய சம்பவம் உட்பட, பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவான இந்தியர்களும் அடக்கம்.பேராசிரியர் கை வெட்டிய வழக்கில், முக்கிய குற்றவாளியான நாசர், அரபு நாடு ஒன்றில் பதுங்கி உள்ளார். இவரை பிடிக்க வெளிநாடுகளில் பல்வேறு அரசுகளிடம் முறையிட்டும், இதுவரை பலனில்லை

நேசமணி கேட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க போராட வேண்டும்!


நாகர்கோவில்:முல்லைபெரியாறு, மற்றும் நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமானால் நேசமணி கேட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கட்சி சார்ப்பு இன்றி போராட வேண்டும் என நாகர்கோவிலில் நேசமணிதமிழர் பேரவை தலைவர் ஆல்பென்ஸ்நதானியேல் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது;-சேரநாட்டின் ஒரு பகுதியான திருவிதாங்கூரில் தமிழ்பகுதியான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீருமேடு, தேவிகுளம், சித்தூர் ஆகிய 9 பகுதிகளையும் தாய்தமிழகத்தோடு இணைக்க நேசமணி போராடினார்.



இதில் தேவிகுளம், பீருமேடு பகுதிகள் மதுரை நாயக்கர்களின் அதிகாரவரம்பிற்குள் 1889 வரை இருந்தது. எனவே மேற்படி பகுதிகள் திருவிதாங்கூருக்கு சொந்தமாக இருந்ததில்லை.பெரியார் நீர் தேக்கத் திட்டத்திற்காக பிரிட்டிஷ்-இந்திய நடுவண்அரசு செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக ஆவணத்தில் கையழுத்து இட்டுள்ளார். 1889ல் இந்த ஒப்பந்தம் புதுபிக்கப்பட்டு, குத்தகை உரிமை கெடு நீட்டித்த வேளøயில் திருவிதாங்கூர் மன்னனுக்கு சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்னால் இப்பகுதி தமிழகத்துடன் இருந்தது தெரிகிறது.பெரியாருறு நீர்தேக்கத்திற்கு 13 சதுரமைல்கள் தண்ணீர் கொள்ளளவும், 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப்பகுதியும் உள்ளது. இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையாகிறது. ஏனெனில் பெரியாறு நீர்தேக்கத்தால் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 90ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்பாசனவசதி கிடைக்கிறது. மேலும் பெரியகுளம் அருகே ஒரு நீர்மின்நிலைய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது என நேசமணி பார்லியில் 1955 டிச.15ம் தேதி கூறியுள்ளார்.

பார்லியில் 9தாலுகாக்களுக்காகவும், பெரியாறு அணைக்காகவும் வாதாடியபோது, அனைத்து கேரள எம்.பி.,க்களும் எதிர்த்தனர். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி., கூட ஆதரவு காட்டவில்லை.முல்லைபெரியாறு, மற்றும் நெய்யாறு இடது கரை சானல் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமானால் நேசமணி கேட்ட ஓன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றின்கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய நான்கரை தாலுகா பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்படியெனில் உயிர் பிரச்னையான தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் பி.எஸ்.என்.எல்

விரும்பிய மொபைல் எண்ணை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக தொலைபேசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக தொலைபேசி வட்டம்,http://http://tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் ஒரு லட்சம், "3ஜி' எண்களை வழங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் சென்று, வாடிக்கையாளர்களே தங்களுக்கு விருப்பமான எண்களை தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர்கள், ஒரு எண்ணை தேர்வு செய்தவுடன், ஏழு இலக்கம் கொண்ட ரகசிய அடையாள எண் கொடுக்கப்படும். பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைலில் இருந்து, NLIST என்று டைப் செய்து, இடைவெளி விட்டு, தேர்வு செய்த நம்பரின் கடைசி, மூன்று முதல் ஐந்து இலக்க நம்பரை டைப் செய்து,"53733' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.

மற்ற வாடிக்கையாளர்கள், "94000 12345' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மற்ற வாடிக்கையாளர்களுக்கும் ஒரு ரகசிய அடையாள எண் அளிக்கப்படும். அதன்பின், தங்கள் பகுதியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அடையாள எண்ணை கொடுத்து, தேர்வு செய்த நம்பரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா குடும்பத்தினர் 14 பேரை, கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீக்கம்...


சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். இவர் மாதமிருமுறை இதழ் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது சகோதரர்களில் ஒருவர் எம்.ராமச்சந்திரன். இவர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  சசிகலாவுடன் பிறந்தவர்களில் 4 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இதில் மூத்தவர் சுத்தரவரதன். இவருக்கு டாக்டர் வெங்கடேஷ் என்ற மகனும், அணுராதா, பிரபா சிவக்குமார் என்ற இரண்டு மகளும் உள்ளனர். ஜெயலலிதாவின் இளைஞர் பாசறையின் நிர்வாகியாக இருந்தவர் டாக்டர் வெங்கடேஷ். தற்போது இவர் நீக்கப்பட்டுள்ளார்

சசிகலாவின் இரண்டாவது சகோதரர் விநோதகன். இவருக்கு டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நீக்கப்பட்டோர் பட்டியலில் இவர்களும் உள்ளனர். சசிகலாவின் சகோதரி வனிதாமணி. இவருக்கு மூன்று மகன்கள். இவர்களில் மூத்தவர் டிடிவி தினகரன். இவர் அதிமுக சார்பில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராக இருந்தவர். வனிதாமணியின் மற்ற இருமகன்கள் பாஸ்கரன் மற்றும் சுதாகரன். இவர்கள் மூவரும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். 
சசிகலாவின் மூன்றாவது சகோதரர் ஜெயராமன். இவரது மனைவி இளவரசி. சொத்து குவிப்பு வழக்கில் இவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எம்.நடராஜனின் சகோதரர் மகன்களான குலோத்துங்கர் மற்றும் ராஜராஜன் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் கடைசி சகோதரர் திவாகரன். மன்னார்குடியில் வசித்து வரும் இவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன். இவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இரண்டு நாட்களில் ரூ 888 வீழ்ச்சி தங்கம்...

கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ 888 வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலைச்சரிவு தொடருமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.இந்தியாவில் விழாக்காலமில்லாத சீஸன் இது என்பதால் தங்கத்தின் விலையில் கடந்த இரு தினங்களாக கணிசமான வீழ்ச்சி காணப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 488-க்கு விற்பனையாகியது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,610-க்கும், பவுன் ரூ.20,880-க்கும் விற்பனையானது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.608 குறைந்திருந்தது.

நேற்றும் தங்க விலையில் சரிவு காணப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,575-க்கும், பவுன் 20 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினத்தோடு ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.  கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.888 குறைந்துள்ளது. இது தங்கம் வாங்கும் நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த வீழ்ச்சிப் போக்கு தொடருமா... அல்லது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் பூவரசம் பூ.


இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும்.

விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்றுநாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது.

மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி,மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்

பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம்.


பனிக் காலத்தில் உடல் அழகைப் பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

வறண்ட சருமம் பனிக் காலத்தில் குளிர் காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறைந்து போவதால் தோல் உரிந்து வெடிப்புகள் ஏற்படும்.  பனிக்காலத்தில் சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைப் பசைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் படு மந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும். இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைத் தன்மையும் சருமத்திற்குக் கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன. குளிக்கும் போது ஸ்க்ரப் உபயோகித்து தேய்த்து குளிக்கவும். ஏனெனில் இறந்த செல்களை நீக்குவதில் ஸ்க்ரப் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட மற்றும் இறந்த செல்கள் நீங்கி தோல் மென்மையாகும்.

சூடாக சாப்பிடுங்கள் பனிக் காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும். உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரிப் பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கப்படும். ஒமேகா 3 சத்து நிறைந்த மீன் உணவை அதிகம் உண்ணுங்கள். இது தோல் வறட்சியடைவதை தடுக்கும்.காய்கறிகள், பழங்களை அதிகம் உண்ணுங்கள்.

தேங்காய் எண்ணெய் மசாஜ் உடலில் தேங்காய் எண்ணையை தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெண்ணை, கடுகு எண்ணை ஆகியவை சிறந்தது. சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிர்ப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். பனிக் காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்கலாம்.

உதடு பாதுகாப்பு மனித உடலிலே மென்மையானது உதட்டுப் பகுதி. உதடுகளில் சுரப்பிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அவை அதிகமாக பாதிக்கப்படுகின்றன. பனியால் அதிகம் பாதிக்கப்படுவது உதடுகள் தான். உதட்டில் உள்ள ஈரப்பதம் உலர்ந்து வறண்டுவிடுவதோடு வெடிப்புகளும் ஏற்படும். எனவே தரமான உதட்டுக்கு போடும் கிரீம் உபயோகப்படுத்துவது உதடு வெடிப்பில் இருந்து பாதுகாக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.

பாத பராமரிப்பு பனிக் காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து நன்றாகச் சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுப்படும்.பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் மூழ்க வைத்து, பின்னர் `வாசலின்` தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும். வெளியில் செல்லும் போது எப்போதும் மாய்ஸரைசர் கொண்டு கை மற்றும் பாதங்களில் பூசிக்கொள்ளவும். உறங்கும் முன்பாக பாதங்களில் மாய்ஸரைசர் தடவி ஷாக்ஸ் அணிந்த கொள்ளவும். இது பாத வெடிப்பில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணை, பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்ப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக் காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது. பனிக் காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது.

உடற்பயிற்சி அவசியம் பனிக்காலத்தில் போர்வையை போர்த்தி தூங்கத்தான் நினைப்பு வரும். ஆனால் அதிகாலையில் எழுந்து வியர்க்கும் வகையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு உடலின் தட்ப வெப்ப நிலையும் பராமரிக்கப்படும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுரப்பிகள் ஓரளவு சுறுசுறுப்படையும், அதன்மூலம் சருமத்திற்கு ஈரத் தன்மையும், எண்ணைத் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.


2011-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் என்ற பெருமை சல்மான்கானின் பாடிகார்டுக்கு...

கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவை குறித்து துறை வாரியாக Google Zeitgeist top 10 என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. இதில் 2011-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் என்ற பெருமை சல்மான்கானின் பாடிகார்டுக்கு கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் ஷாரூக்கின் ரா ஒன்னுக்கும், மூன்றாவது இடம் ஹாரி பாட்டருக்கும், நான்காவது இடம் டெல்லி பெல்லிக்கும், ஐந்தாவது இடம் சிங்கம் (இந்தி) படத்துக்கும் கிடைத்துள்ளன.

மற்ற இடங்கள்:

ஆறாவது இடம் ரெடி,
ஏழாவது இடம் மங்காத்தா,
எட்டாவது இடம் டிரான்ஸ்பார்மர்ஸ் 3,
ஒன்பதாவது இடம் தூக்குடு
பத்தாவது இடம் மிலேகி தோபரா

சசி போயஸ் தோட்டத்துக்குள் புகுந்தது எப்படி?


இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத்திருந்த அத்தனை பேருக்கும் சசிகலாவை ஜெயலலிதா அதிரடியாக நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரே கூட இதை நம்ப மறுக்கிறார்கள். ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவரும் பேணிக் காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது. தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவிதான் சசிகலா. சாதாரணமான பெண்மணியாக, வீடியோ கடை நடத்தி வந்தவர் சசிகலா. 1982ம் ஆண்டு அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார் நடராஜன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகாவுடன் நல்ல நட்பை வைத்திருந்தார்.

அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. சந்திரலேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா. வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந்தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர். அதன் பிறகு அவருக்கு உதவியாளர் போல செயல்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியில் உறுப்பினரானார் சசிகலா. அதிமுகவில் பெரும் செல்வாக்கு மிக்கவராக உயர்ந்தார். அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் தந்தார் ஜெயலலிதா. அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் பொருளாளராகவும் பின்னர் அமைப்பு செயலாளராகவும் ஆக்கப்பட்டார். வீட்டுக்குள் நுழைய நடராஜனுக்கு ஜெயலலிதா தடை விதித்த போது தனது வீட்டை விட்டுவிட்டு, கணவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்துக்கே வந்துவிட்டார் சசிகலா. கடந்த 29 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வீடடில் தான் வசித்து வந்தார் சசிகலா.

இந்த நீண்ட கால நட்புக்கு வித்திட்ட சந்திரேலகா பின்னர் அப்போதைய ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். முகம் கருகிப் போய் படுகாயமடைந்த சந்திரலேகா பின்னர் தனது பணியை ராஜினமா செய்தார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து அரசியலில் குதித்தார். சாதாரண பெண்மணியாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்த பின்னர் ஜெயலலிதாவின் ஆசியுடன் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். தனது தோழியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தார் ஜெயலலிதாவும். சசிகலா மீது பல புகார்கள் வருகிறதே, ஏன் அவரை உங்களுடனேயே வைத்துள்ளீர்கள் என்று பலமுறை பல தரப்பிலும் கேட்கப்பட்டபோதும், சசிகலா எனது தோழி என்று அழுத்தம் திருத்தமாக கூறி அவருடன் தனது நட்பை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாக மாறி தன்னையே பதம் பார்க்க சசிகலா நினைத்ததால்தான் இன்று அவரை நீக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆட்சியில் அராஜக தலையீடு: கடந்த 2 அதிமுக ஆட்சியில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில், தற்போதைய 3வது அதிமுக ஆட்சியில் சசிகலாவின் தலையீடுகள் அராஜகமாக இருந்ததாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார் சசிகலா. நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அளவுக்கு சசிகலாவின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தனக்குப் பணியாத பல ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டி நீண்ட விடுப்பில் போக வைத்தார் சசிகலா என்று கூறுகிறார்கள். எந்த அதிகாரியாக இருந்தாலும் தன்னைத் தாண்டி ஜெயலலிதாவிடம் போகக் கூடாது என்றும் சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. சசிகலாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் கொதித்தெழுந்து அவரை தூக்கி எறிந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...