|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 January, 2012

போராளி MOVIE


ஊதியதற்கு அபராதம் ரூ. 23 லட்சம் வசூல்.


பொது இடங்களில் புகை பிடிப்போரிடம் இருந்து கடந்த 15 மாதத்தில் மட்டும் ரூ.23 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக புகையில்லா சென்னை நகர திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சென்னை நகரை முற்றிலும் புகையில்லா நகரமாக மாற்ற முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் 110 கோடி பேரில் 12 கோடி பேர் புகைபழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். 60 கோடி இளைஞர்களில் கணிசமானோர் சிகரெட், பீடி போன்ற புகைபொருள்களால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதையும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இளவயதிலேயே புற்றுநோய், நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு போன்றவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது.

நாடு முழுவதும் அமல் மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புகைபழக்கத்தை படிப்படியாக மக்கள் மத்தியிலிருந்து அகற்றும் நோக்கில், 2008-ல் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் முயற்சியால் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து நாடுமுழுவதும் 2008-ம் ஆண்டு அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று பொது இடங்களில் புகைபிடித்தல் தடைச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பெருவாரியாக வரவேற்பு இருந்தது.

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க கடந்த 2010-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும் சினிமா, டி.வி. சேனல்களிலும் புகை பிடிக்கும் காட்சிகளின்போது எச்சரிக்கை வாசகங்கள் காட்டும் படி சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து டி.வி-சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வெகுவாக குறைந்தன. மேலும் தடையை மீறி புகை பிடிப்போரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் காரணமாக பொது இடங்களில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறைந்தது. 

புகையில்லா நகரம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சென்னையை புகையில்லா நகரமாக்கத் தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுபற்றி புகையில்லா சென்னை நகர திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே. கோவர்தன் கூறியதாவது, பொது இடங்களில் புகை பிடிப்போரிடம் இருந்து கடந்த 15 மாதத்தில் மட்டும் ரூ.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் பெட்டிக்கடைகள், டீக்கடைகள், அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், சாலையோரங்கள், ரெயில்-பஸ் நிலையங்களில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைத்துள்ளோம். இதனால் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

புகையிலையின் தீமை பற்றி மேலும் பல்வேறு பகுதிகளில் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏப்ரல் மாதத்திற்குள் சென்னையில் பொது இடங்களில் புகை பிடிப்பது 100 சதவீதம் அளவுக்கு குறைந்து விடும் என்றார். கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில், அபராதம் காரணமாக பொது இடங்களில் புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை 80 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மைனஸுக்குப் போன உணவுப் பணவீக்கம்!!


கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக மைனஸ் நிலைக்குப் போயிருக்கிறது நாட்டின் உணவுப் பணவீக்கம்.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு -3.36 சதவீதமாகக் குறைந்துள்ளது உணவுப் பணவீக்கம். புத்தாண்டின் முதல் உணவுப் பணவீக்க அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டது. 

இதில், கடந்த வாரத்திற்கான உணவுப்பணவீக்கம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 24-உடன் முடிவடைந்த வாரத்துக்கான நாட்டின் உணவுப்பணவீக்கம் -3.36 சதவீதமாக உள்ளது. இது கடுந்த 6 வருடங்களில் இல்லாத வீழ்ச்சியாகும். இது நாட்டின் வளர்ச்சியை காட்டுவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். விளைச்சல் அதிகரித்து, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலைகள் கடுமையாக குறைந்ததாலே இந்த நிலை என அவர் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக இரட்டை இலக்கத்தில் இருந்து கவலை அளித்து வந்த உணவுப்பணவீக்க விகிதம் கடந்த ஒன்றரை மாதங்களில் சரிந்தபடியே இருந்து வந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் உணவுப் பணவீக்கம் +0.42% இருந்தது. முதன் முதலாக தற்போது மைனஸுக்கு வந்துள்ளது. இந்த நிலையை உணவுப் பணவாட்டம் என பொருளியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். உணவுப் பணவீக்கம் இந்த அளவு வீழ்ச்சி கண்டாலும், மொத்த விற்பனை விலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் ஒட்டுமொத்த பணவீக்கம் 9.11%ஆக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்த நிலையே தொடர்ந்தால், வரும் நாட்களில் மொத்த பணவீக்கம் 6 சதவீதத்துக்கு வந்துவிடும் என பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... கடந்த 2009 - 2010-ம் ஆண்டுகளில் நாட்டின் மொத்த பணவீக்கமும் திடீரென மைனஸ் லெவலுக்கு வந்துவிட்டது. ஆனால் நாட்டில் விலைவாசி கடுமையாக இருந்தது (பணவீக்கம் குறைந்தால் விலையும் குறைய வேண்டும் என்பது பொருளியல் நியதி). இதனால் நாட்டின் பணவீக்கக் கணக்கெடுப்பு முறை கடும் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளானது. இதனால் திடீரென பொதுப்பணவீக்க விகிதம் குறித்த புள்ளிவிவரங்களை நிறுத்திக் கொண்ட மத்திய அரசு, உணவுப் பணவீக்கத்தை மட்டும் கணக்கிட்டு வெளியிட்டு வந்ததது. இப்போது அந்த உணவுப் பணவீக்கம் அதள பாதாளத்தில் சரிந்து மைனஸ் ஆகிவிட்டது. அப்படியெனில் உணவுப் பொருள் விலைகள் கடுமையாக வீழ்ச்சி கண்டிருக்க வேண்டும் நடைமுறையில். விலை குறைந்ததா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்

இதயநோயை உணர்த்தும் ஆண்மைக்குறைவு..


இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்ஸுவல் தெரபி’ எடுத்த சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதற்கு காரணம் முறையற்ற உணவும், அதனால் கிலோ கணக்கில் உடலில் படியும் கொழுப்பும் தான் என்கின்றனர் மருத்துவர்கள். 

உடல் உழைப்பு குறைவு காடு, கழனி என்று வேலை பார்த்தனர் நம் முன்னோர். இன்றைக்கு மூடிய அறை, ஏசி காற்று, சட்டைக் கசங்காமல் பார்க்கும் வேலையைத்தான் பலரும் விரும்புகின்றனர். இதனால் உடல் உழைப்பு குறைந்து உண்ணும் உணவு முழுவதும் ஆங்காங்கே கொழுப்பாக படிகிறது. தொப்பை அதிகரிப்பதால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 

மனித உடலே உழைப்பதற்காகத் தான் உருவாக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடலானது நோய்களின் கூடாரம் ஆகிவிடும். உழைத்தால் தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால் தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பின்மை தான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத் தான் விரும்புகிறார்கள். சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது.

படியும் கொழுப்புகள் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. ஆனால் ஆரோக்கியத்திற்காக உண்ணுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக உண்பது என்ற நிலை மாறிவிட்டது. வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்பதால் உடலுக்குள் எண்ணெய் அதிகமாக செல்கிறது. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இந்த கொழுப்பானது இதய நோய்களையும், டைப் 2 நீரிழிவையும், ஒரு சில வகை புற்றுநோயையும் ஏற்படுத்துகிறது. 

ஆண்மைக் குறைவு இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக உறவு கொள்ள முடியாது. இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். யானை வரும் முன்பே, மணியோசை வருவதைப் போல இதய பாதிப்பு என்கிற நோயை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக் குறைவு தோன்றுகிறது. எனவே உடலில் கொழுப்பை குறைக்க ஆரோக்கியமான உணவிற்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

2012ம் ஆண்டில் வரும் இந்து பண்டிகைகள்...

2012ம் ஆண்டின் இந்து பண்டிகைகள்
ஜனவரி 05 (வியாழன்) வைகுண்ட ஏகாதசி

ஜனவரி 08 (ஞாயிறு) ஆருத்ரா தரிசனம்

ஜனவரி 13 (வெள்ளி) போகிப் பண்டிகை

ஜனவரி 14 (சனி) பொங்கல் 

ஜனவரி 15 (திங்கள்) மாட்டுப் பொங்கல்

ஜனவரி 16 (செவ்வாய்) காணும் பொங்கல்

ஜனவரி 22 (ஞாயிறு) தை அமாவாசை

பிப்ரவரி 01 (புதன்) தை கிருத்திகை

பிப்ரவரி 07 (செவ்வாய்) தைப் பூசம்

பிப்ரவரி 20 (திங்கள்) மகா சிவராத்திரி

பிப்ரவரி 21 (செவ்வாய்) மயானக் கொள்ளை

மார்ச் 07 (புதன்) மாசிமகம் - ஹோலிப் பண்டிகை

மார்ச் 14 (புதன்) காரடையார் நோன்பு

மார்ச் 23 (வெள்ளி) யுகாதி பண்டிகை - தெலுங்கு வருடப்பிறப்பு

மார்ச் 31 (சனி) ஸ்ரீராமநவமி

ஏப்ரல் 05 (வியாழன்) பங்குனி உத்திரம்

ஏப்ரல் 13 (வெள்ளி) சித்திரை மாதப்பிறப்பு

ஏப்ரல் 24 (செவ்வாய்) அட்ஷய திரிதியை

ஏப்ரல் 26 (வியாழன்) ஸ்ரீசங்கரர் ஜெயந்தி

ஏப்ரல் 27 (வெள்ளி) ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி

மே 02 (புதன்) மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

மே 04 (வெள்ளி) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

மே 06 (ஞாயிறு) மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

மே 28 (திங்கள்) அக்னி நட்சத்திரம் நிவர்த்தி

ஜூன் 03 (ஞாயிறு) வைகாசி விசாகம்

ஜூன் 26 (செவ்வாய்) ஆனித் திருமஞ்சனம்

ஜூன் 18 (புதன்) ஆடி அமாவாசை

ஜூன் 22 (ஞாயிறு) நாகசதுர்த்தி

ஜூன் 23 (திங்கள்) ஆடிப்பூரம்

ஜூலை 27 (வெள்ளி) ஸ்ரீவரலட்சுமி விரதம்

ஆகஸ்ட் 02 (வியாழன்) காய்த்ரி ஜெபம் - 18ம் பெருக்கு

ஆகஸ்ட் 05 (ஞாயிறு) மகா சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட் 09 (வியாழன்) ஸ்ரீகோகுலாஷ்டமி

ஆகஸ்ட் 29 (புதன்) ஓணம் பண்டிகை

செப்டம்பர் 19 (புதன்) ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 20 (வியாழன்) ரிஷி பஞ்சமி

செப்டம்பர் 26 (புதன்) வாமன ஜெயந்தி

செப்டம்பர் 29 (சனி) உமாமகேஸ்வர விரதம்

அக்டோபர் 23 (செவ்வாய்) மகா நவமி- சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை

அக்டோபர் 24 (புதன்) விஜயதசமி

அக்டோபர் 29 (திங்கள்) மகா அன்னாபிஷேகம்

நவம்பர் 13 (செவ்வாய்) தீபாவளி பண்டிகை - லட்சுமி குபேர பூஜை

நவம்பர் 15 (வியாழன்) கடைமுகம்

நவம்பர் 17 (சனி) நாக சதுர்த்தி

நவம்பர் 18 (ஞாயிறு) கந்தசஷ்டி - சூரசம்ஹாரம்

நவம்பர் 25 (ஞாயிறு) சாதுர் மாத விரத பூர்த்தி

நவம்பர் 27 (செவ்வாய்) திருகார்த்திகை - அண்ணாமலையார் தீபம்

டிசம்பர் 16 (ஞாயிறு) தனுர் மாத பூஜை ஆரம்பம்

டிசம்பர் 18 (செவ்வாய்) நகரத்தார் பிள்ளையார் நோன்பு

ஒபாமேவே வந்தாலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது?

இந்திய அமைச்சர் மட்டும் அல்ல அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கை வந்து கூறினாலும் அதிகாரப்பகிர்வு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கம் அரசியல் தீர்வு விஷயத்தில் பெரிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் உள்நாட்டு சதியாகும். அரசியல் தீர்விற்கு அதிகாரப் பகிர்வை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பில் இருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும். நாட்டில் இனவாதம் உள்ளது என்பது போலியான மாயை. எனவே தேவையற்ற விஷயங்களை பேசுவதில் பயனில்லை. இன்று நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிவிட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல சக்திகள் செயற்படுகின்றன. 13 ஆவது திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. ஏனெனில் சர்வதேச நாடுகள் இந்தியா வழியாகத்தான் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது. அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியாவிற்கு இலங்கை அரசு உறுதி அளிக்கவில்லை. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தான் வாய் உளறி விட்டு வந்துள்ளார். இதற்கு தான் நாய் வேலையை கழுதை செய்யக் கூடாது என்பார்கள். எப்படி இருப்பினும் இன்று அரசிற்குள் 60 வீதமானோர் சூழச்சிக்காரர்களே உள்ளனர்.

இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு?

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

முதல் ஆன்லைன் பிரெய்லி நூலகம்...

பார்வையற்ற மாணவர்கள், பன்மொழி புத்தகங்களையும் எளிதாகப் படிப்பதற்கு வசதியாக, ஆன்லைன் முறையிலான பிரெய்லி நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, மும்பையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஆன்லைன் பிரெய்லி நூலகம், நாட்டிலுள்ள பல்வேறான கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பார்வையற்றவர்களுக்கான தேசிய கல்வி நிறுவனம்(NIVH) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி அமைச்சர் முகுல் வாஸ்னிக், இந்த நூலகத்தை திறந்து வைத்தார். பயன்படுத்துவதற்கு எளிய முறையில், 10 மொழிகளில், 12,000 புத்தகங்கள் வரை இந்த நூலகத்தில் பெற முடியும். மேலும், தகவல்-தொழில்நுட்பம் முதல் இலக்கியம் வரையிலான பல்துறை அறிவினை இந்த நூலகம் மூலமாக வளர்த்துக்கொள்ளவும் முடியும் 

டான்செட் தேர்வு தேதி அறிவிப்பு...


சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்அதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் வழங்கும் முதுநிலை தொழிற் பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வினை நடத்தி வருகிறதுஅதன்படிவரும் கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுஎம்.பி.படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும்எம்.சி.படிப்பிற்கு மார்ச் 31ம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறதுஎம்.., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., படிப்புகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடத்தப்படும்இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள்பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது அண்ணா பல்கலை வளாகத்தில் நேரில் சென்றோ பெயரை பதிவு செய்து கொள்ளலாம்தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரிஉட்பட 15மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும்மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தைப் பார்க்கவும்.

கீழ்ப்பாக்கம் தடயவியல் டாக்டர்கள் கூண்டோடு மாற்றம்


கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், பிரேத பரிசோதனை பிரிவு டாக்டர்கள் சரியாக பணிக்கு வராததால், பெரும் குளறுபடிகள் ஏற்பட்டன. இதுகுறித்து, துறை ரீதியான விசாரணை நடத்தி, தடயவியல் பிரிவு டாக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், டாக்டர்கள் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாகவும், டாக்டர்கள் சிலர் வராமலேயே, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, துறை ரீதியான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.  இதுகுறித்து, மருத்துவமனை வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: மருத்துவமனைக்கு, தங்கள் விருப்பத்திற்கேற்ப டாக்டர்கள் வருகின்றனர். ஒரு சில டாக்டர்களை தவிர மற்றவர்கள், கூட்டாக செயல்பட்டு, வாரத்தில் ஒவ்வொரு நாளை, தங்கள் பணி நாளாக பிரித்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, சிறிது நேரத்தில், தங்களுக்குச் சொந்தமான கிளினிக்குகளுக்கோ அல்லது தாங்கள் பணிபுரியும், தனியார் கிளினிக்குகளுக்கோ சென்று விடுகின்றனர்.

இதனால், மருத்துவக் கல்லூரியில் படிக்கும், பயிற்சியில் இருக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் அல்லது பயிற்சி டாக்டர்கள் தான், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நீதித்துறைக்கு முறையான சான்றிதழ் தர வேண்டிய தடயவியல் துறையும், இதே நிலையில் தான் உள்ளது. உயரதிகாரிகளின் ஒத்துழைப்புடன், இவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பணிக்கு வந்து செல்வதுமாக உள்ளதால், தடயவியல் பிரிவின் பணிகளில், குளறுபடிகள் நடந்துள்ளன. இவ்வாறு, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனையின் சீர்கேடுகள் குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், நேற்று முன்தினம், திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பதிலில், ""தடயவியல் துறையில், இரு தரப்பினராக, பணியாளர்கள், டாக்டர்கள், செயல்படுகின்றனர். எனவே, பிரச்னையை தீர்க்க, கூண்டோடு மாற்ற உள்ளோம்'' என கூறினார். இதன் தொடர்ச்சியாக, தடயவியல் டாக்டர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, தடயவியல் பிரிவு டாக்டர் அன்புச்செல்வன், சென்னை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கும், டாக்டர் விக்ரம், கே.கே., நகரில் உள்ள, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கிளைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல், தடயவியல் பிரிவு அறிவியல் உதவியாளர் லோகநாதன், சென்னை அரசு பொது மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  இதுகுறித்து மருத்துவமனை டீன் ராமகிருஷ்ணன் கூறியதாவது: பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளோம். இனி தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையிலும், தடயவியல் பிரிவில் பணிகள் பாதிக்காமல் இருக்கவும், சீரமைப்பு பணி மேற்கொண்டுள்ளோம். முதற்கட்டமாக, இரண்டு டாக்டர்கள் மற்றும் அறிவியல் பிரிவு உதவியாளரை இடமாற்றம் செய்துள்ளோம். விரைவில், துறையிலுள்ள மற்றவர்களும் மாற்றப்படுவர். இனி பிரச்னைகள் இல்லாமல் இருக்க என்ன தேவையோ, அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறினார்.  மருத்துவமனையில் குளறுபடிகள் நடப்பது உறுதியாகி உள்ளது. அப்படியென்றால், குளறுபடியான பிரேத பரிசோதனைகள் எத்தனை? அந்த சான்றிதழ்களின் நிலை என்ன? பிரேத பரிசோதனை அடிப்படையில், நீதித்துறைக்கு கொடுத்த வாக்குமூலம் மற்றும் சாட்சிகள் உண்மையானதா?  பிரேத பரிசோதனைகளில் டாக்டர்கள் இருந்தனரா; நீதித்துறை உத்தரவுப்படி, பிரேத பரிசோதனைகள் வீடியோ எடுக்கப்பட்டதா; அந்த வீடியோக்கள் எடிட் செய்யப்படாமல், சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஆவணமாக வைக்கப்பட்டதா; பிரேத பரிசோதனையில், டாக்டர்கள் தான் இருக்கின்றனரா அல்லது உதவியாளர்கள், அடிப்படைத் தொழிலாளிகள் இருந்தனரா என்ற, பல கேள்விகள் எழுந்துள்ளன. 

புதுச்சேரி பதிவு வாகனங்களுக்கு கட்டுப்பாடு...


 புதுச்சேரி பதிவு எண்ணில் தமிழகத்தில் ஓடும் கார், டூவீலர்களுக்கான வரியில் முறைகேடு செய்யும் வாகனங்களை பறிமுதல் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த கார்களுக்கான வரி விதிப்பு முறையில், கார்களின் விலை, 10 லட்சம் ரூபாயாக இருந்தால், காரின் மதிப்பில், 10 சதவீதமும், அதற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு, ஆயுள் கால வரியாக, 15 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில், 20 லட்சம் ரூபாய்க்கு கீழ் மதிப்புள்ள கார்களுக்கு, ஆயுள் வரி, 6,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள கார்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் வரியாக வசூலிக்கப்படுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி வரி விதிப்பு இடையே, பல மடங்கு தொகை வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் கார் வாங்குபவர்கள், புதுச்சேரி மாநிலத்தில் போலியாக முகவரி கொடுத்து, நிரந்தர பதிவு செய்கின்றனர். பலர் புதுச்சேரியிலேயே கார்களை வாங்கி பதிவு செய்து, தமிழகத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் வருமானம் குறைகிறது.இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் பதிவு செய்து, தமிழகத்தில் ஓடும் வாகனங்கள் குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து, பதிவு செய்த வாகனங்களை பறிமுதல் செய்யவும், அரசு உத்தரவிட்டுள்ளது. பறிமுதலாகும் வாகனங்களுக்கு, தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள வரியை செலுத்தினால், மீண்டும் வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே நாள்...


  •  அமெரிக்க தேசிய பறவை தினம்
  •  பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1940)
  •  நாசிக் கட்சி அமைக்கப்பட்டது(1918)
  •  உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்பேர்ணில் நடைபெற்றது(1971)
  •  டெய்லி மெயில்,கடல் தாண்டி சென்ற முதல் செய்தி தாளானது(1944)

கடலில் போட்ட பிறகும் கட்டையாய் இருந்து உதவுகிறார்


தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக திமுக தலைவர் கலைஞர், சென்னையில் இருந்து இன்று (04.01.2012) காலை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர், தானே புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை மாநில அரசுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றார்.

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற திமுக தலைவர் கலைஞர் பாலவாக்கம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டிணம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் மரக்காணத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கீழ்புத்துப்பட்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரி சென்ற கலைஞரை, அம்மாநில திமுகவினர் வரவேற்றதுடன், அம்மாநிலத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தெரிவித்தனர். 

அரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார்.  மத்திய, மாநில திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடையும் என்றபோதும், அது காலதாமதமாகும் என்பதால், அதுவரைக்கும் திமுக சார்பில் வழங்கப்படும் உதவிகள் இடைக்கால நிவாரணமாக அமையும் என்ற நோக்கத்தோடு, உடனடியாக இந்த நிதிகள் ஒதுக்கப்படுகிறது என்றும், அதுதவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் திமுகவினர் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கலைஞர் கேட்டுக்கொண்டார்.

கோவையில் பேருந்து போக்குவரத்து துவங்க காரணமாக இருந்த மேதை ஜி.டி.நாயுடு



தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் தற்போது ஆயிரம் பேருந்துகளுக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதவிர வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால், கடந்த 90 வருடங்களுக்கு முன் அதாவது, 1921ம் வருடத்தின் இறுதியில் கோவையில் ஒரே ஒரு பேருந்துமட்டுமே இயங்கி வந்தது. கோவையிலிருந்து உடுமலைபேட்டைக்கும், பின்னர் பழனிக்கும் சென்று வந்த அந்த பேருந்தில் முப்பதுக்கும் குறைவான இருக்கைகளே இருந்துள்ளது. பேருந்தின் மேல் தளம் இப்போது இருப்பதுபோல இல்லாமல், நான்கு ஓரங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதில் மரத்தினால் செய்யப்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்தின் முன்னால் என்ஜின் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் (இப்போது உள்ள பென்ஸ் லாரிபோல) இதை மூக்கு வைத்த வண்டி என்று பட்டப்பெயர் வைத்து மக்கள் கூப்பிட்டு வந்துள்ளனர்.

இந்த வண்டியின் ஓட்டுனர், நடத்துனர், உதவியாளர், உரிமையாளர் என எல்லா பொறுப்புகளையும் ஏற்று நடத்தியவர் கோபால்சாமி நாயுடுவின் மகன் துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடு அவர்கள் தான். இந்த பேருந்தை, தனது ஆசிரியரும், வழிகாட்டியுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயரின் உதவியுடன் ஜி.டி.நாயுடு அவர்கள் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார். அப்போதே பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க தனியாக ஆள் வைத்துக் கொள்ளாமல் தானியங்கி டிக்கெட் முறையை ஜி.டி.நாயுடு அவர்கள் நடைமுறை படுத்தியிருந்ததாகவும், பயணிகளை கவர பேருந்தில் தேநீர் பழச்சாறு வகைகள்கொடுக்கப்பட்டதாகவும் கோவை சர்வஜன பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் செந்தலை கவுதமன் தெரிவித்துள்ளார்.

இதற்க்கு முன்பாக, சென்னையிலிருந்து கோவைக்கு 1872 ஆண்டிலேயே தொடர் வண்டி போக்குவரத்து துவங்கி விட்டது. ஆங்கிலேய அரசு வருமான வரி என்ற பெயரில் ஜி.டி.நாயுடுவின் சொத்தில் 90 விழுக்காடு தொகையை வரியாக கேட்டதால், 1938 ஆம் வருடம் தன்னுடைய யுனைட்டேடு மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்திலிருந்த பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய பேருந்துகளை கோவை வட்டார போக்குவரத்து கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். கோவையில் பேருந்து போக்குவரத்து துவங்க காரணமாக இருந்த அந்த மேதை ஜி.டி.நாயுடு 

மிஸ்டு கால் எச்சரிக்கை!

வெளிநாட்டு எண்களில் இருந்து உங்கள் செல்போன்களுக்கு மிஸ்டு கால்' கால்கள் வந்தால், அந்த எண்ணை திருப்பி அழைப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, வோடோ போன்' நிறுவனம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசங்களில் உள்ள சில செல்போன்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இதுபோன்ற  மிஸ்டு கால்'கள் வந்ததாகவும், அந்த எண்களுடன் திரும்ப தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், வோடோ போன் நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறி இருக்கிறார். வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுபோன்று வந்த புகார்கள் குறித்து அந்த நிறுவனம் விசாரித்து வருவதாக கூறிய அவர், அதுபோன்ற அழைப்புகளை பொருட்படுத்தி மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மோசடி...


உத்தரபிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி சுகாதார திட்டத்தில் நடந்துள்ள மோசடி தொடர்பாக  டிஸ்மிஸ்' செய்யப்பட்ட மந்திரியின் வீடு உள்பட 60 க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அதிகாரி ஒருவர் வீட்டில் 3 கிலோ தங்கமும் ரூ.1 கோடியே 10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாயாவதி ஆட்சி நடத்தும் உத்தரபிரதேச மாநில அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இந்த திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், நிதி மோசடி நடந்து இருப்பதாகவும் மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. மருந்து வாங்கியது, மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் சப்ளைக்கு ஒப்பந்தம் வழங்கியது ஆகியவற்றில் இந்த மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளும் இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி முதல் கட்டமாக 5 வழக்குகள் பதிவு செய்தனர்.இந்த முறைகேடுகள் தொடர்பாக சுகாதாரத்துறையின் அதிகாரிகள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது. ரூ.10 ஆயிரம் கோடி சுகாதார திட்டத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி ஆனந்த் குமார் மிஸ்ராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில் ரூ.10 ஆயிரம் கோடி ஊரக சுகாதார திட்டத்தில் பல்வேறு மோசடிகள் நடந்து இருப்பது உறுதியானது. இதுகுறித்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் கடந்த 2 ந் தேதி சி.பி.ஐ. 6 வழக்குகள் பதிவு செய்து, பல்வேறு இடங்களில் சோதனை நடத்த வாரண்டு பெற்றது.

இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. இந்த குழுவினர் நேற்று காலையில் உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா மாநிலங்களில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக ஒரே நேரத்தில் சோதனைகளை தொடங்கினார்கள். மாயாவதி மந்திரி சபையில் ஆனந்த் குமார் மிஸ்ராவுக்கு பின்னர் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் பாபு சிங் குஷ்வாகா. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாவதி டிஸ்மிஸ் செய்தார். அவர் உடனே தேர்தல் டிக்கெட் வாங்குவதற்காக பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

ரூ.10 ஆயிரம் கோடி சுகாதாரத்திட்ட மோசடியில் இவருக்கு பெரும் பங்கு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ. அதிகாரிகள் லக்னோவில் உள்ள அவரது வீட்டில் முதலில் சோதனையை தொடங்கினார்கள். அப்போது அவர் வீட்டில் இல்லை. டெல்லியில் இருந்ததாக தெரிகிறது. அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், பாபு சிங் குஷ்வாகா எங்கிருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டனர். அவரது வீட்டில் இருந்து மோசடி சம்பந்தமாக பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின்போது, தலைநகர் லக்னோ, கோமதி நகரில் உள்ள ஜல் நிகாம் நிறுவனத்தின் பொது மேலாளர் பி.கே.ஜெயின் வீட்டில் இருந்து 3 கிலா தங்கமும் ரொக்கப் பணம் ரூ.1 கோடியே 10 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. முறைகேடு நடந்தபோது அவர், அந்த நிறுவனத்தில் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு பிரிவில் பொது மேலாளராக பதவி வகித்து வந்தார். இந்த சோதனையை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில சுகாதாரத்துறை முன்னாள் டைரக்டர் ஜெனரல் டாக்டர் எஸ்.பி.ராமை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். முன்னாள் மந்திரி பாபு சிங் குஷ்வாகா, மேலும் பல சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் கைதாவார்கள் என்று தெரிகிறது.

திராட்சை விதையில் இருந்து உடல் நலம் பாதிக்காத சிகரெட்!

அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். திராட்சை விதையில் இருந்து இதை உருவாக்கி உள்ளனர். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல இந்த சிகரெட் உடல் நலத்தை பாதிக்காது.   புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது. இதனால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷதன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும். அதே நேரத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கை விட முடியாதவர்கள். புதிய சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...