|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2012

பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் இலங்கை அமைச்சர் விமல்!

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என அந்நாட்டின் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு விமல் வீரவன்ஸ வழங்கிய பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: சரத் பொன்சேகா, நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பாராயின் முதல் 24 மணி நேரத்துக்குள் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் நானும் இடம்பெற்றிருப்பேன். எது எப்படியிருப்பினும், அந்த நபரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும். சரத் பொன்சேகா மீதுள்ள அன்பின் காரணமாக நான் இந்தக் கருத்தைக் கூறவில்லை.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருபவர்கள்தான் அவர் உள்ளே இருப்பதை அதிகளவில் விரும்புகின்றனர். விடுதலை செய்யுமாறு கோருவதெல்லாம் பொய் நாடகமாகும். தனது கணவர் மீது அவ்வளவு அக்கறையிருந்தால் கணவரை விடுதலை செய்யுமாறு அவரது மனைவி அதிபரிடம் கோரிக்கை விடுக்கலாம்தானே? ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்திலேயே அவர் பொதுமன்னிப்புக் குறித்து பரிசீலிக்கலாம். ஆனால்  அவர் இதுகுறித்து கோரிக்கை விடுக்காதிருப்பது ஏன்?
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் புதிய எதிரி ஒருவர் உருவாகின்றார். ரணிலும், டிலான் அலஸும் அதிபர் தேர்தல்  காலத்தில் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஒருவருக்கொருவர் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். ஜே.வி.பியுடன் எவ்வாறாவது ரணில் தூண்டிலைப் போட்டுக்கொள்வார். இவ்வாறான அனைத்துச் சம்பவங்களும் அரசியலில் இடம்பெறவேண்டுமானால் சரத் பொன்சேகா விடுதலையாக வேண்டும். அவர் உள்ளே இருக்கும்வரை இவை ஒன்றும் நடைபெறமாட்டாது. அரசியல் ரீதியில் பார்க்கப்போனால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதுதான் நல்லதென்று நான் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ஸ.

வயிறு நோய் தீர்க்கும் காட்டுக்கொட்டைக் கிழங்கு!

தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரும் குப்பைமேனி செடிகளில் இருந்து காட்டுக்கொட்டைக்கிழங்கு கிடைக்கிறது. இது மருத்துவகுணம் நிறைந்தது. இக்கிழங்கை யாரும் சமைத்து சாப்பிடுவதில்லை. நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுகிறது. இதைக்கொண்டு சூரணம் செய்தும், கஷாயம் செய்தும் சாப்பிடலாம். லேகியங்கள் தயாரிக்க இக்கிழங்குகள் பயன்படுகின்றன. இதனை கிடைக்கும் கிழங்கை பேதிக்கிழங்கு, சின்னிக்கிழங்கு என்றும் கூறுவர்.

தாது விருத்தி சூரணம் இக்கிழங்கை துண்டுகளாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைத்து இடித்து தூளாக்கி சலித்து சூரணமாக தயாரிக்கலாம். இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட தாது விருத்தியாகும். போக சக்தியைத் தூண்டும். இதனால் சிறுநீரகம் தொடர்புடைய நோய்களும் தீரும். வாதம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சளி, கபம் குணமடையும் இந்த கிழங்கின் சூரணத்தை தேனில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் நோய் குணமடையும். இஞ்சி சாற்றுடன் இந்த சூரணத்தை கலந்து சாப்பிட கபம் குணமடையும். அஜீரணத்தால் பசியின்மை ஏற்படும். இதனால் சாப்பிடவும் பிடிக்காது. இந்த நிலையில் காட்டுக்கொட்டைக்கிழங்கின் சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் போகும். அஜீரணம் சரியாகி பசி ஏற்படும். சீரகத்துடன் இத்தூளை சேர்த்து கஷாயம் போட்டும் சாப்பிடலாம்.

வயிற்றில் கசடு நீங்கும் வயிற்றில் சேர்ந்துள்ள கசடுகளை நீக்க இதனை மலமிளக்கியாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இக்கிழங்கை பச்சையாக அரைத்து சிறிதளவு இளஞ்சூடான நீரில் கலந்து சாப்பிட்டால் இதனால் நன்றாக பேதியாகும். வயிற்றில் உள்ள கசடுகள் வெளியேறும். வாயுக்கள் வெளிப்படும். இதனால் ஆரோக்கியம் ஏற்படும். பேதி அதிகமானலோ, பேதியை நிறுத்த வேண்டும் என்றாலோ, புளித்த மோரையோ, எலுமிச்சம் பழச் சாற்றையோ சிறிது அருந்தினால் பேதி நின்றுவிடும்.

2012ன் கிரகப் பெயர்ச்சிகள்...


கிரகப் பெயர்ச்சியினால் குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை, தீமைகள் ஏற்படுகிறது. குரு, ராகு, கேது பெயர்ச்சிகளின் போது அதற்காக சிறப்பு பூஜைகளும், வழிப்பாடுகளும் நடத்தப்படுவது வழக்கம்.

2012ம் ஆண்டு நிகழும் கிரகப் பெயர்ச்சிகள்:
குருபெயர்ச்சி: நந்தன வருஷம் வைகாசி மாதம் 4ம் தேதி (17-05- 2012) வியாழக்கிழமை குருபகவான் 3.01 நாழிகைக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி: நந்தன வருஷம் கார்த்திகை மாதம் 17ம் தேதி (02-12-2012) ஞாயிறுக்கிழமை ராகு பகவான் 11.31 நாழிகைக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கின்றனர்.

அக்னி நட்சத்திரம்: நந்தன வருஷம் சித்திரை மாதம் 22ம் தேதி (04-05-2012) வெள்ளிக்கிழமை 2.33 நாழிகைக்கு அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து, வைகாசி மாதம் 15ம் தேதி (28-05-2012)
திங்கட்கிழமை 20.16 நாழிகைக்கு நிவர்த்தி அடைகின்றது.

இதே நாள்...


  •  ஈராக் ராணுவம் உருவாக்கப்பட்டது(1921)
  •  மெக்சிகோ, அமெரிக்காவின் 47வது மாநிலமானது(1912)
  •  சாமுவேல் மோர்ஸ், மின்னியல் தொலைத் தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்தார்(1838)
  •  கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது(1936)
  •  அன்னை தெரசா, இந்தியாவில் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தா வந்தடைந்தார்(1929)

என் மகள் கலைஞர் டி.வி. வாசல்படியை கூட மிதித்தது இல்லை ராஜாத்தி அம்மாள்!

கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். .மார்ட்டின் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஆர்.ஜெயதுரை, வி.ஜி.பி. குழுமத்தை சேர்ந்த வி.ஜி.செல்வராஜ், கராத்தே சரவணன், மாதவரம் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் செங்கை சிவம், தி.மு.க. மகளிர் அணி துணை தலைவர் விஜயா தாயன்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கலந்துகொண்டு ஆயிரம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர்,  ‘’என் மகள் கலைஞர் டி.வி. வாசல்படியை கூட மிதித்தது இல்லை. ஆ.ராசாவின் அலுவலகத்திற்குகூட போகவில்லை. ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றும் தெரியாது. திகார் சிறையில் அவர் எவ்வளவு கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்தித்திருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியாது. திகார் சிறையில் ஒரு நாற்காலி கூட கிடையாது. தரையில்தான் உட்கார்ந்து இருக்கவேண்டும். படுப்பதற்கு ஒரு பாய்கூட கிடையாது. சொல்ல முடியாத அளவுக்கு பூச்சிகளால் அவதிப்பட்டார்.சிறையில் எவ்வளவோ வேதனைப்பட்டு இருக்கிறார். அவர் கட்சிக்காகத்தான் இவ்வளவு தண்டனைகளையும், சோதனைகளையும் அனுபவித்து இருக்கிறார்’’ என்று பேசினார்.

ரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமம் இருந்தால் பொதுமக்கள் தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்.


இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் பி.எம்.பசீர் அகமது நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’’தற்பொழுது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் (ரேஷன் கார்டு) காலத்தை 1.1.2012 முதல் 31.12.2012 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி 1.1.2012 முதல் குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.  புதுப்பிக்கும் பணிக்கான செயல்திட்டம் மற்றும் களப்பணியாளர்கள் இப்பணியை செயல்படுத்தும் விதம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்பத் தலைவர்கள், உறுப்பினர்கள் தாங்களே முன் வந்து வாய்மொழியாக தேவையான விவரங்களை தெரிவித்து குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்வதுடன், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிச் செல்கின்றனர். 5.1.2012 வரை 61/2 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பித்துள்ளனர். 28.2.2012 முடிய வரிசைக் கிரம பட்டியலின்படி உரிய நாட்களில் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணியிலோ, அல்லது அத்தியாவசிய உணவு பொருள்கள் பெறுவதிலோ ஏதேனும் சிரமங்கள் இருப்பின், குடும்ப அட்டைதாரர்கள் 7299998002, 8680018002, 7200018001 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்கலாம்’’ என்று உள்ளது.

உங்கள் மனைவி கீதாவை எப்போது நீங்கள் கொல்லப்போகிறீர்கள்?


கோவை அத்தப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கவுதமன் (26). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி கீதா (25). இவர் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில்,
’’நானும், கவுதமனும் காதலித்தோம். இருவீட்டாருக்கும் இது தெரியவந்ததும், பெற்றோர் பேசி முடித்து 21.9.09 அன்று எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது என்னுடைய பெற்றோர் நகையை வரதட்சணையாகஅணிவித்தனர். கவுதமனுக்கும் பிரஸ்லெட் நகை போடப்பட்டது. திருமணத்துக்கு பிறகு கவுதமன் என்னுடன் நெருங்கி பழகுவதை குறைத்தார். அவருக்கு பீளமேடு பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கவுதமனிடம் கேட்டபோது `எனக்கு தொழில் செய்ய பணம் தேவைப்படுகிறது. அவள் எனக்கு எல்லாம் தருகிறாள். நான் அவளை விட வேண்டும் என்றால் உன் தாயிடம் போய் ரூ.5 லட்சம் வாங்கி வா' என்று மிரட்டினார்.இதனால் ஓரளவு நகை, பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகும் அந்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பு நீடித்தது.

இதுபற்றி எனது மாமனார், மாமியாரிடம் கேட்டேன். அவர்களும் என்னை மிரட்டத் தொடங்கினார்கள். ஒழுங்காக என்னுடைய மகன் சொன்ன மாதிரி ரூ.5 லட்சம் பணம் வாங்கி வா. இல்லையென்றால் அந்த பெண்ணுடன்தான் அவன் வாழ்வான் என்று கூறினார்கள். என்னுடைய கணவர் கவுதமன், கள்ளக்காதலி உமாமகேஸ்வரியுடன் சேர்ந்து என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதும் ரகசிய கடிதம் மூலம் தெரியவந்தது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி பேராசிரியையுடன், இரும்பு வியாபாரி கவுதமன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு, மனைவியை கொலை செய்ய முயன்றதும், தாய், தந்தையுடன் சேர்ந்து கொண்டுவரதட்சணை கேட்டு கொடுமை செய்ததும் தெரியவந்தது.

உமாமகேஸ்வரி, பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். சில நாட்களாக பணிக்கு செல்லாமல் கவுதமனுடன் உல்லாசமாக சுற்றித் திரிந்தார். கவுதமனுக்கு உமா மகேஸ்வரி எழுதிய ரகசிய கடிதமும் போலீசிடம் சிக்கியது. கவுதமனையும், உமாமகேஸ்வரியையும் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர். கவுதமனின் தாய் சரோஜா, தந்தை பாலசுந்தரம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உமா மகேஷ்வரி எழுதிய 6 பக்க கடிதத்தில்,   ‘’ குண்டு இட்லியே என்று என்னை நீங்கள் வர்ணிப்பீர்கள்.  உங்கள் மனைவி கீதாவை எப்போது நீங்கள் கொல்லப்போகிறீர்கள். என்னுடன் எப்போது நீங்கள் நிரந்தரமாக வாழப்போகிறீர்கள்.  என்னுடன் மட்டும்தான் நீங்கள் படுக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும். ப்ளீஸ், நீங்கள் மனைவியை கொல்லபோவதாக சொன்னதை சீக்கிரமா செய்யுங்க.  நாம சந்தோசமா இருக்கலாம்.  இப்படிக்கு உங்கள் குண்டு இட்லி’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனில் கும்ளே மீது மோசடி வழக்கு...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே மீது, மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி, அவரது மனைவியின் முன்னாள் கணவர், ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.அனில் கும்ப்ளே மனைவி சேத்னா.இவரது முதல் கணவர் ஜாகிர்தார். சேத்னா-ஜாகிர்தாருக்கு பிறந்த மகள் ஆருன்னி,12, தற்போது அனில் கும்ளே, தாய் சேத்னாவுடன் ஆருன்னி வசித்து வருகிறார்.

இந்நிலையில், சேத்னா மகள் ஆருன்னிக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கு, தந்தையின் பெயர் ஜாகிர்தார் என்று அனில் கும்ளே குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விண்ணப்பத்தில் அனில் கும்ளேயே கையெழுத்திட்டுள்ளார். இந்த விவகாரத்தில், என் பெயரை பயன்படுத்தி, அனில் கும்ளே மோசடி செய்துள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சேத்னாவின் முன்னாள் கணவர் ஜாகிர்தார், பெங்களூரு பாரதி நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் புகார் செய்திருந்தார். ஒரு வாரமாகியும் போலீசார், புகாரை பதிவு செய்யாததால், நேற்று கர்நாடக ஐகோர்ட்டில், "என் புகாரை போலீசார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று ஜாகிர்தார் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட், இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

விஜய்யுடன் ஜெயராம்!

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் துப்பாக்கி. படத்தில் விஜய்யின் உழைப்பை பற்றி தன் நட்பு வட்டாரத்தில் புகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். விஜய்யுடன் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே அந்த ரகசியமாம். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாவதை அடுத்து படத்தில் ஜெயராம் நடிக்கும் விஷயத்தை இப்போதைக்கு வெளியே சொன்னால், பிரச்சினை கிளம்பிவிடுமோ என்று பதறிப்போய் உள்ளார்களாம் படத்தின் இயக்குனரும் நடிகரும்.   முல்லைப் பெரியாறு பிரச்சினையின் சூடு தனிந்ததும் விஷயத்தை வெளியே சொல்லலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.   அப்படிப் பார்த்தால் இப்போது வெளிவர இருக்கும் பல தமிழ் படங்களில் மலையாள சேச்சிகளே ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி சினிமா ரசிகர்கள் உட்பட யாருமே கவலைப்படவில்லை. நடிகருக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு ஒரு நியாயமா? என்ற கேள்வியே எழுகிறது.  அதே சமயத்தில் தன் படத்தில் நடிக்கும் இரண்டு மலையாள நடிகைகளையும் போயிட்டு வாங்க, பிரச்சனை முடிந்ததும் பார்த்துக்கொள்ளளாம் என்று வீட்டுக்கு அனுப்பிவைத்த இயக்குனர் பாரதிராஜா போன்ற உணர்வுப்பூர்வமான இயக்குனர்களும் இருக்கிறார்கள் 

எந்நேரமும் ஊர்வம்பு; மனைவி, மகளை படுகொலை!


அம்பத்தூரில் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தினமும் சண்டை போட்டுவந்த மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர். அம்பத்தூர் கருக்கு மெயின் ரோடு முத்து மதினா ரோட்டைச் சேர்ந்தவர் முத்து பழனியப்பன் (58).  இவரது மனைவி நாகவள்ளி (55), மகள் ராஜேஸ்வரி (30).  இவருக்கு திருமணமாகி பின்னர் கணவரைப் பிரிந்து தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார் முத்து மாணிக்கம் அம்பத்தூர் எஸ்டேட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

வீட்டில் இருந்த நாகவள்ளியும், ராஜேஸ்வரியும் எந்நேரமும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி அவர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்து மாணிக்கம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அமைதிக்காக ராமேசுவரம், பழனி என்று புனித தலங்கள் சென்று விடுவார்.  இது போல் கோவில்களுக்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவு முத்து மாணிக்கம் வீட்டுக்கு வந்தார். எப்போதும் அவரை நிம்மதியாக தூங்க விடாமல் பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி தாயும் மகளும் புகார் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த முத்து மாணிக்கம், வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து மனைவியையும், மகளையும் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் இருவரையும் கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் இருவரும் உயிரிழந்தனர்.  அதன் பிறகு முத்துமாணிக்கமே உறவினர்களுக்கும் போலீசுக்கும் போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

வாணிமஹாலில் ஒய்.ஜி. மகேந்திரனின் 'நாடகம்' பார்த்த ரஜினி!


  இந்நாடகத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் வந்திருந்து அங்குள்ளோரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட அந்த 'நாடகத்தில்' ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை பொறுமையாக அமர்ந்திருந்து நாடகத்தை ரசித்துப் பார்த்தார் ரஜினிகாந்த்.காமெடி டயாலாக்குகள் மேடையிலே தெறித்தபோது கைதட்டி சிரித்து, ரசித்துப் பார்த்தார் ரஜினி. உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த் நேற்றைய தினம் அதியசமாக வெளியே வந்தது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...