|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 April, 2012

தமிழனின் பகுத்தறிவு, பண்பாடு அனைத்தும் பட்டொளி வீசிப் பறக்கிறது!

ஆயிரம்தான் சொல்லுங்கள், தமிழன் என்ற இனத்துக்கு தனி குணமும் பண்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. செய்தித் தாள்களைத் திறந்து நூறு செய்திகளைப் படித்தாலும் அதில் ஒன்றிரண்டாவது தமிழ் இனத்தின் பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்துவிடுவதே இந்த இனத்தின் சிறப்பு.
கடந்த சில நாள்களாகவே செய்தித் தாள்களைப் படிக்கும்போது கண்ணில் படும் ஒரு செய்தி, ""ரத்தக் காட்டேரி பீதி'' என்பது. காதல், வீரம், கொடை ஆகிய மூன்றிலும் ""பேர் போனவன்'' தமிழன்.


இந்தக் காதலிலும் நல்ல காதல், கள்ளக் காதல் என்று ரகம் பிரித்து அனுபவிப்பவன். காதல் எப்படியோ போகட்டும், நாம் ரத்தக் காட்டேரிக்கு வருவோம். ஜோலார்பேட்டையில்தான் முதலில் ரத்தக் காட்டேரி தனது சேட்டையைக் காட்டியது. அங்கிருந்து இப்போது ஆம்பூரில் மையம் கொண்டிருக்கிறது. சுமார் 40 கிராமங்களில் ஒரே நாளில் வீடுகளில் உள்ள தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் எடுத்து வீசியிருக்கிறது. இது ரத்தக் காட்டேரிதான் என்று வருவாய்த்துறை வட்டாட்சியரோ, வருவாய் ஆய்வாளரோ, மாவட்ட வருவாய் அதிகாரியோ சான்று தரவில்லை என்றாலும் (ரத்தக் காட்டேரி என்ன இலவசப் பட்டாவுக்கா மனுச்செய்யப் போகிறது?) உள்ளூர் மந்திரவாதிகள் சான்றுரைத்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் ஒரு டாக்டர், ஆசிரியர் இருக்கிறாரோ இல்லையோ மந்திரவாதியும் ஜோதிடரும் இருப்பார்கள். அதுதான் தமிழர்களின் தொன்மை.


வீடுகளில் இரவு நேரத்தில் திடீரென்று சூறைக் காற்றைப் போல ஏதோ வீச, தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் அலமாரியிலிருந்தும் சிமென்ட் மேடைகளிலிருந்தும் கீழே விழுந்து சிதற, வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தூக்கத்திலிருந்து விழித்து அலற ஊரே அமர்க்களப்படுகிறது.
வீதிக்கு வந்தால்தான் தெரிகிறது அதே போல பல வீடுகளிலும் காட்டேரி நுழைந்திருக்கிறது என்று. உடனே வீட்டு வாசலில் மஞ்ச(ள்) தண்ணியால் வாசல்படிகளை மெழுகி, குங்குமம் "மஞ்சா' வைத்து, எலுமிச்சை, படிகாரம், பூசணிக்காயில் பூத உருவம் போன்ற ரட்சைகளைக் கட்டி தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். அத்துடன் மந்திரவாதியை அழைத்து ஆடு, கோழி அறுத்து காட்டேரிக்கு பலி கொடுக்கின்றனர். முத்தாய்ப்பாக ""இன்று போய் நாளை வா'' என்று தமிழில் எழுதி திரிசூலம் படமும் வரைந்து வைக்கின்றனர். இந்த இடத்தில்தான் தமிழனின் பகுத்தறிவு, பண்பாடு அனைத்தும் பட்டொளி வீசிப் பறக்கிறது!


அந்தக் காட்டேரி ஆணோ - பெண்ணோ, சிங்கிளோ - தம்பதியோ, சைவமோ - அசைவமோ தெரியாது. அதன் நிறம் என்ன, உருவம் என்ன என்றும் தெரியாது. ஆனால் அது ""தமிழ் காட்டேரி'' என்பதை மட்டும் சரியாகத் தெரிந்துவைத்துள்ளனர்.""இன்று போய் நாளை வா(ராய்)'' என்று தமிழில் எழுதி வைத்தால் அதைப் படித்துவிட்டு காட்டேரி அந்த வீட்டைவிட்டுப் போய்விடுகிறது. சி.எஸ். ஜெயராமன் குரலில் பாட வேண்டிய அவசியம் இல்லையோ? அடுத்த நாள் வந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஏமாந்து போய்விடும் போல இருக்கிறது.காட்டேரியை இப்படி தினமும் ஏமாற்றினால் ஒரு நாள் கோபத்தில் அது வீட்டுக்கதவில் இருப்பதைப் படிக்காமலேயே ஏதாவது செய்துவிடப் போகிறது, எச்சரிக்கையாக இருங்கள்.) இந்தக் காட்டேரி ஜோலார்பேட்டையிலிருந்து இப்போது ஆம்பூருக்கு வந்திருக்கிறது. இதே வடக்கு நோக்கி நகர்ந்து குப்பம், கொப்பல் என்றெல்லாம் போயிருந்தால் அதுவே ""30 நாள்களுக்குள் தெலுங்கு, கன்னடம்'' புத்தகத்தை வாங்கிப் படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கல்வியறிவு வளர்ந்திருப்பது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டுக்குவீடு இப்படி எழுதுவார்களா? கிராம மக்கள் மட்டும் அல்ல, காட்டேரி கூட படித்திருக்கிறது பாருங்களேன்.


தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். எவ்வளவோ இலவசங்களை மக்களுக்குத் தந்து அவர்களை ""விலையில்லா தமிழர்களாக'' வளர்த்து வருகிறீர்கள். ""இன்று போய் நாளை வா'' என்பதை நெடுஞ்சாலைத் துறை அல்லது உள்ளாட்சித் துறை மூலமாகவே ஒவ்வொரு வீட்டிலும் இலவசமாக எழுதிக் கொடுத்தால் என்னவாம்? (அதிகாரிகளுக்கு வேண்டுகோள், திரிசூலம் மட்டும் போடுங்கள், வேறு படம் வேண்டாம், காட்டேரி பயப்படப் போகிறது!) சில நாள்களுக்கு முன்னால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு பகுத்தறிவுத் திருமண வீட்டில் கேட்டார், ""பெரியார் இல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் படித்திருக்க முடியுமா, அரசு வேலைக்கு வந்திருக்க முடியுமா?'' என்று. காட்டேரியைக் கண்டு திராவிடம் அஞ்சுவதா? எதற்கெதற்காகவோ எல்லாம் தீக்குளிப்பேன் என்று ஆவேசப்படுபவர்கள், குறைந்தபட்சம் ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்தால்தான் என்ன? சும்மாதானே இருக்கிறார்கள்...

விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்!

தமிழ்ப் புத்தாண்டு ஆண்டாண்டு காலமாய் சித்திரையிலேதான் தொடங்கியது. இடையில் சிறிது குழப்பம்; இந்தக் குழப்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உண்டானது! இப்போது மீண்டும் வண்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிட்டது!
கருணாநிதி தையில்தான் தமிழாண்டு தொடங்குகிறது என்று போட்ட சட்டம் தலைமைச் செயலகத்தைத் தாண்டி தலையை நீட்ட முடியவில்லை.சட்டமன்றம் இருக்கிறது. ஆளுங்கட்சியின் எண்ணிக்கை போதாமையை ஈடுகட்டுவதற்கு குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்; ஒரு சட்டம் செய்து அரசிதழில் வெளியிட்டுவிட்டால் கடல்கூட நூறு அடி உள்வாங்கி விடும் என்று நம்பியவர் கருணாநிதி! அதிகாரத்தின் தன்மை அதுதான்! அது மெல்ல மெல்ல ஒரு மனிதனைக் கடவுளாக்கிவிடும்; இரணியர்கள் இப்படித்தான் உண்டானார்கள்!
ஆனால், மக்கள் வழக்கம்போல் தை முதல்நாளை அறுவடை நாள் மற்றும் தமிழர் திருநாளாகவும், சித்திரை முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகவும் தொடர்ந்து கொண்டாடி வருவதில் உள்நுழைந்து கருணாநிதியின் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்!

சித்திரைப் புத்தாண்டு அன்று இரவில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புகழுடைத் தெய்வமான அம்மனோ சாமியோ குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அருள்பாலிப்பது வழக்கம். இரவு முழுவதும் நாகசுரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி என்று ஊரைத் தூங்க விடாமல் கிறங்க அடிக்கும்! இதில் போய் குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அவ்வாறு குறுக்குசால் ஓட்டுவதற்கு அவர் மறைமலை அடிகளையும் உழவர் குழுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். "தமிழ் விடுதலைதான் தமிழரின் விடுதலை' என்பதைப் புரிய வைத்தவர்கள் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரையிலானவர்கள்! மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் உழவர்கள் மட்டத்திலேயே தேங்கி விடாமல், அண்ணா அதை மக்கள் இயக்கமாக்கினார். 1920-ல் தொடங்கி 1970 வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலம்! ஒவ்வொரு இளையோனும் இளையோளும் தங்கள் பெயர்களை இளம்வழுதி, இளவழகன், செழியன், செங்குட்டுவன்,தேன்மொழி, கயல்விழி என்றெல்லாம் மாற்றிக்கொண்ட காலம்! சங்க இலக்கியம் போற்றப்பட்ட காலம்; சிலப்பதிகாரம் முன்னிறுத்தப்பட்ட காலம்; வள்ளுவன்தான் தமிழரின் முகம் என்று வலியுறுத்தப்பட்ட காலம்! அது தமிழரின் பொற்காலம்! பொற்காலத்தைச் சமைக்க ஓர் இயக்கம் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டுமென்னும் கட்டாயமில்லை. பக்தி இயக்கம், சித்தர்களின் கழகம் என்று தமிழ்நாட்டு வரலாற்றில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் தோற்றுவித்தவர்கள் ஆளும்தரப்பினர்களாக இருந்ததில்லை.

"அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்னும் எம்.ஜி.ஆரின் இனஉணர்வுப் பாடல் 1970-க்கு முந்தியது. "முஸ்தபா முஸ்தபா; டோன்ட் ஒர்ரி முஸ்தபா' என்பது 1970-க்குப் பிந்தியது.
நரேஷ், சுரேஷ், சந்தோஷ், ப்ரியா, அனுஷா என்பவைதாம் இன்றைய தமிழர்களின் பெயர்கள்!
காங்கிரஸ் தலையாட்டி பொம்மைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு நாடாண்ட கருணாநிதி இவர்களை ஒழுங்காகப் பெயர் வைத்துக்கொள்ளச் சொல்லியும் ஒரு சட்டம் போட்டிருக்கலாம். மறைமலை அடிகளின் பெயரால் இதையும் செய்திருக்கலாம்! இவை அனைத்துமே அந்தந்தக் காலத்தின் வெளிப்பாடுகள். 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திரு.வி.க., க. சுப்பிரமணிய பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கூடித் தமிழருக்கென ஒரு "தனி ஆண்டு' தேவை என்று திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்வது என்றும், ஆண்டின் தொடக்கமாக தை முதல்நாளைக் கொள்வது என்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் அந்த அறிஞர் குழு எடுத்த முடிவுக்குத்தான் தான் சட்டவடிவம் கொடுத்ததாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் வடமொழி ஆண்டுமுறை அவர்களுக்குரியது இல்லை. வடமொழி ஆண்டுமுறை மிகவும் குழப்பமானது. சித்திரபானு ஆண்டு ஒரு மன்னன் பிறந்தான் என்று சொன்னால் எந்த சித்திரபானு என்று கண்டறிய முடியாது. 3000 ஆண்டுகளில் 50 சித்திரபானு வந்து சென்றிருக்கும். ஆகவே, அந்த ஆண்டு முறை குழப்பமானது என்பதாலும் அது தமிழர்க்கு உரியது அன்று என்பதாலும் அந்த ஆண்டு முறையை ஒழித்துக்கட்ட அறிஞர் குழு எண்ணியது என்பது சரியானதே!
வள்ளுவன்தான் தமிழர்களை அடையாளப்படுத்தவந்த முகம் என்பதனால் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான அந்த வள்ளுவன் பெயரில் ஒரு தொடர் ஆண்டு முறையை அமைப்பதென அறிஞர் குழு முடிவெடுத்ததும் மிகச்சரியானதே. ஆனால், அதே மறைமலை அடிகள் தலைமையிலான குழுதானே தை முதல்நாள் தான் வள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லியிருக்கிறது; அதுமட்டும் கசக்கிறதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்பார்!

500 புலவர்கள் கூடியெடுத்த முடிவு என்னும் ஒன்றே கருணாநிதி தான் எடுத்த நிலைப்பாட்டுக்குப் போதுமானது என்று கருதுகிறார்.500 புலவர்களும் நிகரற்றவர்கள்தாம்; ஆனாலும் 6 கோடித் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று கொண்டிருப்பதை புலவர்கள் கருத்தில் கொண்டிருந்தார்களா என்பதை நம்மால் அறிய முடியவில்லை. சித்திரபானு, சுபானு, பார்த்திப என்பவை வடமொழி ஆண்டுகள்தாம்; ஆனால், சித்திரையும், வைகாசியும் வடமொழி மாதங்களா? அவை தமிழ் மாதங்கள் இல்லையா? ஆண்டு முறை தமிழர்க்கு இருந்ததை நம்மால் அறிய முடியவில்லை. ஆனி, ஆடி என்று மாதமுறையும் ஞாயிறு, திங்கள் என்னும் கிழமை முறையுமா தமிழர்க்கு இல்லாமல் போய்விட்டது? திருவள்ளுவர் ஆண்டு சித்திரையில் தொடங்குகிறது என்று பழைமையைக் கருத்தில்கொண்டும், மக்களின் பழக்கத்தைக் கருத்தில்கொண்டும் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டும்! ஆனால், அந்த அறிஞர் குழு அறிவார்ந்த மக்களை உள்ளடக்கியதுதான்! வடமொழி ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை என்று அன்றுவரை நம்பப்பட்டது!

காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்த ஆறாச்சினத்தின் காரணமாக, வடமொழியோடு சேர்த்துச் சித்திரையையும் புறந்தள்ளிவிட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. மறைமலை அடிகள் தலைமையிலான அந்த அறிஞர் குழு தொன்றுதொட்ட நடைமுறையையும் மக்களிடையே ஆழமாக வேரோடி இருக்கும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்று அறிவித்ததால் திருவள்ளுவராண்டு மக்களிடையே புழக்கத்திற்கு வராமலேயே போய்விட்டது! கருணாநிதிதான் இதற்குச் சட்டம்போட்டுப் பார்த்தாரே; கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தச் சட்டத்திற்குப் பயந்து எந்த மக்களாவது திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்களா? அது மக்கள் நினைப்பிலாவது இருக்கிறதா? குறைந்தது அவர் போட்ட சட்டத்திற்கு எ.வ. வேலுவாவது, பேரன் உதயநிதியாவது பயந்ததாகக் காட்டிக்கொண்டாவது கடைப்பிடித்ததுண்டா?

மறைமலை அடிகள் தொடங்கிய தமிழ் இயக்கம் வெல்ல முடிந்தது; திருவள்ளுவர் ஆண்டு முறை மட்டும் வெல்லவில்லையே, ஏன்? சித்திரையை மாற்றித் தை என்று அறிவித்த நெருடல்தான் அதற்குக் காரணம். கதிரவன் மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அதனின்று வெளியேறும் வரையிலான காலத்தை பழந்தமிழர்கள் சித்திரை மாதமாகக் கொண்டார்கள் என்று தெளிவான காலக்கணிதத்தை முன்வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழர்களின் காலக்கணிப்பு முறை உருவாகியிருக்கிறது; வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக சித்திரை தொடங்கிய மாத வரிசை முறையை ஓர் ஆண்டாகக் கொண்டுள்ளார்கள். இன்னும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கோடைகாலமே முதலாவது பருவம் என சீவகசிந்தாமணி சொல்கிறது! பத்துப்பாட்டு நெடுநெல்வாடையில் கதிரவன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா.சீவகசிந்தாமணியையும் நெடுநெல்வாடையையும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையும் கல்வெட்டுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டுள்ள இன்றைய முதல்வர் ஜெயலலிதா எங்கே? பாரதிதாசன் சொன்னார்; பாரதிதாசன் சொன்னார்' என்று கிளிப்பிள்ளைபோல் சொல்லுகின்ற நேற்றைய முதல்வர் கருணாநிதி எங்கே?


பழந்தமிழர் காலக்கணிப்பு முறை என்ன என்பதே கேள்வி. அதற்கு திருத்தக்கதேவரும், நக்கீரரும் உதவ முடிவதுபோல் பாரதிதாசன் உதவ முடியாது! ஆகவே முதல்வர் ஜெயலலிதா கூறுவதுபோல தமிழ் ஆண்டின் தொடக்கம் தை இல்லை; சித்திரைதான்! ஆனால், எந்த ஆண்டு முறைக்கு சித்திரை முதல்நாள் தொடக்கம் என்னும் கேள்வி எஞ்சி நிற்கும்! தமிழருக்கான ஆண்டு முறை பிற மொழியாளர்கள் பலர் ஆண்டபோது தொலைந்து போயிருக்கக்கூடும். ஆகவே, மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார்.


திருவள்ளுவர் தை முதல்நாள் பிறந்தார் என்பது கற்பனைதானே! அவரை சித்திரை முதல்நாளில் பிறக்க வைப்பதால் தமிழினம் வாழும்; உரம் பெறும் என்றால் அந்தத் தெய்வப்புலவன் மறுக்கவா போகிறான்?
ஒருவேளை அவன் பங்குனியில்கூட பிறந்திருக்கக்கூடும்! தாசில்தாரிடம் திருவள்ளுவர் பிறப்புச் சான்றிதழா வாங்கப் போகிறார், காசு கொடுக்காமல் பெற முடியாதே என்று கவலைப்படுவதற்கு?
திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்! சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்! நந்தன, விபவ, தாரண என்னும் ஆண்டுமுறை ஒழிந்துவிடும்! ராமநாதபுரம் பாம்புப் பஞ்சாங்கக்காரன்கூட 2043-ஆம் திருவள்ளுவர் ஆண்டு பஞ்சாங்கம் என்று போடத் தொடங்கி விடுவான்! காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்' என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!

எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சியாகணும்!

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 3 படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படமாகும். கொலவெறி பாடல் வெற்றி, தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படம், மனநிலை பாதிக்கப்பட்டவரின் கதை என பல்வேறு விளம்பரங்களுடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான்.இப்படம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்று அப்படத்தின் கதாநாயகன் தனுஷிடம் கேட்டதற்கு, படம் வெற்றியா தோல்வியா என்றெல்லாம் தெரியாது, பட விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் கிடைத்துவிட்டது என்று மட்டும் தெரியும் என்று பதில் அளித்தார்.இவரே இப்படி சொன்னால் நாம் யாரிடம் கேட்பது. படம் பார்த்த ரசிகர்களே நீங்களாவது சொல்லுங்கள்... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சியாகணும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...