|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 April, 2012

தமிழனின் பகுத்தறிவு, பண்பாடு அனைத்தும் பட்டொளி வீசிப் பறக்கிறது!

ஆயிரம்தான் சொல்லுங்கள், தமிழன் என்ற இனத்துக்கு தனி குணமும் பண்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. செய்தித் தாள்களைத் திறந்து நூறு செய்திகளைப் படித்தாலும் அதில் ஒன்றிரண்டாவது தமிழ் இனத்தின் பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்துவிடுவதே இந்த இனத்தின் சிறப்பு.
கடந்த சில நாள்களாகவே செய்தித் தாள்களைப் படிக்கும்போது கண்ணில் படும் ஒரு செய்தி, ""ரத்தக் காட்டேரி பீதி'' என்பது. காதல், வீரம், கொடை ஆகிய மூன்றிலும் ""பேர் போனவன்'' தமிழன்.


இந்தக் காதலிலும் நல்ல காதல், கள்ளக் காதல் என்று ரகம் பிரித்து அனுபவிப்பவன். காதல் எப்படியோ போகட்டும், நாம் ரத்தக் காட்டேரிக்கு வருவோம். ஜோலார்பேட்டையில்தான் முதலில் ரத்தக் காட்டேரி தனது சேட்டையைக் காட்டியது. அங்கிருந்து இப்போது ஆம்பூரில் மையம் கொண்டிருக்கிறது. சுமார் 40 கிராமங்களில் ஒரே நாளில் வீடுகளில் உள்ள தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் எடுத்து வீசியிருக்கிறது. இது ரத்தக் காட்டேரிதான் என்று வருவாய்த்துறை வட்டாட்சியரோ, வருவாய் ஆய்வாளரோ, மாவட்ட வருவாய் அதிகாரியோ சான்று தரவில்லை என்றாலும் (ரத்தக் காட்டேரி என்ன இலவசப் பட்டாவுக்கா மனுச்செய்யப் போகிறது?) உள்ளூர் மந்திரவாதிகள் சான்றுரைத்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் ஒரு டாக்டர், ஆசிரியர் இருக்கிறாரோ இல்லையோ மந்திரவாதியும் ஜோதிடரும் இருப்பார்கள். அதுதான் தமிழர்களின் தொன்மை.


வீடுகளில் இரவு நேரத்தில் திடீரென்று சூறைக் காற்றைப் போல ஏதோ வீச, தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் அலமாரியிலிருந்தும் சிமென்ட் மேடைகளிலிருந்தும் கீழே விழுந்து சிதற, வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தூக்கத்திலிருந்து விழித்து அலற ஊரே அமர்க்களப்படுகிறது.
வீதிக்கு வந்தால்தான் தெரிகிறது அதே போல பல வீடுகளிலும் காட்டேரி நுழைந்திருக்கிறது என்று. உடனே வீட்டு வாசலில் மஞ்ச(ள்) தண்ணியால் வாசல்படிகளை மெழுகி, குங்குமம் "மஞ்சா' வைத்து, எலுமிச்சை, படிகாரம், பூசணிக்காயில் பூத உருவம் போன்ற ரட்சைகளைக் கட்டி தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். அத்துடன் மந்திரவாதியை அழைத்து ஆடு, கோழி அறுத்து காட்டேரிக்கு பலி கொடுக்கின்றனர். முத்தாய்ப்பாக ""இன்று போய் நாளை வா'' என்று தமிழில் எழுதி திரிசூலம் படமும் வரைந்து வைக்கின்றனர். இந்த இடத்தில்தான் தமிழனின் பகுத்தறிவு, பண்பாடு அனைத்தும் பட்டொளி வீசிப் பறக்கிறது!


அந்தக் காட்டேரி ஆணோ - பெண்ணோ, சிங்கிளோ - தம்பதியோ, சைவமோ - அசைவமோ தெரியாது. அதன் நிறம் என்ன, உருவம் என்ன என்றும் தெரியாது. ஆனால் அது ""தமிழ் காட்டேரி'' என்பதை மட்டும் சரியாகத் தெரிந்துவைத்துள்ளனர்.""இன்று போய் நாளை வா(ராய்)'' என்று தமிழில் எழுதி வைத்தால் அதைப் படித்துவிட்டு காட்டேரி அந்த வீட்டைவிட்டுப் போய்விடுகிறது. சி.எஸ். ஜெயராமன் குரலில் பாட வேண்டிய அவசியம் இல்லையோ? அடுத்த நாள் வந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஏமாந்து போய்விடும் போல இருக்கிறது.காட்டேரியை இப்படி தினமும் ஏமாற்றினால் ஒரு நாள் கோபத்தில் அது வீட்டுக்கதவில் இருப்பதைப் படிக்காமலேயே ஏதாவது செய்துவிடப் போகிறது, எச்சரிக்கையாக இருங்கள்.) இந்தக் காட்டேரி ஜோலார்பேட்டையிலிருந்து இப்போது ஆம்பூருக்கு வந்திருக்கிறது. இதே வடக்கு நோக்கி நகர்ந்து குப்பம், கொப்பல் என்றெல்லாம் போயிருந்தால் அதுவே ""30 நாள்களுக்குள் தெலுங்கு, கன்னடம்'' புத்தகத்தை வாங்கிப் படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கல்வியறிவு வளர்ந்திருப்பது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டுக்குவீடு இப்படி எழுதுவார்களா? கிராம மக்கள் மட்டும் அல்ல, காட்டேரி கூட படித்திருக்கிறது பாருங்களேன்.


தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். எவ்வளவோ இலவசங்களை மக்களுக்குத் தந்து அவர்களை ""விலையில்லா தமிழர்களாக'' வளர்த்து வருகிறீர்கள். ""இன்று போய் நாளை வா'' என்பதை நெடுஞ்சாலைத் துறை அல்லது உள்ளாட்சித் துறை மூலமாகவே ஒவ்வொரு வீட்டிலும் இலவசமாக எழுதிக் கொடுத்தால் என்னவாம்? (அதிகாரிகளுக்கு வேண்டுகோள், திரிசூலம் மட்டும் போடுங்கள், வேறு படம் வேண்டாம், காட்டேரி பயப்படப் போகிறது!) சில நாள்களுக்கு முன்னால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு பகுத்தறிவுத் திருமண வீட்டில் கேட்டார், ""பெரியார் இல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் படித்திருக்க முடியுமா, அரசு வேலைக்கு வந்திருக்க முடியுமா?'' என்று. காட்டேரியைக் கண்டு திராவிடம் அஞ்சுவதா? எதற்கெதற்காகவோ எல்லாம் தீக்குளிப்பேன் என்று ஆவேசப்படுபவர்கள், குறைந்தபட்சம் ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்தால்தான் என்ன? சும்மாதானே இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...